வலைப்பதிவில் தேட...
Monday, May 31, 2010
முதல் பட்டதாரி
தாவணிக்கனவுகள் படத்தில் பாக்கியராஜ் கூட அது போல பதக்கம் வாங்கிய பட்டதாரியாக நடித்திருப்பார். அவர் தங்க மெடல் வாங்கும்போது இது போன்ற இளைஞர்களின் கையில் எதிர் காலம் இருக்கிறது என்று பதக்கம் வழங்குபவர் குறிப்பிடுவார். கொஞ்ச நாட்கள் கழித்து குடும்பசூழல், வேலையின்மை காரணமாக குடிப்பதற்கு ஆரம்பித்து விடுவார். அப்போது அவரது கையில் சாராய கிளாஸ் இருக்கும். வேதாந்தச்சிரிப்பினால் சூன்யத்தை ப்பார்ப்பார் அவர் . நிற்க...
நான் பட்டம் வாங்கும் வ்ரை அந்தப்பதக்கம் வாங்குவதற்கான தகுதி பற்றி எனக்குத்தெரியாது . நான் வாங்கிய மதிப்பெண்கள் 1250/1800 (69.4% முதல்வகுப்பில் தேர்ச்சி; அந்த ஆண்டு தாவரவியல் பட்டப்படிப்பில் முதலாமவன்). தங்கப்பதக்கம் எனக்குக்கிடைக்கவில்லை. மாறாக எனக்கு அடுத்தபடியாக மதிப்பெண் பெற்ற வி. பிரபாகரனுக்கு அது கிடைத்தது. விசாரித்ததில் சொன்னார்கள் எந்த ஒரு பாடத்திலும் ஆறு செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திலும் கூட பெயில் ஆகியிருக்கக்கூடாது என்று. நான் தான் INORGONIC CHEMISTRY என்கிற பேப்பரில் இரண்டு அட்டெம்ப்ட்டு ஆச்சே!
சரி எல்லோரும் பட்டமளிப்பு விழாவின் போது கருப்பு அங்கி அணிந்து தலையில் தட்டையாக ஒரு குஞ்சம் வைத்து கையில் பட்டத்தை சுருட்டி வைத்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்வார்களே அது போல ஒரு பட்டமளிப்பு விழா வரும் ஆசையாக ஒரு படம் பிடித்து வைத்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பில் மண் விழுந்தது போல் அந்த வருடம் பார்த்து பட்டமளிப்பு விழா என்று எதுவும் கிடையாது எல்லோரும் கல்லூரி அலுவலகத்தில் வந்து கையெழுத்து போட்டு விட்டு பட்டத்தை வாங்கி செல்லுங்கள் என்று அழைப்பு வந்தது. போட்டோ கண்ணிலேயே நின்று விட்டது.
அப்போதெல்லாம் மூன்று கல்லூரிகளில்தான் M Sc., தாவரவியல் இருந்தது
பழனியாண்டவர் கல்லூரி பழனி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி மதுரை, தியாகராசர் கல்லூரி, மதுரை. எனக்கு சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம் எஸ் ஸி படிக்க அழைப்புக்கடிதம் வந்தது ருபாய் 411/- கட்டச்சொல்லி ப்ரின்சிபால் கையொப்பமிட்ட கடிதம் வந்தது. வீட்டில் அங்கே இங்கே என்று
ஒரு 250/- ரூபாய் வரை திரட்டி விட்டார்கள் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து. அதற்கு மேல் முடியவில்லை... கனவாகிப்போனது PG.
30/05/2010 அன்று கோவை CIT கல்லூரியில் பட்டமளிப்பு விழா: திலிப் சுகதேவுக்கு(எனது பையன்தான்) AICTE அமைப்பின் பொறுப்பாளர் எஸ் எஸ் மந்தா என்பவரின் கையால் திலிப் பட்டம் வாங்கினான். கருப்பு அங்கி கழுத்தில் ஒரு சிகப்பு பார்டருடன் கூடிய கருப்பு வளையம் அணிந்து பட்டம் பெற்றான்
கையில் வைத்திருந்த டிஜிட்டல் காமிராவினால் ஏழெட்டு போட்டோக்கள் எடுத்துத்தள்ளினேன். அப்படியே பக்கத்தில் இருந்த எனது மனைவியிடம் சொன்னேன். எனக்கு கையெழுத்து போட்டு பட்டம் வாங்கிக்கொண்டுவந்தேன் இது போன்ற விழாவிற்காக ஏமாந்து போனேன் இன்றைக்கு ஒரு காரியம் செய்யப்போகிறேன் தம்பியிடமிருந்து அந்த அங்கியை வாங்கி நான் அணிந்து கொண்டு அவனை ஒரு ஸ்னாப் எடுக்க சொல்லப்போகிறேன். ஓரே சிரிப்பு எனது மனைவிக்கு.
பட்டமளிப்பு விழா முடிந்தது. திலிப் எங்களிடம் வந்தான் அங்கியை தற்செயலாகக்கழற்றிக்கொண்டே. கூடவே அவனது நண்பன் நான்கு வருடமாக அவனுடன் தங்கிப்படித்த சரவணன். நான் திலிப்பின் அங்கியை அவசரமாக அணிந்து கொண்டேன் அந்த வட்டக்கழுத்துப்ப்ட்டையையும் சேர்த்தேதான். சிலர் வேடிக்கையாகப்பார்த்தார்கள். மனைவி வாய் விட்டு சிரிக்க தம்பி திலிப்போ வேண்டாம்பா என்று அங்கே இங்கே பார்த்துக்கொண்டிருக்க என்னை இரண்டு மூன்று ஸ்னாப்கள் எடுத்துதள்ளினான் சரவணன்.
முப்பது வருடங்களில் இரண்டு பட்டதாரிகள் ஒரு குடும்பத்தில்..
Tuesday, May 18, 2010
சர்வ தேச கீதம்
அப்படியே ஒரு நாள் சாத்தூருக்கு தெற்கே பாலத்தைத்தாண்டி இயங்கி வந்த முருகன் தியேட்டரில் ஒரு கூட்டம் நடக்கிறது வாருங்கள் போகலாம் என்று அழைத்து சென்றார். அது தோழர் பி. சீனிவாசன் தாலுகா செயலாளராக இயங்கி வந்த சி பி எம் கட்சியின் தாலுகா மா நாடு. விருது நகர் தாலுகா அப்போது பிரிக்கப்படவில்லை. மாவட்ட செயலாளராக இருந்தவர் தோழர் எஸ். ஏ. பெருமாள். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். தோழர்கள் விவாதம் மேற்கொண்டார்கள். மக்கள் நலனுக்காக சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். மதியம் எளிமையான ஒரு மதிய உணவு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதிய கூட்டம் தொடங்குமுன் வக்கீல் பாலதண்டாயுதம் "சோசலிசம் வந்துவிட்டால் சுகம் எல்லாமே வந்து விடும் அந்த கம்யூனிசம் மலர்ந்து விட்டால் மனக்கவலைகள் மறந்து விடும்" என்ற நாகூர் ஹனிபாவின் அல்லாவை நாம் தொழுதால் துயர் எல்லாமே ஒடி விடும் என்ற மெட்டில் பாடினார். மாலையில் கூட்டம் நிறைவடைந்தது. அப்போது சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் கம்பீரமாக எழுந்து நின்று கூட்டாகப்பாடினர். அந்தப்பாடலை இந்தப்பதிவில் பார்ப்போம்.
பட்டினிக்கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழர்காள்
கொட்டு முரசு கண்டன முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட
பண்டையப்பழக்கம் என்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலை பிறந்தது
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திட
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்
முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே
முகமலர்ச்சியோடு உயிர்த்தியாகம் செய்ய நில்லுமே
பற்றுக்கொண்ட மனித ஜாதி யாரும் ஒன்றதாகுமே
படிமிசைப் பிரிந்த தேச பாஷையும் ஓர் ஐக்கியமே
பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே
பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பயனைக்கொள்ளை கொண்டு நின்றதே
மக்களின் உழைப்பெல்லாம் ஒளித்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்ப கேட்பதென்ன குற்றமோ
இல்லை நாம் நமக்குரிய பங்கைக்காட்டி கேட்கிறோம்.
தொன்று தொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம்
தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச்சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம்
வேலை செய்யக்கூலி உண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வீண் வார்த்தை பேசி உடல் வளர்க்கும் காதர்கர்க்கிங்கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகட்கிங்கிடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை
பாடுபட்டு உழைத்தவர் நிணத்தைத்தின்ற கழுகுகள்
பரந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளிலே
காடு வெட்டி மலை உடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்
Monday, May 17, 2010
ரா(நா)மதாரி
Saturday, May 15, 2010
முத்து ராமன் பட்டி
அதாவது விருது நகரில் டி இ எல் சி என்ற கிறித்துவ அமைப்பின் நடு நிலைப்பள்ளி ஒன்று நகரின் மையப்பகுதியில் உள்ள பெரிய காளியம்மன் கோவில் தெருவில் இருக்கிறது. இந்தப்பள்ளியைச்சுற்றிய பகுதியிலும் வன்னியன் தெருவிலும் அருந்ததிய இன மக்கள் குடியிருந்து வந்திருக்கிறார்கள்.
காலப்போக்கில் இந்த இன மக்களில் ஒரு சிலர் டி இ எல் சி பள்ளியில் படிக்கவும் செய்திருக்கிறார்கள். அவர்கள் மேற்படி பள்ளியில் படித்த காரணத்தால் அது "சக்கிலியன் பள்ளிக்கூடம்" என்று அறியப்பட்டிருக்கிறது. எனது தந்தையார் திரு அர்ஜுனன் அவர்களும் கூட அந்தப்பள்ளியில்தான் ஆறாவது வரை படித்திருக்கிறார். அதனால் அவருக்கு எழுதப்படிக்கத்தெரியும்.
சில காலம் கழித்து அவர்கள் பவுண்டு தெருவுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள்.
(பவுண்டு என்பது அரசுக்கு சொந்தமான ஒரு கட்டிடம் நான்கு பக்கம் மதில் சுவரும் ஒரு கேட்டும் இருக்கும். அத்து மீறி யாருடைய வெள்ளாமையிலும் மேய்ந்த ஆடு மாடு கழுதை இவற்றை கொண்டு வந்து அடைக்கப்பயன் படும் இடம்) அந்தத்தெருவில் ஒரு காளியம்மன் கோவில் அருந்ததிய இன மக்களுக்கு சொந்தமானது இன்றைக்கும் இருக்கிறது.
இதே காலகட்டத்தில் அருப்புக்கோட்டை சாலையில் டி. இ.எல்.சி சர்ச் வளாகத்தில் குடியிருந்த வெள்ளைக்கார துரைகளுக்கும் குதிரை பராமரிப்பு பணியில் முத்தன் ராமன் என்ற இரண்டு அருந்ததிய சகோதரர்கள் ஈடுபட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். (அருந்ததியர் என்பது அவரது புத்தகத்தில் இல்லை)
முத்தன் ராமன் சகோதரர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் முத்து ராமன் பட்டி என்று அன்று முதல் அழைக்கப்படுவதாக அவரது குறிப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அது சரி. அப்படி குடியிருந்தவர்களின் வாரீசுகள் இப்பொழுது எங்கே..
பவுண்டுத்தெருவிலிருந்து இடமாற்றம் கண்டு மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற பகுதிக்கு குடியேறி இருந்திருக்கிறார்கள். (நான் இந்த மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற முகவரியில் பிறந்ததாக எனது தகப்பனார் கூறியிருக்கிறார்.)
Friday, May 14, 2010
இருப்பதும் இல்லாததும்
மனித இனமே வெட்கித்தலைகுனியும் அளவுக்கும் அதிகமாகவே வகுப்புவாதத்தீ குஜராத்தில் எரிந்து கொண்டிருக்கிறது.
72 மணி நேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி விட்டேன் என்று சுய சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறார் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.
முதல்வராகத்தொடர்வதற்கு அவரை விட்டால் யாருமில்லை; அவர்தான் முதல்வர்; அவரேதான்... என்று வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி;
அதை அப்படியே வழி மொழியும் பாரதப்பிரதமர் வாஜபாய் அவர்கள்.
பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் பற்றிய மே 9 அன்று 72 நாட்களைத்தொட்டும் தொடருகிறது அவலம்.
பற்றி எரிகிறது தலை நகர் அகமதாபாத்.
அரசுப்புள்ளி விபரங்களின் படி,
*இது வரை 1420 பேர் வன்முறைக்கு பலியாகியிருக்கிறார்கள்
*முகாம்களில் தஞ்சமடைந்துள்ள உடைமையிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல்
* சொத்துக்களுக்கும் ஏற்பட்ட சேதாரம் ரூபாய் 5000 கோடியை த்தாண்டும்
* 22560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
* 43000 பேர் கைது செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்
* 4000க்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்
* 20000 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயிலிடப்பட்டன.
*போலீசார் சுட்டதில் மட்டும் 200 பேர் மடிந்திருக்கிறார்கள்.
*தொழிற்துறையில் மற்ற மாநிலங்களை விட இருபதாண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது குஜராத் மாநிலம்.
2001 ஜனவரி 26ல் நிகழ்ந்த பூகம்ப அதிர்வுகளின் போது ஏற்பட்ட இழப்புக்கு சற்றும் குறைந்ததாகப்படவில்லை இப்போது நடைபெற்றுக்ககொண்டிருக்கும் மத பூகம்பம்.
இவ்வளவு அழிவுக்கும் பின்னர் செயலற்ற ஒருமுதல்வரை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
உலக அளவில் இந்தியாவுக்கு அழியாத அவப்பெயரை கோத்ரா நிகழ்வும் அதனைத்தொடர்கின்ற படுகொலை வன்முறைகளும் ஏற்படுத்தியிருக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
பாராளுமன்றத்தில் 296 பேர் அரசை ஆதரிக்க, 182 பேர் எதிர்க்க மத்திய அரசு வென்றிருக்கிறது.
போதுமான பலம் ஆளும் தேசிய ஜன நாயக கூட்டணிக்கு இல்லாததால்
ராஜ்ய சபாவில் அவர்களே எதிர்கட்சிகளை ஆதரித்து ஒருபக்க "கோல்" போட்ட கதையும் நாடு கண்டது.
"நேற்று இருந்தவர் இன்றில்லை
இன்றிருப்போர் நாளை
இல்லாமற் போவர்
இருப்பதும் இல்லாததும்
இதே ரீதியில் நடந்து கொண்டிருக்கும்
........................................................
உண்மை என்ன?
இருப்பதும் இல்லாததும் இரண்டுமே
உண்மையா....?"
பிரதமர் வாஜ்பாயி அவர்களின் கவிதை வரிகள்தான் மேலே உள்ளவை.
குஜராத்தில் செயல்படாத முதல்வர் ஒருவர்
இருப்பது ம் இல்லாததும் உண்மையா என
கேட்கத்தோன்றுகிறது நமக்கு.
(மே 2002 கோத்ராவில் இருந்த நேரம் எழுதிய கட்டுரை இது)
Thursday, May 13, 2010
இரட்டைக்குவளை ஒழிந்தது..
"பொது கிளாசில் டீ கேட்க
தனி கிளாசில் டீ கொடுக்க
ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்களாக
மலிந்து கிடக்கிறது.."
-கவிஞர் கந்தர்வன்.
தீண்டாமை ஒழிப்பு ஆண்டு என்று அரசால்
நான் கைந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது
அதை ஒட்டி எழுதிய கவிதை இது..
சேரியிலிருந்து ஒரு குரல்:
எத்தனை நாளைக்குதான்
எங்களுக்குத் தனி கிளாஸ்ல
டீ தருவீக
ஒங்களைப்போல
அவங்களைப்போல
நாங்களும் எட்டுச்சாணு
ஓசரமுள்ள மனுஷங்கதானே?
ஊருக்குள் இருந்த டீக்கடை
மனிதன் ஒருவன்:
ஆயிரத்துக்கும் அதிகப்படியான
ஊருகள்ல தனிக்கிளாஸ் இருக்க
பொதுக்கிளாசில் டீ குடுக்க
நாங்க மட்டும்
பைத்தியக்காரப்பயலுகளா?
மந்திரி முழங்கினார்:
"தீண்டாமை எந்த வடிவத்தில்
நடைமுறைப்படுத்தப்பட்டாலும்
ஒழித்துக்கட்டி விட்டுதான்
மறு வேலை எங்கள் அரசுக்கு
இது மத்ச்சார்பற்ற சமூக
நல்லிணக்க
தீண்டாமை ஒழிய வேண்டிய ஆண்டு"
ஊர்க்காரர்களும் முக்கியஸ்தர்களும்
முடிவெடுத்து அறிவித்தனர்
கொண்டுவாங்கப்பா அந்த
டிஸ்போசிபிள் கிளாசை
நம்ம ஊருல எல்லாம் தாயா
பிள்ளையா இருப்போம்
கிளாசுக்கு எட்டணா கூட
குடுத்திருங்கப்பா...
இந்தா பிடி
டீயைக்குடி
கலெக்டர் கடிதம் எழுதினார்:
"மாண்பு மிகு முதல்வர்
அவர்கள்
மா நிலத்திலேயே
முதலாவதாக
இரட்டைக்குவளை
முறையை ஒழித்த
............. கிராம சபைக்கூட்டத்தில்
தாங்கள் அவசியம்
பங்கேற்க வேண்டும்....."
Monday, May 10, 2010
சாதிப்பெயரை நீக்குக
சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆனபிறகும், சாதியின் பெயரால் அமைந்திருக்கும் கிராமத்தின் பெயரை மாற்றவேண்டும் என்று கோரி NHRC
(தேசிய மனித உரிமைகள் கமிஷன்) அமைப்புக்கு கடந்த இருபது வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். (The Hindu 10/05/2010) ராஜஸ்தான் மா நிலம் 'தாசா' மாவட்டத்தில் இருக்கிற ஒரு கிராமம் 'குவன் கா வாஸ் ' .அந்த கிராமத்தின் பெயரை வருவாய்த்துறை ஊழியர்கள்' 1987 இல் 'சமரோன் கா வாஸ்' என்று மாற்றியிருக்கிறார்கள்.(பெயர் சொன்னாலே தெரியும் அளவுக்கு) சமரோன் என்றால் தோல் பொருட்கள் மற்றும் செருப்பு தைக்கும் தொழில் செய்யும் ஒரு பகுதி மக்களைச்சுட்டும் சொல் என்று சொல்லத்தேவையில்லை. ஒரு 31 பேர் NHRC அமைப்புக்கு 2006 முதல் மனுச்செய்து கொண்டு இருக்கிறார்கள். மனித உரிமைகள் கமிஷனின் தலைவரின் விசாரணையின் போது பிப்ரவரி 2002 இல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அந்த கிராமம் "கோவிந்தபுரா" என்று பெயரிடப்படுவதாக கிராம மக்களின் சம்மதத்துடன் தெரிவித்து இருக்கிறார். சாதியக்கட்டுமானமும் அதிகாரவர்க்க தோரணைகளும் சேர்ந்து இந்த பெயரை செயல் பட விடாமல் தடுத்து இருக்கிறார்கள். NHRC அனுப்பிய நோட்டிசுக்கு அரசு 'குஷால்புரா" என்று பெயர் வைக்க விரும்புவதாக தலைமைச்செயலர் பதில் அனுப்பி இருக்கிறார்.
மத்திய உள்துறையில் ஒரு புதிய செய்தி தந்திருக்கிறார்கள்.ரயில்வே ஸ்டேஷன் பட்டியலில் "குஷால் புரா" என்ற பெயர் வைப்பதில் சிரமம் இருக்கிறது ஏனென்றால் "குஷால்புரா ஹால்ட் ' என்ற பெயரில் பக்கத்தில் ஒரு ரயில் நிலயம் இருப்பதாகச்சொல்லி இருக்கிறார்கள். செப்டம்பெர் 2009 இல் மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு பெயர் மத்திய உள்துறைக்கு அனுப்பி அதுவும் கடந்த ஜனவரி 2010 வரை எந்த வித நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் இருக்கிறதாக தகவல்கள் சொல்லுகின்றன.
இறுதியாக NHRC ஆறு வார காலத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மத்திய உள்துறை செயலரைக்கேட்டு இருக்கிறார்கள்.
'யாதும் ஊரே யாவருங்கேளிர்'
என்ற வைர வரிகள் ஐக்கிய நாடுகள் சபையை அலங்கரித்துக்கொண்டிருப்பதாக சொல்லுகிறார்கள்.
அப்படிப்பட்ட நமது தமிழ் மண்ணில்தான்
'வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து க்கழகம்' என்று விருது நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல் பட இருந்த வேளையில்
சாதியின் பெயரால் உருவாக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களின் பெயர்களும் வாபஸ் பெறப்பட்டது தமிழகஅரசால்..
சமத்துவம் வாழ்க..
ஆனால் 60 ஆண்டுகளாகியும் சாதியின் பெயரால்
என்று தணியும் இந்த
சாதீய ப் பிரசசனை ..
Friday, May 7, 2010
கற்பாறைகளும் தப்பவில்லை
காடுகளை அழித்தீர்கள்
காற்றைக் கணக்கின்றி
களங்கப்படுத்தினீர்கள்
நிலத்தடி நீரை
அபகரித்தீர்கள்
விண் வெளி கூட
விண்கலங்களின்
குப்பைக்கூடை
ஆகிப்போனது
இன்று
கற்பாறைகள் கூட
கற்பழிக்கப்படுகின்றன
உங்களால்
உலகமயம்
இவ்வளவுதானா
இன்னும் இருக்கிறதா
மிச்சம்.
இக்கவிதை எழுதியது செப்டம்பர் 2002
(குலு மணாலியில் கோக், பெப்சி நிறுவனங்கள் பாறைகளில் விளம்பரம் செய்தன;
அதை ஒட்டி நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் பன்னாட்டு நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டது.)
Thursday, May 6, 2010
இவர்கள் மக்களில் சேர்த்தி இல்லையா
2002 பிப்ரவரி 27: குஜராத் மாநிலம் கோத்ராவில் எஸ் 8 என்ற பெட்டி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில்எரிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வன்முறைகளில்முகமதியர்கள் இரண்டாயிரம் பேர்கொல்லப்பட்டனர் .ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனார்கள். அப்போது கூட ஒரிரு இடங்களில் முகாமகள் அமைக்கப்பட்டது.அகமதாபாத் பகுதியில் இந்துக்களுக்கென்று அமைக்கப்பட்ட முகாமகளில்மறுபடியும் இதே பிரச்சனை வெடித்ததைடைம்ஸ் ஆஃப் இந்தியாவெளிப்படுத்தியது.
2004 டிசம்பர் 24: நாடு ,தேசம் ,மொழி, இனம் என்று எதுவும் பாராமல் மனிதர்களைக்கொள்ளை கொண்டது "சுனாமி" என்னும் இயற்கைப்பேரழிவு இரண்டரை லட்சத்துக்கும் மேல் உலக மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் தற்காலிக முகாம் கள் அமைக்கப்பட்டது. தலித்துக்ளின் துணையோடு சவக்குழியில் விழத்தயாராக இருக்கும் சாதி, உயிரோடு இருக்கும் தலித்துகளோடு தங்குவதற்கு இடம் கொடுக்க வில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால் அழுகிக்கிடக்கும் சவங்களைக் கூட தூக்குவதற்கு சாதிமனம் ஒத்துக்கொள்ள வில்லை. கடைசியில் சாதாரண மரணங்களின் போது சேவை செய்யும் அருந்ததி இன மக்கள்தான் கும்பல் கும்பலாக அனைத்து சாதிப்பிணங்களையும் பெரிய குழிகளில் சவ அடக்கம் செய்தார்கள்.
மக்களுக்காக 'இறுதி' வரை உழைக்கும் பகுதியினரை 'ஆட்டைக்கு சேர்க்காமல்' எத்தனைக்காலம்தான் இழுத்தடிப்பது ....?
Friday, April 30, 2010
உழைப்பவர் தினம்
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர கலாசார வாழ்க்கை
எட்டு மணி நேர உறக்கம்
அன்று
சிகாகோ வீதிகளில் சிந்திய இரத்தம்
இன்று ஏ சி அறைகளுக்குள்
அடைபட்டுக்கிடக்கும்
ஐ டி இளைஞர்களுக்கும
சேர்த்துதான்
மீண்டும்
அதே கோரிக்கையை
அவர்களின் தியாகங்கள்
பேரால் உறுதி ஏற்க
வேண்டிய தருணம்
எனப்படுகிறது
Thursday, April 29, 2010
மீனாட்சி கல்யாணம்
மதுரையில் ஆண்டு தோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிக்கொண்டே இருக்கிறார்.. அதற்கு முதல் நாள் அழகருக்கு பக்தர்களின் சார்பில் எதிர்சேவை. அதற்கு முந்திய நாள் தேரோட்டம் அதற்கு ஒரு நாள் முன்பாக மீனாக்ஷி கல்யாணம். வருடா வருடம் தவறாமல் திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்க்கிறார்கள். ஆனால் கள்ளழகர் மட்டும் திருமணத்தை தவறவிட்டு வைகை வடகரை வழியாக துலுக்க நாச்சியாரை சந்திக்கவும் மண்டூக முனிவருக்கு சாபம் கொடுக்கவும் இரவில் தசாவதாரம் என்று போக்கொண்டு இருக்கிறார். நிஜத்தில் பல அழகிய பெண்கள் வயதாகியும் கூட திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். ஒரு பாடல் பாரதி கிருஷ்ணகுமார் கரகரத்த குரலில் பாடக்கேட்டு இருக்கிறேன்.
'மதுரை மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும்
மாசமொரு கல்யாணமாம்
தேர் மேல மாப்பிள்ளை ஊர் கோலமாம்
எங்க எதித்த வீடு பொண்ணு வயசாகி நாளாச்சி
எப்பதான் கல்யாமம் -அவ
கண்ணில் எப்பவும் நீர்க் கோலமாம்'
அழகரை சேவித்துவிட்டு பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லி விட்டு சூடம் கலந்த வாசத்துடன் சக்கரை தருவார்களே அதை வாங்கித்தின்ற நாட்கள்; வெயில் என்றும் பாராமல் ராமராயர் மண்டகப்படி பக்கம் நெற்றியில் கரைந்த குங்குமத்தோடு நாமத்துடன் அலைந்த நாட்கள் அலைமோதுகின்றன.
அப்பா எனக்கு முதல் மொட்டை அழகர் ஆற்றில் இறங்கிய அன்று போட்டதாகசொல்லுவார்.
பச்சை பட்டு அணிந்து ஆற்றில் இறங்கினால் அனைத்து வெள்ளாமையும் சிறக்கும் என்பார்கள்
சிகப்பு பட்டு என்றால் மிளகாய் வத்தல் விளைச்சல் பொங்கி வருமாம்
வெள்ளை பட்டு உடுத்தி வந்தால் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்குமென்றும் சொல்லுவார்கள்.
கடந்த பத்தாண்டுகளில்
பி டி பருத்தி விவசாயம் செய்த விவசாயிகள் சுமார் இரண்டு லக்ஷம் பேர் தற்கொலை செய்து மடிந்து இருக்கிறார்கள...
ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூலியில் காலத்தை வென்று கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நமது ஜனத்தொகையில் 70 சதமானம் என்று ஒரு கணக்கு நம் முன் காட்டப்படுகிறது..
ரூபாய் 50 ,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 54 பேர என்று சொல்லப்படுகிறது...
வருடா வருடம் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடந்து கொண்டேதான் இருக்கிறது
வருடாவருடம் அழகர் வந்து கொண்டிருக்கிறார்...
Monday, April 26, 2010
அருந்ததியர்
அன்று ...
தாய் மண்ணின் சுதந்திரம்
வேண்டி
வெள்ளையனை அவனது
கூடாரத்தில் "ஒண்டி"யாகவே
சந்தித்து
மடிந்து போனான்
மா "வீரன்" ஒருவன்
அவனுக்கான இடம்
சுதந்திர வரலாற்றில்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தட்டுப்படவில்லை;
பிறகு...
மா "மதுரை "யில்
கள்ளர்களிடமிருந்து
உங்கள் வாழ்வைக்
காத்திருக்கிறான்
மற்றொரு மகத்தானவன்
அவன் ..." வீரன்"
மாறுகால் மாறுகை வாங்கி
"மீனாட்சி" க்கு காவலாய்
"கீழ் " வாசலில் காவல் தெய்வமென
பெயரிட்டு
வெளியே நிற்க வைத்தீர்கள்;
அடுத்து...
ஊமைத்துரையின்
வலதும் இடதுமாக செயல்பட்ட
கந்தன் பகடை பொட்டிபகடை
அந்தோ பரிதாபம்
அவர்களும் கூட
உங்கள் வரலாற்றின்
பக்கங்களில் இருந்து
விரட்டப்பட்டிருக்கிறார்கள்
என்பதை அறிந்தோம்;
நெல்லை சீமையில்
சனாதனி யாகப்பிறந்த
"முத்துப்பட்டன்"
"பொம்மக்கா" " திம்மக்கா" வை
மணம்முடித்தான்...
