வலைப்பதிவில் தேட...

Friday, December 13, 2013

பிராமணமயமாதல் தவிர்க்கவே முடியாத ஒன்றா?

மனுதர்மத்தின் படி படைக்கும் கடவுளான பிரம்மனின் முகத்தினின்றும் பிராமணன்(வேதம் சொல்லுபவன்), தோளினின்றும் சத்திரியன் (அரசாட்சி செய்பவன்) தொடையினின்றும் சூத்திரன்( உடல் உழைப்பாளர்கள்) என்று படைக்கப்பட்டதாகக்கூறுகிறார்கள். இந்தக்கதையெல்லாம் இந்தியா என்ற தேசத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. வெளி நாடுகளுக்கெல்லாம் செல்லுபடி ஆகாது. நிற்க...
   




இந்திய நாட்டு ஜனத்தொகையில்  நாலில் ஒருபகுதி மக்கள் பஞ்சமர்களாக/ சண்டாளர்களாக அறியப்படுகிறார்கள். வெட்டியான் என்று கூட இவர்கள் அனைவரையும் கூற முடியும் மனுவால். இவர்கள் வேலை இதுதான் என வரையறுக்கப்படவில்லை. அவனைப்போல வேதம் மட்டும் சொல்லி உடல் வளர்க்க இவனுக்கு விதிக்கவில்லை. எனவே வெட்டியானாக ஆக்கப்பட்டான் அல்லது விளிக்கப்பட்டான்.

உண்மையில் பார்க்கப்போனால் உழைக்காமல் வெட்டியாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு அனைவருக்கும் இலவசமாக அல்ல; காசு வாங்கிக்கொண்டு வேதங்களை அவர்கள் புரியாத மொழியில  (சத்திரியர், வைஸ்யர் மற்றும் சூத்திரர்கள் தான்) சொல்லி காசு அரிசி  பருப்பு உயிருள்ள மாடு கன்று என வாங்கி பிழைக்கும்  ஒருவர் தான் வெட்டியான் உண்மையில்.

அறிவியல் ரீதியாகப்பார்த்தால் உண்மையில் ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து கலவி செய்தால்தான் குழந்தைகள் பிறக்கின்றன. ஆதாம் யாவாள் கதையில் கூட யாவாள் சாப்பிடக்கூடாத கனியை உண்டதால் பாவியாகி மனுஷரை ஈன்றெடுத்து உலகுக்கு சமர்ப்பிக்கிறாள். எனவே எல்லோரும் பாவியாகிப்போனோம்.

சரி ஒருவர் பிறப்பால் தலித் என்று கொள்வோம். கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இயல்பாகவே. காலப்போக்கில் இவர் கல்வி கற்று அரசு வேலைக்கு வந்திருக்க முடிகிறது. வருடங்கள் ஆகிறது ஒரு பத்துப்பதினைந்து வருடங்கள் சேவை முடித்தவுடன் ஒரு சிறிய இடமாக பார்த்து வாங்குகிறார்
அப்புறம் அங்கே ஒரு வீட்டைக்கட்டுகிறார்.



அவரது குல வழியான விழா என்று சொன்னால் தனது சுற்றத்தாரை அழைத்து மாடு ஒன்றை அடித்து விமரிசையாக புது மனைபுகுவிழா கொண்டாடவேண்டும். இதுதான் அவருக்கு நல்லது.தன்னை உலகுக்கு அடையாளப்படுத்தவும் உதவும்.

நடப்பில் நிலைமை அப்படி இல்லை தான் இன்ன சாதி என்று கூற முடியாத நிலைமையில் அவர் இருக்கிறார். எனவே பிராமண மயமாக (SANSCRITISATION) எத்தனிக்கிறார்.

விளைவாக கணபதி ஹோமம் செய்ய ஐயரைத்தேடுகிறார். ஒரு பத்தாயிரம் ரூபாய் அவருக்கு காணிக்கை கொடுக்கிறார். இரவெல்லாம் புகையைப்போட்டு மந்திரம் சொல்லி வீடு கட்டிய தம்பதியினரை காலை நாலுமணிமுதல் சாத்திரங்கள் சொல்லி ஒரு பசுமாட்டையும் கன்றையும் கொண்டுவந்து புது  வீட்டுக்குள் விட்டு அது மூத்திரம் பெய்தால் யோகம். மாடு கிடைக்கவில்லையென்றால் அதன் மூத்திரத்தைக்கொண்டு மூலை மூலைக்கு தெளித்து, வாங்கி வரச்சொன்ன அத்தனை தேங்காய் அரிசி பலசரக்கு பலகாரம் எல்லத்தையும் அள்ளிக்கொண்டு போய் விடுகிறார் பணத்தையும் வாங்கிக்கொண்டு...

சமீபத்தில் ஒரு கிரகப்பிரவேச வீடு. கணபதி ஹோமம் ஐயர் மாடு கோமியம் எல்லாம் ஆயிற்று. காலை சிற்றுண்டி, மதியம் மரக்கறி சாப்பாடு இரவு டிபன் முடிந்தது.

மறு நாள் கறி சாப்பாடு போடவேண்டும் அல்லவா.  ஒரு ஐந்து கிலோ ஆட்டுக்கறியும் இரண்டு கிலோ கோழிக்கறியும் எடுக்க புது வீட்டைக்கட்டிய தம்பியும் எனது மருமகளும் சொன்னார்கள்.  நாம் எல்லோரும் சின்ன வயசிலிருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுப்பழகியவர்கள். எதற்கு ஆட்டுக்கறிஎல்லாம் என்று சொல்லிவிட்டு மாட்டுக்கறி அந்த ஊரில் எங்கே கிடைக்கும் என்று எனது  நண்பரிடம்  போனில் கேட்டு  அங்கே போய் ஒரு பத்து கிலோ மாட்டுக்கறி எடுத்து வந்தேன்..




அப்புறம் சாவகாசமாக கறிக்குழம்பு வைத்து கொஞ்சம் சுக்காவறுவல்  என சமையல் ஆனது. மாட்டுக்கறி சாப்பிடாதவர்களுக்கு ஒரு இரண்டு கிலோ கோழிக்கறி குழம்பு ஆனது. கறிக்குழம்பு புது வீட்டில் மணம் வீசி ஆகிக்கொண்டிருந்த நேரம் ஐயர் வந்தார். அந்த செங்கலால் கட்டிய ஹோமத்தைக்கலைத்துக்கொண்டே ஒரு டீ கேட்டார்.

வந்திருந்த உறவு முறை அனைவரும் மனதார சாப்பிட்டு பிரிந்து அவரவர் ஊர் சென்றோம்...