வலைப்பதிவில் தேட...

Saturday, March 26, 2011

மார்ச் பதிவுகள்

மார்ச் மாதம் என்றால் கணக்கு முடிப்பது என்ற ஒரு வெள்ளைக்காரன் சடங்கு அனேகமாக அனைத்து அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளிலும் நடை முறையில் இருக்கிறது.

எந்த வித சம்பந்தமும் தனக்கு இல்லாதது போல ஒரு  ஆறேழு ஆண்டுகளாக எதுவும் தெரியாது என்று சொல்லிக்கொண்டே பாரத்திரு நாட்டின் பிரதமர் மிகச்சிறந்த பொருளாதார மேதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நிற்க..

மார்ச் மாதம் 16 ஆம் தேதி சென்னையில் ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டி இருந்தது. நானும் எனது மனைவியும் சென்றோம். அது வடபழனி ஆண்டவர் கோவில் ஆர்க்காட்டு சாலை. அன்றைக்கு மட்டும் ஒரு 34 திருமணங்கள். திருமணம் நடக்கவிருக்கும் ஒவ்வொரு இடத்திடற்கும் ஒரு எண். பத்துப்பதினைந்து ஜோடியைப்பார்த்தபிறகு எங்களது கல்யாண ஜோடியைப்பார்த்தோம். ஒரு தகரப்பெட்டியில் தீ எரிந்து கொண்டிருக்க, அதில் பாக்கெட் நெய்யை ஊற்றி,  மந்திரம் சொல்லி, பொட்டு வைக்கசொல்லி, போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லி, இப்படியாக  விதம் விதமாக படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாகல்யாணங்களிலும் வீடியோ உட்பட பதிவுகள் நடந்து கொண்டிருந்தன.

டிசம்பர் 10, 1986 தோழர் எஸ் ஏ பெருமாள் அவர்களின் தலைமையில் எனது திருமணம் நினைவுக்கு வந்தது. அது விருது நகருக்கே உரித்தான சீர்திருத்தக்கல்யாணம். நிறைந்த சபையில் திருமணம் சம்பந்தமான உரையில் அந்தக்காலத்தில் ஒரு திருமணம் ஏழு நாட்களுக்கு நடைபெறும் என்றும், பிறகு அது மூன்று நாட்களாக சுருங்கிப்போய் விட்டதாகவும் இப்போதெல்லாம் ஒரே நாள் திருமணம நடைபெறுகிறது என்றும் தோழர் எஸ் ஏ பெருமாள் குறிப்பிட்டார். நான் மண மேடையில் இருந்தேன். அப்போது யோசனைக்கு வந்ததெல்லாம் இதுதான்.. இப்போதெல்லாம் உறவினர்கள்  சரியான முகூர்த்த நேரத்துக்கு வந்து விட்டு முடிந்தால் சாப்பிட்டு விட்டு போவதும் அதுவும் முடியாதவர்கள் கையை நனைக்காமலேயே மண்டபத்தை விட்டு வெளியேறுவதும் நடைமுறையாகிப்போனதே என்ன செய்ய..

மார்ச் 22 அன்று நண்பன் கிருஷ்ணகுமாரின் தாயார்  தனது எழுபதுகளில் காலமாகி விட்டார்கள்.  அன்று மாலை முதல் மறு நாள் இடுகாட்டில் இறுதிச்சடங்கு வரை கூடவே இருந்து எல்லா காரியங்களிலும் பகிர்வாக இருந்தேன்.
22 வருடங்களுக்கு முன் (1988 நவம்பர் 3) இறந்து போன அம்மாவின் ஞாபகங்கள் சூறாவளியென மனதைச்சுற்றி வந்தது.  அடக்கம் செய்த அந்த  நாள் இரவில்  தாயின் உடம்பு சிதையும் வலியை  நான் உணர்ந்தேன். அது இப்போதும்  மனதின் வலி,.நீட்சியாகவே   நீடித்துக்கொண்டிருக்கிறது.

4 comments:

vimalanperali said...

வலிகள் நிறைந்த வாழ்வில் சுழித்தோடும் நினைவுகள் சமயத்தில் தாலாட்டுவதாகவும்,சமயத்தில் சங்கடமூடுவதாகவும்...../
கிருஷ்ணகுமார்அவர்களது தாயாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.

அழகிய நாட்கள் said...

தோழர் விமலன்!
வலிகள் ரணங்களாவது கூட நமது நினைவுகளால்தான் என நினைக்கிறேன். தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.

சிவகுமாரன் said...

துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது நமது துக்க உணர்வுகள் மேலிடுகின்றன. உங்கள் நண்பரின் இறுதிச் சடங்கில் தங்கள் தாயாரின் நினைவு வந்தது போல் , இந்தப் பதிவு என் தந்தையாரின் நினைவுகளையும் , அவரின் இறுதி நாட்களையும் கிளறிவிட்டன. கனத்த மனத்துடன்.....

அழகிய நாட்கள் said...

திரு சிவகுமாரன்!
நினைவலைகள் மட்டுமே நீண்ட நாட்கள் வாழ வைக்கும் என்பதாகவும் அதிலும் நினைவலைகளைப்பகிர்ந்து கொள்வதில் இந்தியர்கள் முதலாம் இடத்தில் இருப்பதாகவும் ஒரு பதிவு படித்தேன். நன்றி தங்களின் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
வாழ்த்துகளுடன்,
திலிப் நாராயணன்.