வலைப்பதிவில் தேட...

Tuesday, May 18, 2010

சர்வ தேச கீதம்

அது எண்பதுகளின் தொடக்கம். புரட்சி நடிகராக இருந்து புரட்சித்தலைவராக உயர்ந்த ஒருவரின் ரசிகனாக இருந்தேன் அது வரை. புரட்சி என்பதற்கான அர்த்தமே தெரியாது. சின்னமுனியாண்டி என்ற தோழர் அந்த வார்த்தையின் அர்த்தம் பற்றி சொல்லும் வரை. அது விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து போராடி வெற்றி பெற வேண்டிய மாபெரும் பணி என்பது குறித்து விளக்கமாகவும்  புரியும் படியும் பேசினார்.


அப்படியே ஒரு நாள் சாத்தூருக்கு தெற்கே பாலத்தைத்தாண்டி இயங்கி வந்த முருகன் தியேட்டரில் ஒரு கூட்டம் நடக்கிறது வாருங்கள் போகலாம் என்று அழைத்து சென்றார். அது தோழர் பி. சீனிவாசன் தாலுகா செயலாளராக இயங்கி வந்த சி பி எம் கட்சியின் தாலுகா மா நாடு. விருது நகர் தாலுகா அப்போது பிரிக்கப்படவில்லை. மாவட்ட செயலாளராக இருந்தவர் தோழர் எஸ். ஏ. பெருமாள். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். தோழர்கள் விவாதம் மேற்கொண்டார்கள்.  மக்கள் நலனுக்காக சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். மதியம் எளிமையான ஒரு மதிய உணவு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதிய கூட்டம் தொடங்குமுன் வக்கீல் பாலதண்டாயுதம் "சோசலிசம் வந்துவிட்டால் சுகம் எல்லாமே வந்து விடும் அந்த கம்யூனிசம் மலர்ந்து விட்டால் மனக்கவலைகள் மறந்து விடும்" என்ற நாகூர் ஹனிபாவின் அல்லாவை நாம் தொழுதால் துயர் எல்லாமே ஒடி விடும்  என்ற மெட்டில் பாடினார். மாலையில் கூட்டம் நிறைவடைந்தது. அப்போது சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும்  கம்பீரமாக எழுந்து நின்று கூட்டாகப்பாடினர். அந்தப்பாடலை இந்தப்பதிவில் பார்ப்போம்.

பட்டினிக்கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழர்காள்
கொட்டு முரசு கண்டன முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட


பண்டையப்பழக்கம் என்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலை பிறந்தது
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திட
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்


முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே
முகமலர்ச்சியோடு உயிர்த்தியாகம் செய்ய நில்லுமே
பற்றுக்கொண்ட மனித ஜாதி யாரும் ஒன்றதாகுமே
படிமிசைப் பிரிந்த தேச பாஷையும் ஓர் ஐக்கியமே


பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே
பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பயனைக்கொள்ளை கொண்டு நின்றதே


மக்களின் உழைப்பெல்லாம் ஒளித்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்ப கேட்பதென்ன குற்றமோ
இல்லை நாம் நமக்குரிய பங்கைக்காட்டி கேட்கிறோம்.


தொன்று தொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம்
தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச்சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம்


வேலை செய்யக்கூலி உண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வீண் வார்த்தை பேசி உடல் வளர்க்கும் காதர்கர்க்கிங்கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகட்கிங்கிடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை


பாடுபட்டு உழைத்தவர் நிணத்தைத்தின்ற கழுகுகள்
பரந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளிலே
காடு வெட்டி மலை உடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்

No comments: