வலைப்பதிவில் தேட...

Wednesday, February 17, 2010

நடவு


அரிசி எங்கிருந்து கிடைக்கிறது
பால் எப்படி உற்பத்தி ஆகிறது
இது போன்ற கேள்விகளை இன்றைய
குழந்தைகளிடம் கேட்க வேண்டிய
பொது அறிவுக்கேள்விகளாய் மாறிப்போய் இருக்கிறது. இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வநதவர்களின் வாரிசுகள் 'இப்படி' மாறி இருக்கிறார்கள். அம்மா நாற்று நடுவதற்கு அந்த நடவு காலங்களில் சென்று வருவார்கள். 'அத்தைக்கூலி' வேலைக்கும் போவார்கள். ஒட்டுமொத்தமாக வயற்காடு சொந்தக்காரனிடம் 'காண்ட்ராக்ட்' பேசியும் போவார்கள். அம்மா நிறை பிடித்தால் அந்த வேகமே தனிதான். தெருவில் உள்ள பெண்கள் நிறை பிடிக்கும் தோரனைக்கும் அம்மாவின் நேர்த்திக்கும் இணை ஒருக்காலும் ஆகாது. காலையில் எட்டுமணிக்கு சேற்றில் (வயலில்தான்) இறங்கினால் சாயங்காலம் ஆறு மணிவரைக்கும் கூட வேலை இருக்கும் இடையில் மதிய சாப்பாடு இடைவேளை என்ற பெயரில் கொண்டு போன கம்மஞ்சோறு பட்டவத்தல் அல்லது பச்சைமிளகாய் உப்பில் தொட்டுக்கொண்டு என்று பசியை விரட்டி விட நினைப்பார்கள். ஒவ்வொரு நடவுக்காலங்களிலும் அம்மாவுக்கு காலில் சேற்றுப்புண் வந்து விடும். பெரிய தொல்லைப்படுத்தும். முனகிக்கொண்டு படுத்திருப்பார்கள். ஒரு நூறு மிலி மண்ணெணெய் வாங்கி வந்து கால்களில் பூசி விடுவோம். அம்மாவின் கால்களுக்கு அது இதமாக இருந்திருக்குமா தெரியாது. வேறு வைத்தியத்துக்கான வழியும் இல்லை அந்த நேரங்களில். நாளைக்காலையில் நடவுக்கு போகாதீர்கள் என்று படிக்கிற நாங்கள் சொல்லுவதுண்டு. அப்படி நடவுக்கு போகவிட்டால் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்பது அம்மாவின் கேள்வியாக இருந்திருக்கும் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை .
தூங்கி விழித்து காலையில் பார்த்தால் அம்மா அலுமினிய தூக்குசட்டியோடு மீண்டும் நடவுக்கு பொய் இருப்பார்கள்

No comments: