வலைப்பதிவில் தேட...

Monday, May 16, 2011

எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?

1991இல் முதன் முதலாக ஜெயலலிதா ஜானகி அணியை ஒன்றிணைத்து இரட்டை இலையைத்தக்க வைத்து தமிழகத்தின் முதல்வரானார். 1996 இல் அவரது அராஜக பகட்டான கட்அவுட் கலாச்சாரத்தினாலும், சக மனிதனை மதிக்காத போக்கினாலும், சனாதன தர்மத்தைக்காக்கும் விதமாக முரளி மனோகர் ஜோஷியின் வழியில்  சமஸ்கிருதம் மற்றும் வேத பாடசாலைகள் அமைப்போம் என திராவிட கட்சித்தலைமை கொண்ட ஜெ சனாதன தர்மத்தை மேற்கொள்ள எத்தனித்தார். விளைவாக  தமிழக மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்தனர்.


1996இல் மீண்டும் மூன்றாவது முறையாக முதல்வரானார். காரணம் என்னவென்றால் அந்த அம்மையார் இல்லைஎன்றால் கருணா நிதி என்ற புரிதல் தான். இவரும் ஒரு ஐந்து ஆண்டு காலம் ஆண்டார் இவர் உழவர் சந்தையில் காய் கறிகள் விற்க ஆணையிட .மருமகன் மாறன் உலகவங்கியில் இந்தியாவை அடமானம் வைக்க தொழிலாளர் துறை மந்திரியாக இருந்து சாதித்தார். ஊடுதட்டில் மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சன் தொலைக்காட்சிக்கு அவரால் ஆன டெல்லி முயற்சிகள் நிறைவேற கருணா நிதியால் மா நில அளவிலான உதவிகள் தொடர கலா நிதி மிகப்பெரும் புள்ளியாக வழி வகுத்தார் ஆனாலும் மக்கள் பிரச்சனைகளில் எந்த மாற்றமும் இல்லை காங்கிரசின் அடி வருடியாக பாரதீய ஜனதாவுக்கு எப்படி இருந்தாரோ அதே அளவு கோலை காங்கிரசுக்கும் கடைப்பபிடித்தார்கள். ஒரு ஐந்து ஆண்டுகள்தாம்.


2001இல் அவரது கோட்பாடுகள் சரியில்லை என்று சனங்கள் முடிவு செய்து மீண்டும் ஜெயாவை ஆட்சியில் உட்கார வைத்தார்கள்.
அரசாங்க ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் 95% என்று தவறான புள்ளி விபரங்களை அள்ளி வீசினார். ஒரே உத்தரவில் 1,76,000 ஊழியர்களை பதவி நீக்கம் செய்தார் ( ராசாவின் ரூபாய் 1,76,000 கோடி 2 ஜி ஊழல் போலத்தான் இதுவும். அவர்கள் மனிதர்கள் இவைகள் ரூபாய்கள்). அட்டவணை சாதியினர், பழங்குடி மக்கள் மதம் மாறக்கூடாது என்று இரும்புச்சட்டம் இயற்றி இந்துத்துவா மோதியையே மிரட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் காலகாலமாக தங்கள் விளைச்சலைக்கொண்டாடும் விதமாக இருந்த குலதெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடுவது என்ற பரம்பரைப்பழக்கத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக சட்டங்கள் இயற்றினார்.


2006: நமது மக்களுக்கு வேறு யாரையுமே தெரியாது மீண்டும் கருணா நிதியை
மீண்டும் முதல்வராக்கினார்கள். இலவச டிவிதான், ஒரு ரூபாய் அரிசிதான் ( அதை வாங்க அரசு செலவிடுவது என்னவோ 5 ரூபாய்தான்) அரசு கேபிள் அறிவிப்புதான் திருமங்கலம் ஜெயிப்புதான் , மானாட மயிலாடதான், மூன்று பகாசுர படக்கம்பெனிகள்தான் குடும்பத்தினர் ஐவர் உயர்மட்டக்குழுவில் உறுப்பினர்தான் அவர்கள் அனைவரும் முக்கியப்பதவிகள் தான் ( என் வி கே சம்பத், கே ஏ மதியழகன், அண்ணா, நெடுஞ்செழியன், என் வி  நடராசன் என்ற ஐவர் எல்லாம் அந்தக்காலம்....) கழகமே குடும்பம் குடும்பமே கழகம்தான். மணற்கொள்ளைதான், கற்கொள்ளைதான், மின் வெட்டுதான், விலைவாசி உயர்வுதான், ஆட்சியிலிருந்தும் தட்டிக்கேட்க முடியாத பெட்ரோல் உயர்வுதான், உலகத்தமிழ் மா நாடென்ன செம்மொழி மாநாடுதான் என்று கலக்கி விட்டார் அனைத்து மனிதனிடத்திலும் ஏதேனும் ஒரு விதத்தில் உள்ளிருக்கிற கலைஞன் என்ற அனைத்துத்திறமைகளையும் ஒரு முகக்ப்படுத்தி தனது பெயருக்கு அதை உரித்தாக்கிக்கொண்ட "கலைஞர்" கருணாநிதி.


இப்போது மிகவும் நல்லவராகிப்போனார் ஜெயலலிதா. என்ன செய்ய இனி ஒரு ஐந்து ஆண்டுகாலத்தை சுவைக்க தமிழக மக்கள் ஒருமித்து வாக்களித்து இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக மோடி வந்திருக்கிறார். திராவிட இயக்கத்தில் கலப்படமற்ற இந்துத்துவா, ரூபாய்  2 கோடி உள்ளிட்ட செட்டிங்ஸ் உட்பட சுமார் 1000 கோடி செலவில்  மக்கள் பணத்தில் அவர் கட்டியதால்  அது வேண்டாமென்று மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையாம்.


பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி தரப்பட்ட மின்சாரம், இடம், நீர், தொழிற்சங்க உரிமை பறிப்பு  இவற்றில் எந்த முன்னேற்ற நடவடிக்கையாவது இருக்குமா? தெரியவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் நான் எனது என்ற திருவிளையாடல் முருகனின் வசங்கள் மீண்டும் ஒலிக்கும்.

எப்படி இருந்தாலும் கடந்த ஐந்து வருடங்களில்  ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் என்று எந்தப்பாகுபாடும் இல்லாமல்  அநேகமாக ஏதேனும் ஒன்று அல்லது ஐந்தாறு வரையிலும் கூட எங்ஜினீரிங் கல்லூரிகள், குறைந்த பட்ச எண்ணிக்கை அளவிலான  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு உழைக்க வேண்டிய நிலையங்கள் நிறைய கைவசம் இருக்கிறது.  அம்மாவின் ஆட்சி முடியும் வரை பொறுமை காத்தால் போதும்  மீண்டும் அவர்கள் கைகளுக்கே அனைத்து அதிகாரங்களையும் திரும்பவும் ஒப்படைக்க தமிழக மக்கள் தயாராக இருப்பார்கள். 1991 தொடங்கி ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இதுதானே நடை முறையாகி இருக்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்பார் பாரதியார்.
நாமும் அப்படியே இருப்போமா?

Tuesday, April 26, 2011

ஆண்டிப்பகடை

இப்படித்தான்  என் நினைவு சொல்லுகிறது  அப்போது சௌடாம்பிகை நடு நிலைப்பள்ளியில் ஏழாவது படித்துக்கொண்டிருக்கும் நேரம். முத்துராமன் பட்டியிலிருந்து சாதி சனங்களோடு குடியிருந்த  வீட்டை வித்து விட்டு  மாத்த நாயக்கன்பட்டி  பாதையில் ஒரு இடத்தை வாங்கி  என் தாத்தா கட்டி  இருந்த எங்கள் வீட்டில் குடியிருந்தோம் (கூரை வேயப்பட்ட  மண் குடிசைதான் வேறென்ன?)

கிட்டத்தட்ட இரு நூறு வீடுகள் (தலக்கட்டுகள்). ஒரே இனக்குழுவைச்சேர்ந்தவர்கள் அந்தப்பகுது முழுதும்  எனது சொந்தங்கள்தான்.
என் தாத்தாவின் வயதொத்தவர் ஆண்டிப்பகடை. தாத்தா நான் மூன்றாவது படிக்கும்போதே இறந்து போனார். ஆனால் ஆண்டிப்பகடை அதற்கப்புறம் நாலைந்து ஆண்டுகள் இருந்தார்.  நல்ல கறுத்த நிறம் . வேட்டியை எப்போதும் தார்ப்பாய்ச்சி கட்டிதான் இருப்பார். அவரது மனைவி பூச்சிக்கிழவி.

அவர் ஒரு குதிரை வைத்திருந்தார். அது மிகவும் ஆரோக்கியமான அரபுக்குதிரையன்று. அவரது குடுமியைப்போலவே மெல்லிதான வால் அந்தக்குதிரைக்கு. எங்களுக்கு அந்தக்குதிரையை வேடிக்கை பார்ப்பதுதான் வேலை. அவர் விரட்டி விரட்டி விடுவார் எங்களை.



அவர் அந்தக் குதிரையை அப்படியே கடிவாளம் சார்ந்து இயங்கும் தோலாலான ஒரு நீண்ட வாரைப்பிடித்து லாவகமாக அழைத்துக்கொண்டு தெற்குப்பக்கமாக கல்பொறுக்கி சாமி யைத்தாண்டினால்   சுடுகாடு. மாத்த நாயக்கன்பட்டி சனங்கள் எல்லம் அந்த வழியாக வரும்போது அந்த மஞ்சனத்தி மரத்தடியில் கிடக்கும் கற்குவியலில் ஒரு கல்லை எடுத்துப்போட்டுவிட்டுப்போவார்கள். அதுதான் எங்களுக்கு கல்பொறுக்கி சாமி.

அந்தக்கோவிலைத்தாண்டி சீமைப்புல் பக்கம் போய் குதிரையை  புல் மேய விட்டு கொண்டு வருவார். கையில் ஒரு சாட்டைக்குச்சி வைத்திருப்பார். நாங்கள் பின்னாடியே ஓடி வந்து கொண்டிருப்போம். விரட்டுவதும் சிதறி ஒடுவதும் பின்னால் தொடருவதும் வாடிக்கையானது  அந்தப்பதின் வயதுகளில். அந்தக்குதிரைக்கு கால் குளம்பில் ஏதோ புண் மாதிரி வந்து அந்த இயல்பு நடை மறந்து போய் அவரும் வேறு வழியின்றி அதை யாருக்கோ கொடுத்து விட்டார். விலைக்கா என்னவென்று தெரியவில்லை.

இதற்குப்பிறகு ஆண்டிப்பகடை இறந்து போனார் ஒரு நாளில். சுடுகாடு மண்பாலத்துக்கு இடது பக்கத்தில் வண்டிப்பாதைக்கு வடக்கில். அதாவது  கருமாதி மடத்தை அடுத்த சாத்தூர் செல்லும் சாலயில் கௌசிகா மகா நதியின் குறுக்கே கட்டப்பட்ட வெள்ளைக்காரன் காலத்துப்பாலம்.  அதற்குப்பக்கத்தில் இரயில் செல்லும் பாலம் இரும்புப்பாலம்.

சொந்தங்கள் சுருத்துகள் ஊரார், உற்றார்  என அனைவரும் வந்த பிறகு விளக்கு வைத்தபிறகு இறுதிப்பயணத்துக்குத்தயாரானார் ஆண்டிப்பகடை. நாங்கள் எல்லாம் ஒரே குதியாட்டம்தான். கொட்டுக்காரர்களுடன் ஊடே புகுந்து. சில  நேரங்களில் அவர்களின் கொட்டுக்குச்சியில் அடியும் விழும்.

முத்துராமன் பட்டி ரயில்வே கேட் தாண்டி ராமசாமி மடத்துக்கு அருகே வரும்போது ஒருவனை விரட்டி ஓடினேன். அவ்வளவுதான். எதிரே வந்த லைட் இல்லாத சைக்கிள்காரன் மேல் மோதி விழுந்தே விட்டேன். வலது முழங்காலில் சரியான அடி. எழுந்திருக்கவே முடியவில்லை.அழுது கொண்டே இருந்தேன்.  கொட்டுக்காரர்களுடனும் சொந்தக்காரர்களுடனும்  பிணம்  என்னைத்தாண்டி கருமாதி மடத்தை  நோக்கி சென்று கொண்டிருந்தது.


Monday, April 25, 2011

சாதல் நன்று

பாரதியாரின் கவிதைகளில் வரும் ஒரு அற்புத வரி இது.
காற்று, நீர், நெருப்பு, மழை  எல்லாவற்றையும் அதன் குணம்
சார்ந்து பாராட்டுகளாகவே சொல்லிவிட்டு
மனித உயிர் பிரியும்
அந்த நிகழ்வை "சாதல் நன்று" என்பார்.

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது வயதானவர்கள் மரணமடைந்துவிட்டால் போதும் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் மட்டுமே அழுவார்கள்.

எழவு கேட்க வரும் சொந்தங்கள் ஒரு முக்காட்டை ப்போட்டுக்கொண்டு அவரவர் அம்மா அப்பா அணணன், தம்பி இறந்த நிகழ்வுகளைக்கண்களில் தேக்கி ஒப்பாரியாக வரும். ஒரு மூச்சு அழுது விட்டு அப்புறம் பழங்கதை பேசிக்கொண்டிருப்பார்கள்.

'காலையில கூட பழைய கஞ்சி குடிச்சிச்' என்பதும் அந்தக்கடைசிப்பய கல்யாணத்தைப்பாக்ககூடகுடுத்துவைக்கல என்பதுமாய் அது விரிந்து கிடக்கும் ஒரு உலகம்.

கொட்டுக்காரர்கள் ஒரு பாட்டம் அடித்து விட்டு சாயா அடிக்க பிணம் விழுந்த வீட்டுக்காரனிடம் பைசா வாங்கிக்கொண்டு  கொட்டை பத்திரமாக வைத்து விட்டு எங்களைப்பார்த்து  " தொட்டுராதிங்க ஒடைஞ்சி போகும்' என்று சொல்லிச்செல்வார்கள்.

ஆனால் அவர்கள் சாயா குடித்து விட்டு அந்தத்தவிலையும் பம்பையையும் அடிக்கிற அடியில் உடையாததா நாங்கள் தொட்டால் உடைந்து விடும் என்று பின்னால் நினைப்பது உண்டு.

அந்த கொட்டுக்காரர்களுடன் சேர்ந்து வியர்க்க விருவிருக்க ஆடிக்கொண்டு தேருக்கு முன்பாக போகும் லாவகமே தனி.

அதில் பேரன் ஒருவனைத்தேரில் ஏற்றி விட்டு அவன் பயப்படுவதைப்பார்க்க வேண்டுமே! தேரைத்தூக்கி வரும் அந்த நாலுபேரும் ஒரே உயரத்தில் இருப்பதில்லை சாதாரணமாக. லம்பி லம்பி போகும் அப்பயடியான தேரில்  நானும் ஒரு நாளில் ஏழு வயதில்  எங்கள் தாத்தா செத்த நாளில் தேரில் ஏறியவன் தான்.

'கோவிந்தா! கோவிந்தா!!'என்று என்னையும் என்னைப்போல தாத்தாவின் தேரில் ஏறிய பேரன்மார்களும் முழக்கமிடசொல்லுவார்கள். தேரில் தொங்கிக்கொண்டிருக்கும் மலர்களையும் பிய்த்து கீழே சாலையெங்கும் போடவும் வேண்டும். பயந்து போய் பாதியில் அழுது இறக்கி விடசொல்லி அப்புறம் தேருக்கு முன்னால் சென்று ஒரே ஆட்டம்தான்.

இன்றைக்கு (25/04/2011)சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் ஒரு 85 வயது நிறைவடைந்த சாமியார் ஒருவரின் மரணத்தை அடுத்து அவரது 38 வது பிறந்த நாளைக்கூட கொண்டாமல்  டிவியில் அழுது கொண்டிருந்தார். சச்சினின் அழுகைக்கு முன்பாகவே நேற்றிலிருந்தே நிறையப்பேர் கண் கலங்கி அழுததை ஐ பி என் , என் டி டி வி ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன.

கொண்டாட வேண்டிய சாவை ஏன் இப்படி அழுது தீர்க்கிறார்கள் என்பது எனக்குப்புரியவில்லை.

தனது 14 வயதில் தேள் கொட்டியதாம் அப்போது ஒரு பொய் சொல்லியிருக்கிறார் நான்தான் ஷீரடியின்  உருவம் என்று  இன்றைக்கு 40ஆயிரம் கோடி ரூபாய் சொத்து புட்டபர்த்தி என்ற கிராமத்தில் மட்டும் இருப்பதாச்சொல்லுகிறார்கள். அவர்களது சீடர்கள்சேர்த்து வைத்த சொத்தையும் சேர்த்தால்  ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி இருக்குமாம் உலகின் 160  நாடுகளில். 715 கிராமங்களுக்கு குடி நீர் வழங்கும் பணி, சென்னைக்கு தெலுங்கு கங்கை திட்டப்பணி என்று அவருடைய சேவாசமிதியினின்றும் செய்திருக்கிறாராம். இதை அரசுகள் செய்ய முடியாதா  என்ன? நமது பணம்தான் இந்த வழியில் போய்க்கொண்டிருக்கிறதே.

அதுதான்  2ஜி ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி 

மனிதன் இறப்பது என்பது இயற்கையானது.
பிறப்பைக்கொண்டாடுவதுபோன்று சாவையும் கொண்டாடும் மன நிலை வரவேண்டும்.

ரத்த சொந்தங்களுக்கு அழுகலாம்.
நெருங்கிய நண்பர்களுக்கு அழுகலாம்.
எப்போதாவது கடவுளுக்கு அழுதிருக்கிறோமா?
மனிதர்களுக்கு அழுகலாம்.
ஆனால் தன்னைக்கடவுளின்
அவதாரமாகக்காட்டிக்கொண்டவர்களிடம்
கண்ணீர் விடலாமா?

முக்தியடைந்தததாக தினமணி எழுதுகிறது.

சித்தி அடைந்து விட்டதாக தினமலர் எழுதுகிறது.

முக்தியும் சித்தியும்  செத்துப்போவதைக்குறிக்கும் வார்த்தைகளன்றி வேறென்ன?

இன்னும் சொல்லப்போனால் மரணத்தை விடவும் பெரியதா என்ன?

Saturday, March 26, 2011

மார்ச் பதிவுகள்

மார்ச் மாதம் என்றால் கணக்கு முடிப்பது என்ற ஒரு வெள்ளைக்காரன் சடங்கு அனேகமாக அனைத்து அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளிலும் நடை முறையில் இருக்கிறது.

எந்த வித சம்பந்தமும் தனக்கு இல்லாதது போல ஒரு  ஆறேழு ஆண்டுகளாக எதுவும் தெரியாது என்று சொல்லிக்கொண்டே பாரத்திரு நாட்டின் பிரதமர் மிகச்சிறந்த பொருளாதார மேதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நிற்க..

மார்ச் மாதம் 16 ஆம் தேதி சென்னையில் ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டி இருந்தது. நானும் எனது மனைவியும் சென்றோம். அது வடபழனி ஆண்டவர் கோவில் ஆர்க்காட்டு சாலை. அன்றைக்கு மட்டும் ஒரு 34 திருமணங்கள். திருமணம் நடக்கவிருக்கும் ஒவ்வொரு இடத்திடற்கும் ஒரு எண். பத்துப்பதினைந்து ஜோடியைப்பார்த்தபிறகு எங்களது கல்யாண ஜோடியைப்பார்த்தோம். ஒரு தகரப்பெட்டியில் தீ எரிந்து கொண்டிருக்க, அதில் பாக்கெட் நெய்யை ஊற்றி,  மந்திரம் சொல்லி, பொட்டு வைக்கசொல்லி, போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லி, இப்படியாக  விதம் விதமாக படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாகல்யாணங்களிலும் வீடியோ உட்பட பதிவுகள் நடந்து கொண்டிருந்தன.

டிசம்பர் 10, 1986 தோழர் எஸ் ஏ பெருமாள் அவர்களின் தலைமையில் எனது திருமணம் நினைவுக்கு வந்தது. அது விருது நகருக்கே உரித்தான சீர்திருத்தக்கல்யாணம். நிறைந்த சபையில் திருமணம் சம்பந்தமான உரையில் அந்தக்காலத்தில் ஒரு திருமணம் ஏழு நாட்களுக்கு நடைபெறும் என்றும், பிறகு அது மூன்று நாட்களாக சுருங்கிப்போய் விட்டதாகவும் இப்போதெல்லாம் ஒரே நாள் திருமணம நடைபெறுகிறது என்றும் தோழர் எஸ் ஏ பெருமாள் குறிப்பிட்டார். நான் மண மேடையில் இருந்தேன். அப்போது யோசனைக்கு வந்ததெல்லாம் இதுதான்.. இப்போதெல்லாம் உறவினர்கள்  சரியான முகூர்த்த நேரத்துக்கு வந்து விட்டு முடிந்தால் சாப்பிட்டு விட்டு போவதும் அதுவும் முடியாதவர்கள் கையை நனைக்காமலேயே மண்டபத்தை விட்டு வெளியேறுவதும் நடைமுறையாகிப்போனதே என்ன செய்ய..

மார்ச் 22 அன்று நண்பன் கிருஷ்ணகுமாரின் தாயார்  தனது எழுபதுகளில் காலமாகி விட்டார்கள்.  அன்று மாலை முதல் மறு நாள் இடுகாட்டில் இறுதிச்சடங்கு வரை கூடவே இருந்து எல்லா காரியங்களிலும் பகிர்வாக இருந்தேன்.
22 வருடங்களுக்கு முன் (1988 நவம்பர் 3) இறந்து போன அம்மாவின் ஞாபகங்கள் சூறாவளியென மனதைச்சுற்றி வந்தது.  அடக்கம் செய்த அந்த  நாள் இரவில்  தாயின் உடம்பு சிதையும் வலியை  நான் உணர்ந்தேன். அது இப்போதும்  மனதின் வலி,.நீட்சியாகவே   நீடித்துக்கொண்டிருக்கிறது.

Wednesday, March 2, 2011

நடுகல் அல்லது மாலைக்கோவில்




பொதுவாக போரில் மடிந்தவர்களுக்கு நடுகல் இருப்பதை அறிய முடிகிறது. செப்பேடுகள், கல்வெட்டுக்கள் மூலமாக இன்னார் இன்னாருக்கு என்ற கொள்வினை கொடுப்பினை, வரி உரிமை,  நிலம் போன்ற சொத்துக்களை ஆண்டனுபவிக்கும் உரிமை இவைகள் பதிவு செய்ய்யப்பட்டிருக்கின்றன.

போர் வீரர்கள் வழியில் வந்த ஒரு இனக்குழுவினர் இன்றைக்கும் நடுகல் ஊன்றுவதை ஒரு வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். அருந்ததிய மக்களின் ஒரு பிரிவினர் கன்னடத்தையும் பிரிதொரு பிரிவினர் தெலுங்கையும் பேசிக்கொள்ளுகிறார்கள்.

இன்னும் சிலர் தமிழ் மட்டுமே பேசி வருகிறார்கள்.
கன்னடம் பேசக்கூடிய அருந்ததிய இனத்தவரைப்பற்றி மட்டுமே இந்தப்பதிவு சொல்ல இருக்கிறது.

எனது அப்பாவின் தாத்தா மூக்கன் பகடை விருது நகர் மூளிப்பட்டி அரண்மனையில் குதிரை லாயத்தில் ராசாங்க வேலையில் இருந்தாராம்.எனது தாத்தா திரு அழகரப்பன் செருப்பு தைப்பவராக இருந்தார். அப்பாவும் கூட அதே தொழில் தான்.

1செத்த மாட்டை உரிப்பது

2அதன் தோலைப்பதப்படுத்துவது

3அந்தத்தோலினின்றும் தோல் பொருட்களை செய்து சந்தைப்படுத்துவது

என்று முப்பரிமாண வேலையில் இந்த இனம் இருந்திருக்கிறது.

(குஜராத்தில் இம்மூன்று வேலைகளையும் மூன்று இனக்குழுக்கள் செய்கிறார்கள். அதில் தோல் பொருட்கள் செய்பவர் சற்றே உயர்ந்த சாதி மற்ற இரு தொழில் செய்பவர்களை விடவும்  அதாவது மாடறுப்பதை விடவும்  தோல் பதனிடுவதை விடவும்)

மன்னர்கள் காலத்தில் குதிரைகள் அதிகமாகப்பயனில் இருந்திருக்கிறது.

அந்தக்குதிரைகளுக்குத்தேவையான வார்ப்பட்டைகள், மணி வார், கண்களை மூடும் சேணம் என்று செய்து கொடுக்கும் காலங்களில் குதிரைப்பராமரிப்பு வேலை செய்திருக்கலாம்.

மன்னர்கள் ஆட்சி ஒழிந்தபிறகு விவசாய காலத்தில் கிணற்றில் நீர் இரைக்க்த்தேவைப்படும் கமலைக்கான வால், மாட்டுக்கான மணிவார், சாட்டைக்குச்சிக்கான தார்க்குச்சி, சாட்டை தயாரித்தல் என்று காலப்போக்கில் வேலைகள் நிலைமைக்கேற்றபடி மாறி இருந்திருக்கிறது.

பிறகு ஜன நாயகத்தின் நாட்டில் செருப்பு உருவாக்குவது அதை பிறருக்கு கொடுத்து பண்ட மாற்று முறையில் பிழைப்பு இருந்திருக்கிறது.  தானியங்களுக்காகவும் இந்த சேவைத்துறை சிறந்து இருந்திருக்கிறது.

குதிரை லாயத்தில் பணியாற்றியவர்கள் போர் வீரர்களாகவும் இருந்திருக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்கிறது என்பதை சொல்லத்தேவையில்லை
அப்படிப்பட்ட வீரர்கள் (WARRIORS) மடிந்தபோதுதான் நடுகல் நடும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும். அதன் நீட்சி தான் இது.

விருது நகர் மாவட்டம் ஆவுடையாபுரத்தை அடுத்த மன்னார் கோட்டை என்ற கிராமத்தில் ஊருக்குக்கிழக்கே ஒரு மாலைக்கோயில் இருக்கிறது. கோவில் என்றால் பிரகாரம் அப்படியெல்லாம் ஏதும் இல்லை.

வெறுமனே நடுகல்கள் மட்டுமே நெருக்கமாக ஊன்றி வைக்கப்பட்டிருக்கின்றன.  இறந்து போன ஒவ்வொருவருக்கும் ஒரு நடுகல் என்ற வீதத்தில் இது இருக்கிறது.

வருடத்தில் ஒரு முறை அங்கே சென்று   அவித்த கிழங்கு பயறு  தேங்காய் பழம் படைத்து  சூடம், பத்தி( கம்ப்யுட்டர்) சாம்பிராணி  கொளுத்தி வழி பட்டு வருவது ஒரு வழமையாக இன்றைக்கும் இருக்கிறது. அது ஒவ்வொரு சிவராத்திரி (சிவனுசு) அன்றைக்கும் தொடர்கிறது.

என்னுடைய அம்மாவின் அப்பா மூக்காண்டி, பாட்டி சுப்பம்மாள் இருவருக்கும் அங்கே நடுகல் இருக்கிறது.

என்னுடைய அம்மாவுக்கும் அங்கே நடுகல் இருக்கிறது.

அதை வழி படும் நிமித்தம் இன்று (02/03/2011 சிவராத்திரி) நானும் எனது மனைவியும் சென்று விட்டு வந்தோம். இறந்து போன சில நாட்களில் நடைபெறும் காரியம் அல்லது  கருமாந்திரம் (உத்தர கிரியை) என்ற நாளில்  நடுகல் நடுவது வழக்கம்.

1988 இல் மறைந்த  நவம்பர் 3 இல் மறைந்த என் அம்மாவின் நடுகல்லுக்கு வருடா வருடம் செல்ல முடியாவிட்டாலும் இம்முறை வாய்த்தது.மாலைக்கோவில் மன்னார்கோட்டையில் இன்றைக்கும் அப்படியே நான் சிறுவயதில் பார்த்ததைப்போலவே இரண்டு மஞ்சனத்தி மரங்களோடு இருக்கிறது.






ஆனால் விருது நகரில் அப்பாவுக்கு நட்ட  நடுகல் முத்துராமன்பட்டியில் இன்றைக்கு இல்லை.  இப்போது அந்த மாலைக்கோவில் என்ற  நடுகற்களின் தொகுப்பு என்பதும் இல்லை.  ஒரு வாட்டர் டாங்க் அங்கே இருக்கிறது

1998 நவம்பர் 2 இல் மறைந்த எனது தகப்பனாருக்கு நட்ட கல்லைப்பெயர்த்து எடுத்து படிக்கல்லாக சிலர் பயன் படுத்திக்கொண்டார்கள் எனக்கேள்விப்பட்டேன். அப்பாவுக்கு நடுகல் நடும்போதே சில கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு பட்டிக்கற்களாக பக்கத்தில் குடியிருப்போர் பயன் படுத்தத்துவங்கியதை அறிந்தேன்.

அதுதான்  அப்பாவின் கல்லுக்கும் என்று  நடந்தேறி விட்டது.

பாமியான் புத்தர் சிலையை அகற்றியவர்கள் நோக்கம் ஒன்று மட்டும்தான்
அது வரலாற்று ரீதியான உண்மைகளை அகற்றுவது.

இராக்கில் இருந்த மிகப்பெரிய மியுசியம் கூட இந்த அடிப்படையில் தான் அழிக்கப்பட்டது

கொழும்புவில் இருந்த தமிழ்ச்சுவடிகளும் இது போன்ற கலாச்சார எதிர்ப்பு சக்திகளால் அழிப்புக்கு உள்ளானது.

ஒரு இனக்குழுவினரின்  நடுகல் வரலாறும் கூட அந்தக்குழுவினரின் எச்சங்களை  மிச்சமில்லாமல்  சுட்டெரிக்க எத்தனிக்கும்  முயற்சிகள்  என தொடருகிறது இங்கேயும்.

தீண்டாமையைக்கடைப்பிடிப்போர் மன  நிலை மாற்றம் வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் இது போன்ற வரலாற்று அழிப்பு நடவடிக்கைகள் மாறும்.

எத்தனை நாட்களுக்குள்  இது சாத்தியமாகும்  என்பது  இன்றைக்கு வரைக்கும் பிடிபடவில்லை.

Tuesday, February 8, 2011

பிள்ளைகளா வந்து பொறந்திருக்கு ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஆயிரம்.

முந்திராவில் ஜவகர் 




நகர்வாலாவில் இந்திரா




சர்க்காரியா கமிஷன் முன்  கருணாநிதி



உர ஊழலில் நரசிம்மா




போஃபோர்ஸ் ஊழலில் ராஜீவ் 




ஆதர்ஷ் ஊழலில் ஒரு விலாஸ்




நில ஒதுக்கீட்டில்/மினரல் கொள்ளைக்கு
ஆதரவாக ஒரு எடியூரப்பா 




காமன் வெல்த் விளையாட்டில் ஒரு சுரேஷ்




கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சசி 




2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஒரு ராசா




மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுகீட்டில் ஒரு கேதன் 




அனைத்தையும் மிஞ்சும் வகையில் இன்றைக்கு 




எஸ் பாண்ட் புகழை பரவச்செய்ய ஒரு எம் கே சந்திர சேகர்


இ ந்தப்பட்டியல் முழுமையானதல்ல...
தெரிந்த இந்தப்பெயர்களில் எல்லாம் "சர் நேம்" எனப்படுகிற சாதிப்பெயர் குறிப்பிடவில்லை. 

நேரு,காந்தி,ராவ், தேஷ்முக், கல்மாதி, தரூர், தேசாய் இவையெல்லாம் சாதிப்பெயர்தான்... 


சாதிப்பெயரைக்குறிப்பிடுவது  நமது ஆதி சொந்தங்களுக்கு இந்த மண்ணின் மைந்தர்களுக்கு செய்யும்  முழு துரோகம்









சிறு வயதுகளில் சேட்டை செய்யாத குழந்தைகள் இருக்க முடியாது; 

பொறுமை இழந்த நேரங்களில் அந்தக்குழந்தைகளைக்கண்டிக்கும்போது செல்லமாக அம்மா சில நேரங்களில் இப்படிக்குறிப்பிடுவார்.


"பிள்ளைகளா வந்து பொறந்திருக்கு;
ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஆயிரம்".


அன்றைக்கு ஆயிரங்களே பார்க்காத ஏழைக்குடும்பங்கள் அப்படி அலமாந்து சொல்லி மாய்ந்திருந்தார்கள்.


இன்றைக்கும் அப்படிப்பட்ட ஏராளமான குடும்பங்கள் பட்டினி,
பசியில் வீடில்லாமல் வாசலில்லாமல் குடிக்க்த்தண்ணி இல்லாமல்
இந்த தேசமெங்கும்  பரிதவித்திருக்க

கோடி கோடியாய்க்குவித்து வைத்து 
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைத்தட்டிக்கேட்க அம்மாக்கள்தான் இல்லை;

சந்தர்ப்பவசமாக அம்மாமார்கள் உயிரோடு இருந்தாலும்
கேட்கும் நிலையில் இவர்கள் இல்லை போலிருக்கிறது.


காலுக்குச்செருப்புமில்லை
கால் வயிற்றுக்கூழுக்கும்  நாதியில்லை
பாழுக்குழைத்தோமடா என் தோழனே
பசையற்றுப்போனோமடா
                                                           - ஜீவா


வாழ்க  பாரத மணித்திரு நாடு.
                                                           - பாரதி









Thursday, February 3, 2011

ராஜா என்றொரு மந்திரி

'மண் பொய் சொல்லுவதில்லை
மிதிக்கிறோம்
மரங்கள் பொய் சொல்லுவதில்லை
வெட்டுகிறோம்'
மந்திரிகள் பொய் சொல்லுகிறார்கள்
மாலையிடுகிறோம்'
                                                -கவிஞர் கந்தர்வன்

 நமது  சம காலத்தில் வாழ்ந்த அவர் இப்போது  நம்மோடு இல்லை.

அவரது வைர வரிகளை வாழ வைத்துக்கொண்டு இன்றைய மந்திரிகளும் ராஜாக்களும் வலம் வருகிறார்கள்.


2 ஜி என்றைக்கு வந்ததோ அன்று முதல்
பொறுப்பில் இருந்த ராஜா முதற்கொண்டு மந்திரிகள் வரை
ஓரே  பொய்மயம்தான்

பிரதமருக்கு எல்லாமே தெரிந்துதான் நடந்தது - ராசா

அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏல முறையைப்பின்பற்றவும்-பிரதமர்

ஊழலே நடக்கவில்லை- கருணா நிதி

ராசா மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை- கருணா நிதி

ஜே பி சி வேண்டும்- எதிர்க்கட்சிகள்

முடியாது-பிரணாப்

பொதுக்கணக்குக்குழு முன் ஆஜராகி எனது தரப்பின் வாதங்களை சொல்லத்தயார்- பிரதமர்

அவர் சொன்னபடி ஆஜராகமாட்டார்- மீண்டும் பிரணாப்

பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்காக ராசா ராஜினாமா செய்தார்

சி ஏ ஜி அறிக்கையில் கண்டபடி ஏதும் நடைபெற வில்லை - புதிய மந்திரி கபில் சிபல் (அப்படியானால் ராசாவையே மந்திரியாக நீடிக்கச்செய்திருக்கலாமே!)

அரசுக்கு வர வேண்டிய பைசாவில் ஒரு பகுதிகூட இழப்பில்லை- திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங்

முன்னாட்களில் ராஜாக்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் இன்னொரு ராஜாவால்.

அது நாடு பிடிக்கும் போட்டியால் நடந்திருக்கும்.

தோற்ற ராஜாவை ஜெயிலில் வைத்து ஜெயித்த ராஜா இம்சைப்படுத்துவது எல்லாம் சகஜமாக இருக்கும்.

வரலாற்றின் பக்கங்களில் இது போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.  நமது ராஜா அப்படிப்பட்டவர் அல்ல;

மந்திரியாக இருந்தவர் (உண்மையில் மந்திரிகள் என்றால் அது சித்தார்த் பெருவாவும்  சந்தோலியாவும்தான்)இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அவரது ஆலோசகர்களோடு

'நீரா' க்களைக்கைது செய்யாத 'நீரோ'க்களாக அரசும் நாமும்

காலவெளி காத்துக்கிடக்கிறது உண்மைகளைப்பதிவு செய்ய...


Wednesday, February 2, 2011

நாங்க மனுஷங்கடா

1984 ஏப்ரல் மே மாதங்களில் முனைவர் கே .ஏ குணசேகரனின் நாட்டுப்புற இசைக்குழு மக்களுக்கான பாடல்களை இசைத்து தமிழ் நாட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

காரைக்குடியில் குதிரைவண்டி ஸ்டாண்டில் ஒரு நிகழ்ச்சிக்கு  நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். கோட்டைச்சாமி, காந்தி அன்னாவி,கங்கை பாலன் மாரியம்மாள் நாதஸ்வர செட் என்று நையாண்டி  மேளத்தில் ரொங்க வைத்து விடுவார்கள்.

நிகழ்ச்சி முடியும் போது கவிஞர் இங்குலாபின் "மனுஷங்கடா" என்ற பாடலைப்பாடி ஒரு எழுச்சியைப்பரவச்செய்து விட்டு அடுத்த ஊருக்கு பயணப்படுவார்கள்.



மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா
ஒன்னைப்போல அவனைப்போல
எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுஷங்கடா
                                                                       - டேய் மனுஷங்கடா

ஒங்கதலைவர் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
ஒங்க ஊர்வலத்துல தரும அடிய வாங்கிக்கட்டவும்
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்
நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
                                                                      - டேய் மனுஷங்கடா

எங்களோட மானம் என்ன தெருவுல கெடக்கா
ஒங்க இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின் கணக்கா
ஒங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க வீடு புகுந்தா ஒங்க மானம் கிழிஞ்சி போகாதா
                                                                    - டேய் மனுஷங்கடா

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்கப்போனீங்க
                                                                     - டேய் மனுஷங்கடா

Saturday, January 29, 2011

கர்த்தரைத்தேடுங்கள்; அப்போது பிழைப்பீர்கள்...

ஒரு சவாரியும் கிடைக்கவில்லை;
பெரிய துயரமாக இருந்தது. 

இயக்குனர் ராஜ் பரத்தின் உச்சகட்டம் சினிமாப்படம் 
சென்ட் ரல் சினிமாவில் நாலாவது முறையாகப்பார்த்தாகிவிட்டது.
 நடிகை ஸ்வப்னா அதில் கதா நாயகி சரத்பாபு கதா நாயகன். ஒரு கொலை சம்பந்தப்பட்ட படம்  'த்ரில்  மேட்டர்'.

மணி ஒன்பதரை ஆகிவிட்டது. முதலாவது ஆட்டம் பார்க்க வந்த சவாரியை இறக்கி விட்டதில் கிடைத்த பணத்தில் படம் பார்த்தாகிவிட்டது.

மிச்சமிருந்ததில் மூளிப்பட்டி அரண்மனை அருகே  இருந்த  கொடிமரத்து பாய் கடையில்  இரண்டு எண்ணெய்ப்புரோட்டா சால்னாவுடன் கொஞ்சமாக தேங்கைச்சட்னியுடன் கலந்து ஒரு வழியாக இரவு நேரப்பசியும் ஆற்றியாகி விட்டது.

ஆனாலும் எக்ஸ்ட்ராவாக ஒரு ஆம்லெட் அல்லது ஒரு சுக்கா வாங்கத்தான் வழியில்லை.

இரவில் ஏதேனும் சவாரி கிடைக்குமா என்று வாய்ப்பு தேடி அலைய முனைந்ததில் கடைசியாகப்போக நேர்ந்தது அல்லது காத்துக்கிடக்க முடிந்த இடம் மதுரை ரோடு சி எஸ் ஐ சர்ச்.

அன்று கிறிஸ்துமஸ் ஈவ் தினம் (1980 டிசம்பர் 24)  இரவு பனிரெண்டு மணிக்கு மேல் நள்ளிரவு ஜெபத்தை முடித்து விட்டு யாரேனும் ரிக்ஷாவில் வீட்டுக்குப்போக நேர்ப்பட்டால் நமது சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு போய் விட்டு விடலாம்.

ஒரு இரண்டு அல்லது இரண்டரை ரூபாய் கிடைத்தால் போதும்.

ரிக்ஷாவின் சொந்தக்காரனுக்கு  இரவு வாடகையாக காலை வண்டி மாற்றும் பொழுது ஒரு  ஒண்ணாரூபா கொடுத்து விட்டு ஒரு கால் ரூபாய்க்கு ஒரு சாயா வாங்கி கொடுத்துவிட்டால்  அவனது கணக்கு நேர் ஆகிவிடும்.

நமது கையில் ஒரு முக்காரூபாய் தேர்ந்தால் மிகப்பெரிய விஷயம்.
அம்மாவோ அல்லது அப்பாவோ பைசா ஏதும் நம்மைக்கேட்கப்போவதில்லை;

'அல்லேலூயா' 'ஆமென்' போன்ற மொழிகளுடன் அவர்களது பிரார்த்தனைகள்
ஒரு வழியாக முடிந்து கொண்டிருந்தது.

மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு பேரை 'ரவுண்டு' கட்டிக்கொண்டு இருந்தார்கள. கவலையோடு நான்கைந்து பெண்கள் வாசலில் வாய் பொத்தி உட்கார்ந்திருந்தார்கள். மற்றொரு புறம் லுங்கியுடன் சிலர் மெஜூரா கோட்ஸ் கடையருகே குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

ரிக்ஷாவின் கீழே கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தலைப்பாகையை இருக்கக் கட்டிக்கொண்டு வருகிற ஆண்களையும் பெண்களையும் ஆவல்மிகுதியில்  வலிய வலியப் பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம்.
ஒரு சவாரியும் அம்புடவில்லை.

மேலே ஏறிட்டுப்பார்த்தேன். உயரமான கட்டிடத்தின் ஒளி விளக்காக சிவப்பு நிறத்தில் சிலுவை மின்னியது.

பராசக்தி மாரியம்மன் கோவிலிலும் கூட இதே போல ஒரு 'சூலம்' சமீப காலமாக மின்னத்துவங்கியிருந்தது.

சர்ச்சின் நுழை வாயிலின் மேலாக   ஹாலோஜென் விளக்கில்  சிவப்பிலும் பச்சையிலுமாக இரண்டு வாக்கியங்கள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன.

"கர்த்தரைத்தேடுங்கள்;
அப்பொழுது பிழைப்பீர்கள்"

Friday, January 28, 2011

நெல்லுச்சோறு

'சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கே வந்ததிப்பஞ்சம்'
-மகாகவி பாரதி

'சோறு கண்ட இடம் சொர்க்கமா?'- மகாதேவி திரைப்படத்தில் வரும் பாடல் வரி இது

'சோறுகொடு; உணவு கொடு'- மன்னனை எதிர்த்த போராட்டத்தில் அட்டையில் பிடித்திருப்பார் நாடோடி மன்னன் திரைப்படத்தில் சந்திரபாபு

'சோறு' என்றொரு திரைப்படம்   நூறு படங்களை இயக்கியிருக்கிற இராம நாராயணனின் ஆரம்பகால படைப்பு

"சொக்கனுக்கு சட்டியளவு "- என்பது கூட சோறு சம்பந்தப்பட்ட பழ மொழிதான்

சோறே இல்லாமல் கமல் தனது நண்பர்களுடன் வேலையில்லாபட்டதாரியாக இருக்கும் நேரம் சாப்பிடுவது போல காட்சி அமைத்திருப்பார் கே. பாலச்சந்தர்-வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில்.

துரை யின் இயக்கத்தில் வந்த 'பசி' திரைப்படமும் கூட சோறை அதன் தேவைக்கான வலிகளைப் பேசும் .

இன்றைய  நாட்களில் அநேகமாக எல்லா வீடுகளிலும் சோறுதான் அதாவது நான் சொல்ல வந்தது நெல்லுச்சோறு.

எனது பதின் வயதுகளில் நெல்லுச்சோறு என்பது அல்லது தோசை போன்ற பலகாரம் என்பது தீபாவளி அல்லது பொங்கல் நாட்களில் மட்டுமே.
மற்ற நாட்களில் சோளக்கஞ்சி, கம்மங்கஞ்சி,கேப்பைக்கூழ், கேப்பைக்களி,குதிரைவாலி அரிசிச்சோறு, வரகரசிச்சாதம், பதராகிப்போன நெல்லிலிருந்து கிடைத்த கருப்பு அரிசிக்கஞ்சி, திணை அரிசியில் செய்த திணை மாவு, சாமை அரிசிக்கஞ்சி, ரேஷன் கடையில் வாங்கி வந்த கோதுமைக்கஞ்சி, பஞ்ச காலங்களில் வாங்கி வந்த மக்காச்சோள மாவின் உப்புமா இப்படியாக பல/நவதானியங்களின் புழக்கம் இருந்தது.

இன்றைக்கு அப்படியில்லை.

வீட்டில் இருந்த கம்மங்கூழ் இப்போது தள்ளுவண்டியில் கிடைக்கிறது.
'கிளப்'(ஹோட்டல்) கடையில் இருந்த இட்லி தோசை பூரி எல்லாம் வீடுகளில் தயாராகிறது.

அப்போதெல்லாம் சண்டை வரும். ஒருவன் தோற்று விடுவான். அப்புறமாக 'ஒங்க வீட்டில் என்னசோறு' என்று கேட்பான் தோற்றவன் அல்லது சண்டையில் கீழே விழுந்து எழுந்தவன்
'நெல்லுச்சோறு' என்று பெருமிதம் பொங்க சொல்லுவான் மல்லுக்கட்டில் ஜெயித்தவன்.
அடிவாங்கியவன் சொல்லுவான் 'நானும்  நாளைக்கு  நெல்லுச்சோறு சாப்பிட்டு விட்டு ஒன்னைய ஒரு கை பார்க்கிறேன்'.
இப்போதெல்லாம் சிறுவர்கள் இதுபோல கள்ளன் போலிஸ் விளையாட்டுக்கள் விளையாடுகிறார்களா? கிட்டி, பம்பரம் விடுவது இருக்கிறதா?
அநேகமாக இல்லை எனலாம்.

விளையாட்டு என்றாலே கிரிக்கெட் அதுவும் கிராமத்தில் கூட என்றாகி விட்டது.
அதிலும் கூட சில வீரர்கள் விலை போக மாட்டேன் என்கிறார்கள்.

பாசுமதி அரிசிக்கு உரிமை கொண்டாடிவிட்டான் ஒருவன். நமது படைப்புதான் அது என்பதை வலியுறுத்த போராட வேண்டி இருந்தது டங்கல் திட்டத்தால்.
மஞ்சள், பாகற்காய், வேம்பு எல்லாமே "பேடெண்ட் "என்ற பெயரில் நமது பாரம்பரிய உபயோகப்பொருட்களை நம்மிடமிருந்து பறிக்க வல்லரசுகள் திட்டம் தீட்டிக்கொண்டு நம்மை வளைய வருகின்றன. இருக்கட்டும்

"உங்க வீட்டில் என்ன சோறு" என்று  கேட்ட காலம் மலையேறி விட்டது ஆகையால் சோறு  என்றாலே அது "நெல்லுச்சோறு" என்றாகி விட்டது





Monday, January 24, 2011

தலித் இலக்கியம் நோக்கி ...

//கல்லூரியின் வகுப்பறையிலிருந்து வெட்டியான் மகனே பிணத்தைப் புதைக்க குழிவெட்டனும் வாடா வெளி யேன்னு இழுத்து வரப்பட்டிருக்கிறீர் களா? 

பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சாதி கேட்ட நொடியில் மற்றவன் எல்லாம் பெருமிதமாகச் சொல்ல, தன் சாதிப் பெயரைச் சொல்ல முடியாது கூசி நின்றதுண்டா நீங்கள்?

மாதச்சம்பளக் காரனாக மாறி அழுக்கு வேட்டி களைந்து தேய்த்த சட்டையோடு போய் வாடகைக்கு வீடு கேட்டு அவமானப் படுத்தப்பட்டதுண்டா நீங்கள்? 

கடந்து போகும் பீவண்டியைப் பார்த்து முகம் சுழித்து மூக்கைப்பொத்தும் உங்களால் எப்படி மலக்கூடையை தலையில் சுமந்தலையும் எங்களின் வாழ்வைக் கலைப்படைப்பாக்க முடியும் என உரத் துக் கேட்டார்கள்.//

- ம.மணிமாறன்

தீக்கதிர் நாளிதழில் திங்கட்கிழமை தோறும் வெளியாகும்  இலக்கியச்சோலையில் தோழர் ம.மணிமாறன் அவர்கள் சொல்லித்தீராதது: பத்தாண்டு  நாவல்கள் குறித்த வாசகக்குறிப்புகள் என்ற தலைப்பில்  இதுவரையிலும் 17 கட்டுரைகள் ( அனைத்தும் 2000க்குப்பின் வந்த தலித் மற்றும் விளிம்பு நிலை மாந்தர்களின் அதாவது  கிறித்துவ, இஸ்லாமிய, பெண்கள், திரு நங்கைகள் இவர்களைப்பற்றி வெளி வந்த  நாவல்கள் அவரால் ஆய்வு ரீதியில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

நாளிதழில் அரைப்பக்கத்திற்கு அற்புதமான நடையில் நாவலைப்பற்றிய கதைக்கள ஒட்டத்தோடு மனிதர்களின் இன்றைய நிலைமையையும் சேர்த்து குழைத்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்  ம.மணிமாறன். 

தோழர் மாதவராஜ் அவரது "தீராத பக்கங்களி"ல் அநேகமாக  அந்த  நாவல்களின் எல்லா  ஆய்வுக்கட்டுரைகளையும்   தனது  வலைப்பூவில் மாலையாகத் தொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

அவரது   தலித் நாவல் பற்றிய ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட ஒரு  பாராவைத்தான் முதலில் நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

அது அத்தனையும் நான் அனுபவித்தவைகள். நானும்  மணிமாறனும் அறிவொளி நாட்களில் தொண்ணூறுகளில் அலைந்து திரிந்த போது பரிமாறிக்கொண்ட சில சமூகப்பிரச்சனைகள்.

தவிரவும் சில  நினைவுகள்  பதிவில் கொண்டு வரப்பட வேண்டி இருக்கிறது. ஒரு செருப்புத்தைப்பவர் செருப்பணிந்த கால்களை வைத்தே வந்தவரின் முகம் பார்க்காமல் பெயரைசொல்லும் அளவு தேர்ச்சி பெற்றவராக இருப்பார்.
ஆனால் அவரிடம் செருப்பை சரிசெய்ய வந்தவர் அந்த செருப்பைக்கொடுக்கும் விதமே ஒரு வித தீண்டாமை வாடையோடுதான் இருக்கும். இதையும் பதிவு செய்ய வேண்டி இதுபோல் நூற்றுக்கணக்கான அனுபவப்பதிவுகள் தேவையாக இருக்கிறது இப்போது..

Thursday, January 20, 2011

அப்பா

"தவமாய்த்தவமிருந்து" படத்தில் அப்பாவின் அருமையை இயக்குநர் சேரன் செல்லுலாயிடில் அருமையாகப்பதிவு செய்திருப்பார்.  எனது அப்பாவைப்பற்றிப்பதிவு செய்வது அவசியமென்று தோன்றுகிறது இந்நேரம்.

எனக்கு சிறிய வயதில் அம்மை  நோய் கண்டிருக்கிறது. அதற்காக அம்மா விருதுநகரில் இருக்கக்கூடிய பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு
(அநேகமாக ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு தெய்வம் இருக்கும்; அது ஒரு பெரிய விஷயமல்ல என்னைப்பொறுத்தவரையிலும் ) ஒவ்வொரு கிழமையும் குளித்து ஈரத்துணியுடன் மாரியம்மன் கோவிலை வலம் வந்து வேண்டுதல் விடுத்திடுக்கிறார்கள்.

எனது பையன் உயிர் பிழைத்தால் அவன் உயிருடன் இருக்கும் காலம் முழுமைக்கும் (அதாவது ஆயுளுக்கும் அக்னிச்சட்டி (தீச்சட்டி)) எடுப்பான் என்று வேண்டிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

இயல்பாகவே எனக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை;

கல்லூரி நாட்களின் இரண்டு மூன்று ஆண்டுகள் இந்தப்பழக்கத்திற்குக்கட்டுப்பட்டு தீச்சட்டி எடுத்திருக்கிறேன்.

பின்னாட்களில் ( தாய், நினைவுகள் அழிவதில்லை  போன்ற நாவல்களைப்படித்தபிறகு)

எனக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப்போய் விட்டபடியால்அம்மாவிடம் சென்று  "அம்மா என்னைக்கேட்காமல் வேண்டுதல் செய்து விட்டாய் தயவு செய்து அந்த அம்மனிடம்( மாரியம்மன் தான்) அதை ரத்து செய்து விடவும்" என்று சொன்னேன்.

அம்மா சொன்னார்கள்: " இவன்  நெத்தியில் முளைத்தவனாயிற்றே" என்று

எனது பரம்பரையில் எழுதப்படிக்கத்தெரிந்தவனும்
முதல் முதல் வகுப்பு பட்டதாரியுமானவன் நான் தான்.
எனது அப்பா அப்படியில்லை;அவர் அந்தக்காலத்தில் ஆறாம் வகுப்பு நிறைய நண்பர்களுடன்.

நான் இரண்டு வயதாகி இருந்த நேரம் காங்கிரஸ் சர்க்காரை எதிர்த்து தி மு க நடத்திய போராட்டத்தில் அவரும் கலந்து சிறை சென்று விட்டார். அந்த நேரம் திருச்சி ஜெயிலில் இருந்த போது
எஸ் எஸ் ஆர் மற்றும் விஜயகுமாரி  வந்து  சந்தித்து விட்டு  சென்றார்களாம்.

அப்போது என்னை கேள்வி கேட்பார்களாம் உறவினர்கள்: "அப்பா எங்கே?"
அப்பா ஜெ!! ( இப்போதெல்லாம் வழக்கில் இருக்கிற "ஜெ" இல்லை)  ஜெயில்

அப்பாவோடு கைதான சில உறவினர்கள்  பயந்து போய் நான் இனிமேல் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று எழுதிக்கொடுத்து விட்டு வீடு நோக்கி ஓடி  வந்து விட்டார்களாம். அப்பா அதற்கெல்லாம் கலங்கவில்லையாம்; எவ்வளவு நாளைக்கு உள்ளே வைக்கிறார்கள் என்று ஒரு கை பார்த்து விடலாம் என்று இருந்து விட்டார்.

ஒட்டு மொத்தமாக அவர் சிறையில் இருந்த நாட்கள் 100. அதன் பிறகு ஐந்தாண்டுகள்  (1967) கழித்து தான் தி மு க ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.

நான் என் அப்பாவை ஒரு நாள் கேட்டேன்;

அப்படியே நீங்கள் ஏன் அந்த அரசியல் வாழ்வைத்தொடரவில்லை என்று..

அப்பாவோ செருப்புத்தைக்கும் தொழிலாளி.

அவர் குறிப்பிட்டார்.

"நமது சாதிக்குறியீடுதான் நமக்கு எதிரி தம்பீ: நம்மை முன்னேற

விடமாட்டார்கள் .   சரியான சம்பளமில்லாமல்

சாதி அடையாளமுமில்லாமல் நாம் வாழ முடியாது"

நான் முதன் முதலாக கல்லூரியில் கால் வைத்த போதும் சரி

பட்டப்படிப்பு முடித்து முதல் வகுப்பில் தேர்வு ஆன போதும் சரி

பிறகு வேலை கிடைக்காமல் எனது தெரு தோழர்களுடன்

சைக்கிள் ரிக்ஷா ஓட்டியபோதும் சரி

ஒரு எழுத்தராக DOT யில் தேர்வானபோதும் சரி

மாற்றுதலில் காரைக்குடி சென்று எட்டு ஆண்டுகள் (1982- 1990)பணியாற்றிய போதும் சரி

அப்புறமாக விருதுநகர் வந்து பணியாற்றியபோதும் சரி

1994 இல் இள நிலைக்கணக்கு அதிகாரியாக அகில இந்திய அளவில் தேர்வான போதும் சரி

பம்பாயில் ஓராண்டு பணியாற்றி பிறகும்ன் சரி

அதன் பிறகு சென்னையில் ஓராண்டு பணியாற்றிய போதும் சரி

பிறகு விருதுநகர் மாற்றலில் வந்த போதும் சரி

என்னை எந்தவிதப்புருவச்சுழிப்புமின்றி  நேசித்தவர் எனது தந்தை.

1998 இல் அவரது மரணம் என்னைக்கேள்விக்குள்ளாக்கியது.

எந்தவித உணர்ச்சிகளுக்கும் ஆட்படாத அந்த உயிர்

என்னை இன்றைக்கும் அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது...





மனிதர்களின் மரணம்

2011 தைப்பொங்கல் திரு  நாளில் கேரளா மா நிலம் சபரி மலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி மரணமடைந்தனர் - செய்தி


இதே புல்மேட்டில் 1999 ஆண்டும் ஒரு ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதி தினத்தில் நெரிசலில் இறந்து போனார்கள்.


இதே போல ரீதியில் கொத்து கொத்தாக மனிதர்கள் சாவது செய்தியாக ஊடகங்களின் வாயிலாக அறியப்படுவது  உயிருள்ள மனிதர்களின் மனங்களில் கரைந்து போவதுதான்  இன்றைய காலத்தின் கட்டாயமோ உலகமயமாதலின் தன்மையோ என நினைக்கையில் உள்ளம் பதற்றமடைவதைத்தடுக்க முடியவில்லை.


சமீப  காலங்களில்  வாகனப்பெருக்கத்தினாலும் குடி போதையினாலும், சரியில்லாத சாலைகளாலும், வேலைப்பளு காரணமாக வண்டியை விட்டு இறங்க முடியாமல் ஒட்டுவதாலும், சரியான ஒய்வு எடுக்க முடியாமல் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதாலும் விபத்துக்கள் நிகழ்கின்றன.
அதுவும் தங்க நாற்கர சாலையின் துவக்கத்திற்குப்பின் வேகத்திற்கு பஞ்சமில்லாமல் வாகங்கள் பறக்கின்றன. மணிக்கு   நூறு கி மீ வேகத்தில் இப்படி செல்லும் வாகனங்கள் எதிரில் நின்று கொண்டிருக்கும் ட்ரக், லாரி அல்ல்து கார்களின் மீது மோதிவிடுவதாலும் உயிர்ச்சேதம் என்பது அதிகரித்தபடி இருக்கிறது. முன்பெல்லாம் விபத்து என்றால் எங்கேயேனும் எப்போதாவது என்று இருந்தது. இன்றைக்கு அதுவே ஒரு தினசரி செய்தியாகி விட்டது.


எழுபதுகளின் துவக்கத்தில் இது போன்ற மரணங்கள் நகர்சார் நாட்டுப்புற பாடல்கள் வடிவில் ராஜா ராணி ஆட்டங்களில் ( குறவன் குறத்தி ஆட்டம்  எனலாம்) பதிவு பெற்றிருந்ததைக்காண முடிகிறது.
இன்றைக்குள்ள அவசர யுகம் பாடல் படைக்க எத்தனிக்கும் கவிஞர்களைக்கூடக்காணாமல் விரட்டி விட்டது.
டாக்டர்  கே ஏ குண சேகரன் அவர்கள் 1988இல் நகர் சார்  நாட்டுப்புறக்கதைகள் என்ற ஒரு தொகுப்பை  வெளியிட்டு இருக்கிறார். வித்தியாசமான படைப்புக்களை தேடித்தேடிப் பதிப்பித்த  சிவகங்கை மீரா அவர்களின் அன்னம் வெளியீடுதான் அந்தப்படைப்பு.


எனது பதின் வயதுகளில் பார்க்கத் துவங்கிய ராஜா ராணி ஆட்டங்களை சாமி ஊர்வலம் தொடங்கும்  மாலை 7 மணி முதல் விடிகாலை  4 மணிக்கு மேலாக கோமாளியாக வந்த மாயி (தங்கலாச்சேரி) என்பவர் மூக்கம்மாவாக மாறு வேஷம் போட்டு தண்டட்டியை குலுக்கி, பிறகு பேயாட்டம் ஆடி முடிக்கும் வரை தொடரும். ராஜபார்ட் மற்றும் இரண்டு பெண்கள் கொண்ட நால்வரின் கலைக்குழுவாக அது இருக்கும்.  நேயர் விருப்பமாக சில பாடல்களை ஊர்க்காரர்கள் கேட்பார்கள். அதை அந்தக்கலைஞர்கள் பாடல்களைப்பாடி சபையை மகிழ்விப்பார்கள்.



"அம்பத்து மூணாம் வருஷம்
மணி எறந்தது அப்பிகை மாசம்"
என்ற மதுரை மணிக்குறவன் பாடல்,

"மாலையிடாப்பொன்னுடல் மறக்குதில்லே என்னுடல்
தேடுகிறேன் தலைவரே தெய்வமே எங்கு சென்றாய்"
என்ற முத்துராமலிங்கத்தேவர் மரணம் சொல்லும்  பாடல்,

அரியலூர் ரயில் விபத்துப்பாடல்,

கருவாயத்தேவன் பாடல்,

புயலில் தனுஷ்கோடி (1964) அழிந்த கதைப்பாடல்,

அதே வருடம் மதுரையில் நிகழ்ந்த சரஸ்வதி பள்ளிக்கூடம் இடிந்த முப்பத்தாறு குழந்தைகள் மடிந்த கதைப்பாடல் (எழுதியவர் மதுரை டி வி பச்சையப்பன்)
அந்தக்கலைஞர்கள் பாடல்களைப்பாடும் போது கண்கள் குளமாவதைத்தவிர்க்க முடியாது.
அந்தப்பாடலின் சில வரிகள்


........
பங்குனி மாதம் ரெண்டாம் தேதியிலே
பட்டப்பகல் வேளையிலே- அன்று மணி
பனிரெண்டாகையிலே- அன்று
பாதகம் நடந்த சனிக்கிழமையிலே
பரீட்சைக்குப்படிக்கையிலே-
ஸ்பெஷல் வகுப்பு பரீட்சைக்குப்படிக்கையிலே


 ..........
முத்துலட்சுமி  ராஜலட்சுமி
மோகனவள்ளி தானம்மா
கலாவதி ரெண்டு சீலாவாம்- அங்கே
முனியம்மா மேரியம்மா
மணிமேகலா செல்லம்மா ரெண்டு மீனா

..........
இப்போது நடக்கும் மரணங்களை மக்களின் மனதில் பதிவு செய்வது யார் என்பது தான் எனது இன்றைய கேள்வி.

Monday, January 17, 2011

பெட்ரோல் விலையும் சாமானியனும்

ஒரு முக்கிய விஷயம் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறது இன்றைய தேதிக்கு...

ஐ மு கூ  2 பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவடையப்போகிறது
( மே 2011ல் தான்)

கடந்த ஆறேழு மாதங்களில்  மட்டும் பெட்ரோல் விலை ஏழாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ( வெங்காயம் விலை ஏறியதற்கு பதிலடி கொடுத்தவர்கள் தில்லியில் நமது வாக்காளர்கள் )

பெட்ரோல் விலை ( அது மட்டுமல்ல என்பது எப்போதும் உள்ள பிரச்சனை.. அதாவது பெட்ரோல், டீசல், கெரேசின் ( கிருஷ்னா ஆயில்) சமையல் கேஸ் இத்யாதியும் தான்...) உயர்வென்றால் பெட் ரோலியப்பொருட்ளின் உயர்வு எனக்கொள்க..

பெட் ரோல் டீசம்  விலை உயர்வைக்கண்டித்து இடது சாரிகள் ஐ மு கூ 1 காலங்களில்முத்திரை  பதித்தது  இன்றைக்கும் நிழலாடுகிறது.

ஒரு தடவை அவர்கள் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வைத்தடுத்து நிறுத்தினார்கள்.

பிறிதொரு முறை ஏற்றப்பட்ட பெட்ரோலியப்பொருட்களின் விலையைக் குறைத்து வரலாற்று சாதனை படைத்தார்கள்.

இன்றைக்கு அந்த சூழல் ஏதும் இல்லை

மத்தியில் ஆளும் அரசு

அமெரிக்க அணு ஆயுதக்கொள்கையினை  நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் ஏஜென்டாக

உலக வங்கியின் அடியாளாக

GATT   ஒப்பந்த நாயகனாக

அமெரிக்க ஏவலாளியாக

உலக மயமாதலின் மையக்கருவாக

தனியார் மய சிந்தனையாளனாக

வலம் வருகிற ஒட்டு மொத்த

தாராள மயமாதலின் சூத்திரதாரியாக

இருக்கிற மைய( அல்லது நடுவணரசு)

அரசு அகற்றப்படவேண்டும்.

வயிறு நிரம்ப சாப்பிட அனைவருக்கும்

உரிமை இருக்கிறது

நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்....

ஆம் ஒரு நாய் பட்டினி கிடப்பதைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று உரக்கச்சொன்ன துறவி விவேகானந்தர் வாழ்ந்த மண்ணல்லவா பாரதம்.

Friday, January 14, 2011

விகடன் வரவேற்பறையில் நான்

ஆனந்த விகடன் (19.01.2011) வார இதழின் வரவேற்பறையில்  எனது அழகிய நாட்கள் வலைப்பூ பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கிடைத்திருக்கிறது.

உலகம் முழுமைக்கும் இணைய தளம் மூலம் மட்டுமல்லாது விகடன் மூலமாகவும் பயணம் செய்ய  நேர்ந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிற தருணமாக இனிக்கிறது. வலையில் தேடி அதை வரவேற்பறை வரை கொண்டு வந்த விகடன் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகளும் நன்றியும் என்றென்றைக்கும் உரித்தாகட்டும்.

பிரபு சாலமனின் மைனா படத்திற்கு விகடன் விருது 2010 அளிக்கப்பட்டு இருக்கிறது இந்த இதழில். 
வெயில் படத்தின் இயக்குனர் வசந்த பாலன் நம்ம ஊர்க்காரர். அவரது வெயில் திரைப்படத்திற்கான முதல் பாராட்டு விழா விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் எனது தலைமையில் நடந்தது. அவருக்கு சிறந்த கதைக்காக (அங்காடித்தெரு) கிடைத்திருக்கும் விருதும் போற்றுதலுக்குரியது.



அம்பேத்கர் திரைப்படம் பற்றிய தனது பதிவாக பிரியத்துக்குரிய த மு எ க ச வின் மாநிலப்பொதுச்செயலர் ச. தமிழ்செல்வனின் பேட்டி முத்தாய்ப்பாக வந்திருக்கிறது இந்த இதழில். அம்பேத்கர் ஒரு தேசீயத்தலைவர் என்பதைக்கூட சகித்துக்கொள்ள முடியாதவர்கள்  தியேட்டரில் அவரை தீண்டாமைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை என்னவென்று சொல்லுவது ?  இது போன்ற  நிகழ்வுகளை  இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்ன? 

ஏற்கனவே வந்த சில தலைவர்களின் படங்களுக்கெல்லாம் இந்த   நிலைமை இல்லை. மகாத்மா காந்தி, பாரதி, கிங் மேக்கர் காமராஜர், பெரியார் போன்ற படங்களுக்கு வரி விலக்கு அறிவித்ததைப்போல் இப்படத்திற்கு  அறிவிக்காமலிருக்கும் தமிழக அரசை யார் கேட்பது?

1897 இல் விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய சமயம் சென்னையில் அவரைக்காண பட்டியலின மக்கள் ( இனிமேல் ஆதிதிராவிட மக்கள் இல்லை) அலை மோதியிருக்கிறார்கள். அவர்களைப்பக்கத்தில் வர விடாமல் விரட்டி அடித்திருக்கிறது மற்றொரு மனிதக்(!)கூட்டம் அப்போது ஏற்பட்ட சினத்தில் விவேகானந்தரே குறிப்பிட்டாராம் "கிறுக்கர்களின் தேசம் இது" என்று.

அம்பேத்கர் திரைப்படத்திற்குக்கூட தீண்டாமை நிகழும்  இன்றைய இந்திய தேசம் கிறுக்கர்களின் தேசமாகவே தோன்றுகிறது.

Friday, January 7, 2011

புத்தாண்டுகளும் மாநாடுகளூம்

ஒரு ஆங்கில ஆண்டு முடிந்து அடுத்த வருடத்தில் அது அடி எடுத்து வைக்கத்துவங்கும் நேரமாக டிசம்பர் 31 நள்ளிரவு 1200 மணி எப்போதும் இருந்து வருகிறது. அப்படி ஒரு கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிறித்துவர்கள் இந்த நாளைக்கொண்டாடியது போக இந்துக்கோவில்களிலும் கூட இப்போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு புத்தாண்டு விருது நகர் மதுரை சாலையிலிருக்கும் சி எஸ் ஐ சர்ச்க்கு முன்பாக 1980 டிசம்பர் 31 இரவு பனிரெண்டரை மணி வரை சவாரிக்காக காத்திருந்த புத்தாண்டும் எனது கணக்கில் இருக்கிறது.

இந்த வருடம் (2011) புத்தாண்டுகொண்டாட்டம் (!) ஹெரிட்டேஜ் அகாடமி இ எம் பை பாஸ் சாலை கொல்கத்தா என்ற அரங்கத்தில் எங்களது அகில இந்திய சங்கத்தின் மாநாட்டுப்பந்தலில் அமைந்தது.

இந்த மா நாடுகள், அதில் பங்கேற்பது என்பது 1981லிருந்து என்னைத்தொடர்ட்ந்து வந்து கொண்டிருக்கிறது.

1982 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கும் கூட இதே போல அன்றைய பெயர் கல்கத்தா. அங்கேதான் கொண்டாடினேன் தோழர்களுடன்.

அப்புறம் 1984 சென்னை விஜயசேஷ் கல்யாண மகாலில் அடுத்த மாநாடு
அதற்கப்புறம் 1987 கர் நாடக மாநிலம் ஹூப்ளியில். மா நாடு முடித்து கோவா வடக்கு தெற்கு என சுற்றி விட்டு வந்தோம்.

1991 அக்டோபரில் மத்தியப்பிரதேச மாநிலத்தலை நகர் போபாலில். இதில் கலந்து கொள்ள முடியவில்லை.

அடுத்தபடியாக 1994 திருவனந்தபுரத்தில்.
எல்லாமே கிட்டத்தட்ட டிசம்பர் மாதங்களில்தான்.


கணக்கியல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற பிறகு,
1995 ஜன 1 மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பயிற்சி நிலையத்திற்கு அருகில் இருக்கும் நர்மதா நதி பாய்ந்தோடும் "பேடகாட்" என்ற இடத்தில்

மாநாடுகள் என்றால் அது கிளை மா நாடு, மாவட்ட மாநாடு, மாநில
மாநாடு, அதையும் தாண்டியதுதான் அகில இந்திய மா நாடு.
 இதில் வாழ்த்துரை வழங்கச்செல்லும் அரங்கங்கள் எல் ஐ சி, பேங்க்,போக்குவரத்து, ஆசிரியர் அரங்கங்கள் போன்றவை கணக்கில் வராது.
1997 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் அகில இந்திய் மாநாடு பூரி கோனார்க் சுற்றி வந்தோம் கட்டாக் நந்தன் கான் பூங்கா சுற்றிப்பார்த்தோம்.
1998 பெங்களூரில் அடுத்த மாநாடு

1999ஆம் ஆண்டின் துவக்கம் சென்னை  நுங்கம்பாக்கம் சூளை மேடு கோபால் நிவாஸ் ஹோட்டலில் எனது குடும்பத்தினருடன் அப்போதுதான் குழந்தைகளுடன் கிஷ்கிந்தா, வி ஜி பி, பீச் என்று சுற்றிப்பார்த்தோம்.

1999 மும்பையில் மாநாடு (1995 இல் மும்பை என பெயர் மாற்றம் கண்டது. அப்போது நான் மும்பையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.)
2000 ஆவது ஆண்டில் டெல்லியில் மாநாடு. ஆக்ரா சுற்றினோம்.
2002ல் கல்கத்தாவில் அடுத்த மா நாடு காளி ராமகிருஷ்ணர் அவதரித்த இடம் பார்த்தோம்.
2003 இல் கவுகாத்தி, மேகாலயா சிரபுஞ்சி சுற்றித்திரும்பினோம்.
2006இல் ஹைதராபாத்.
2008இல் ஜெய்ப்பூர்
2010 டிசம்பர் 29 தொடங்கி ஜன முதல் தேதி 2011 வரை கொல்கத்தாவில் மீண்டும் மாநாடு.
 புத்தாண்டுகள் தொடர்வதைப்போல் எனது மா நாட்டுப்பங்கேற்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Monday, December 27, 2010

தீண்டாமைச்சுவர்கள்

உடுமலைப்பேட்டை அருகில் ஜே ஜே நகர் பகுதியில் ஒரு தீண்டாமைச்சுவர் இப்போது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.தலித் மக்களை அவர்களது குடியிருப்புப்பகுதிகளை முற்றிலுமாக உயர் சாதியென்று கருதுவோர் சுவர் வைத்து பிரித்து தனது சாதீய மேலாண்மையை நிறுவும் முயற்சிதான் இது போன்ற சுவர்களைக்கட்டுவது.

இதற்கு சற்றே முன்பாகத்தான் கோவை நாகராஜபுரம் சுவர் தெரிய வந்தது. அதற்குமுன் திருச்சியில் உள்ள ஒரு இடுகாட்டில் இதே போன்ற சுவர் இருந்தது மக்களின் பார்வைக்கு(சிந்தனைக்குதான் ) வந்தது.

அதற்கும் முன்பாக மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் நீண்ட தீண்டாமைச்சுவர் முதன் முதலாக வெளி வந்தது.


பிரகாஷ் காரட் வரவை ஒட்டி மே 8, 2008 அன்று ஒரு 15 அடி தூரம் இடிக்கப்பட்டது.ஆனாலும் அதை முழுவதுமாக "திருக்குலத்தார்" பயன் படுத்த முடியாத சூழல் இன்னும் இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களைப்பிரியமாக அழைத்த வார்த்தைதான் திருக்குலத்தார் என்பது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குதான் எத்தனை எத்தனை பெயர்கள்?
மொத்தமாக அவர்களைக்குறிப்பிடும்போது பஞ்சமர்கள் அல்லது சண்டாளர்கள் அடுத்த கட்டமாக  ஹரிஜனங்கள் ( காந்தியின் பரிசு இது) தாழ்த்தப்பட்டவர்கள், அட்டவணை சாதியினர். அதன் பிறகு தமிழக அரசின் உத்தரவுப்படி ஆதி திராவிடர். அண்ணலின் வார்த்தையின் படி தலித்துகள் ( நொறுக்கப்பட்ட மக்கள்.) இருக்கட்டும் பிரச்னையைப்பார்ப்போம். இம்மக்களுக்குள் உள்ள உட்சாதியினரைப்பற்றி இங்கே குறிப்பிடவில்லை.

திருச்சியில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் இடுகாட்டு சுவரும் கூட கொஞ்சமாக ஆட்கள் நடமாடும் அளவுக்கு இடிக்கப்பட்டது.
கோவையிலும் கூட மொத்தம் 1000 அடியில் ஒரு முப்பது இன்னொரு 23 அடி என்ற கணக்கில் இடிக்கப்பட்டது.

உடுமலைப்பேட்டையிலும் இதுபோல இடிக்கப்படக்கூடும்.
இம்மாதிரியான தீண்டாமைச்சுவர்களின் நீளம் உலகிலேயே இரண்டாவதாக அறியப்படும் மெரினா கடற்கரையின் நீளத்தையும் மிஞ்சுமோ

அல்லது சீனப்பெருஞ்சுவரையும் விஞ்சுமோ என்பதுதான்  இன்றைய  மில்லியன் டாலர் (ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் !!!!) கேள்வி.

Thursday, December 16, 2010

சைவமும் அசைவமும்

காரைக்குடி நண்பர் சித்திரவேலு (முன்னாள் இந்தியன் வங்கி ஊழியர்)தற்போது கேஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க், பஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர். அவரது பையன் காமேஷுக்கும்  மருத்துவர் பாண்டியன் அவர்களின் மகள் மாள்விகாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. 15/12/2010 அன்று நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம்.

எங்களது திருமண வரவேற்பும் கூட இதே நாளில் ஹோட்டல் சுகம் இன்டர் நேஷனல் வரவேற்பரையில் நடந்தது தோழர் ஈரோடு ராஜு தலைமை மூட்டா கணபதி வாழ்த்துரை. இன்னும் FNTO சங்கப்பிரதி நிதியாக நார்மன். NFTE  செயலர் வெங்கடேசன், கேசவன், சுப்ரமணியன், ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மாதர் சங்கத்தின் கமலா NFPE சார்பில் அழகு BTTU   சார்பில் ராஜு, ராஜகோபால், DYFI சார்பில் பாக்கியராஜ் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். வங்கி ஊழியர் சார்பில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் தோழர் சித்திரவேலு. அவரது மகனின் திருமண வரவேற்புதான் நான் குறிப்பிட வந்தது.

வரவேற்பு பகுதியில் கல்கண்டு சந்தனம் மற்றும் மலர்களுடன் மாதர் சங்கத்தி்ன் தோழர் கமலாவும் அவரது கணவரும்  ராதாவும்  சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.

நானும் மனைவியும் அங்கு சென்றதன் அடிப்படை காரைக்குடியை விட்டு வந்து இருபது ஆண்டுகள் நகர்ந்து விட்டன.  இருந்த போதிலும் விட்ட குறை தொட்ட குறையென
தொழிற்சங்க நண்பர்கள்,
தொலைத்தொடர்புத்துறை  நண்பர்கள்,
கல்லூரிபபேராசிரியர்
முதல் ரிக்ஷாக்காரர் வரையான ஒரு இழையோடிய உறவுகளின் முகத்தைப்பார்க்கவும் அவர்களின் மனதின் பகிர்வுக்காகவும்  ஒரு ரவுண்டு பார்த்து பேசிவிட்டு (அளவளாவி விட்டு என்று கொள்க)  வந்து விடலாம் என்றுதான் இந்தப்பயணம் அமைந்தது.

காலை எட்டரை மணிக்கு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஹோட்டல் மெரினாவில் டிஃபன் சாப்பிட உட்கார்ந்த போதே எதிர்ப்பட்டவர் தோழர் எம் என் எஸ் வெங்கட்டராமன். தூரத்தில் இருந்த தோழர் எஸ் ஏ பெருமாள் (தோழர் எஸ் ஏ பி தான் எனது திருமணத்தை 10/12/1986 அன்று விருது நகர் சிமினி நந்தவனத்தில் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் என்பது ஒரு முக்கிய விஷயம்).

கல்யாண வரவேற்பில் கோட்டையூர் மெல்லிசைக்கச்சேரி விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

பேராசிரியை ஆவுடையம்மாள், சி பி ஐ கட்சியின் பி எல் ராமச்சந்திரன், மாதா ஜுவல்லர்ஸ் பரஞ்சோதி, வங்கி மாரியப்பன், பத்து என்கிற பத்மனாபன். போஸ்டல் அழகு, அண்ணன் வீரமாகாளி, மோகன் தாஸ்,    ராதாகிருஷ்ணன், வீ. கே பரமசிவன், பாலு, பூமி, சுப்பிரமணியன்,  ரகுபதி ( சயின்டிஸ்ட்) என்று ஒரு பெரிய பட்டியலின்  நண்பர்களைச்சந்தித்தோம்.

காரைக்குடிப்பக்கம்  விருந்து என்றால் அது செட்டி  நாடு சமையல்விருந்துதான். கல்யாண  வீடுகளில் பெரும்பாலும் நான்-வெஜ் உணவுதான் இருக்கும்.
வெஜ்  என்றால் கூட்டம் குறையும். 
குறிப்பாக வெஜ்-ஐ விடவும்
நான்-வெஜ்  மிகவும் பிரமாதமாக இருக்கும்.கோழி, மீன், ராட்டு, நண்டு, எலும்பு சூப்,  நுரையீரல் கூட்டு, முட்டை, மட்டன் சுக்கா கோலா உருண்டை இஞ்சித்துவையல் இன்னும் இது போல...

மண்டபத்தில் சாப்பிட இருபகுதியாகப்பிரித்திருந்தார்கள். ஒன்று சைவம் மற்றொன்று அசைவம. நல்லவேளையாக வைணவ சமையல் என்று எதுவும் இல்லை.

நியாயப்படி பார்த்தால் மரக்கறி உணவு என்றும் புலால் உணவு என்றும் இருந்திருக்க வேண்டும் அதுதான் முறைமை. வழமை பண்பாடு என்று கொள்ள முடியும்.  சைவம் என்று சொல்லுகிறபொழுதில் அதைத்தான் தழுவி சென்று கொண்டிருக்கிறோமா என்று நினைக்கக்கூட நேரம் இல்லாதவர்கள் விரும்பி சாப்பிடுவது புலால் உணவைத்தான்.

புத்தர் தோன்றியதற்கு முன்பிலிருந்து ஆரியர்கள் கூட ஆடு மாடு மேய்த்து வந்த காரணத்தால் அதன் புலாலையே உண்டிருக்கிறார்கள்.  கொல்லாமையென்பதே இப்படிப்பட்ட பழக்க வழக்கத்தை எதிர்த்து உருவானதுதான்.  அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கரர் சைவத்தை வளர்க்க முற்பட்ட நேரத்தில் தான் இராமானுஜர் வைணவத்தை வளர்த்தெடுத்திருக்கிறார். தீண்டாதவரை இவர் அழைத்தது "திருக்குலத்தார்" என்று மரியாதையாக.

காலப்போக்கில் வைணவம் சைவம் இரண்டும் "இந்து" என்கிற பந்தமாகிப்போனதோ? என்னவோ தெரியவில்லை...
புத்தம் சீக்கியம் ஜைனம் எல்லாமே சைவத்தின் கிளையாகிப்போனதோ? பதிலில்லை...
உணவிலும் கூட சைவம் பெரிதென்று ஆகிப்போனதன் விளைவு மாற்றுச் சொல்லாடலாக அசைவம் என்று உருவெடுத்து விட்டதோ என்னவோ!

Saturday, November 20, 2010

சுகப்பிரசவம் அல்லது பேறுகாலம்

முத்துராமன் பட்டி ரயில்வே கேட் அருகில்தான் ரிக் ஷா ஸ்டாண்டு. எதிரே மாரியப்பன் டீ கடை. அடுத்ததாக இளைஞர்கள் மன்றம். பெரும்பாலும் குமரி அனந்தன் அவர்களின் பேச்சு முழங்கிக்கொண்டிருக்கும். எல்லாம்டேப் ரெக்கார்டர் மூலமாத்தான். சி டி
 டிவிடி அப்போதெல்லாம் இல்லவே இல்லை. காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பின் (அரசியல் கட்சியின் தலைவராக அவர் அப்போது இருந்தார்)

அடுத்தாற்போல்  நந்தவனத்துடன் கூடிய தெலாக்கிணறு( துலாம்) கிணற்றுக்கு ஊடாக பெரிய இரண்டு பட்டிக்கல் (ஒழுங்காக வடிவமைக்கப்ப்ட்ட பாறாங்கல்தான்). சில பெட்டிக்கடைகள்.சலூன் ஒன்று வாடகை சைக்கிள் கடை ஒன்று  இப்படி..
 ரயில்வே கேட்டின் வடக்காக கேட் கீப்பர் உட்காரும் ஒரு அறை. தெற்காக முனிசிபாலிடி சார்பிலமைக்கப்பட்ட குடி நீர்  பொதுக்குழாய்
கேட் கீப்பர் ரூமுக்கு கிழக்கே மணி நகரம் செல்லும் ரோடு. அதன் எதிரில் சாலையைக்கடந்தால் டி இ எல் சி சர்ச் வளாகம் அதன் மூலையில் பர்மா கடை.

வழக்கமாக இரவு நேர ரிக் ஷா வாடகைக்கு எடுத்து ஓட்ட வேண்டிய நிலைமையில் நான். சொந்த ரிக் ஷா என்னிடம் இல்லை. ஒரு நாள் இரவு மட்டும் வாடகை ரூ 1.50 . காலையில் வண்டி மாத்த வரும் ரிக்சாக்காரருக்கு பர்மாக்கடையிலிருந்து அல்லது மாரியப்பன் கடையிலிருந்து ஒரு டீயுடன் வாடகையும் தரவேண்டும். மாலைய்ல் வண்டி எடுக்க நான் வரும்போது ஒரு டீ உண்டு.

இப்படித்தான் அன்றைக்கு இரவு  நியு முத்து டாக்கீசுகு ஒரு சவாரி மட்டும் போய் விட்டு ஜேப்பில் ஒன்னாரூபாயோடு இருந்த நேரம்.  மணி பதினொன்றைத்தொட்டிருக்கும். சவாரி ஒன்றும் வரவில்லை. நான் ரிக் ஷா மெத்தையில் படுத்துவிட்டேன்.


