வலைப்பதிவில் தேட...

Friday, May 27, 2011

ஒரு சாலை விபத்து




சர்தார்ஜி ஜோக்கில் ஒன்று:
ரயில்வே  வேலைக்கான நேர்காணலில் ஒரு சர்தார்ஜி கலந்து கொள்வார். அவரிடம் கேட்கப்பட்ட
கேள்வி: இரண்டு ரயில்கள் எதிர் எதிர் திசையில் ஒரே தண்டவாளத்தில் செல்லும்படியான நிலைமை நேரிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் .
பதில்: உடனே எனது தம்பிக்கு போன் செய்வேன்.
கேள்வி: எதற்காக
பதில்: அவன் இதுவரை நேரடியாக எந்த ரயில் விபத்தையும் பார்த்ததே இல்லை.
நேர்காணல் கண்டவர்கள் மிரண்டு போவார்கள்.
எனது பதின் வயதுகளில் ஒரு கோர விபத்தை நேரடியாகப்பார்த்ததன் வெளிப்பாடாகவே இந்தப்பதிவு.

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். கோட்டூர் குருசாமி கோவில் சின்னையாபுரம் அம்மாவின் ஊர். விடுமுறை நாளில் அங்கே சென்று விட்டு   நம்பர் டவுன் பஸ்ஸில்   மாமா பாண்டியுடன் விருது நகர் வந்து கொண்டிருந்தோம். பஸ்ஸில் நல்ல கூட்டம் . இப்போது கலெக்டெர் அலுவலகம் உள்ள இடத்திற்கருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரில் வந்தவர் பஸ்ஸில் மோதி விட்டார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடப்புறம் உள்ள வேலிக்கருவேலை அடர்ந்த பள்ளத்தில் போய் தட்டுத்தடுமாறி நின்றது.

பஸ்ஸின் படிக்கட்டில் கூட ஒருவர்  உட்கார்ந்திருந்தார். அவருக்கு நல்ல அடி ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஊரிலிருந்து கொண்டு வந்த நிலக்கடலைப்பை டிரைவரின் சீட்டுக்குப்போய் முட்டியிருந்தது.  கோவென்ற கூச்சல் கதறல் ஆண் பெண் குழந்தைகள் என.
வண்டி நின்றதும் ஒரு வழியாக  நிலக்கடலைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கினோம். வெள்ளை வேட்டி கிழிந்திருந்தது மட்ட மல்லாக்க விழுந்து கிடந்தார்  ஸ்கூட்டர் அப்பளம் போல் நொறுங்கி விட்டிருந்தது. காலை லேசாக அசைத்தார். அவ்வளவுதான். ஏறக்குறைய முடிந்து விட்டது. சனங்கள்  விருது நகர் வருவதற்கு பஸ்களைத்தேட ஆரம்பித்தனர். கடலைப்பொட்டணத்தை தோளில் வைத்துக்கொண்டு அப்படியே ரயில் தண்டவாளம் வழியாக முத்துராமன் பட்டி போய்ச்சேர்ந்தோம் வீட்டுக்கு.


இரவெல்லாம் பளீர் பளீர் என்று முழிப்பு தட்டியது. அழுது கொண்டேன். அம்மாவிடம் இறந்து போனவரின் நினைவு என்னைக்கொல்லுகிறது என்னால் தூங்க முடியவில்லை என்றேன். ஒரு விளக்கமாறு ஒரு மொட்டை அரிவாள் எடுத்து தலைமாட்டில் வைத்து தூங்கு என்றார்கள்.  தூங்க முயற்சித்து மீண்டும்  நினைவு வந்து எழுந்தேன். அம்மாவிடம் அழுதேன். அவருக்குதான் நேரம் வந்து போய் விட்டார் உனக்கு ஒன்னும் ஆகாது என்று ஆற்றினார்கள்.


மறு நாள் பள்ளிக்குப்போன பிறகுதான் சில விபரங்கள் தெரிய வந்தது விபத்தில் இறந்து போன அவர் விருது நகர் சென்ட்ரல் சினிமாத்தியேட்டரை எம் எஸ் பி யிடம் லீசுக்கு எடுத்து நடத்திக்கொண்டிருந்தவராம் .அப்போது சிவகாமியின் செல்வன் ஓடிக்கொண்டிருந்தது. அவரது சகோதரர் வெளி நாட்டில் மருத்துவம் படிப்பதாகவும் கேள்வியுற்றேன். ஒரு விபத்தைப்பார்த்த ஒரு பதின் வயதுப்பாதிப்பே இவ்வளவுதூரம் இருக்கும்போது  அவரது 
குடும்ப உறுப்பினர்கள் அவரைச்சார்ந்த சொந்த பந்தங்கள், நண்பர்கள் என எவ்வளவு வருந்தியிருப்பார்கள்.

