வலைப்பதிவில் தேட...

Tuesday, August 16, 2011

குற்றால அருவிகளில் குளியல்



வெகு நேரமாகப்பிரதான அருவியில் தண்ணீர் விழுந்து கீழே ஓடிக்கொண்டிருப்பதைப்பார்த்துக்கொண்டே இருந்தாராம் ஒருவர்.
இதைப்பார்த்த மற்றொருவரிடம் அவர் சொன்னாராம்
எவ்வளவு தண்ணி இப்படி வீணாகப்போகுதே என்று
மற்றவர் கேட்டாராம் இவ்வளவு அக்கறையாகக்கேட்கிறீர்களே நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று
அவர் பதில் சொன்னாராம் நான் பால் வியாபாரம்ல பார்க்கிறேன்...


1982 இல் முதன் முறையாக காரைக்குடியிலிருந்து குற்றாலம் சென்றேன். குளிப்பதற்கென்று. மேலே செண்பகா தேவி அருவி வரை அப்போது சென்றோம் சாப்பாட்டு பொட்டலங்களுடன். அன்று முதல் இன்று வரை ஒரு பத்துப்பதினைந்து முறை சென்றிருப்பேன். குழந்தைகள் இருவரை அழைத்துக்கொண்டு இரு முறை ஒரு பத்தாண்டுக்கு முன்பு சென்றதுண்டு அதன் பிறகு நண்பர்களோடு மட்டும்தான்.  நண்பர்களோடு ஒரு தடவை செண்பகாதேவி வரை சென்றிருக்கிறேன். இப்போதெல்லாம் வனத்துறை அங்கீகாரம் பெற்ற பிறகே செல்ல வேண்டுமாம். ஒரு ஐந்தாறு வருடங்களாக அந்த நினைவையே அகற்றி ஆகி விட்டது.


அதன் பிறகுஒரு சீசனுக்கு ஒரு இரண்டு மூன்று தடவை கூட போனதுண்டு. இந்த முறை மனைவி மற்றும் தம்பி, பாப்பாவுடன் (வயது 22,19) . இரண்டாம் சனி ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரதான அருவிக்கு ஒருமுறை மே மாதத்தில் சென்றிருந்தோம். ஒருவர் கூட இல்லை கடைகளும் கூடவேதான். மொட்டையாக அந்தப்பாறை கம்பீரமாக இருந்தது. ஒரு சொட்டு தண்ணீர் விழவில்லை. பிறகு பாப நாசம் அகஸ்தியர் அருவிக்கு சென்றோம்.




ஐந்தருவிக்கு ஒரு முறை செல்லும்போது தண்ணீர் வரத்து இல்லை ஆனால் கூட்டமோ ஏராளம். குளிக்காமலேயே வந்து ரூமில் குளித்தோம். இந்தத்தடவை அப்படியில்லை கூட்டமும் கூடுதல். தண்ணீரும் ஏராளமாய். நல்ல குளியல். படகுக்குழாமில் பெடலிங்க் போட்டிங்க் போகலாம என்றேன் குழந்தைகள் வேண்டாம் என்றார்கள்.

 ஐந்தருவிக்கு செல்லும் வழியில் உள்ள விவேகாநந்தர் சிலை






பழைய குற்றாலத்திற்கு ஆட்டோவில் சென்று பாண்டியன் ஹோட்டல் மதிய சாப்பாடு அன்றைக்கு ஒரு காலம் இப்போது பஸ்ஸில் சென்று குளித்து பஸ்ஸிலேயே திரும்ப முடிந்ததும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிரமபட்டனர். வரிசையில் நிற்க வைத்து ஜட்டி போட்டவர்களை அடித்து ஏதோ விசில் அடித்து கடமையாற்றினர்.


பெரிய பெரிய வயிறுகளுடன் ஆண்கள் பெர்முடாஸ் அணிந்து அலுங்காமல் நடந்து திரிந்தனர் குளித்து, எண்ணெய் தேய்த்து, குளித்து முடித்து என எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகள். கருப்பு அங்கிகளுடன் பெண்கள் அவர்களது குடும்பத்தாருடன் மார்பினில் முப்புரி நூலுடன் குடும்பத்தாருடன் சிலர்,  நமக்கு புரியாத பாஷை சகிதம் (சௌராஷ்ட்ர மொழி ?)குடும்பம் குடும்பமாக உரையாடிக்கொண்டு பேசிக்கொண்டு பழங்கதை பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு, மலையாள சம்பாஷணையுடன் சிலர் என பல்வேறு மனிதர்கள் பெண்கள் குழந்தைகள்.

எத்தனை விதங்களில் மனிதர்கள் இருப்பினும் அதை நெல்லை பாஷை பேசி சாமர்த்தியமாக கையாளும் சைக்கிள் வியாபாரிகள் பரோட்டா கடைக்காரர்கள் டாஸ்மாக் கடைக்காரர்கள் நுங்கு பதினி பலாச்சுளை விற்போர், கை ரேகை பார்க்கும் பெண்கள், பொம்மைகள் முதற்கொண்டு மணக்கும் நேந்திரம் பழ சிப்ஸ் விற்கும் கடைக்காரர்கள் மங்குஸ்தான், ரம்டன், பலாப்பழம்,  நாட்டுக்கொய்யா,மனோரஞ்சிதம் சில்லுக்கருப்பட்டி உட்பட விற்போர்களின் களமாக குற்றாலம் நிறைந்திருந்தது.






சிற்றருவியில் ஐந்து ரூபாய் கொடுத்து பெரிய ஷவரில் குளிப்பது ஒரு அனுபவம்தான். அங்கே குரங்குகள் சுற்றித்திரிகின்றன.
திருக்குற்றாலக்குறவஞ்சியில் வருமே ஒரு வரி

மந்தி சிந்தும் கனிகளுக்கு 
வான் கவிகள் கெஞ்சும்


அதெல்லாம் அந்தக்காலம் போல
இப்போதெல்லாம் அந்தக்குரங்குகள் மனிதர்களிடம் பலாப்பழத்துண்டுக்காகவும் பிய்த்துத்தருகிற எண்ணெய் மிதக்கும் மிளகாய் பஜ்ஜிக்கும் கையேந்திக்கொண்டு அலைகின்றன.


கலாச்சார வாழ்க்கையின் ஒரு பகுதியாக இப்படி குடும்பம் குடும்பமாக அல்லது நண்பர்கள் வட்டத்துடன் இயக்கிக்கொண்டிருக்கிறது இயற்கை நம்மையெல்லாம் என தோன்றியது.



புலியருவிக்கு இரவு பத்து மணிக்கு மேல் சென்றால் கூட்டமில்லாமல் இருக்கும். மத்தியான வேளை சென்றோம் குளிக்கும்படியாக இல்லை. சரி என்று சொல்லி உடனே கிளம்பி செங்கோட்டை பார்டர் கடைக்கு (ரகமத்) ஆட்டோவில் பறந்தோம் பிரியாணிக்காக. அப்படியே ரயில்வே ஸ்டஷனுக்கு 4 மணி செங்கோட்டை- மதுரை ரயிலைப்பிடிக்க...

1 comment:

அழகிய நாட்கள் said...

திரு சரவணன்ஃபிலிம்!
வணக்கம் தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.