வலைப்பதிவில் தேட...

Saturday, January 29, 2011

கர்த்தரைத்தேடுங்கள்; அப்போது பிழைப்பீர்கள்...

ஒரு சவாரியும் கிடைக்கவில்லை;
பெரிய துயரமாக இருந்தது. 

இயக்குனர் ராஜ் பரத்தின் உச்சகட்டம் சினிமாப்படம் 
சென்ட் ரல் சினிமாவில் நாலாவது முறையாகப்பார்த்தாகிவிட்டது.
 நடிகை ஸ்வப்னா அதில் கதா நாயகி சரத்பாபு கதா நாயகன். ஒரு கொலை சம்பந்தப்பட்ட படம்  'த்ரில்  மேட்டர்'.

மணி ஒன்பதரை ஆகிவிட்டது. முதலாவது ஆட்டம் பார்க்க வந்த சவாரியை இறக்கி விட்டதில் கிடைத்த பணத்தில் படம் பார்த்தாகிவிட்டது.

மிச்சமிருந்ததில் மூளிப்பட்டி அரண்மனை அருகே  இருந்த  கொடிமரத்து பாய் கடையில்  இரண்டு எண்ணெய்ப்புரோட்டா சால்னாவுடன் கொஞ்சமாக தேங்கைச்சட்னியுடன் கலந்து ஒரு வழியாக இரவு நேரப்பசியும் ஆற்றியாகி விட்டது.

ஆனாலும் எக்ஸ்ட்ராவாக ஒரு ஆம்லெட் அல்லது ஒரு சுக்கா வாங்கத்தான் வழியில்லை.

இரவில் ஏதேனும் சவாரி கிடைக்குமா என்று வாய்ப்பு தேடி அலைய முனைந்ததில் கடைசியாகப்போக நேர்ந்தது அல்லது காத்துக்கிடக்க முடிந்த இடம் மதுரை ரோடு சி எஸ் ஐ சர்ச்.

அன்று கிறிஸ்துமஸ் ஈவ் தினம் (1980 டிசம்பர் 24)  இரவு பனிரெண்டு மணிக்கு மேல் நள்ளிரவு ஜெபத்தை முடித்து விட்டு யாரேனும் ரிக்ஷாவில் வீட்டுக்குப்போக நேர்ப்பட்டால் நமது சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு போய் விட்டு விடலாம்.

ஒரு இரண்டு அல்லது இரண்டரை ரூபாய் கிடைத்தால் போதும்.

ரிக்ஷாவின் சொந்தக்காரனுக்கு  இரவு வாடகையாக காலை வண்டி மாற்றும் பொழுது ஒரு  ஒண்ணாரூபா கொடுத்து விட்டு ஒரு கால் ரூபாய்க்கு ஒரு சாயா வாங்கி கொடுத்துவிட்டால்  அவனது கணக்கு நேர் ஆகிவிடும்.

நமது கையில் ஒரு முக்காரூபாய் தேர்ந்தால் மிகப்பெரிய விஷயம்.
அம்மாவோ அல்லது அப்பாவோ பைசா ஏதும் நம்மைக்கேட்கப்போவதில்லை;

'அல்லேலூயா' 'ஆமென்' போன்ற மொழிகளுடன் அவர்களது பிரார்த்தனைகள்
ஒரு வழியாக முடிந்து கொண்டிருந்தது.

மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு பேரை 'ரவுண்டு' கட்டிக்கொண்டு இருந்தார்கள. கவலையோடு நான்கைந்து பெண்கள் வாசலில் வாய் பொத்தி உட்கார்ந்திருந்தார்கள். மற்றொரு புறம் லுங்கியுடன் சிலர் மெஜூரா கோட்ஸ் கடையருகே குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

ரிக்ஷாவின் கீழே கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தலைப்பாகையை இருக்கக் கட்டிக்கொண்டு வருகிற ஆண்களையும் பெண்களையும் ஆவல்மிகுதியில்  வலிய வலியப் பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம்.
ஒரு சவாரியும் அம்புடவில்லை.

மேலே ஏறிட்டுப்பார்த்தேன். உயரமான கட்டிடத்தின் ஒளி விளக்காக சிவப்பு நிறத்தில் சிலுவை மின்னியது.

பராசக்தி மாரியம்மன் கோவிலிலும் கூட இதே போல ஒரு 'சூலம்' சமீப காலமாக மின்னத்துவங்கியிருந்தது.

சர்ச்சின் நுழை வாயிலின் மேலாக   ஹாலோஜென் விளக்கில்  சிவப்பிலும் பச்சையிலுமாக இரண்டு வாக்கியங்கள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன.

"கர்த்தரைத்தேடுங்கள்;
அப்பொழுது பிழைப்பீர்கள்"

4 comments:

D.Martin said...

தோழர் அப்புறம் என்ன ஆச்சு?

அழகிய நாட்கள் said...

அப்புறம் என்ன... சவாரி கிடைக்கல வண்டிய ஓட்டிக்கிட்டு முத்துராமன்பட்டி ஸ்டாண்டுக்கு போனேன். காலையில வாடகை குடுக்க முடியல. பாக்கி சொன்னேன். அவன் டீ வாங்கி குடுத்தான்.

srikanth said...

ஐயா நீர் விருதை மண்ணின் மைந்தரோ? நன்றி உமது சொல்லாட்சி மிகவும் சிறப்பாக உள்ளது

அழகிய நாட்கள் said...

திரு ஸ்ரீகாந்த்!
தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் எனது நன்றி!