இப்போதெல்லாம் நாளிதழ்களில் சாலை விபத்துக்களைப்பற்றிய செய்திகள் இல்லாமல் இருப்பதில்லை விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 22 மே 2011ஆங்கில  இதழில் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவை இதோ:

சராசரியாக ஒரு நிமிடத் திற்கு ஒரு விபத்து. நான்குநிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றார். சாலை விபத்து களால் பலியாகிறவர்களின் எண்ணிக் கை அபாயகரமான அளவுக்கு அதிகரித் துள்ளது. விபத்துக்களில், குறைந்த வரு வாய் உடையவர்கள் மரணமடைவதும் அதிகரித்து வருகின்றது.

கடந்த ஆண்டு சாலைவிபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1.6 லட்சமாகும். 2009ம் ஆண்டு 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண் டில் 28 சதவீதம் அதிகரிப்பு என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

ஒரு மணி நேரத்தில் ஒருகிலோமீட்டர் (கேஎம்பிஹெச்) வேகத்தை அதிகப் படுத்துவதனால் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 3 சதவீதம் அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக் கை செய்கிறது. உதாரணமாக, 10 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்குவதற் கும் 70 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்கும்போது மரணத்திற்கான வாய்ப்பு கள் பல மடங்கு அதிகரிக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.


Wednesday, May 18, 2011

மரண வாயில்




பெரியப்பா ஒருவர் இருந்தார். பெயர் மகாலிங்கம். முத்துராமன்பட்டி பவுண்டுத்தெரு காளியம்மன் கோவில் பூசாரி. சாமி வருகிறதோ இல்லையோ கர்ண கடூரமாக முழித்துக்கொண்டு புரண்டு கோவில் வளாகத்தயே ஒரு சுத்து சுத்தி வருவார்.

அவர் சுடுகாட்டு வேலையில் கெட்டிக்காரர்.பிணம் விழுந்தால் போதும் எரிக்க அல்லது புதைக்க போர்க்கால அடிப்படையில் வேலைகள் கன ஜரூராக நடத்தி முடித்து விடுவார். செத்துப்போன சாதிக்காரர்கள் தேர் தூக்க வரவில்லையென்றாலும் கூட தன் இன  பந்துக்களில் . ஒரு நாலு பேரை அமர்த்தி அவர்களை தேர் தூக்க வைத்து சுடுகாடு வந்தவுடன் அவர்களுக்கான கூலியை ப்பேசியபடி வாங்கிக்கொடுப்பதில் கில்லாடி.


மற்ற நாட்களில் செருப்பு தைப்பதற்காக முத்துராமன்பட்டி முழுதும் சுற்றி வருவார். செருப்பு தைக்கக்கொடுப்பவரின் முகம் கோணாமல் சரி சாமி இந்தா சாமி நீங்க போய்ட்டு வாங்க சாமி சரி செய்துவிடுகிறேன் சாமி என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனை மனதுக்குள் திட்டுவார். நாயக்கமார் தெரு அல்லம்பட்டி செட்டிமார் தெரு என்று சுற்றி வரும்போதே யாரேனும் வயதானவர்கள் முடியாமல் கடைசிகாலத்திற்காக ஏங்கிப்படுத்திருந்தால் பெரியப்பாவுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

காரணம் இதுதான். ஒரு பிணம் விழுந்தால் செருப்பு தைத்து கிடைக்கும் பணத்தை விடவும் கொஞ்சம் கை நிறையக்காசு கிடைக்கும். தேர் வாடகை, குழி வெட்ட, எரிப்பதென்றால் விறகுவாங்க வைக்க என்று எல்லாம் போக கையில் கொஞ்சம் மிச்சப்படும். அளவான குழி வெட்டி அதிலும் சைஸ் பத்தாமல் போனால் தலைமாட்டுக்கு பரித்து விட்டு சரியாகப்பிணத்தை வைத்து புறங்கையால் மண்ணைத்தள்ள்ச்சொல்லும் சித்திரம் சொல்ல முடியாதது. செத்துப்போனவன் இவரை உயிரோடு இருக்கும் போது ஏதேனும் பேசியிருந்தால் அவன் எரியும்போது இருக்கிறது கட்டைக்கம்பு அடி.

