வலைப்பதிவில் தேட...

Saturday, July 31, 2010

'தேரை' மனிதர்கள்


'இவன் தேற மாட்டான்' என்று எப்போதாவது யார் மூலமாவது  நமது வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருப்போம். தேரை விழுந்த குழந்தைகளைப்பற்றி ஒரு உண்மை நிகழ்வைப்பார்ப்போம். தேரை விழுந்த தேங்காயைப்பற்றிக்கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு மேலே ஊர்ந்து  சென்றபடியாகயால் கசக்கும் வெள்ளரிக்காயைப்ப்ற்றியும் கூட நமக்கு சிலர் சொல்லியிருப்பார்கள். தேரை விழுந்த குழந்தை சரியான நோஞ்சானாக இருக்கும். வாகான வளர்ச்சி இருக்காது. கிட்டத்தட்ட வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்த சோமாலியாக்குழந்தைகளைப்போல் பார்ப்பதற்கு இருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டாதுகள்.  பால் குடித்தால் திரள் திரளாக வாந்தி யெடுப்பார்கள். கண்கள் சொருகினாற்போல் இருக்கும். வரிவரியாக விலாத்தட்டு எலும்புகள் தெரிய சுறு சுறுப்பில்லாமல், சிரிக்கக்கூட வழியில்லாமல் இருப்பார்கள். நான்கு மாதத்திலிருந்து ஒருவருடத்துக்குள் இந்தக்குழந்தைகளை தேரைக்குழந்தைகள் என பெற்றோர்கள் அனுமானித்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கென்று ஒரு எளிய வைத்தியமுறை இருந்தது நான் சிறுவனாக இருந்தகா லங்களில். இப்போதுநடைமுறையில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. தேரை விழுந்த குழந்தையை பிரதான வீதியில் அல்லது மேற்குப்பக்கம் குடியிருக்கும் சம்சாரிகள் தூக்கிக்கொண்டு ஊருக்குக்கிழக்குப்பக்கத்தில் குடியிருக்கும் அருந்ததியர் சமூக மக்களிடம் கொண்டு செல்வார்கள். அவர்களிடம் உலர வைத்த மாட்டு நரம்பு (பாடம் செய்தது) கிடைக்கும். தோல் தொழிலும் செய்வார்கள். மாட்டை உரித்து அதன் தோலை பதப்படுத்தி தோல் பொருட்கள் செய்வதில் பரம்பரையாக வந்தவர்கள். வழக்கமாக சம்சாரிமார்களின் வீட்டுக்குதேவையான கமலை,வார், மாட்டுக்கு மணிவார், கழுத்துப்பட்டை,சாட்டைக்குச்சிக்கான தோல் போன்ற வேலைகள் செய்வது இம்மக்களது வழக்கம். எனது தந்தையாரும் இந்தவே லைகள் செய்வார்.

தேரை விழுந்தகுழந்தைக்கானமருந்துவேறொன்றுமில்லை. அதிகாலையில் எழுந்து ஏதாவது   வாழைத்தோப்புக்குப்போய் வாழைமரத்துக்குள் பாதுகாப்பாக குடியிருக்கும் மிருதுவான பளபளப்பான தேரை ஒன்றை அப்பா பிடித்து வருவார். அதற்குமு்ன்பாக தோலினால் ஆன ஒரு சிறு பை (2"X2" சைஸ்) தயாரித்து வைத்திருப்பார். நரம்பும் கூடவேதான். அந்தநாட்களில் குழந்தையை க்காலையில் தூக்கிகொண்டு தாய்மார்கள் ஒன்னேகால் ரூபா காணிககை மற்றும் தேங்காய், பழம், சூடம், சாம்பிராணி, வெற்றிலை, தெக்கம்பாக்கு சகிதம் வீட்டு வாசலில் வந்து காத்திருப்பார்கள். வீட்டுக்குள் வருவது மரபான ஒன்றல்ல அவர்களைப்பொருத்த வரையில் ஏனென்றால் இது சேரி ஜனங்களின் (பஞ்சமர்கள்)குடியிருப்பு அவர்கள் விவசாயம் செய்யும் சூத்திரர்கள்.

வாழைத்தோப்பிலிருந்து அப்பா வந்ததும், அவர் மேற்கு பார்த்து உட்கார்ந்துகொ ண்டு குழந்தையக் கிழக்குப்பார்த்து காட்டசொல்லுவார். வெற்றிலை மேல் கொஞ்சம் அடுப்புசாம்பலை வைத்து அதன் மேல் சூடத்தைப்பற்றவைத்து தேங்காயை சூடு காண்பித்து தட்டக்கல்லில் ஒரு தட்டு தட்டுவார். தேங்காய்த்தண்ணியை மூன்று முறை சுறறி தெளித்து விட்டு ஏற்கனவே செய்துவைத்திருந்த தோல் பைக்குள் தேரையை வைத்துத்தைத்து, நரம்பு வழியாகக்கோர்த்து( நரம்பு இல்லையென்றால் மாட்டுத்தோலில் சாட்டைக்குச்சிக்கு செய்வதைப்போல் ஒரு மெல்லிய கயிறு போல அறுத்து ஆஸ் செய்து ) ஒரு மாரடியைப்போல் (பிராமணர்களின் முப்புரி  நூல் மார்பில் கிடப்பதைப்போல) குழந்தையின் நெஞ்சில் வைத்து கட்டி விடுவார்.
அப்புறம் குழந்தையின் தாயிடம் குழந்தையைத்தூக்கிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் அவர்களது வீட்டுக்கு கொண்டு போகசொல்லுவார்.
அந்தக்குழந்தைகளின் உடம்பின் மேல் கிடக்கும் இத்தகைய தேரை மருத்துவ மாரடிகள்   சில நாடகளில் கீழே விழுந்துவிடும்.
நடப்பிலேயே அவர்கள் பால் குடிக்க, சிரிக்க,கொஞ்சம் விளையாட , நடக்க என்று இயல்பான குழந்தையாக நாளடைவில் (ஒருவருடத்துக்குள்) மாறி விடுவார்கள்.

இன்னும் சில ஆண் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பிறப்புறப்பை பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதைப்"பிணி" என்று  அம்மாகூட சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன் . தோலை ஒரு இரண்டு இன்ச் அளவுக்கு வெட்டி அதை அறைஞாண் கயிற்றில் கோர்த்து விட்டுவிடுவார் அப்பா.
பிறகு அந்தக்குழந்தைகள் இந்தவாரைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

Friday, July 30, 2010

நோயாளியாக வேண்டாம்

அரச வாழ்வு வாழ்ந்து வந்த சித்தார்த்தன் இந்த சமூகத்தில்  மனம் மாறியதற்கு மூன்று காரணங்கள் உண்டு; நோயாளி, வயது முதிர்ந்தவர், மரணமடைந்தவர். என்பனவேஅவை. அந்த வழியில் நோயாளி என்ற முறையில் மனமிறங்கினார் புத்தர்.
ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்லும் முன்பாக கிங்கரர்கள் போல் இருவர் படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி, ஸ்ட்ரெச்சரிலிருந்து மற்றொரு தடவை ஆபரேஷன் செய்யும் படுக்கைக்கு மாற்றி வைக்கிறார்கள். பச்சைக்கலர் முகமூடியும் அதுவுமாய். மூக்கில் ஒரு குழாயை மாட்டி, மயக்கமடையவைக்கிறார்கள். அப்புறம் ஒருமணி நேரம் கழித்து கிட்டத்தட்ட விழிப்பு அல்லது சுய நினைவு வரும் நேரம் சுருக் சுருக் என்று கிழித்த இடத்தைத்தைப்பது கொஞ்சம் சுயமான உணர்ச்சியை வரவழைக்கிறது. விழிக்கட்டுமென்று செல்லமாக கன்னத்தில் தட்டி பெயரைசொல்லி எழுப்புவது சற்றே காதில் விழுகிறது. அத்தோடு, குண்டுக்கட்டாகத்தூக்கி, பழையபடியும் ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி உயரத்தை உயர்த்தி விருவிருவென்று உருட்டிக்கொண்டு போய் நோயாளீயின் அறைக்குக்கொண்டு சென்று அன்பாக அப்படியே தூக்கி படுக்கையில் போட்டு விட்டு நகருகிறார்கள் அந்த்மு ரட்டு மனிதர்கள்.

ஒருமணி நேரம் கழித்து சற்றே உணர்வு வரவும், குடும்பத்தாரை,உறவினரை, நண்பர்களைப்பார்க்க விழிகள் கசிகிறது. மாமா மகன் குமார் சிரித்தான். அந்த கிங்கர மனிதர்களைப்பற்றிக்கேட்டேன். அவர்கள் முரட்டுத்தனமாக மனிதர்களை ஏன் இப்படி கையாளுகிறார்கள் என்றேன். அவன் சொன்னான் "மாமா அவர்களை நான் கொஞ்சம் கவனித்தேன் உங்களைத்தியேட்டருக்குக்கொண்டு போகும் முன்" என்றான்.

நோய் அல்லது விபத்து என்று யாருக்கும் வந்து விடக்கூடாது என்று நான் எனக்குள் நினைத்தேன் அதை அப்படியே என் மனைவியிடமும் பகிர்ந்துகொண்டேன்.
மனித உயிர் மகத்தானது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஆயிரம் மனிதர்களை "கேசுகளாக"ப்பார்க்கும் அந்த தியேட்டர் மனிதர்களின் நடவடிக்கையில் அத்தகைய மனிதம் இருக்கவில்லை.

உலக சுகாதார மையம் (WHO)  நோயற்றவர்களை ஆரோக்கியமானவர்கள் எனறு வகைப்படுத்தவில்லை. சரியான கல்வி, அந்த கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு, சரியான சம்பளம்(அதனுடன் கலந்த கலாச்சார வாழ்க்கை), ஓய்வு  என்ற 5 அம்சங்களில் உள்ளங்கியிருக்கிறது மனித வாழ்க்கை என்று வரையறுத்திருக்கிறது. 80% பேர் ஒரு நாளைக்கு இருபதுரூபாய் சம்பாத்தியத்தில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் நமது நாட்டில் இது எந்த அளவுக்கு சாத்தியம் ?

மருத்துவ மனையில்...

கடந்த ஜூலை 5ஆம் தேதி வெளியிட்ட இடுகையில் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபரம் மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். விருது நகர் திருவேங்கடம் மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் வண்டியில் கையில் ஒரு ட்ரிப்ஸ் பாட்டிலுடன் எனது மனைவி தம்பி அழகு, நண்பர் சீனி ஆகியோரோடு போய் முதல்மாடியில் உள்ள ஒரு அறையில் (203 )ஸ்ட்ரெச்சரிலிருந்து இறக்கி விடப்பட்டேன். தொடர்ச்சியாக பாட்டில்கள் மாறிகொண்டிருந்தது. சோறு சாப்பிடும் தேவை இல்லாமல் போயிருந்தது. ஒரு கார் அமர்த்திக்கொண்டு தம்பி வைரம் நண்பர்களோடு வந்து விட்டிருந்தான். தகவல்கள் பறக்க, பாப்பா தியாகராஜர் பொறியியற்கல்லூரியிலிருந்து 'அப்பாவுக்கு என்ன ஆச்சு' என்று அழுகையுடன் வந்த விதம் என்னை கண் கலங்க வைத்தது. மீண்டும் மீண்டும் மனைவியின் அழுகை வேறு  அடிவயிற்றை என்னவோ செய்தது. கோயமுத்தூரிலிருந்து  மகன் திலிப் மறு நாள் ஆபரேஷனுக்கு முன்பாக வந்து விட்டான். மதுரையில் இருக்கும்  மாமா மகன் குமார் மற்றும் பி எஸ் என் எல் அதிகாரிகள்/ஊழியர்கள் என்று  பத்து இருபது பேர் சகிதம் ஆபத்துக்கு உதவி எனும் வாக்கின் படி அரக்கப்பரக்க வந்திருந்தார்கள். ஒன்றும் ஆகாது கவலைப்படாதீர்கள் என்ற ஆதரவு வார்த்தைகள் அனைவர் வாயிலிருந்தும் வந்து விழுந்துகொண்டிருந்தன. கண்ணீருடன் அவற்றை எதிர் கொண்டது எனது மனைவி மட்டும்தான்.
  நியூரோ மற்றும் ஆர்த்தோ மருத்துவர்கள், தாதிகள் பரபரப்புகளுடன். எமெர்ஜென்ஸி வார்டிலிருந்து ஸ்கேன் பகுதிக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டேன். அப்போது அந்த வண்டியைத்தள்ளிக்கொண்டு வந்த பணிப்பெண்"எப்படி சார் விழுந்தீங்க" என்றார். நான் உங்களுக்காக "இனி ஒரு முறை விழுந்துகா ண்பிக்க முடியாத சூழலில் இருக்கிறேன்" என்றேன்.
16ஆம் தேதி விபத்து நடந்தது. 17ஆம்தேதி இரவு 0830 மணீக்கு ஆப்பரேஷன் வலது காலர் எலும்பை சர்ஜரி செய்யவேண்டும் என்று குறித்துவிட்டார்கள். இதற்கிடையில் தரை தளத்திலிருக்கும் ஒரு அறைக்கு ( A20) மாற்றி விட்டார்கள்.

Monday, July 5, 2010

ஒரு சிறிய விபத்து

அகில இந்திய அளவில் ஆர்ப்பரிப்புடன் பி எஸ் என் எல் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் 16/06/2010 அன்று ஒரு நாள் மாவட்ட மாநில மற்றும் டெல்லி தலைமைஅலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திட்டமிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மாபெரும் வேலை  நிறுத்தத்தின் விளைவாக போடப்பட்ட மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகிப்போனதால் மீண்டும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடப்பட்டிருந்தது.  இந்த அகில இந்திய தர்ணா( பழி கிடத்தல்) போராட்டத்துக்கு முன்னோடியாக 14/06/2010 அன்று மதிய வேளை ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தி விட்டிருந்தோம். 

16/06/2010 அன்று காலை பத்துமணி சுமாருக்கு எனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். மாவட்ட அளவிலான போராட்டத்துக்கு தலைமை ஏற்கும் பணி என்னுடையது.  அப்போதுதான்   நான் சற்றும் எதிர்பாராத வகையில் ஒருவர் சாலையைக்கடக்க எத்தனிக்க மதுரை சாலை பி ஆர் சி பணி மனைக்கு எதிர்புறம் இருக்கின்ற சி ஐ டி யு சங்க அலுவலகத்தின் முன்பாக சாலையில் தடுமாறி சாலையின் இடது புறம் அவர் விழ சாலையின் வலது புறம் வண்டி பிரேக் பிடிக்காமல் போக, கீழே விழுந்ததில் இரண்டு முட்டிக்கால்கள், வலது கை முட்டி,வலது நெற்றியில் காயம், வலது தலையின் பின்புறம் தலையில் ரத்தக்காயம் ( மூன்று தையல்கள் முதலுதவிச்சிகிச்சையிலேயே),  வலது காதிலிருந்து குருத்தெலும்பு ஒடிந்து இரத்தம் ஒழுக, வலது காலர் எலும்பு முறிய, புத்தி பேதலித்த ஒரு சூன்ய நிலையில் இரத்தம் ஒழுக நான்.

 நல்லவேளையாக அந்த வழியாக  வ்ந்த ஒரு நண்பர் எனது செல்லை எடுத்து வீட்டு எண்ணை அழைத்து விஷயத்தை சொல்ல, எனது துணைவியாரோ பதறியடித்து பக்கத்து வீட்டு அக்காவுடன் ஓடி வர  ஒரு சில ஆட்டோக்காரர்கள் இரத்தக்காயம் பட்ட என்னை ஏற்றிச்செல்ல மறுக்க, ஒரு நல்ல அட்டோக்காரரின் உதவியால் என்னுடன் காயம் பட்ட அந்த அவரையும் ஏற்றிக்கொண்டு  ராமமூர்த்தி சாலையில் உள்ள திருவேங்கடம்  மருத்துவமனை அழைத்துசெல்லப்பட்டோம்.
முதலுதவி சிகிச்சை முடிந்தகையோடு அவர்களது மருத்துவமனை ஆம்புலன்சிலேயே பாதுகாப்பாக மதுரை வடமலையான் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள் என்னை. கீழே விழுந்தவருக்கு லேசான காயம் என்பதால் அவர் திருவேங்கடம் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார்.