வலைப்பதிவில் தேட...

Friday, May 11, 2012

அழியாத நினைவலைகள்

ஒரு மனிதன் தனது இருபதுகளில் ஒரு இடது சாரியாகவும் தனது அறுபதுகளில் ஆன்மீகவாதியாகவும் இல்லாமல் இருக்க முடியாது என்பார்கள். அதை உடைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

 இந்திய மண்ணில் ஒரு மூன்று சதம் பேர் சனாதனவாதிகளாக (மனு(அ)தர்மவாதிகள்)இருந்து கொண்டு எப்படி இந்த தேசத்தையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அது போல உலகம் முழுமைக்கும் நாத்தீகம் கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் அடக்கியாள முயற்சிக்காதவர்கள். மனித நேயம் உள்ளவர்கள்.


அந்த வகையில் பொதிகை டி வியில் உ வாசுகியும் ஞானியும் தொகுத்த பெரியார் தொடரில் வருவாரே மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் அவர் மிகவும் என்னைக்கவர்ந்தவர். அவர் கடவுள் மறுப்பாளராக தனது இளம் வயதில் பரிணமிக்கிறார். வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இறுதிப்படுக்கையில் கிடக்க நேரிடுகிறது, அடுத்து மரணம்தான்..

 என் வி குறிப்பிட்டது போல வயது ஆகிவிடுகிறது நமக்கு. உடம்பின் ஒவ்வொரு பகுதியும் தனது செயல்பாட்டைக்குறைத்துக்கொள்கிறது. அனைத்து உறுப்புகளும் தனது செயல்பாட்டை முற்றிலுமாகக்குறைத்துக்கொண்டு விட்டால் அல்லது செயல்பாட்டை  நிறுத்திக்கொண்டால்  மரணம்  நம்மைத்தழுவிக்கொள்ளும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் தனது மரணப்படுக்கையில் இருப்பார். அப்போது அவரது சிந்தனை இதுவாக இருந்தது. அதை இப்படி வெளிப்படுத்துவார். வழக்கமான  நடை முறையில் அறுபதுகளில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு எனது நாத்தீகக்கொள்கையைக்கை விட்டதாக யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறுதி மூச்சு வரை நான் நாத்தீகவாதியாகவே இருக்கிறேன் நாத்தீக வாதியாகவே மரணம் அடைவேன் என்பதை பத்திரிகையாளர்களை அழைத்து குறிப்பிடுவார்

இருபதுகளில் மார்க்சீய சிந்தாந்தங்ககளின் பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். தன்னையும் அப்படியான ஆளாக திரையில் திரு வைரமுத்து எரிமலை எப்படிப்பொறுக்கும் (ஏ வி எம்மின் சிவப்பு மல்லி 1980) போன்ற பாடல்களால் கவர்ந்திருந்தார். வருடாவருடம் நடக்கும் காரைக்குடி கம்பன் விழா ( 1983)வில் சிறப்பு விருந்தினராக திரு வைரமுத்து வந்திருந்தார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


அதன்பிறகு காரைக்குடி செட்டி நாடு மகளிர் கல்லூரியில் 89 ஆம் ஆண்டு கல்லூரி துவங்கிய சமயம் கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியப்பெருமக்களுக்கும் பிரச்சனை.  நிர்வாகத்தை எதிர்த்து பேராசிரியர்கள் வீரச்சமர் சமர் புரிந்து கொண்டிருந்த நேரம் சகோதர தொழிற்சங்கங்கள் ஆதரவுடன். நாங்கள் தொலை பேசி ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம்.

 பேரா. மாடசாமி, பேரா. ராஜு, பேரா பார்த்தசாரதி, பேரா. விஜயகுமார்  பேரா மனோகரன் காரைக்குடி பேரா தேனப்பன், பேரா ஆவுடையம்மாள்,  நாகலிங்கம் குமரவேல் (தேவகோட்டை)போன்ற மூட்டா சங்கத்தலைவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு சாலையோர வகுப்புகள் நடத்தி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்துமாணவிகளுக்கு கல்வி கெடாவண்ணம் போதித்துக்கொண்டிருந்தனர். பட்டிமன்றப்பேச்சாளர் சரஸ்வதி ராம நாதன் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

அந்த சாலையோர வகுப்பறைகள் போராட்டம் முடியும் தருவாயில் அன்றைய திருவெரும்பூர் எம் எல் ஏ திருமதி பாப்பா உமா நாத், மற்றும் திரு வைரமுத்து ( பேரா மாடசாமியின் வகுப்பறைத்தோழன்) இருவரையும் அழைத்து ஒரு சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மாணவர்கள், மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன். அப்போதைய காரைக்குடி எம் எல் ஏ அவர்களின் புதிய ஹோட்டல் மலரில் வைரமுத்து தங்கியிருந்தார். எனது குழந்தை  திலிப் சுகதேவுக்கு அப்போது ஒரு வயது .நான் எனது இணை மற்றும் இரு நண்பர்களுடன் அந்தப்புகைப்படம்.





தோழர் பாப்பா உமா நாத்கையில் திலீப் சுகதேவ்.
நிற்பவரில் வலது கோடி எனது துணைவியார்

மற்றோர் புகைப்படத்தில் தோழர் ஆசிரியர்
என் ராமச்சந்திரன் கையில் திலிப் சுகதேவ்.




இன்னும் சில   நிழற்பட நினைவுகள் அடுத்தாக....

2 comments:

D.Martin said...

உங்கள் துவக்ககால போராட்ட வரலாறு அருமை. மேலும் படிக்க ஆவலாக உள்ளேன்.

அழகிய நாட்கள் said...

நன்றி மார்டின் சந்திப்போம் சவாலான வாழ்க்கைப் பகுதிகளின் வடிவங்களுடன் வைர
வரிகளாக