தெரு வழியாக நடந்து போகும் போது அப்படி யாரேனும்  நோயுற்றவர் தட்டுப்பட்டால் அவரது வீட்டுக்கு அருகில் போகும் போது புலி ஒன்று பதுங்கிப்போவது போல நடப்பார். பாதங்களின் சத்தம் கூட திண்ணையிலிருக்கும் வீட்டாருக்குக்கேட்காது. லேசாக சாமி! சாமியவுக எப்படி இருக்காக என்பார். வீட்டுக்காரர் பரவயில்லப்பா மகாலிங்கம் கொஞ்சம் பால் குடிக்கிறார் என்றால் போதும். கடுமையான கோபம் வந்துவிடும் அந்தக் கோபத்தை வெளிக்காட்டமாட்டார். இருக்கட்டும் சாமி நல்லா இருக்கட்டும் என்று பொய்யாக வாழ்த்தி விட்டு வந்து விடுவார்.

வந்து தெரு முனையில் உட்கார்ந்து கிடைத்த ஒன்றிரண்டு செருப்பைத்தைக்க உட்காரும்போது யாரேனும் சொந்த சாதிக்காரர்கள் வந்து என்னப்பா என்று சரசம் விசாரிக்கும் போது அப்படியே சுடுகாட்டு வேலைக்கு பிணம் ஏதும் வரவில்லை என்ற மேட்டரும் வரும். அப்போது  அந்த்த்தெருவில் ஒரு பெருசு இழுத்துக்கிட்டு கெடந்துச்சே எப்படிப்பா இருக்கு என்று கேட்டால் போதும்
அவருக்கு வரும் ஆவேசம் இருக்கிறதே யப்பா சொல்ல முடியாது

கட்சியைக்காப்பதும் கனிமொழியைக்காப்பதும் ஒன்றுதான் என்று கருணாநிதி  சொன்ன அதே ஆவேசம் அவரது வார்த்தையில் வெளிப்படும்.
பாலு குடிக்கிறானாம்டா வெளங்குமா வெள்ளனே! என்று பற்களை நற நற வெனக்கடித்து விட்டு ரெண்டு கெட்ட வார்த்தையால் விளாசிவிட்டு பீடியை ஒரு சுண்டு சுண்டிக்கொள்வார்.

அவரது சர்வீசில் எரித்த பிணங்கள் தான் எத்தனை எத்தனை    தாயின் கருவறையில் இறந்தது, பிறந்தவுடன் செத்தது, அம்மை கண்டு குளிர்ந்து போனது,நாண்டுக்கிட்டு செத்தது, கிணற்றில் விழுந்து ஊறிப்போய்க்கிடந்தது வயது முதிர்ச்சியால் இறந்தது போஸ்ட்மார்டம் ஆகி சுடுகாட்டுக்கு வந்தது என

பிணம்   நாறிப்போய் புழுத்துக்கிடந்தால் உயிரோடு இருக்கிற சனங்களுக்குதான் எத்தனை சீக்கு சிக்கலு.  ஒட்டு மொத்த சமூகமும் சந்தோஷமாக நோயின்றி இருக்க இப்படியான பிணங்களை எரிக்கும்/புதைக்கும் ஒருவனை எப்படித்தான் "வெட்டியான்" என்று இந்த சமூகம் சொல்லுகிறதோ தெரியவில்லை. உண்மையில் அவர்கள் "உருப்படியான்"கள்.

ஒன்றிரண்டு முறை அவரோடு சுடுகாட்டு வேலைக்கு  கூலிக்கு தேர் தூக்க என்று சுடுகாட்டு வேலைக்குப்போன அனுபவம் உண்டு. ஏற்கனவே வெட்டப்பட்ட குழியைத்தேர்ந்தெடுத்து அதை வெட்டி அடியில் அரை குறையாகக்கிடக்கும் கை எலும்புகள் கால் எலும்புகள், மண்டையோடு, தலைமுடிகள் அனைத்தையும் அதன் வாசத்தோடு அள்ளி புதிதாக வரப்போகும் பிணத்தின் சொந்தக்காரகளுக்குத்தெரியாமல் போட்டு விட்டு. அவர் சொல்லும் காரணம் அற்புதமானது. புதியதாகக்குழி தோண்டினால் காலதாமதம் ஆகும். அதற்குள் பிணம் சுடுகாட்டுக்கு வந்தவிடும் பிறகு நம்மை சாதியைச்சொல்லிகேவலமாகப்பேசுவார்கள் என்பதுதான் அது


