வலைப்பதிவில் தேட...

Tuesday, September 6, 2011

கலை கலைக்காகவேதானா?

"கலை கலைக்காகவே என்று
சில பேர் கரடி விடுவானுங்க;
அதை நீங்க நம்பாதிங்க; 
அப்படி யிருந்தா
அது எப்பவோ செத்துப்போயிருக்கும்.

கலை வாழ்க்கைக்காகத்தான்
வாழ்க்கையும் கலையும் சேரும்போது தான் 
அதுக்கு உயிரே வருது"

- நடிகவேள் எம் ஆர் ராதா.

கலை மக்களுக்காக என்ற மிகப்பெரிய கோஷத்துடன் ஒரு கலை இலக்கிய அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது. அது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.

அதன் 12 ஆவது மா நில மாநாடு கரிசல் பூமியாம் விருது நகரில் 2011, செப் 16,17,18 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது மாநிலம் முழுதும் இருந்து 32 மாவட்டங்களின் பிரதி நிதியாக  சுமார் 550 பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய வரவேற்புக்குழுவில் நானும் ஒருவன்.

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகாலமாக இந்தச்சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறேன். 

சென்னையில் 1993 ஆம் ஆண்டு கமலஹாசன், என் எஸ் கே அவர்களின் சிலை முன்பு  பறையுடன் துவக்கி  வைத்த பேரணியைத்தொடர்ந்து மூன்று நாட்கள் கிருஷ்ணகான சபாவில்  நடைபெற்றது அதில் பிரதி நிதியாகக்கலந்து கொண்டிருக்கிறேன். திரைப்படக்கலைஞர்கள் நாசர், இயக்குநர் பாலு மகேந்திரா, கோமல் சுவாமி நாதன், தண்ணீர் தண்ணீர் திரைப்பட வாத்தியார் ராமன், ஏ கே வீராச்சாமி,ஆகியோர் கலந்து கொண்டனர். எம் பி சீனிவாசன்(சின்னச்சின்ன மூக்குத்தியாம்-பாதை தெரியுது பார் திரைப்பட இசை   அ மைப்பாளர்) அவர்களிடம் பயின்ற சேர்ந்திசை ராஜேஸ்வரி தலைமயில் நடந்தது.

மா நாடு முடியும் நாள் திடீரென அன்றைய முதல்வர் ஜெயலலிதா (சமீபத்தில் கருணா நிதி சென்னை கடற்கரையில் ஒரு மூன்று மணி நேரம் மனைவியுடனும் துணைவியுடனும் ஈழப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம் (!) இருந்ததைப்போன்று) காவேரி பிரச்சனையை மையமாக வைத்து தோழியுடன் மேடை போட்டு உண்ணாவிரதம் இருக்கத்துவங்கி விட்டார். பிறகென்ன? உடன்பிறப்புகளின் தயவால் தொலைதூரப்பேருந்துகள் ஓடவில்லை; அப்புறம் நானும் தோழர் சீனிவாசனும் 52, கூக்ஸ் சாலை, பெரம்பூர், சென்னையிலிருந்த சி ஐ டி யு அலுவலகத்துக்கு சென்று தங்கினோம். பாரதி தாசனின் கவிதைத்தொகுப்பு (கையடக்கப்பதிப்பு பிளாஸ்டிக் உறையுடன்) ஒன்றை வாங்கிகொண்டேன்.


