வலைப்பதிவில் தேட...

Tuesday, October 19, 2010

பதின் வயது நினைவுகள் 3

விருது நகர் பராசக்தி மாரியம்மன் கோவில்  பொங்கல் திருவிழா வருடாவருடம் ஏப்ரல் முதல் வாரத்தில் (தமிழ் மாதம் பங்குனி கடைசியில்)  நடை பெறுகிறது. பொங்கல் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும். அன்றைக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு கையில் வேப்ப இலைகளுடன் வலம் வருவார்கள்.  மறு நாள் பக்தர்கள் அம்மனுக்கும் நேர்ந்து கொண்டபடி கயிறு குத்துவது, தீச்சட்டி எடுப்பது, மாவிளக்கு எடுப்பது, ஆயிரங்கண் பானை வாங்கி சமர்ப்பிப்பது, கண் மலர், கை கால், முழு உருவ பொம்மை (ஆண் பெண்) , தவழும் குழந்தை போன்ற மண் படைப்புகளை
அம்மனுக்கு படைப்பது, அலகு குத்துவது, பின் முதுகில் இரு இடங்களில் குத்தி ஒரு சிறிய தேரை இழுப்பது என்று நிறைய பக்தியின் முறைகள் இருக்கிறது.  இன்றைக்கும் இத்திருவிழா பிரசித்தி பெற்றது இந்தப்பகுதியிலும் விருது நகர் சுற்றுப்பட்டி மற்றும் வட்டாரங்களிலும்.

எங்கள் பதின் வயதுகளில்  மார்பெல்லாம் சந்தனம் பூசி, புதிய வேட்டி கட்டி
புதிய தலைப்பாகை கட்டிக்கொண்டு, தோளில் தொங்கிக்கொண்டிருக்கும்
"கிடுக்கட்டி" என்னும் ஒரு தோல் கருவியின் உதவியால்"டன் டன டன் டன" என்று அடித்துக்கொண்டு சரியாக பொங்கல் திருவிழாவிற்கு 21 நாட்களுக்கு முந்தைய ஒரு இரவில் திருவிழாவினைப்பற்றி உரக்க அறிவித்துக்கொண்டு வருவார். (நெல்லை மாவட்டங்களில் இத்தகைய திருவிழக்களுக்கு "கொடை" என்று சொல்லுகிறார்கள். இங்கே அப்படியெல்லாம் கிடையாது. பொங்கல் திரு நாள் என்று கூட சொல்லுவதில்லை வெறுமனே "பொங்கல்" என்று மட்டுமே குறிப்பிடுவார்கள் இன்றைக்கும்கூட)
நாங்களெல்லாம் பின்னாடியே ஓடுவோம்.

பொங்கல் அறிவிக்கப்படுவதை 'சாட்டுதல்' என்று சொல்லுவார்கள். சாட்டியது முதல் எங்களுக்கெல்லாம் ஒரே 'கவுண்ட் டவுன்' தான்.
என்னும் எத்தனை நாள் இருக்கிறது? நம்ம தெருவில் யார் யாரெல்லாம் கயிறுகுத்துகிறார்கள்? யார் யாரெல்லாம் தீச்சட்டி( அக்கினிச்சட்டி) எடுக்கிறார்கள்.பொங்கலுக்கு முன்பாக ஒருவாரகாலத்திற்கு  பொட்டலில் நடக்கும் நாடகங்கள் போவது, ராட்டினங்கள் சுத்தப்போவது என்று மிகவும்
ஆர்வமாக இருப்போம்.

வருடா வருடம்  குறைந்தது  இரண்டு ராட்டினங்கள் ஒன்று குடைவடிவிலானது மற்றொன்று மேலிருந்து கீழாக சுற்றி வருவது  என்று போட்டு இருப்பார்கள். அப்போதெல்லாம் அறுபது அடி ராட்ஷச ராட்டினம் இல்லை.  நாடகம் பார்க்கப்போய், அது ஆரம்பிக்க லேட் ஆனதால்
நண்பர்கள் சிலபேருடன் சேர்ந்து ராட்டினம் சுத்தக்கிளம்பினோம். ஒருவர் கையிலும் காசு என்பது இல்லை. அந்த குடை ராட்டினத்தின் மேல் கொஞ்சம் ஆசை. மேல் கீழ் ராட்டினத்தில் ஏறினால் குடலைப்புரட்டிஎடுக்கும். வாந்தி வரும் தலை சுற்றும், கிறு கிறுப்பும் வரும்


கருப்பையா சுருக்குப்பையோடு நிற்கும் அந்த ராட்டின உரிமையாளர் பெண்ணிடம் போய் அப்பாவியாக நின்று கேட்டான். நாங்கள் நான்கு பேர். உங்களுக்கு உதவியாக ராட்டினம் சுத்த எங்களை அனுமதிப்பீர்களா? என்று அந்தப்பெண்மனி நீங்கள் ராட்டினம் ஏறி சுத்த வேண்டுமென்றால் நான் சொல்லும் வரை ஏறி உட்கார்ந்திருப்பவர்களுக்காக  நீங்க்ள் சுற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்கள்.

சரி என்று ஒத்துக்கொண்டோம். கருப்பையா, நான் மற்றும் இரண்டு பேர் ராட்டினத்தில் ஏறி ஜம்பமாக உட்கார்ந்திருக்கும் எங்கள் வயதொத்தவர்களை சுத்தினோம். அந்தக்குதிரை வடிவில் உட்கார்ந்திருப்பவனுக்கு மட்டற்ற சந்தோஷம் இருக்கும்.
கொஞ்ச நேரம் சுத்தி விட்டால் நாமும் அந்த குதிரை வடிவிலான பொம்மை ராட்டினத்தில் ஏற வாய்ப்பு கிடைக்குமே என்று எண்ண அலைகள் சுற்றியது. கொஞ்ச நேரம் சுத்தி விட்டு விட்டு அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

கூட்டம் குறைந்து விட்டது போலத்தெரிந்ததும், அந்த அம்மா எங்களை ஏறி உட்கார சொன்னார். குதிரையில் நான் உட்கார்ந்தேன்.  நாங்களே தள்ளி விட்டு நாங்களே சுத்தும்படியான் ஒரு நிலமை வந்தது. கொஞ்ச நேரத்தில் கிறு கிறுவென்று வந்தது. ராட்டினத்தை விட்டு விலகி தூரப்போய் படுத்துக்கொண்டேன். 




கொஞ்ச நேரம் கழித்து நன்றாக ராட்டினத்தில் ஆடிவிட்டு கருப்பையா கொஞ்சம் கூட அசராமல் வந்தான் என்னை எழுப்பினான் பிளாஸ்டிக் கிளாஸ் தண்ணியோடு. நான் நிமிர்ந்து பார்த்தேன்.மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தேன் வீடு    நோக்கி கருப்பையாவின் தோளில் கை போட்டபடி.

2 comments:

Anonymous said...

பதின்பருவத்து நினைவுகள் இனிக்கிறது.கிறுகிறுத்தது ராட்டினம் மட்டுமில்லை. அன்றைய தினங்களும்,வாழ்க்கையும்,கொண்டாட்டமும்தான்.

அழகிய நாட்கள் said...

நண்பர் அனானி!

தங்களது வருகை உவகை தருகிறது
பின்னூட்டம் நினைவலைகளைப்பகிர்ந்து கொள்கிறது.
பேரன்புடன்,
திலிப் நாராயணன்.