வலைப்பதிவில் தேட...

Monday, May 31, 2010

முதல் பட்டதாரி

இந்த கல்வி ஆண்டு முதல் (2010-2011) எந்த ஒரு குடும்பத்திலிருந்தும் முதன் முதலாக தொழிற்கல்வி பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கு/மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 1980 ஆம் வருடம் நானும் கூட அப்படி வெளி வந்த ஒரு அறிவியல் பட்டதாரிதான். விருது நகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் அப்போதெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்களில் (அப்போது ஆண்கள் மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரி அது) முதலாவதாக அதாவது அதிக மதிப்பெண் பெறுபவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும்.(இப்போதும் இது நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை!)

தாவணிக்கனவுகள் படத்தில் பாக்கியராஜ் கூட அது போல பதக்கம் வாங்கிய பட்டதாரியாக நடித்திருப்பார். அவர் தங்க மெடல் வாங்கும்போது இது போன்ற இளைஞர்களின் கையில் எதிர் காலம் இருக்கிறது என்று பதக்கம் வழங்குபவர் குறிப்பிடுவார். கொஞ்ச நாட்கள் கழித்து குடும்பசூழல், வேலையின்மை காரணமாக குடிப்பதற்கு ஆரம்பித்து விடுவார். அப்போது அவரது கையில் சாராய கிளாஸ் இருக்கும். வேதாந்தச்சிரிப்பினால் சூன்யத்தை ப்பார்ப்பார் அவர் . நிற்க...



நான் பட்டம் வாங்கும் வ்ரை அந்தப்பதக்கம் வாங்குவதற்கான தகுதி பற்றி எனக்குத்தெரியாதுநான் வாங்கிய மதிப்பெண்கள் 1250/1800 (69.4% முதல்வகுப்பில் தேர்ச்சி; அந்த ஆண்டு தாவரவியல் பட்டப்படிப்பில் முதலாமவன்). தங்கப்பதக்கம் எனக்குக்கிடைக்கவில்லை. மாறாக எனக்கு அடுத்தபடியாக மதிப்பெண் பெற்ற வி. பிரபாகரனுக்கு அது கிடைத்தது. விசாரித்ததில் சொன்னார்கள் எந்த ஒரு பாடத்திலும்  ஆறு செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திலும் கூட பெயில் ஆகியிருக்கக்கூடாது என்று. நான் தான் INORGONIC CHEMISTRY  என்கிற பேப்பரில் இரண்டு அட்டெம்ப்ட்டு ஆச்சே!

சரி எல்லோரும் பட்டமளிப்பு விழாவின் போது கருப்பு அங்கி அணிந்து தலையில் தட்டையாக ஒரு குஞ்சம் வைத்து கையில் பட்டத்தை சுருட்டி வைத்து ஒரு போட்டோ  எடுத்துக்கொள்வார்களே அது போல ஒரு பட்டமளிப்பு விழா வரும் ஆசையாக ஒரு படம் பிடித்து வைத்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பில் மண் விழுந்தது போல் அந்த வருடம் பார்த்து பட்டமளிப்பு விழா என்று எதுவும் கிடையாது எல்லோரும் கல்லூரி அலுவலகத்தில் வந்து கையெழுத்து போட்டு விட்டு பட்டத்தை வாங்கி செல்லுங்கள் என்று அழைப்பு வந்தது. போட்டோ கண்ணிலேயே நின்று விட்டது.

அப்போதெல்லாம் மூன்று கல்லூரிகளில்தான் M Sc., தாவரவியல் இருந்தது
பழனியாண்டவர் கல்லூரி பழனி,  சரஸ்வதி நாராயணன் கல்லூரி மதுரை, தியாகராசர் கல்லூரி, மதுரை.  எனக்கு சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்  எம் எஸ் ஸி படிக்க அழைப்புக்கடிதம் வந்தது ருபாய் 411/- கட்டச்சொல்லி ப்ரின்சிபால் கையொப்பமிட்ட கடிதம் வந்தது.  வீட்டில் அங்கே இங்கே என்று
ஒரு 250/- ரூபாய்  வரை திரட்டி விட்டார்கள் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து. அதற்கு மேல் முடியவில்லை... கனவாகிப்போனது  PG.