அப்போது கோத்ராவில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கோத்ரா ரயிலெரிப்பு நடந்து ஒரு 12 நாட்கள் அலுவலகமே செல்ல முடியாமல் இருந்து மீண்டும் வசந்தம் வந்து அலுவலகம் சென்று இரண்டு மூன்று நாட்கள் ஆகி யிருக்கும். 58 ராம் சேவக்குகள் தீயிடப்பட்டு  இறந்ததை அடுத்து குஜராத் மண்ணே இந்துத்துவா பரிசோதனைக்கூடம் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த நேரம்.  குஜராத் சமாச்சார், சந்தேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பூராவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  மனிதர்களின் கருகல் வாசம் வீசிக்கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கொருமுறை வீட்டுக்கு தொலைபேசியில்  மனைவியுடனும் குழந்தைகளுடனும் பேசிக்கொள்வது வழக்கம். சமயங்களில் தினமும் அல்லது ஒரே நாளில் இரண்டு முறை பேசிக்கொள்வோம். அப்படி ஒரு முறை நான் பேசும்போது எனது மனைவி அந்த பூசாரி மகாலிங்க மாமா செத்துப்போய்ட்டருங்க என்று சொன்னார்கள். என்னையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது. கட்டுப்படுத்த முடியவில்லை.

வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடத்திற்கு அவர் சென்று விட்டார்.

நமக்கு எப்போது என்பது தெரியவில்லை



Monday, May 16, 2011

எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?

1991இல் முதன் முதலாக ஜெயலலிதா ஜானகி அணியை ஒன்றிணைத்து இரட்டை இலையைத்தக்க வைத்து தமிழகத்தின் முதல்வரானார். 1996 இல் அவரது அராஜக பகட்டான கட்அவுட் கலாச்சாரத்தினாலும், சக மனிதனை மதிக்காத போக்கினாலும், சனாதன தர்மத்தைக்காக்கும் விதமாக முரளி மனோகர் ஜோஷியின் வழியில்  சமஸ்கிருதம் மற்றும் வேத பாடசாலைகள் அமைப்போம் என திராவிட கட்சித்தலைமை கொண்ட ஜெ சனாதன தர்மத்தை மேற்கொள்ள எத்தனித்தார். விளைவாக  தமிழக மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்தனர்.


1996இல் மீண்டும் மூன்றாவது முறையாக முதல்வரானார். காரணம் என்னவென்றால் அந்த அம்மையார் இல்லைஎன்றால் கருணா நிதி என்ற புரிதல் தான். இவரும் ஒரு ஐந்து ஆண்டு காலம் ஆண்டார் இவர் உழவர் சந்தையில் காய் கறிகள் விற்க ஆணையிட .மருமகன் மாறன் உலகவங்கியில் இந்தியாவை அடமானம் வைக்க தொழிலாளர் துறை மந்திரியாக இருந்து சாதித்தார். ஊடுதட்டில் மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சன் தொலைக்காட்சிக்கு அவரால் ஆன டெல்லி முயற்சிகள் நிறைவேற கருணா நிதியால் மா நில அளவிலான உதவிகள் தொடர கலா நிதி மிகப்பெரும் புள்ளியாக வழி வகுத்தார் ஆனாலும் மக்கள் பிரச்சனைகளில் எந்த மாற்றமும் இல்லை காங்கிரசின் அடி வருடியாக பாரதீய ஜனதாவுக்கு எப்படி இருந்தாரோ அதே அளவு கோலை காங்கிரசுக்கும் கடைப்பபிடித்தார்கள். ஒரு ஐந்து ஆண்டுகள்தாம்.