அதன் பிறகு நான் பிரதி நிதியாகக்கலந்து  கொண்ட  கலை இலக்கிய மா நாடு கோவையில் 1999 இல். அப்போதுதான் 1998 இல் வாஜபாயி அவர்களை ஏதோ ஒரு அமைப்பு தாக்கத்தொடங்கி விளைவாக இரண்டு மிகப்பெரிய ஜவுளிக்கடைகள் எரிந்து கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்து மீண்ட நேரம் அது. மா நாடு முடிந்த பிறகு நடந்த கலை இரவில் ராஜேந்திரா ஜவுளிக்கடையின் முதலாளி மனித நேயம் குறித்தும் மதம் மக்களுக்குள் எந்தப்பிளவையும் ஏற்படுத்த விடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அவரின் பேச்சுத்தாக்கத்தில் நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு அவர் ஒரு பதில் எழுதினார்:



அப்போதெல்லாம்  கைபேசி வந்து விடவில்லை; எனக்கு அலுவலகத்தொலைபேசிமட்டும்தான். ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அழைத்த நேரம் நான் வெளியில் சென்று விட்ட படியால் அவரது அழைப்பை எதிர் கொள்ள முடியவில்லை. ஆனாலும் எனன அவரது பதிவு காலகாலத்திற்கும் என் கணிணியிலும் பதிவிலும். மறக்க முடியுமா?


கோவை விஜயா பதிப்பகத்தின் சார்பில் அதன் உரிமையாளர், சீத்தாராம் எச்சூரி ( மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்), சுதந்திரப்போராட்ட வீரர் என் சங்கரைய்யா, கோவை சிற்பி பாலசுப்ரமணியன், சிகரம் செந்தில் நாதன், அருணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

விருது நகர் மாநாட்டில் இயக்கு நர்கள் "பூ" சசி, "பேராண்மை" எஸ் பி ஜன நாதன்," இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்" சிம்புதேவன் ,விருது நகர் மண்ணின் படைப்பாளி "அங்காடித்தெரு" வசந்தபாலன் ,"அபியும் நானும்" ராதா மோகன், "அழகர்சாமியின் குதிரை" சுசீந்திரன், வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, திரைக்கலைஞர் நாசர், பேரா. ஞான சம்பந்தன், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

18/09/2011 அன்று கலை இலக்கிய இரவு விருது  நகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மா நாட்டு மண்டபத்தில் தொடங்கி கலை இரவு மேடை வரை சுமார் 5000 கலைஞர்கள் பட்டாளத்தின் பேரணி நடை பெடற இருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டகங்கள் பங்கு பெறும் மாபெறும் புத்தகக்கண்காட்சி 15/09/2011 மாலை முதல் ஆரம்பித்து மா நாடு முடியும் நாள் வரை நடைபெற இருக்கிறது. பிரபல திரைப்பட எடிட்டர் திரு பி. லெனின் புகைக்ப்பட,சிற்ப,கார்டூன், நிகழ்வு கண்காட்சிகளை த்துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.  

மாநிலப்பொதுச்செயலர் ச. தமிழ்செல்வன், சீத்தாராம் எச்சூரி, அரவான் பட வசனகர்த்தா சு.வெங்கடேசன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா,  
எழுத்தாளர் மணிமாறன், மாநிலத்தலைவர் மற்றும் ஆய்வாளருமாகிய  அருணன், திரை இயக்கத்தின் எஸ்.கருணா, ச.செந்தில் நாதன், எஸ். ஏ. பெருமாள், சாகித்ய அகாடமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி குறும்பட இயக்கு நர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு  கருத்துரை வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள். மாவட்டச்செயலாளர் அ. லட்சுமி காந்தன், சாத்தூர் லட்சுமணப்பெருமாள் கலை இரவு  நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள்.

அழைப்பிதழ் இதோ:

 
மொத்தத்தில் இது கலை என்பது வாழ்க்கைக்காகவே என்ற முழக்கத்தை உரத்துச்சொல்லும்  மாநாடு.


1 comment:

அழகிய நாட்கள் said...

பதிவை முழுமையாக்க தோழர் தமிழ் செல்வனிடம் அழைப்பிதழ் கேட்டிருந்தேன். கிடைக்க வில்லை. ஆனாலும் அதற்குள்ளாக வே படித்து கருத்து சொன்ன உங்களுக்கு எனது நன்றி!.
தோழமையுடன்
திலிப் நாராயணன்