வலைப்பதிவில் தேட...

Saturday, May 15, 2010

முத்து ராமன் பட்டி

விருது நகரில் முத்து ராமன் பட்டி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இதன் பெயர்க்காரணம் குறித்து" விருது நகர் வரலாறு" (ஆசிரியர் ஜெகனாதன்) என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதனுடைய சுருக்கம் இதுதான்:

அதாவது விருது நகரில் டி இ எல் சி என்ற கிறித்துவ அமைப்பின் நடு நிலைப்பள்ளி ஒன்று  நகரின் மையப்பகுதியில் உள்ள பெரிய காளியம்மன் கோவில் தெருவில் இருக்கிறது. இந்தப்பள்ளியைச்சுற்றிய பகுதியிலும்  வன்னியன் தெருவிலும் அருந்ததிய இன மக்கள் குடியிருந்து வந்திருக்கிறார்கள்.

காலப்போக்கில் இந்த இன மக்களில் ஒரு சிலர் டி இ எல் சி பள்ளியில் படிக்கவும் செய்திருக்கிறார்கள். அவர்கள் மேற்படி பள்ளியில் படித்த காரணத்தால் அது "சக்கிலியன் பள்ளிக்கூடம்" என்று அறியப்பட்டிருக்கிறது. எனது தந்தையார் திரு அர்ஜுனன் அவர்களும் கூட அந்தப்பள்ளியில்தான் ஆறாவது வரை படித்திருக்கிறார். அதனால்  அவருக்கு எழுதப்படிக்கத்தெரியும்.

சில காலம் கழித்து அவர்கள் பவுண்டு தெருவுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள்.
(பவுண்டு என்பது அரசுக்கு சொந்தமான ஒரு கட்டிடம் நான்கு பக்கம் மதில் சுவரும் ஒரு கேட்டும் இருக்கும். அத்து மீறி யாருடைய வெள்ளாமையிலும் மேய்ந்த ஆடு மாடு கழுதை இவற்றை கொண்டு வந்து அடைக்கப்பயன் படும் இடம்) அந்தத்தெருவில் ஒரு காளியம்மன் கோவில்  அருந்ததிய இன மக்களுக்கு சொந்தமானது இன்றைக்கும் இருக்கிறது.

இதே காலகட்டத்தில் அருப்புக்கோட்டை சாலையில் டி. இ.எல்.சி சர்ச் வளாகத்தில் குடியிருந்த வெள்ளைக்கார துரைகளுக்கும் குதிரை பராமரிப்பு பணியில் முத்தன் ராமன் என்ற இரண்டு அருந்ததிய சகோதரர்கள் ஈடுபட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். (அருந்ததியர் என்பது அவரது புத்தகத்தில் இல்லை)

முத்தன் ராமன் சகோதரர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் முத்து ராமன் பட்டி என்று அன்று முதல் அழைக்கப்படுவதாக அவரது குறிப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அது சரி. அப்படி குடியிருந்தவர்களின் வாரீசுகள் இப்பொழுது எங்கே..
பவுண்டுத்தெருவிலிருந்து  இடமாற்றம் கண்டு மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற பகுதிக்கு குடியேறி இருந்திருக்கிறார்கள். (நான் இந்த மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற முகவரியில் பிறந்ததாக எனது தகப்பனார் கூறியிருக்கிறார்.)

1 comment:

ரவி said...

கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருக்கிற முதல் தலை முறை கல்விகிடைக்கப்பெற்றவ&&&&&&&

வெல்க ! வளர்க !