பனிரென்டரை மணி சுமாருக்கு ஒருவர் சைக்கிளில் வந்து படுத்திருந்த என்னை எழுப்பி
சவாரி வருமா என்றார். 
சரி என்றேன்.
காட்டாஸ்பத்திரி போகணும்
வண்டியை இழுத்து அவர் பின்னாலேயே போனேன். சிவந்திபுரம் சந்து அது. இடையில் ஒரு கல் வேறு வண்டியை லாவகமாக ஒடித்து வீட்டின் முன் நிறுத்தினேன்.
பிரசவ வலியோடு அவரது மனைவி பக்கத்து வீட்டம்மாவின் துணையோடு  கையில் துணிப்பையோடு ஏற்றிக்கொண்டேன்.

வண்டியை எகிறி எகிறி மிதிக்கத்துவங்கினேன். முத்துராமன் பட்டி கேட்டிலிருந்து  நியூ முத்து டாக்கீஸ் வரை ஓரே மேடுதான்.  மணி நகரம் அப்புறம் ஒன்னாம் நம்பர் பால் பண்ணை, வாடியான் கேட், புதுத்தெரு தாண்டி, தந்தி மர ரயில்வே கேட், காமராஜ் நகர் போர்டைக்கடந்து வலதுபுறம் திரும்பி  ராமமூர்த்தி ரோட்டில் சென்று, ஆஞ்சனேயா லாட்ஜ் தாண்டி அதே திக்கத்தில் கடைசியில் இருந்த காட்டாஸ்பத்திரி கொண்டு போய் சேர்த்தேன்.  தாதிகள் வந்து பிரசவ வலியுடன் துடித்துக்கொண்டிருட்ந்த அந்த கூலிக்காரரின் மனைவியை அழைத்து உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.

துண்டை எடுத்து வியர்வையை அழுந்தத்துடைத்துக்கொண்டேன்.
சைக்கிளில் பின்னாலேயே  அந்த கூலிக்காரரும் வந்து சேர்ந்தார்.
வாடகை எதுவும் முதலில் பேசவில்லை நான்.
அவரிடம் வாடகை கேட்டேன். அவர் அரக்கப்பரக்க முழித்தார்.
சரிதான் காசு இவரிடம் இல்லை போல என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதிக நேரம் பிடிக்க வில்லை.

சரி என்று வண்டியை எடுத்துகொண்டு திருப்பி போக எத்தனித்தேன். தற்செயலாக ரிக்ஷாவின் உள்ளே  பார்ததேன் ரிக்ஷாவின் தொட்டியில் (ஆட்கள் உட்கார்ந்து கொள்வது மெத்தை கால் வைக்கும் இடம் தொட்டி)
 ஒரே தண்ணீர்க்காடு. பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்தப்பெண்ணுக்கு கன்னிக்குடம் உடைந்து அப்படி ஆகியிருக்கிறது. எனக்கு ஒரே கவலையாகிப்போய் விட்டது.  வண்டிக்காரன் கையில் காலையில் வண்டியை கொடுக்கும்போது வாடை கடை இருக்கக்கூடாது என்றுதான்  எனது கவலை.

மெத்தையைதூக்கிப்பார்த்தேன் பழைய துணி இருந்தது. ஆனால் இந்த ஈரத்துக்கு அது சரிப்பட்டு வராது.

வாடியான் கேட் அருகில் பங்க் பர்மாகடையில் போய் ஒரு பதினைஞ்சு பைசா மஞ்சக்கலர் செல்லம் சோப் வாங்கிக்கொண்டேன்.

வண்டியை நேராக முத்துராமன் பட்டி கேட்டு குழாய்க்கு விட்டேன். அப்போதெல்லாம் எந்த நேரமும் தண்ணீர் வரும்

தண்ணீரைப்பிடித்து ஊத்தி ஊத்தி நன்றாககழுவினேன்
சற்றே வாடை குறைந்தது.
பசி எடுத்தது
மணி மூன்றை நெருங்கிவிட்டது.
பர்மா கடையில் சூடான மொச்சை ரெடியாகிக்கொண்டிருந்தது.

Friday, November 19, 2010

சமையல்காரன்

எழுபதுகளின் மத்தியில் பிள்ளையோ பிள்ளை, பூக்காரி படங்களுக்குப்பிறகு சமையல்காரன் என்ற ஒரு படம் வந்தது மு க முத்து நடித்தவை இம்மூன்று படங்களும். எம்ஜி ஆர் கூட " நீதிக்குத்தலைவணங்கு " என்ற ஒரு படத்தில் சமையல் காரனாக நடித்திருப்பார். "ஆக்கப்பொறுத்த அம்மாவுக்கு ஆறப்பொறுக்கலை" என்ற வரியில் லதாவுக்கு பதில் சொல்லி அவர் பாடியிருப்பார் ( டி எம் எஸ் குரல்தான்)

எண்பதுகளின் துவக்கக்த்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி ஆன பிறகு ரிக் ஷாக்காரனாக கொஞ்ச நாள் பிழைப்பு ஓடியது.
வயித்துப்பாடு என்றுதான் சொல்லவேண்டும்.
என்னுடன் படித்து மூன்றாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திய ராஜேந்திரன் என்னோடு வா சமையல் வேலைக்குப்போவோம் என்றான். என்னதான் அந்த வேலை என்று பார்த்து விடலாம் என்று அவனோடு போனேன்.

சமையல் வேலையின் காண்ட்ராக்ட் எடுத்து செய்பவர்தான் கொத்தனார்.
அவர் ஆணையின் படி சொல்லும் வேலைகளை  நாம் செய்ய வேண்டும். மண்டபத்திற்கு சமையல் பாத்திரங்களுடனும், காய்கறி, பலசரக்கு சாமான் களோடும்  (விறகையும் சேர்த்துதான்) மதியம் மூன்று மணிக்குமேல் வாக்கில் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு சேர்ப்பதில் அந்த சமையல்காரன் வேலை துவங்கும்.

இப்போதெல்லாம் மண்டபங்களில் சமையல் கேஸ் இருக்கிறது.
உட்கார்ந்து சாப்பிட பெஞ்ச் ஏற்பாடு இருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு பந்திப்பாய்தான் விரிக்க சுருட்ட கொட்டிய கழிவை விளக்கமாறு வைத்து கூட்டி சுத்தம் செய்ய என்று இருந்தது.

ஒரு நாலு மணியைப்போல பால் வந்தவுடன் பிசுபிசுவென்று திக்கான ஒரு காபி கிடைத்தது. ஒரு சாக்கை எடுத்து பிரித்துக்கொட்டச்சொன்னார் கொத்தனார். அது நிறைய பச்சைப்பட்டாணி. இன்னொரு மூட்டையை பிரிக்கச்சொன்னார். அது நிறைய சின்ன வெங்காயம் ( சென்னை வெங்காயம் என்றுவடக்கே மும்பை, குஜராத்தில் சொல்லுகிறார்கள்; அங்கேயெல்லாம் வெங்காயம் என்றால் நாம் இங்கே சொல்லுகிறோமே "பெல்லாரி" அது மட்டும்தான் கிடைக்கும்)

பச்சைபட்டாணியை உரிக்க ஆரம்பித்தோம் மலைபோல் இருந்தது குறையவில்லை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும் கைகள் ஒய்ந்து போய் விடும் வரை பட்டாணிதான்.மதியச்சாப்பாட்டுக்குதான்

அடுதது சின்ன வெங்காயம் மூக்கையும் வாலையும் வெட்
வெட்டிக்குவிக்கவேண்டும். காலை இட்லிக்கும் மதிய சாப்பாட்டுக்கும் சாம்பாருக்குதான்.

எட்டுமணி சுமாருக்கு இரவுசாப்பாடு ரெடியாகி விட்டது. கல்யாண வீட்டுக்காரர்கள்
அனைவரும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிடும் வரை பந்திப்பாயில் உட்காரவைத்து சாப்பாடு போட வேண்டும்.
கடைசியாக எங்கள் முறை. ஒருவர் அமர இன்னொருவர் பரிமாற என்று
புளிக்கூட்டு, பால்சாதம் ;புளிக்குழம்பு;  இரண்டு கூட்டு (ஒன்று பொரியல் மற்றொன்று கூட்டு).

மறு நாள் காலை டிஃபன்  கலர் கேசரி,வெண் பொங்கல்,இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி , காரசட்னிக்கான வேலைகள் ஆரம்பமானது
இட்லி அவிக்கும் வேலை ஒன்று இருக்கிறது. பெரிய இட்லிசட்டியில் இட்லிஊத்தி வைக்கும் வேலை நமது.  விறகுக்கட்டை அடுப்பில் எரிய அதற்கே உரிய புகை கண்ணை என்ன சேதி என்று கேட்க, தூக்கம் ஒருபக்கம் வர இரவு இரண்டு மணி வரை வேலை.

ஒரு ஐந்து மணிக்கெல்லாம் இறக்கை கட்டிக்கொண்ட சுறுசுறுப்பில் காலையின் காபியோடு
முகூர்த்த நேரம் முடியும் முன்பாக டிஃபன் பரிமாற வேண்டும்.
இரவில் வந்தவர்களை விட அதிகமான விருந்தினர்கள் வந்திருந்த படியால் நீண்ட பந்தியில் உட்கார்ந்த அனைவருக்கும் ஓரேமூச்சில் குனிந்த தலை நிமிராமல் பரிமாறிக்கொண்டே செல்ல வேண்டும். இடையில் நிமிர்ந்தால் கொத்தனார் கத்துவார். குறுக்கு செத்துப்போகும்.

திருப்பூட்டு( தாலி கட்டுவதுதான்) முடிந்தவுடன் மதிய சாப்பாடு தொடங்கி விடும். சீர்திருத்தக்கல்யாணம்தான் அதிக பட்சம். ஹோமம் வளர்த்து அதில் நெய்யை விட்டு புகை மண்டலததை உருவாக்கும் வேலை இங்கே அறவே இல்லை.

முப்பதுகளில் இவ்வகை சீர்திருத்தக்கல்யாணத்தை விருது நகரில் பெரியார் அவர்கள் முதன் முறையாக நடத்தி  நல்லதொரு துவக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.  அதே போல பிராமணர்கள் சமையல்தான் பிரதானம் என்பதையும் மாற்றி தம்முடைய கட்சியின் (தி.க) மா நாடுகளில் விருது நகர் நாடார்கள் சமையல் நடை பெறும் என்ற அறிவிப்பையும் செய்ததாக அவரது வரலாற்றின் பக்கங்களிலிருந்து  அறிய முடிகிறது.

அதுசரி. நமது சமையல் கலையில் அடுத்த நிகழ்வு என்பது இதுதான். தாலிகட்டி முடிந்தவுடன் அடித்துப்பிடித்துக்கொண்டு பந்தியில் உட்கார வருவார்கள் திருமண விழாவிற்கு வந்தவர்கள்.
திரும்பவும் பந்திப்பாய், பரிமாறுதல், வாளிகள் மாறும்,  சட்டிகள் மாறும் வேலை மட்டும் இருந்துகொண்டே இருக்கும். ஜாம்,ஊறுகாய், உப்பு, பட்டாணி, கத்தரிக்காய் கூட்டு,உருளைக்கிழங்கு கூட்டு, முட்டைக்கோஸ் பொரிகறி, அப்பளம் சாதம் சாம்பார், ரசம், பாயாசம், மோர் என்று வரிசைப்படி பரிமாற பந்திகள் முடியும்.

அனைவரும் சாப்பிட்டு முடிய மணி ஒன்றரை இரண்டு ஆகிவிடும் அதற்கடுத்தபடியாக நமக்கான சாப்பாடு. சில  காய்கறிகள் காலியாகியும் இருக்கும் இருப்பதை வைத்து சிறப்புடன் வயிறு அளவுக்கு ஒரு வெட்டு.

அப்புறம் பாத்திரங்களை கழுவவேண்டும்.திரும்பவும் தள்ளுவண்டி. சாமான் கள் எல்லாம் அருப்புக்கோட்டை ரோடு மண்டபத்திலிருந்து தெப்பம் மேற்கிலிருக்கும் சமையல் கார சங்கத்தில் ஒப்படைத்து விட்டு சில கிளாசுகள் குறைந்தால் அந்தக்கணக்கு வேறு.
அப்படியே வீட்டுக்குப்போய் படுத்தால் பிணம்தான்.

இரவு எட்டு மணி சுமாருக்கு திரும்பவும் கொத்தனாரைத்தேடி சம்பளம் வாங்க தெப்பம் மேற்குப்பகுதிக்கு. அவர் கல்யாண வீட்டுக்காரர்களிடம் சிட்டையை முடித்து பணப்பட்டுவாடா வழங்குவார்.

எனது சம்பளமாக ஒரு 15 ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது.