வலைப்பதிவில் தேட...

Thursday, October 21, 2010

ரிக் ஷாக்காரன்

பட்டப்படிப்பு முடிந்தது.
விடுமுறையும் வேலையின்மையும் சேர்ந்து விரட்டத்துவங்கியிருந்தது.
பத்துரூபாய்க்காசுக்கு வேலை கிடைப்பது அரிது.
என்னுடன் படித்த நண்பன் ராஜேந்திரன் இரண்டாவதிலோ அல்லது மூன்றாவதிலோ படிப்பை நிறுத்திக்கொண்டவன்.

முத்து ராமன் பட்டி சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டில் வண்டி ஓடிக்கொண்டிருந்தான். வீட்டில் சும்மா இருக்கப்பிடிக்காமல் ரிக் ஷா ஸ்டாண்டுக்குப்போய் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
பர்மாக்கடை டீ அப்போது இருபத்தைந்து பைசா.

முததுராமன் பட்டியிலிருந்து வரும் சவாரிகள் பொதுவாக பஸ் ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி,( அப்போதெல்லாம் ஒரு ஆஸ்பத்திரி கூட முத்துராமன் பட்டியில் இல்லை; அதிகபட்சமாகப்போனால்  லைசாண்டர் ஆஸ்பத்திரி அல்லது அரசு ஆஸ்பத்திரி அதுவும் இல்லையென்றால் காட்டாஸ்பத்திரி (பிரசவ ஆஸ்பத்திரிதான் அது)) என்று இருக்கும் சில  நேரங்களி தியேட்டர் சவாரியும் அமையும்.

படித்து விட்டு வெறுமனே அல்லது "சிவனே"
என்று யாரும் இருக்க முடியாது நான் மட்டும் விதி விலக்கா என்ன?

பகலில் ஏதாவது பஸ் ஸ்டாண்டு அல்லது ரயில்வே ஸ்டேஷன் சவாரி வந்தால் ஏற்றிக்கொண்டு போய் இறக்கி விட்டால் ஒன்னரை ரூபாய் (பஸ் ஸ்டாண்டுக்கு) அல்லது இரண்டரை ரூபாய் ( ரயிலடிக்கு) தருவார்கள்.

வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு ஒரு சவாரி போய் விட்டு வந்தால் எழுதப்படாத சட்டமாக வாங்கிய கூலியில் பாதி ( பவுஸ்) கிடைக்கும்.

ரிக் ஷா வண்டி ஓட்டப்பழகியது ஒன்றும் பெரிய வேலையாக எனக்குப்படவில்லை. ஏனென்றால் ராஜேந்திரன் போன்ற நண்பர்களின் வண்டியில் அவ்வப்போது பழகியது.

அனேகம் பேருக்கு அது சைக்கிள் ஒட்டுவது போல் அவ்வளவு எளிதில்லை
அது ஒரு மூன்று சக்கர வாகனமாகையால் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு போய் கவிழ வேண்டியிருக்கும்.

எம்ஜியார் ரிக் ஷாக்காரன் படம்  நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த போது வெளீயானது. நான் எட்டாவது வார வால் போஸ்டரை ரசித்துப்பார்த்து இருக்கிறேன். அதில் மீசைக்கார எம்ஜியார் ஜஸ்டினும் போடும் சண்டைக்காட்சி இருக்கும். இந்தப்படத்துக்குதான் எம்ஜியார்  "பாரத்" பட்டம் பெற்றார் என்பது என் நினைவுக்கு வருகிறது.

கடைசியில் நானும் அவரைப்போலவே ஒரு ரிக் ஷாக்காரன் ஆனேன்.
பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு சவாரி வந்தது. ஒன்னாரூபாய் பேசி, என்னை கொண்டு போய் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுவிட்டு வரச்சொன்னான் மாப்பிள்ளை மாரியப்பன்.

முத்து ராமன் பட்டி ரயில்வே கிராசிங் தாண்டி, செந்தி வினாயகபுரம் தெரு. மாங்கா மச்சி பள்ளி, அறிவியல் மன்றம் தாண்டி, கீழக்கடை பஜார் திரும்பி, வல்லக்காலில் பல் ஆஸ்பத்திரி. அப்போதுதான் இடது புரமாக எதிரே வந்த கை வண்டிக்காக வளைக்கிறேன் ஆசாமி என்ற பேரில், ஒரு வீலை (இடது) வல்லக்காலில் ஆஸ்பத்திரிக்கு நேர் எதிரில் இறக்கி விட்டேன்.

உட்கார்ந்திருந்த சவாரி இருவர் (கணவன் மனைவி) என்னைத்திட்டிக்கொண்டே இறங்கினார்கள். இன்னொரு ரிக் ஷாக்காரர் அவரது வண்டியை ஒரங்கட்டி நிறுத்தி விட்டு வந்து விழுந்து கிடந்த  இடது வீலைத்தூக்கி ரோட்டில் வைத்து,  சவாரி இருவரையும் திரும்ப ரிக்ஷாவில் உட்கார வைத்து எந்த ஸ்டாண்டு? புதுசா? பார்த்துப்போ! என்று சொல்லிவிட்டு போனார்.

காசுக்கடை பஜார் வந்து  நாராயணன் புக் ஸ்டோர் கடந்து மாரியம்மன் கோவில் முன்பாக வந்து தேரடி வெயிலுகந்தம்மன் கோவில், கொடிமரம் தாண்டி பீட் திரும்பி சென்ட்ரல் சினிமா கடந்து சக்தி ஹோட்டலுக்கு எதிராக நிறுத்தி சவாரியை இறக்கி விட்டேன்.

வியர்வையைத்துடைத்துக்கொண்டே காசை வாங்கினேன் ஒரு ஒரு ரூபாய்     நோட்டும் ஒரு எட்டணாவும் எனது கைகளில் சிரித்தது.
அதில் முக்கால் ரூபாய் எனது உழைப்பிற்கானதாக்கும்!

Tuesday, October 19, 2010

பதின் வயது நினைவுகள் 3

விருது நகர் பராசக்தி மாரியம்மன் கோவில்  பொங்கல் திருவிழா வருடாவருடம் ஏப்ரல் முதல் வாரத்தில் (தமிழ் மாதம் பங்குனி கடைசியில்)  நடை பெறுகிறது. பொங்கல் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும். அன்றைக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு கையில் வேப்ப இலைகளுடன் வலம் வருவார்கள்.  மறு நாள் பக்தர்கள் அம்மனுக்கும் நேர்ந்து கொண்டபடி கயிறு குத்துவது, தீச்சட்டி எடுப்பது, மாவிளக்கு எடுப்பது, ஆயிரங்கண் பானை வாங்கி சமர்ப்பிப்பது, கண் மலர், கை கால், முழு உருவ பொம்மை (ஆண் பெண்) , தவழும் குழந்தை போன்ற மண் படைப்புகளை
அம்மனுக்கு படைப்பது, அலகு குத்துவது, பின் முதுகில் இரு இடங்களில் குத்தி ஒரு சிறிய தேரை இழுப்பது என்று நிறைய பக்தியின் முறைகள் இருக்கிறது.  இன்றைக்கும் இத்திருவிழா பிரசித்தி பெற்றது இந்தப்பகுதியிலும் விருது நகர் சுற்றுப்பட்டி மற்றும் வட்டாரங்களிலும்.

எங்கள் பதின் வயதுகளில்  மார்பெல்லாம் சந்தனம் பூசி, புதிய வேட்டி கட்டி
புதிய தலைப்பாகை கட்டிக்கொண்டு, தோளில் தொங்கிக்கொண்டிருக்கும்
"கிடுக்கட்டி" என்னும் ஒரு தோல் கருவியின் உதவியால்"டன் டன டன் டன" என்று அடித்துக்கொண்டு சரியாக பொங்கல் திருவிழாவிற்கு 21 நாட்களுக்கு முந்தைய ஒரு இரவில் திருவிழாவினைப்பற்றி உரக்க அறிவித்துக்கொண்டு வருவார். (நெல்லை மாவட்டங்களில் இத்தகைய திருவிழக்களுக்கு "கொடை" என்று சொல்லுகிறார்கள். இங்கே அப்படியெல்லாம் கிடையாது. பொங்கல் திரு நாள் என்று கூட சொல்லுவதில்லை வெறுமனே "பொங்கல்" என்று மட்டுமே குறிப்பிடுவார்கள் இன்றைக்கும்கூட)
நாங்களெல்லாம் பின்னாடியே ஓடுவோம்.

பொங்கல் அறிவிக்கப்படுவதை 'சாட்டுதல்' என்று சொல்லுவார்கள். சாட்டியது முதல் எங்களுக்கெல்லாம் ஒரே 'கவுண்ட் டவுன்' தான்.
என்னும் எத்தனை நாள் இருக்கிறது? நம்ம தெருவில் யார் யாரெல்லாம் கயிறுகுத்துகிறார்கள்? யார் யாரெல்லாம் தீச்சட்டி( அக்கினிச்சட்டி) எடுக்கிறார்கள்.பொங்கலுக்கு முன்பாக ஒருவாரகாலத்திற்கு  பொட்டலில் நடக்கும் நாடகங்கள் போவது, ராட்டினங்கள் சுத்தப்போவது என்று மிகவும்
ஆர்வமாக இருப்போம்.

வருடா வருடம்  குறைந்தது  இரண்டு ராட்டினங்கள் ஒன்று குடைவடிவிலானது மற்றொன்று மேலிருந்து கீழாக சுற்றி வருவது  என்று போட்டு இருப்பார்கள். அப்போதெல்லாம் அறுபது அடி ராட்ஷச ராட்டினம் இல்லை.  நாடகம் பார்க்கப்போய், அது ஆரம்பிக்க லேட் ஆனதால்
நண்பர்கள் சிலபேருடன் சேர்ந்து ராட்டினம் சுத்தக்கிளம்பினோம். ஒருவர் கையிலும் காசு என்பது இல்லை. அந்த குடை ராட்டினத்தின் மேல் கொஞ்சம் ஆசை. மேல் கீழ் ராட்டினத்தில் ஏறினால் குடலைப்புரட்டிஎடுக்கும். வாந்தி வரும் தலை சுற்றும், கிறு கிறுப்பும் வரும்


கருப்பையா சுருக்குப்பையோடு நிற்கும் அந்த ராட்டின உரிமையாளர் பெண்ணிடம் போய் அப்பாவியாக நின்று கேட்டான். நாங்கள் நான்கு பேர். உங்களுக்கு உதவியாக ராட்டினம் சுத்த எங்களை அனுமதிப்பீர்களா? என்று அந்தப்பெண்மனி நீங்கள் ராட்டினம் ஏறி சுத்த வேண்டுமென்றால் நான் சொல்லும் வரை ஏறி உட்கார்ந்திருப்பவர்களுக்காக  நீங்க்ள் சுற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்கள்.

சரி என்று ஒத்துக்கொண்டோம். கருப்பையா, நான் மற்றும் இரண்டு பேர் ராட்டினத்தில் ஏறி ஜம்பமாக உட்கார்ந்திருக்கும் எங்கள் வயதொத்தவர்களை சுத்தினோம். அந்தக்குதிரை வடிவில் உட்கார்ந்திருப்பவனுக்கு மட்டற்ற சந்தோஷம் இருக்கும்.
கொஞ்ச நேரம் சுத்தி விட்டால் நாமும் அந்த குதிரை வடிவிலான பொம்மை ராட்டினத்தில் ஏற வாய்ப்பு கிடைக்குமே என்று எண்ண அலைகள் சுற்றியது. கொஞ்ச நேரம் சுத்தி விட்டு விட்டு அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

கூட்டம் குறைந்து விட்டது போலத்தெரிந்ததும், அந்த அம்மா எங்களை ஏறி உட்கார சொன்னார். குதிரையில் நான் உட்கார்ந்தேன்.  நாங்களே தள்ளி விட்டு நாங்களே சுத்தும்படியான் ஒரு நிலமை வந்தது. கொஞ்ச நேரத்தில் கிறு கிறுவென்று வந்தது. ராட்டினத்தை விட்டு விலகி தூரப்போய் படுத்துக்கொண்டேன். 




கொஞ்ச நேரம் கழித்து நன்றாக ராட்டினத்தில் ஆடிவிட்டு கருப்பையா கொஞ்சம் கூட அசராமல் வந்தான் என்னை எழுப்பினான் பிளாஸ்டிக் கிளாஸ் தண்ணியோடு. நான் நிமிர்ந்து பார்த்தேன்.மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தேன் வீடு    நோக்கி கருப்பையாவின் தோளில் கை போட்டபடி.

Tuesday, October 12, 2010

பதின் வயது நினைவுகள் 2

எட்டாவது வரைதான் அப்போது விருது நகர்  முத்துராமன்பட்டியில் இருக்கும் சௌடாம்பிகை பள்ளியில் படிக்க முடியும். அது அப்போது ஒரு நடு நிலைப்பள்ளி.( இப்போது அது ஒரு மேனிலைப்பள்ளி) அதற்குப்பிறகு கே வி எஸ், ஹாஜி பி,சுப்பையா நாடார் அரசுப்பள்ளி என  உயர் நிலைப்பள்ளிக்கல்வி படிக்க இயலும். அப்படித்தான் ஒன்பதாவது வகுப்பில் ஹாஜிபி செய்யது முகமது உயர் நிலைப்பள்ளியில் அப்பா சேர்த்து விட்டிருந்தார். விருது நகர் மெயின் பஜாரில் உள்ள மாரியம்மன் புக் சென்டருக்கு எதிர்த்த ரகுமானியா சூ மார்ட்டில் அப்பா செருப்பு சரி செய்யும் வேலை செய்து வந்தார்.

மதியம் 12 40 க்கு பள்ளி முடியும். 2 மணிக்கு மறுபடியும் வகுப்பு தொடங்கும். முத்துராமன் பட்டியின் கடைசியில் இருக்கும் வீட்டுக்கு போய் வர நேரமாகும் என்றெண்ணி மதிய நேரங்களில் அப்பா வேலை செய்யும் கடைக்கு சில நாட்களில் வந்து விடுவது உண்டு.  பொட்டலில் அப்போதெல்லாம் இரண்டு மூன்று தள்ளுவண்டிக்கடைகளில்
10 பைசா பாயாசம் படு ஜோராக விற்பனையாகும். அப்பாவிடம் போனால் கால்ரூபாய் (25 பைசா) கிடைக்கும். அப்படியே பொட்டலில் ஒரு பாயாசம் குடித்து விட்டு மிச்சம் 15 பைசாவோடு பள்ளிக்கு சென்று விடுவேன். இல்லை என்றால் பெ. சி. தெருவில் மாம்பழப்பேட்டைக்கு எதிர்த்த சந்தின் முகப்பில் ஒரு கிளப் கடை (ஹோட்டல்தான்) இருக்கும். அங்கே ஐ ஆர் 8 அரிசியில் சமைத்த சாப்பாடு ஒரு கப் கத்தரிக்காய் சாம்பார் சகிதமான மதிய நேரச்சாப்பாட்டை முடித்துக்கொள்ளலாம்.
 
இப்படித்தான் அன்றைக்கும் ஒரு கால் ரூபாயை வாங்கிக்கொண்டு பள்ளியை நோக்கி நடந்தேன். பாயாசம் கூட குடிக்கவில்லை. பாம்பாட்டிக்காரன் மகுடியுடன் தனது வேலையை அப்போதுதான் துவங்கியிருந்தான். ஒரு கோழி முட்டை ஒரு செவலை நிறப்பாம்பு அது சரியான சோம்பேறி. நெளிந்து கொண்டு இருந்தது. அந்த மோடி மஸ்தானைச்சுற்றி கூட்டம் நின்றது. சிறிது நேரத்தில் அனைவரையும் அவனது கவனத்துக்குள் கொண்டு வந்து விட்டான். திடீரென ஒரு பையன் கூட்டத்திலிருந்து அவனது கட்டுப்பாட்டுக்குள் எலும்புகூடு பக்கத்தில் ஒடிப்போய் படுத்துக்கொண்டான்.  ஒரு துணியை எடுத்து அவனது முகத்தை மூடி அதன் மேல் ஒரு தாயித்தை வைத்து பிறகு ஆரம்பித்தான் பேச..
 
வா இந்தப்பக்கம்
வந்தேன்
கேட்டால்
சொல்வேன் என வியாபார உத்தியை உசுப்பி  விட்டான்
அவன் கையிலிருந்த தாயித்தை எல்லோரும் வாங்கிப்போகும் படியாக சொன்னான்.
 
பயந்த சிலர் வாங்கினார்கள். கடமையே என நினைத்து சிலர் வாங்கினார்கள். பெருமையாகவும் சிலர் வாங்கினார்கள். பார்த்ததற்கான கட்டணமாக நினைத்து சிலர் வாங்கினார்கள். சிலர் காசு இருந்தும் வாங்காமல் இருந்திருக்கலாமா என்பது தெரியவில்லை
 
எனக்கு பயம் வந்து விட்டது
இருக்கும் கால் ரூபாயை விட்டு விட்டு (அவனிடம் கொடுத்துவிட்டு)போகவா என்று பசியில் எச்சிலை முழுங்கிக்கொண்டிருந்தேன்.
காசு இருந்தும் போடாமல் போனால் மூனே நாளில் ரத்தம் கக்கிச்சாவான் என்று சாபமும் விட்டான்.
நான் காசு போடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.
கொஞ்ச நேரத்தில் எல்லோரையும் கலைந்து போகச்சொன்னான்.
நான் தான் கடைசில் போனவனாக இருப்பேன்.
மயக்கத்தில் விழுந்த என் வயதுப்பையன் இப்போது எழுந்தான்.
சிரித்தான்
அவனது வாய் வெற்றிலை போட்டு சிவந்தது போல் இருந்தது.

Monday, October 11, 2010

பதின் வயது நினைவுகள் 1

அப்போது பதினோராம் வகுப்பு ( பெரிய பத்து) படித்துக்கொண்டிருந்தேன். பள்ளித்தலைமை ஆசிரியர் தான் வகுப்பின் பொறுப்பாசிரியர். அவருக்குள்ள வேலைப்பளுவின் காரணமாக தமிழாசிரியர் ஒருவரை வகுப்பாசிரியர் போல் நியமித்துக்கொண்டார். தலைமை ஆசிரியர் ஆங்கிலப்பாடம் எடுப்பார். அப்போது ஆறு பாடங்கள் படிக்க வேண்டும்.  தமிழ், ஆங்கிலம், கணிதம், சரித்திரம் &பூகோளம், விஞ்ஞனம் (அதாவது தமிழ், ஆங்கிலம்,கணக்கு, வரலாறு&புவியியல் மற்றும் அறிவியல்). இந்த ஐந்து பாடங்களுடன் கூடஒன்று அது  விருப்பப்பாடம். நான் எடுத்தது ரசாயனம்( வேதியியல்தான்).  நான் படித்த பள்ளி முஸ்லிம் நிர்வாகத்தினரால் நடத்தப்பெறும் அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளி (மேனிலைப்பள்ளி அல்ல)  எனவே வாய்த்த தமிழாசிரியர் ஒரு முஸ்லிம் ஆக இருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

ஒரு நாள் பள்ளியில் அவர் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருக்கும் ஒருவர் கூட சாதிக்கட்டுமானத்ததுக்குள் கறாராக இருக்கிறார்  என்ற எண்ணத்தை ஆழமாக என்னுள் அவர் படர விட்டு  விட்டார். இந்தப்பதிவிற்குக்காரணமே அந்த பாதிப்புதான் என்றால் அது மிகையல்ல..

அன்றைக்கு ஒரு  நாள் .மதிய நேரம் சாப்பாட்டுக்குப்பின் பள்ளி துவங்கியது. தமிழாசிரியர் வகுப்பறைக்குள் வந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வகுப்பறைக்குள் இருந்த மாணவர்களைப்பார்த்து ஒவ்வொருவராக எழுந்து அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயருடன் சேர்த்து சொல்லுங்கள் என்றார்.
நான் நான் காவது பென்ஞ்சில் இருப்பது தெரியாமல் கூனிக்குறுகி..

நான் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன். தெருவில் சக்கிலியப்பயக என்பார்கள்.  சம்சாரிமார்கள் சிலபேர் பகடைகள் என்பார்கள் சுடுகாட்டு வேலை செய்வதால் வெட்டியான் என்பார்கள். அல்லம்பட்டியில் உள்ள செட்டிமார்கள் 'மாதாரி அக்கிளு' (மாதாரிப்பசங்க) என்று சொல்லுவார்கள். எந்தச்சாதியின் பெயரை எல்லோர் முன்னிலையிலும்  சொல்லித்தொலைப்பது என்று புரியவில்லை.
அந்த நேரம் வகுப்பறையை விட்டு வெளியே ஓடிப்போகலாமா என்று கூட யோசித்தேன். ஆனாலும் அடி பெத்து சாக வேண்டுமே என்று உட்கார்ந்திருந்தேன். நிமிடங்கள் யுகங்களாகக்கரைந்து கொண்டிருந்தது. 

சக மாணவர்கள் ஒவ்வொருவராக  அவர்கள் அப்பாவின்  பெயர் எல்லாம் 'ர்' விகுதியில் முடியும் சாதியின் பெயரை சொல்லி சொல்லி கம்பீரமாக அமர்ந்தார்கள். எனக்குள் எந்த சாதியின் பெயரை சொல்லுவது என்ற குழப்பம் தலை கிறுகிறுக்கும் அளவுக்கு இருந்தது.  எனக்குத் தெரிந்த ஒரு ஆதிதிராவிட மாணவன் அவன் பெயர் காளிமுத்து அவனது அப்பாவின் பெயரை சொல்லும் நேரம் வந்தது. அவனது அப்பாவின் பெயரோ சங்கையா. அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அவனது  அப்பாவின் பெயரை  மரியாதையாக "ர்" விகுதியொட்டுடன் கூடிய ஒரு சாதிப்பெயருடன் இணைத்து 'சங்கையா..........ர்' என்று சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டான் சமர்த்தாக.. ஒருகணம் நானு யோசித்தேன் இதே போல மரியாதைக்குரிய சாதிப்பெயர்களில் ஒன்றை ஒற்றாக இணைத்து எனது அப்பா பெயரையும் குறிப்பிட்டுவிட்டால் என்ன? என்று கூட ஒடியது மனதில்... அதற்கான தைரியம் வரவில்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.

என் பெயர் நாராயணன் அப்பாவின் பெயர் அர்ஜுனன். பிறந்தது முதல் குடியிருப்பது மாத்த நாயக்கன் பட்டி பாதை   என்ன வந்தாலும் சரி அப்பாவின் பெயரை சாதிய ஒட்டு இல்லாமல் சொல்லிவிடவேண்டியதுதான் என்று இறுதியாக முடிவெடுத்தேன்.
என்னுடைய நேரம் நெருங்கியது. மூர்ச்சையாக விழாத குறைதான்.

' என் அப்பாவின் பெயர் அர்ஜுனன்'    - நான்.

'அர்ஜுனன்'    ம்ம்ம்ம்ம்     -ஆசிரியர்.

அடுத்தவனை எழுப்பி அவனது அப்பாவின் பெயரை சாதியின் ஒட்டோடு சொல்ல ஆணையிட்டார் ஆசிரியர்