2001இல் அவரது கோட்பாடுகள் சரியில்லை என்று சனங்கள் முடிவு செய்து மீண்டும் ஜெயாவை ஆட்சியில் உட்கார வைத்தார்கள்.
அரசாங்க ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் 95% என்று தவறான புள்ளி விபரங்களை அள்ளி வீசினார். ஒரே உத்தரவில் 1,76,000 ஊழியர்களை பதவி நீக்கம் செய்தார் ( ராசாவின் ரூபாய் 1,76,000 கோடி 2 ஜி ஊழல் போலத்தான் இதுவும். அவர்கள் மனிதர்கள் இவைகள் ரூபாய்கள்). அட்டவணை சாதியினர், பழங்குடி மக்கள் மதம் மாறக்கூடாது என்று இரும்புச்சட்டம் இயற்றி இந்துத்துவா மோதியையே மிரட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் காலகாலமாக தங்கள் விளைச்சலைக்கொண்டாடும் விதமாக இருந்த குலதெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடுவது என்ற பரம்பரைப்பழக்கத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக சட்டங்கள் இயற்றினார்.


2006: நமது மக்களுக்கு வேறு யாரையுமே தெரியாது மீண்டும் கருணா நிதியை
மீண்டும் முதல்வராக்கினார்கள். இலவச டிவிதான், ஒரு ரூபாய் அரிசிதான் ( அதை வாங்க அரசு செலவிடுவது என்னவோ 5 ரூபாய்தான்) அரசு கேபிள் அறிவிப்புதான் திருமங்கலம் ஜெயிப்புதான் , மானாட மயிலாடதான், மூன்று பகாசுர படக்கம்பெனிகள்தான் குடும்பத்தினர் ஐவர் உயர்மட்டக்குழுவில் உறுப்பினர்தான் அவர்கள் அனைவரும் முக்கியப்பதவிகள் தான் ( என் வி கே சம்பத், கே ஏ மதியழகன், அண்ணா, நெடுஞ்செழியன், என் வி  நடராசன் என்ற ஐவர் எல்லாம் அந்தக்காலம்....) கழகமே குடும்பம் குடும்பமே கழகம்தான். மணற்கொள்ளைதான், கற்கொள்ளைதான், மின் வெட்டுதான், விலைவாசி உயர்வுதான், ஆட்சியிலிருந்தும் தட்டிக்கேட்க முடியாத பெட்ரோல் உயர்வுதான், உலகத்தமிழ் மா நாடென்ன செம்மொழி மாநாடுதான் என்று கலக்கி விட்டார் அனைத்து மனிதனிடத்திலும் ஏதேனும் ஒரு விதத்தில் உள்ளிருக்கிற கலைஞன் என்ற அனைத்துத்திறமைகளையும் ஒரு முகக்ப்படுத்தி தனது பெயருக்கு அதை உரித்தாக்கிக்கொண்ட "கலைஞர்" கருணாநிதி.


இப்போது மிகவும் நல்லவராகிப்போனார் ஜெயலலிதா. என்ன செய்ய இனி ஒரு ஐந்து ஆண்டுகாலத்தை சுவைக்க தமிழக மக்கள் ஒருமித்து வாக்களித்து இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக மோடி வந்திருக்கிறார். திராவிட இயக்கத்தில் கலப்படமற்ற இந்துத்துவா, ரூபாய்  2 கோடி உள்ளிட்ட செட்டிங்ஸ் உட்பட சுமார் 1000 கோடி செலவில்  மக்கள் பணத்தில் அவர் கட்டியதால்  அது வேண்டாமென்று மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையாம்.


பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி தரப்பட்ட மின்சாரம், இடம், நீர், தொழிற்சங்க உரிமை பறிப்பு  இவற்றில் எந்த முன்னேற்ற நடவடிக்கையாவது இருக்குமா? தெரியவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் நான் எனது என்ற திருவிளையாடல் முருகனின் வசங்கள் மீண்டும் ஒலிக்கும்.

எப்படி இருந்தாலும் கடந்த ஐந்து வருடங்களில்  ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் என்று எந்தப்பாகுபாடும் இல்லாமல்  அநேகமாக ஏதேனும் ஒன்று அல்லது ஐந்தாறு வரையிலும் கூட எங்ஜினீரிங் கல்லூரிகள், குறைந்த பட்ச எண்ணிக்கை அளவிலான  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு உழைக்க வேண்டிய நிலையங்கள் நிறைய கைவசம் இருக்கிறது.  அம்மாவின் ஆட்சி முடியும் வரை பொறுமை காத்தால் போதும்  மீண்டும் அவர்கள் கைகளுக்கே அனைத்து அதிகாரங்களையும் திரும்பவும் ஒப்படைக்க தமிழக மக்கள் தயாராக இருப்பார்கள். 1991 தொடங்கி ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இதுதானே நடை முறையாகி இருக்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்பார் பாரதியார்.
நாமும் அப்படியே இருப்போமா?