30/05/2010 அன்று கோவை  CIT கல்லூரியில்  பட்டமளிப்பு விழா:  திலிப் சுகதேவுக்கு(எனது பையன்தான்)  AICTE அமைப்பின் பொறுப்பாளர் எஸ் எஸ் மந்தா என்பவரின் கையால் திலிப் பட்டம்  வாங்கினான். கருப்பு அங்கி கழுத்தில் ஒரு சிகப்பு பார்டருடன் கூடிய கருப்பு வளையம் அணிந்து பட்டம் பெற்றான்

கையில் வைத்திருந்த டிஜிட்டல் காமிராவினால் ஏழெட்டு போட்டோக்கள் எடுத்துத்தள்ளினேன். அப்படியே  பக்கத்தில் இருந்த எனது மனைவியிடம் சொன்னேன். எனக்கு கையெழுத்து போட்டு பட்டம் வாங்கிக்கொண்டுவந்தேன் இது போன்ற விழாவிற்காக ஏமாந்து போனேன் இன்றைக்கு ஒரு காரியம் செய்யப்போகிறேன் தம்பியிடமிருந்து அந்த அங்கியை  வாங்கி  நான் அணிந்து கொண்டு  அவனை ஒரு ஸ்னாப் எடுக்க சொல்லப்போகிறேன்.  ஓரே சிரிப்பு எனது மனைவிக்கு.
பட்டமளிப்பு விழா முடிந்தது. திலிப் எங்களிடம் வந்தான்  அங்கியை தற்செயலாகக்கழற்றிக்கொண்டே.  கூடவே அவனது நண்பன் நான்கு வருடமாக அவனுடன் தங்கிப்படித்த சரவணன். நான் திலிப்பின் அங்கியை அவசரமாக அணிந்து கொண்டேன் அந்த வட்டக்கழுத்துப்ப்ட்டையையும் சேர்த்தேதான். சிலர் வேடிக்கையாகப்பார்த்தார்கள். மனைவி வாய் விட்டு சிரிக்க தம்பி திலிப்போ வேண்டாம்பா என்று அங்கே இங்கே பார்த்துக்கொண்டிருக்க என்னை இரண்டு மூன்று ஸ்னாப்கள் எடுத்துதள்ளினான் சரவணன்.
முப்பது வருடங்களில் இரண்டு பட்டதாரிகள் ஒரு குடும்பத்தில்..

Tuesday, May 18, 2010

சர்வ தேச கீதம்

அது எண்பதுகளின் தொடக்கம். புரட்சி நடிகராக இருந்து புரட்சித்தலைவராக உயர்ந்த ஒருவரின் ரசிகனாக இருந்தேன் அது வரை. புரட்சி என்பதற்கான அர்த்தமே தெரியாது. சின்னமுனியாண்டி என்ற தோழர் அந்த வார்த்தையின் அர்த்தம் பற்றி சொல்லும் வரை. அது விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து போராடி வெற்றி பெற வேண்டிய மாபெரும் பணி என்பது குறித்து விளக்கமாகவும்  புரியும் படியும் பேசினார்.


அப்படியே ஒரு நாள் சாத்தூருக்கு தெற்கே பாலத்தைத்தாண்டி இயங்கி வந்த முருகன் தியேட்டரில் ஒரு கூட்டம் நடக்கிறது வாருங்கள் போகலாம் என்று அழைத்து சென்றார். அது தோழர் பி. சீனிவாசன் தாலுகா செயலாளராக இயங்கி வந்த சி பி எம் கட்சியின் தாலுகா மா நாடு. விருது நகர் தாலுகா அப்போது பிரிக்கப்படவில்லை. மாவட்ட செயலாளராக இருந்தவர் தோழர் எஸ். ஏ. பெருமாள். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். தோழர்கள் விவாதம் மேற்கொண்டார்கள்.  மக்கள் நலனுக்காக சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். மதியம் எளிமையான ஒரு மதிய உணவு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதிய கூட்டம் தொடங்குமுன் வக்கீல் பாலதண்டாயுதம் "சோசலிசம் வந்துவிட்டால் சுகம் எல்லாமே வந்து விடும் அந்த கம்யூனிசம் மலர்ந்து விட்டால் மனக்கவலைகள் மறந்து விடும்" என்ற நாகூர் ஹனிபாவின் அல்லாவை நாம் தொழுதால் துயர் எல்லாமே ஒடி விடும்  என்ற மெட்டில் பாடினார். மாலையில் கூட்டம் நிறைவடைந்தது. அப்போது சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும்  கம்பீரமாக எழுந்து நின்று கூட்டாகப்பாடினர். அந்தப்பாடலை இந்தப்பதிவில் பார்ப்போம்.

பட்டினிக்கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழர்காள்
கொட்டு முரசு கண்டன முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட


பண்டையப்பழக்கம் என்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலை பிறந்தது
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திட
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்


முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே
முகமலர்ச்சியோடு உயிர்த்தியாகம் செய்ய நில்லுமே
பற்றுக்கொண்ட மனித ஜாதி யாரும் ஒன்றதாகுமே
படிமிசைப் பிரிந்த தேச பாஷையும் ஓர் ஐக்கியமே


பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே
பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பயனைக்கொள்ளை கொண்டு நின்றதே


மக்களின் உழைப்பெல்லாம் ஒளித்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்ப கேட்பதென்ன குற்றமோ
இல்லை நாம் நமக்குரிய பங்கைக்காட்டி கேட்கிறோம்.


தொன்று தொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம்
தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச்சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம்


வேலை செய்யக்கூலி உண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வீண் வார்த்தை பேசி உடல் வளர்க்கும் காதர்கர்க்கிங்கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகட்கிங்கிடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை


பாடுபட்டு உழைத்தவர் நிணத்தைத்தின்ற கழுகுகள்
பரந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளிலே
காடு வெட்டி மலை உடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்

Monday, May 17, 2010

ரா(நா)மதாரி

தாத்தாவை எல்லோரும் ராமதாரி (நாமதாரி என்பதைத்தான்...) என்று கூப்பிடுவார்கள். அவரது பெயர் அழகரப்பன். தினமும் காலையில் குளித்துவிட்டு நாமம் வ 'Y'  வடிவத்தில்  போட்டுக்கொள்வார்.  இரண்டு பெரிய பட்டைகள் அடியில் மெலிந்து மேலே செல்ல செல்ல சற்று அகலமாகிக்கொண்டே போகும். நடுவில் சிகப்புக்கலரில் ஒரேசீராக ஒரு கோடு. இடது கையில் நாமக்கட்டியைக்குழைத்து வாகான ஐஸ் குச்சி போன்ற ஒரு மெலிந்த குச்சியால் வழித்து கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே நெற்றியில் போட்டுக்கொள்ளுவார். நாமப்பெட்டி ஒன்று வைத்திருப்பார். அதில் இரண்டு குழிகள் இருக்கும் ஒன்றில் நாமக்கட்டியும் மற்றொன்றில் குங்குமம் நிறைந்திருக்கும். குச்சியை வைப்பதற்கு நடுவில் ஒரு சிறிய இடம் அதற்கென்று வகுத்தெடுத்தது போல் இருக்கும் அந்த பெட்டியின் மூடியில் கண்ணாடி பதித்திருக்கும்.

'U' வடிவத்தில் நாமம் போடுவோர்கள் இருக்கிறார்கள். நாட்டுப்புறப்பாடலில் ஒரு வரி வரும். " நாங்க ஒத்தை ராமம் போடக்கூடிய ஒசந்த கொல சாதி"   சிகப்புக்கலரில் குங்குமத்தைக் குழைத்து வெள்ளை 'ஸ்டாண்டு' வைத்து நாமம் போட்டுக்கொள்வார்கள் அல்லது 'ஸ்டாண்டு' இல்லாமலும் இட்டுக்கொள்வார்கள் நானும் எனது தங்கை பகவத் கீதையும் அவர் நாமம் போட்டுக்கொண்டு இருக்கும் காலை வேளையில் போனால் எங்களுக்கும்  நாமம் போட்டு விடுவார். தங்கைக்கு சிகப்பு கலர் மற்றும் சிறிய வெள்ளை நிற ஸ்டாண்டு. எனக்கு முழு ராமம் (நாமம்). பெண்களுக்கு வெள்ளை நிறப்பட்டை இட்டுக்கொள்ள அனுமதி இல்லை போலும்.

நான் மூன்றாவது படித்துக்கொண்டிருக்கு போது  சடையாண்டி எனது பேனாவை எடுத்து வைத்துக்கொண்டான். நான் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தேன் தாத்தாவிடம் சொன்னேன். இரவு 7 மணி இருக்கும். அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கென்று இரவு 8 30 வரையில் "நை ட்ஸ்டடி"  என்ற 'ராப்பாடம்' பள்ளியில் நடக்கும்.' வாடா என்னோடு ' என்று என் கையைப்பிடித்து வேக வேகமாக பள்ளிக்கு அழைத்து சென்றார். தலைமையாசிரியர் இரவுப்பாடத்துக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை மேற்பார்வை இட்டுக்கொண்டு இருந்தார்.பள்ளியின் வாசலிலிருந்து தாத்தா சத்தமிட்டார்.
"யார்யா வாத்தியாரு இந்தப்பையனோடபேனாவை ஒருத்தன் எடுத்துக்கிட்டானாம் அதை வாங்கிக்குடுய்யா முதல்ல நீயெல்லாம் என்னயா வாத்தியார் வேலை பார்க்குறே.."
என்னதான் 'ராமதாரி' யாக இருந்தாலும் அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியாகத்தான்  சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுத்தப்படுகிறார்.
ஆசிரியர் ஆசாரி. தாத்தாவின் பேச்சு சூடு தாங்காமல் ' நீங்க போங்கைய்யா நான் நாளைக்கு காலையில வாங்கிக் கொடுத்திர்ரேன். என்றார்.
அதே போல வாங்கியும் கொடுத்து விட்டார்.

மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டு முடிக்கும் வரை என்னை உண்டு இல்லைன்னு ஒரு கை பார்த்து விட்டார். அடி பின்னி எடுத்து விடுவார்.
நான் மூன்றாம் வகுப்பு முடிக்கு முன் தாத்தா இறந்து போனார்.

டைசி காலம் என்று அவர் கருதியிருக்க வேண்டும் தான்  குடியிருந்த கூரை வீட்டை விற்று விட்டார். எனவே நோய் வாய்ப்பட்ட நிலையில் எங்களது வீட்டுக்கு அம்மா கால் பக்கம் பிடித்துக்கொள்ள, அப்பா தலைப்பக்கம் அணைவாக பிடித்துக்கொண்டு  தூக்கிக்கொண்டு வந்தார்கள். எங்கள் வீடும் சூரிய ஒளி தாராளமாக விழும் கூரை வீடுதான். தாத்தாவின் கணக்குப்படி வீட்டை அடுத்தவனுக்கு விற்றாகி விட்டது அவனது வீட்டில் சாகக்கூடாது. தூக்கி வரும்போது அவர் சொன்ன வார்த்தைகள் : 'ஏண்டா சும்மா தூக்கிட்டு போறீங்க கோவிந்தா |கோவிந்தா| ன்னு சொல்லுங்கடா' என்றார்.

றந்த பிறகு கேட்க முடியாத கோஷத்தை உயிருடன் இருக்கும் போது கேட்க ஆசைப்பட்டிருக்கிறார் என்று இப்போது நினைத்துகொள்கிறேன்.

Saturday, May 15, 2010

முத்து ராமன் பட்டி

விருது நகரில் முத்து ராமன் பட்டி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இதன் பெயர்க்காரணம் குறித்து" விருது நகர் வரலாறு" (ஆசிரியர் ஜெகனாதன்) என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதனுடைய சுருக்கம் இதுதான்:

அதாவது விருது நகரில் டி இ எல் சி என்ற கிறித்துவ அமைப்பின் நடு நிலைப்பள்ளி ஒன்று  நகரின் மையப்பகுதியில் உள்ள பெரிய காளியம்மன் கோவில் தெருவில் இருக்கிறது. இந்தப்பள்ளியைச்சுற்றிய பகுதியிலும்  வன்னியன் தெருவிலும் அருந்ததிய இன மக்கள் குடியிருந்து வந்திருக்கிறார்கள்.

காலப்போக்கில் இந்த இன மக்களில் ஒரு சிலர் டி இ எல் சி பள்ளியில் படிக்கவும் செய்திருக்கிறார்கள். அவர்கள் மேற்படி பள்ளியில் படித்த காரணத்தால் அது "சக்கிலியன் பள்ளிக்கூடம்" என்று அறியப்பட்டிருக்கிறது. எனது தந்தையார் திரு அர்ஜுனன் அவர்களும் கூட அந்தப்பள்ளியில்தான் ஆறாவது வரை படித்திருக்கிறார். அதனால்  அவருக்கு எழுதப்படிக்கத்தெரியும்.

சில காலம் கழித்து அவர்கள் பவுண்டு தெருவுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள்.
(பவுண்டு என்பது அரசுக்கு சொந்தமான ஒரு கட்டிடம் நான்கு பக்கம் மதில் சுவரும் ஒரு கேட்டும் இருக்கும். அத்து மீறி யாருடைய வெள்ளாமையிலும் மேய்ந்த ஆடு மாடு கழுதை இவற்றை கொண்டு வந்து அடைக்கப்பயன் படும் இடம்) அந்தத்தெருவில் ஒரு காளியம்மன் கோவில்  அருந்ததிய இன மக்களுக்கு சொந்தமானது இன்றைக்கும் இருக்கிறது.

இதே காலகட்டத்தில் அருப்புக்கோட்டை சாலையில் டி. இ.எல்.சி சர்ச் வளாகத்தில் குடியிருந்த வெள்ளைக்கார துரைகளுக்கும் குதிரை பராமரிப்பு பணியில் முத்தன் ராமன் என்ற இரண்டு அருந்ததிய சகோதரர்கள் ஈடுபட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். (அருந்ததியர் என்பது அவரது புத்தகத்தில் இல்லை)

முத்தன் ராமன் சகோதரர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் முத்து ராமன் பட்டி என்று அன்று முதல் அழைக்கப்படுவதாக அவரது குறிப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அது சரி. அப்படி குடியிருந்தவர்களின் வாரீசுகள் இப்பொழுது எங்கே..
பவுண்டுத்தெருவிலிருந்து  இடமாற்றம் கண்டு மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற பகுதிக்கு குடியேறி இருந்திருக்கிறார்கள். (நான் இந்த மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற முகவரியில் பிறந்ததாக எனது தகப்பனார் கூறியிருக்கிறார்.)

Friday, May 14, 2010

இருப்பதும் இல்லாததும்


மனித இனமே வெட்கித்தலைகுனியும் அளவுக்கும் அதிகமாகவே வகுப்புவாதத்தீ குஜராத்தில் எரிந்து கொண்டிருக்கிறது.
72 மணி நேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி விட்டேன் என்று சுய சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறார்  குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.

முதல்வராகத்தொடர்வதற்கு அவரை விட்டால் யாருமில்லை; அவர்தான் முதல்வர்; அவரேதான்... என்று வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி;
அதை அப்படியே வழி மொழியும் பாரதப்பிரதமர் வாஜபாய் அவர்கள்.

பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் பற்றிய மே 9 அன்று 72 நாட்களைத்தொட்டும் தொடருகிறது அவலம்.
பற்றி எரிகிறது தலை நகர் அகமதாபாத்.

அரசுப்புள்ளி விபரங்களின் படி,

*இது வரை 1420 பேர் வன்முறைக்கு  பலியாகியிருக்கிறார்கள்
*முகாம்களில் தஞ்சமடைந்துள்ள உடைமையிழந்தவர்களின் எண்ணிக்கை 2     லட்சத்துக்கும் மேல்
* சொத்துக்களுக்கும் ஏற்பட்ட சேதாரம் ரூபாய் 5000 கோடியை த்தாண்டும்
* 22560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
* 43000 பேர் கைது செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்
* 4000க்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்
* 20000 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயிலிடப்பட்டன.
*போலீசார் சுட்டதில் மட்டும் 200 பேர்  மடிந்திருக்கிறார்கள்.
*தொழிற்துறையில் மற்ற மாநிலங்களை விட இருபதாண்டுகள்  பின்னோக்கிச்  சென்று விட்டது குஜராத் மாநிலம்.

2001 ஜனவரி 26ல்   நிகழ்ந்த  பூகம்ப அதிர்வுகளின் போது ஏற்பட்ட இழப்புக்கு சற்றும் குறைந்ததாகப்படவில்லை இப்போது நடைபெற்றுக்ககொண்டிருக்கும் மத பூகம்பம்.

இவ்வளவு அழிவுக்கும் பின்னர் செயலற்ற ஒருமுதல்வரை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

உலக அளவில் இந்தியாவுக்கு அழியாத அவப்பெயரை கோத்ரா நிகழ்வும் அதனைத்தொடர்கின்ற  படுகொலை வன்முறைகளும் ஏற்படுத்தியிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
பாராளுமன்றத்தில் 296 பேர் அரசை ஆதரிக்க, 182 பேர் எதிர்க்க மத்திய அரசு வென்றிருக்கிறது.

போதுமான பலம்  ஆளும்  தேசிய ஜன நாயக கூட்டணிக்கு இல்லாததால்
ராஜ்ய சபாவில் அவர்களே எதிர்கட்சிகளை ஆதரித்து ஒருபக்க "கோல்" போட்ட கதையும் நாடு கண்டது.

"நேற்று இருந்தவர் இன்றில்லை
இன்றிருப்போர்  நாளை 
இல்லாமற் போவர்
இருப்பதும் இல்லாததும்
இதே ரீதியில் நடந்து கொண்டிருக்கும்
........................................................

உண்மை என்ன?
இருப்பதும் இல்லாததும் இரண்டுமே 
உண்மையா....?"


பிரதமர் வாஜ்பாயி அவர்களின் கவிதை வரிகள்தான் மேலே உள்ளவை.

குஜராத்தில் செயல்படாத  முதல்வர் ஒருவர்
இருப்பது ம் இல்லாததும் உண்மையா என
கேட்கத்தோன்றுகிறது நமக்கு.

(மே 2002 கோத்ராவில் இருந்த நேரம் எழுதிய கட்டுரை இது)

Thursday, May 13, 2010

இரட்டைக்குவளை ஒழிந்தது..





"பொது கிளாசில் டீ கேட்க
தனி கிளாசில் டீ கொடுக்க
ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்களாக
மலிந்து கிடக்கிறது.."
                                          -கவிஞர் கந்தர்வன்.

தீண்டாமை ஒழிப்பு ஆண்டு என்று அரசால்
நான் கைந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது
அதை ஒட்டி எழுதிய கவிதை இது..

சேரியிலிருந்து ஒரு குரல்:

எத்தனை நாளைக்குதான்
எங்களுக்குத் தனி கிளாஸ்ல
டீ தருவீக
ஒங்களைப்போல
அவங்களைப்போல
நாங்களும் எட்டுச்சாணு
ஓசரமுள்ள மனுஷங்கதானே?

ஊருக்குள் இருந்த  டீக்கடை
மனிதன் ஒருவன்:

ஆயிரத்துக்கும் அதிகப்படியான
ஊருகள்ல தனிக்கிளாஸ் இருக்க
பொதுக்கிளாசில் டீ குடுக்க
நாங்க மட்டும்
பைத்தியக்காரப்பயலுகளா?

மந்திரி முழங்கினார்:

"தீண்டாமை எந்த வடிவத்தில்
நடைமுறைப்படுத்தப்பட்டாலும்
ஒழித்துக்கட்டி விட்டுதான்
மறு வேலை எங்கள் அரசுக்கு
இது மத்ச்சார்பற்ற சமூக
நல்லிணக்க
தீண்டாமை ஒழிய வேண்டிய ஆண்டு"

ஊர்க்காரர்களும் முக்கியஸ்தர்களும்
முடிவெடுத்து அறிவித்தனர்

கொண்டுவாங்கப்பா அந்த
டிஸ்போசிபிள் கிளாசை
நம்ம ஊருல எல்லாம் தாயா
பிள்ளையா இருப்போம்
கிளாசுக்கு எட்டணா கூட
குடுத்திருங்கப்பா...
இந்தா பிடி
டீயைக்குடி

கலெக்டர்  கடிதம் எழுதினார்:
"மாண்பு மிகு முதல்வர்
அவர்கள்
மா நிலத்திலேயே
முதலாவதாக
இரட்டைக்குவளை
முறையை ஒழித்த
............. கிராம சபைக்கூட்டத்தில்
தாங்கள் அவசியம்
பங்கேற்க வேண்டும்....."

Monday, May 10, 2010

சாதிப்பெயரை நீக்குக

எண்பதுகளில் சாதி அடிப்படையில் அமைந்த தெருக்களின் பெயரை நீக்க உத்தரவிட்டார் தமிழக முதல்வர் எம் ஜி ஆர்.

சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆனபிறகும், சாதியின் பெயரால் அமைந்திருக்கும் கிராமத்தின் பெயரை மாற்றவேண்டும் என்று கோரி  NHRC
(தேசிய மனித உரிமைகள் கமிஷன்) அமைப்புக்கு கடந்த இருபது வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். (The Hindu 10/05/2010) ராஜஸ்தான் மா நிலம் 'தாசா' மாவட்டத்தில் இருக்கிற ஒரு கிராமம் 'குவன் கா வாஸ் ' .அந்த கிராமத்தின்  பெயரை வருவாய்த்துறை ஊழியர்கள்' 1987 இல் 'சமரோன் கா வாஸ்' என்று மாற்றியிருக்கிறார்கள்.(பெயர் சொன்னாலே தெரியும் அளவுக்கு) சமரோன் என்றால் தோல் பொருட்கள் மற்றும் செருப்பு தைக்கும் தொழில் செய்யும் ஒரு பகுதி மக்களைச்சுட்டும் சொல் என்று சொல்லத்தேவையில்லை. ஒரு 31 பேர் NHRC அமைப்புக்கு 2006 முதல் மனுச்செய்து கொண்டு இருக்கிறார்கள். மனித உரிமைகள் கமிஷனின் தலைவரின் விசாரணையின் போது  பிப்ரவரி 2002 இல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அந்த கிராமம் "கோவிந்தபுரா" என்று பெயரிடப்படுவதாக கிராம மக்களின் சம்மதத்துடன் தெரிவித்து இருக்கிறார். சாதியக்கட்டுமானமும் அதிகாரவர்க்க தோரணைகளும் சேர்ந்து இந்த பெயரை செயல் பட விடாமல் தடுத்து இருக்கிறார்கள். NHRC அனுப்பிய நோட்டிசுக்கு அரசு 'குஷால்புரா" என்று பெயர் வைக்க விரும்புவதாக தலைமைச்செயலர் பதில் அனுப்பி இருக்கிறார்.

 மத்திய உள்துறையில் ஒரு புதிய செய்தி தந்திருக்கிறார்கள்.ரயில்வே ஸ்டேஷன் பட்டியலில்  "குஷால் புரா" என்ற பெயர் வைப்பதில் சிரமம் இருக்கிறது ஏனென்றால் "குஷால்புரா ஹால்ட் ' என்ற பெயரில் பக்கத்தில் ஒரு ரயில் நிலயம் இருப்பதாகச்சொல்லி இருக்கிறார்கள். செப்டம்பெர் 2009 இல் மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு பெயர் மத்திய  உள்துறைக்கு அனுப்பி அதுவும் கடந்த ஜனவரி 2010 வரை  எந்த வித நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் இருக்கிறதாக தகவல்கள் சொல்லுகின்றன.
இறுதியாக NHRC ஆறு வார காலத்திற்குள்  எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மத்திய உள்துறை செயலரைக்கேட்டு இருக்கிறார்கள்.

'யாதும் ஊரே யாவருங்கேளிர்'

என்ற வைர வரிகள்  ஐக்கிய நாடுகள் சபையை அலங்கரித்துக்கொண்டிருப்பதாக சொல்லுகிறார்கள்.
அப்படிப்பட்ட நமது தமிழ் மண்ணில்தான்
'வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து க்கழகம்' என்று விருது நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல் பட இருந்த வேளையில்
சாதியின் பெயரால் உருவாக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களின் பெயர்களும் வாபஸ் பெறப்பட்டது தமிழகஅரசால்..
சமத்துவம் வாழ்க..
ஆனால் 60 ஆண்டுகளாகியும் சாதியின் பெயரால்
என்று தணியும் இந்த 
சாதீய ப்  பிரசசனை ..

Friday, May 7, 2010

கற்பாறைகளும் தப்பவில்லை

நேற்று வரை
காடுகளை அழித்தீர்கள்
காற்றைக் கணக்கின்றி
களங்கப்படுத்தினீர்கள்
நிலத்தடி நீரை
அபகரித்தீர்கள்
விண் வெளி கூட
விண்கலங்களின்
குப்பைக்கூடை
ஆகிப்போனது
இன்று
கற்பாறைகள் கூட
கற்பழிக்கப்படுகின்றன
உங்களால்
உலகமயம்
இவ்வளவுதானா
இன்னும் இருக்கிறதா
மிச்சம்.
இக்கவிதை எழுதியது செப்டம்பர் 2002

(குலு மணாலியில் கோக், பெப்சி நிறுவனங்கள் பாறைகளில் விளம்பரம் செய்தன;
அதை ஒட்டி நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால்   கோடிக்கணக்கான ரூபாய்கள் பன்னாட்டு நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டது.)

Thursday, May 6, 2010

இவர்கள் மக்களில் சேர்த்தி இல்லையா

2001 ஜனவரி 26:  குஜராத் மாநிலம் பூஜ் நகரில் பூகம்பம் வந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம் கள்அமைக்கப்பட்டது. ஆதிக்க சாதி வெறிதலைக்கேறிய 'படேல்'கள் முகாம்களை விட்டு வெளியேறினார்கள். அப்போது  அவர்கள் சொன்ன காரணம் "என்னை விடதாழ்ந்த சாதியைச்சேர்ந்த மனிதனோடு நானும் எப்படி ஒன்றாக தங்கி இருக்க முடியும் ?" நல்லவேளை இயற்கைக்குத்தான் எந்த பேதமும் இல்லை மனிதர்களுக்கு  நிறையத்தான் இருக்கிறது போலும்.

2002 பிப்ரவரி 27:  குஜராத் மாநிலம் கோத்ராவில் எஸ் 8 என்ற பெட்டி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில்எரிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வன்முறைகளில்முகமதியர்கள் இரண்டாயிரம் பேர்கொல்லப்பட்டனர் .ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனார்கள். அப்போது கூட ஒரிரு இடங்களில் முகாமகள் அமைக்கப்பட்டது.அகமதாபாத் பகுதியில் இந்துக்களுக்கென்று அமைக்கப்பட்ட முகாமகளில்மறுபடியும் இதே பிரச்சனை வெடித்ததைடைம்ஸ் ஆஃப் இந்தியாவெளிப்படுத்தியது.

2004 டிசம்பர் 24: நாடு ,தேசம் ,மொழி, இனம் என்று எதுவும் பாராமல் மனிதர்களைக்கொள்ளை கொண்டது "சுனாமி" என்னும் இயற்கைப்பேரழிவு இரண்டரை லட்சத்துக்கும் மேல் உலக மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் தற்காலிக முகாம் கள் அமைக்கப்பட்டது. தலித்துக்ளின் துணையோடு சவக்குழியில் விழத்தயாராக இருக்கும் சாதி, உயிரோடு இருக்கும் தலித்துகளோடு தங்குவதற்கு இடம் கொடுக்க வில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால்  அழுகிக்கிடக்கும் சவங்களைக் கூட தூக்குவதற்கு  சாதிமனம் ஒத்துக்கொள்ள வில்லை. கடைசியில் சாதாரண  மரணங்களின் போது சேவை செய்யும் அருந்ததி இன மக்கள்தான் கும்பல் கும்பலாக அனைத்து சாதிப்பிணங்களையும் பெரிய குழிகளில் சவ அடக்கம் செய்தார்கள்.
மக்களுக்காக 'இறுதி' வரை  உழைக்கும் பகுதியினரை 'ஆட்டைக்கு சேர்க்காமல்' எத்தனைக்காலம்தான் இழுத்தடிப்பது ....?