பிராமணன் ஒருவன்
"அருந்ததி "யாவதோ
என்று அவனையும்
படு கொலை செய்தீர்கள்;
'சிக்கி முக்கி' கற்களில்
அக்னியைகட்டுபடுத்தும்
சூட்சுமம் அறிந்தவனே |
சமுதாயக்கோட்படுகளால்
சாதியின் சூழ்ச்சியால்
'சக்கிலியன்' ஆனதென்ன;
குதிரைப்படைக்கு
தோல் பட்டைகள்
செய்து தேர்ந்தவனே|
படை வீரனாய்
வலம் வந்தவனே|
இன்று சனாதனக் குதிரை
தள்ளி விட்ட
இழிசனராய்
சவக்குழி தோண்டுவதென்ன|
மா அதியனாய்
நீ பாராண்ட திறத்திற்கு
சாட்சியாய்
அவ்வையே நட்பு பாராட்டி
நெல்லிக்கனி கொடுத்ததென்ன|
இன்று
மாதியனாய்
மலக்குழியில்
வீழ்ந்து கிடப்பதுவும் என்ன|
இழப்பதற்கு எதுவுமில்லை;
அடிமைத்தனத்தைத் தவிர
ஒழிப்பதற்கு சாதி
இருக்கிறது;
எழுந்து வா
கரம் கோர்த்து |
மாடறுத்து, செருப்புதைக்க,
பறையடித்து, எழவு சொல்ல ,
பிணந்தூக்கி, மலமள்ள...
என ஒரு
ஏவல் சாதி இல்லை என்பதை
ஊருக்கு உரைப்போம்
விரைந்து வா |
உங்களின்
கொலைகள்
மதுரை வீரனில் தொடங்கி
நக்கலமுத்தையன்பட்டி
ஜக்கையன் வரை
நீட்சி பெற்றுக்கொண்டு
இருக்கிறது...
நிறுத்துங்கள் நீசத்தனத்தை|
மனுவின் பெயரால்
நீங்கள்
ஆண்டது போதும்|
நாங்கள் மாண்டது
போதும்|
இனி பொறுப்பதில்லை
என
போர்ப்பரணி பாடி வா|
அக்னிக்குஞ்சாக வா
அமைப்பாக உருவெடுத்து ...
அப்போது
சாதிச்சிமிழ்கள் உடையும்
சம நீதிப்பயிர்கள்
துளிர் விடும்...
Saturday, April 24, 2010
கோத்ரா கலவரம்
நில மகளின் களேபரம்
அடுக்குமாடிகளின்
குடிசை வீடுகளின்
இடிபாட்டில் எம் மக்கள்
தீப்பெட்டிக்குள் மூச்சிழந்த
பொன் வண்டுகளென ...
தப்பியவர்களின் கூடாரங்களில்
அணைக்கமுடியாத
தீண்டாமைத்தீ ...
தனது நாக்கைத்துழாவியது
இயற்கையின் கலவரத்தில்
செயற்கையாய் சாதியின்
தாண்டவம் ....
இன்று ...
மீண்டவர்கள்
கையூன்றி எழும் நேரம்
கலவர்த்தீயில் காந்தி தேசம்
ஆண் பெண் குழந்தைகள்
அனைவரும்
மத வெறியால் மாய்க்கப்பட்டனர்...
வாதத்துக்கு மருந்து உண்டு
மத வாதத்துக்கு என்ன உண்டு?
ஒரு உறைக்குள் ஒரு கத்திதான்
இருக்க முடியும் ...
உனக்குள்ளும் அப்படித்தான்
மதவாளை உடைத்தெறி ...
மனிதக்கேடயம்
கையிலேந்து ...
கோத்ரா வில் பணியாற்றிய போது (மார்ச் ௨00௨ இல் எழுதிய கவிதை இது)
Thursday, April 22, 2010
மகத்தான வேலை நிறுத்தம்


உலகின் தொலைதொடர்புநிறுவனங்களில் ஏழாவது இடத்திலும்
இந்திய நாட்டின் முதன்மையான நிறுவனமாகவும் இருப்பது
பி எஸ் என் எல்.
அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு ஆகப்பெரிய நிறுவனம்பி எஸ் என் எல் .
சுமார் மூன்று லகஷம் கிலோமீட்டர் கண்ணாடிஇழை கேபிள்களை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பதித்து சேவை புரிந்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக் அளவில் தொலைதொடர்பு இருப்பது இந்தியாவில்தான்.(மொத்த இணைப்புகள் வயருடன்உள்ள டெலிபோன் மற்றும் மூன்று வயர் ஐம்பத்தாறு கோடியே இருபத்தியிரண்டு லக்ஷத்து பத்தாயிரம் - டெலி டென்சிட்டி இந்தியா: நாற்பத்திஎட்டு சதம் .இந்திய நாட்டின் ரயில்வே தண்டவாளத்தின் மொத்த நீளமே அறுபதினாயிரம் கிலோமீட்டர்தான்)
சாம் பிட்ரோடா என்ற தொலைதொடர்பு நிபுணரின்(?) தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை இப்படிசொல்லிச்செல்லுகிறது :
இருக்கின்ற மூன்று லக்ஷம் ஊழியர்களில் ஒரு லக்ஷம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது;
பி எஸ் என் எல் பங்குகளில் முப்பது சதமான பங்குகளை விற்று விடுவது; (அரசின் பெயரிலேயே அனைத்து பங்குகளும் இருப்பதால் பி எஸ் என் எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்று ஒரு பைசாகூட வராது)
காப்பர் கேபிள்களை தானியாருக்கு தாரை வார்ப்பது ;
ஏழு பெரிய நகரங்களில் நிறுவனத்தின் வசம் இருக்ககூடிய இருபத்திமூன்று லக்ஷம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலங்களை விற்பது ;(இருக்கின்ற சொத்துக்கள் ஒன்று கூட அரசின் பெயரிலிருந்து இன்று வரை மாற்றப்படவில்லை) விற்கிற காசெல்லாம் அரசுக்குத்தான் செல்லும்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பிரதமரின் ஆணைப்படி அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை எப்படி இருக்கிறது?
இத்தோடு
தொண்ணூற்றி மூன்று மில்லியன் ஜி எஸ் எம் கருவிகளுக்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்வது;
உயர்மட்டத்தில் இருக்ககூடிய ஆயிரத்து ஐந்நூறு ஐ டி எஸ் அதிகாரிகளை பத்தாண்டு காலமாக நிறுவனத்திற்குள் கொண்டு வராமல் இருக்கும் அரசின் மெத்தன போக்கு;
நிறுவனத்தின் பணிகளை அவுட் சோர்சிங் மூலம் செய்வது;
எல்லா பிரச்னைகளும் ஊழியர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
விளைவாக,
ஜே எ சி என்கிற ஒரு அமைப்பு அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்களை உள்ளடக்கி உருவானது.
அந்த அமைப்பின் கூட்டு முடிவு மற்றும் வழி காட்டுதலின் அடிப்படையில் ஐ டி எஸ் அதிகாரிகள் தவிர்த்து அனைத்து அதிகாரிகள் அமைப்புகளும் அனைத்து ஊழியர் சாங்கங்களும் காலவரையற்ற ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடப்பட்டது
வரலாற்றில் முதல் முறையாக வங்கி ஊழியர்களைப்போல் எல் ஐ சி ஊழியர்களைப்போல் அதிகாரி தொழிலாளி பேதம் இன்றி மாபெரும் வேலை நிறுத்தப்போர் நடைபெற்றது. ஏப்ரல் எருபதம்தேதி காலை ஆறு மணிக்கு துவங்கியது வேலை நிறுத்தம். நாடு முழுவதும் பல அலுவலகங்கள் பூட்டப்பட்டன. கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பதினோரு மணிக்கு மத்திய மந்திரி ராஜா அவர்களின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு. ஜே எ சி தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. மாலை மூன்றரை மணிக்கெல்லாம் போராட்டம் முடித்துகொள்ளப்பட்டது.
இது ஒரு துவக்கம் தான்
இனிமேல் ஊழியர்களைப்பாதிக்ககூடிய எந்த ஒரு பிரச்னைஎன்றாலும்
ஒன்று பட்ட போராட்டங்கள் தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Saturday, April 17, 2010
சாம் பிட்ரோடா குழுவின் அறிக்கை
சாம் பிட்ரோடா என்ற ஒருவரின் தலைமையில் இந்த வருட ஆரம்பத்தில் அரசு நிறுவனமான' பி எஸ் என் எல்' லின் நிதி ஆதாரம் மற்றும் அதனை லாபத்தில் இயங்க வைப்பதற்கான வழி முறைகளை ஆராய பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் ஒரு குழு (கமிஷன் அல்லது கமிட்டி என்றும் கொள்ளலாம்) ஜனவரி ஆறாம் தேதி அமைக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி அதனுடைய பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்தது.
நேரு காலத்தில் இருந்து சுதந்திர இந்தியாவில் ஏகப்பட்ட கமிட்டிகள், கமிஷன்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்தக்குழுவும் இவ்வளவு விரைவாக அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
அயோத்தியில் பாபர் மசூதி தொண்ணூற்றி இரண்டாம் வருடம் டிசம்பர் ஆறாம் தேதி இடிக்கக்ப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அதனை விசாரிப்பதற்காக லிபரான் கமிஷன் பத்து நாட்கள் கழித்து டிசம்பர் பதினாறாம் தேதி அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் நாற்பத்தெட்டு முறை மட்டுமே நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.
அறிக்கை சமர்ப்பிக்க பதினேழு ஆண்டுகள் மட்டும் எடுத்துக்கொண்டது.
குழுவிற்கு ஆன செலவு வெறும் எட்டு கோடிதான்.
அறிக்கையின் முடிவின் அடிப்படையில் பரிந்துரைகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு மூன்று அரசியல் தலைவர்களுக்கு ( அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யான் சிங், உமா பாரதி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சிலருக்கு..) பொது அமைதியைக்கெடுத்த வகையில் அதிகபட்சமாக 'ஜெயில் தண்டனை' (எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியாது...) விதிக்கப்படலாம். அல்லது அதை வழங்கும் முன்னதாவே அவர்கள் இயற்கை மரணம் காரணமாக மரணமடைந்தும் போகலாம் 'ஹர்ஷத் மேத்தாவைப்போல'. அது இருக்கட்டும்...
பிட்ரோடா கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்று பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சம் ஊழியர்களில் ஒரு லட்சம் பேரை (அதாவது மூன்றில் ஒரு பகுதியினரை)வி ஆர் எஸ் திட்டத்தில் வீட்டுக்கு அனுப்புவது என்பது.
மூன்று நான்கு அரசியல்வாதிகளுக்கு ஜெயில் தண்டனை கொடுப்பதற்காக போடப்பட்ட லிபரான் குழு எடுத்துக்கொண்டதைப்போல் பதினேழரை ஆண்டு கால நீண்ட நெடிய அவகாசம் வேண்டாம். அதில் பாதி அதாவது ஒரு எட்டரை ஆண்டுகள் பிட்ரோடா எடுத்துக்கொண்டிருந்தாலே போதும். பிட்ரோடா அறிக்கையில் சொன்னதற்கும் மேலாக அதாவது ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ஊழியர்கள் பணி நிறைவில் தானாகவே சென்று விடுவார்கள். லிபரான் கமிஷன் எடுத்துகொண்டதைப்போல் பதினேழு ஆண்டுகள் கிட்டத்தட்ட மூன்று லக்ஷம் பேரில் இரண்டு லஷத்து பத்தாயிரம் பேர் பணி நிறைவில் வீட்டுக்கு சென்று விட்டிருப்பார்கள் |
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடந்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு மேல் புதியதாக வேலைக்கு ஆள் எடுக்காமல் இருக்கும் ஆளெடுப்பு தடைச்சட்டம்.
ஒருகேள்விதான் எனக்கு தோன்றுகிறது.
லிபரான் கமிஷனில்
குற்றம் சாட்டப்பட்டவர்களின்
ஐந்தாறு பேரின் உயிர் என்ன வெல்லமா?
பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணி புரியும்
ஒருலஷம் ஊழியர்களின் உயிர் என்ன மயிரா?
என்னதான் கமிட்டியோ கமிஷனோ
குழுவோ விளக்கமாரோ?
பெரியாரின் பாணியில் சொன்னால்
என்ன வெங்காயமோ..........|
Wednesday, April 14, 2010
மதமே மனிதனைப்பிடிக்காதிரு
காந்தியின் தேசம்
பூராவும்
கருகல் வாசம்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
என உயிர் உள்ளவர்களும்
வீடுகள் கடைகள் வாகனங்கள்
என உயிரற்றவைகளும்
'ஒரு பிரிவினருக்கு' உடமை என்பதால்
கொளுத்தப்பட்டன
'சிக்கி முக்கி' யில் தீயின்
கொழுந்தினைக்கண்டவன்
பார்க்கவில்லை
இந்தக்கொடுமைகளை ;
ஒருவேளை பார்த்திருந்தால்
தீயை ஏன்டா கண்டுபிடித்தோம்
என்று தற்கொலை செய்து
கொண்டிருப்பான் போலும்;
பிணக்குவியலின் ஊடாக
அழும் குழந்தையின்
குரலில் கேட்கிறதா?
'மதம்' என்றால் என்ன?
'நீங்கள் இட்ட பெயர் கூட
தெரியாதே எனக்கு '
மதம் பிடித்தவர்களே
மனிதர்ளை
கொல்லாதீர்கள்|
அவர்களுக்காகத்தானே
மதங்கள் ;
உங்கள் மதங்கள் வாழ
முதலில்
மனிதர்களை
நிம்மதியாக
வாழ விடுங்கள்...
Tuesday, April 13, 2010
ஆசீர்வாதம்
பிரேமச்சந்திரன் நாயர் என்பது அவரது பெயர்.
பிப்ரவரி இருபத்தியேழு, 2002 அன்று முதல் உலகப்பிரசித்தியடைந்த போன கோத்ராவில் நாங்கள் ஒன்றாக வேலை பார்த்தோம். 2001 மே மாதம் முதல் நாங்கள் அங்கே தங்கி இருந்தோம் ....
திருவல்லா அவரது ஊர் (நாடு) . "ப்ரேஞ்சந்திரன்" என்று தான் அவரை மலையாள அன்பர்கள் அழைப்பார்கள் . பணி மாற்றம் நிமித்தம் நான் கோத்ரா சென்ற போது அன்பாக 'வாங்க வாங்க' என்று தமிழ் பேசி வரவேற்றவர். ஒவ்வொரு முறையும் அவரது சீட்டுக்கு போகும்போதும அதே போல் வாங்க வாங்க என்பார். அடுத்ததாக 'உக்காரு' என்பார். ரசிக்கும்படியாக இருக்கும். மனசுக்கு இதமாக இருக்கும். அது கோத்ராவில் ரயில் எரித்த நேரம் . அவருக்கு எனக்கும் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பெஷல் பாஸ் கொடுத்திருந்தார்கள். எனது பெயர் 'நாராயண்' (நாராயணன் என்பது தெற்கே மட்டும்தான் என்பது அப்போது தான் புரிபட்டது) என்றும் அவரது பெயர் பி சி நாயர் என்றும் கொடுத்திருந்தார்கள் அதை வைத்துக்கொண்டு காய்கறி மார்க்கெட் திறந்திருக்கும் நேரம் ரேடியோவில் கலெக்டர் ஜெயந்தி ரவி (சென்னைக்காரர்) அவர்கள் குஜராத்தியில் சொன்னதைக்கேட்டு அதன் பிறகு மார்கெட்டுக்கு நானும் அவரும் செல்வோம்....
நாய் குறுக்கே சென்றால் பாத்து பாத்து 'நாய் வரார்' என்பார். மழலைததமிழ் போல அவருடையது மலையாளத்தமிழ். வசீகரமுடையது நெருக்கமானது. சுதந்திரம் வாங்கிய அந்த மாதத்தில் (ஆகஸ்ட் 1947) பிறந்தவர். சரியாக அறுபது வயதில் அவர் பணி நிறைவு செய்தார் அப்போதெல்லாம் நானும் எனது குடும்பத்தினருடன் திருவல்லா செல்ல திட்டமிட்டிருந்தோம். முடியவில்லை...
அவரது பையன் எம் பி பி எஸ் முடித்துவிட்ட ஒரு டாக்டர் . ஏப்ரல் 9 கல்யாணம் கண்டிப்பாக வரவேண்டும் என்று போனில் பேசிவிட்டு கையேடு பத்திரிகையும் அனுப்பிவிட்டார். ஒரே ஒரு திருத்தம் மட்டும். திருமணம் திருவல்லாவில் இல்லை மாறாக திருவனந்தபுரத்தில். மணமகளும் ஒரு டாக்டர் . அவரது ஓய்வுக்கான விழாவில் கலந்து கொள்ள திருவல்லா செல்ல முடியவில்லை எனவே கண்டிப்பாக இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டி நானும் எனது மனைவியும் சென்றோம். காலை பத்து மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு . நாங்கள் ஒன்பது மணிக்கெல்லாம் மண்டபத்தில் ஆஜராகினோம். ஒருவர் கூட இல்லை.3
இடபழஞ்சி ஆர் டி ஆர் மண்டபம அது. சரியாக பத்து மணி. மாப்பிள்ளை ஒரு காரில் வந்து இறங்கினார். பெண் வீட்டார் வழக்கம் போல் ஆர்த்தி விளக்கு வைத்து வரவேற்றனர். நாயர் சாரை மட்டும காணவில்லை. விசாரித்ததில் அவர் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறார் முகூர்த்தம் பனிரெண்டு இருபதுக்குமேல் பனிரெண்டும் நாற்பது வரைக்கும் தான் ....
மணமேடைக்கு மாப்பிள்ளை ஒருபுறமும் பெண் ஒரு புறமும் சென்றனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பரிசுப்பொருட்கள் அவரவர் அறைக்கு சென்று கொடுத்த வண்ணம் இருந்தார்கள் நமது ஊரில் கல்யாணம் முடிந்த பிறகுதான் கொடுக்கிறார்கள். பதினோரு மனி சுமாருக்கு நாயர் சார் வந்தார் நல்லவேளையாக ...
மலையாள பெண்மனிகளோடு பாரியாளை உட்காரவைத்து விட்டு வாசல் பக்கம் அப்படியே நின்று கொண்டிருந்தேன். அப்போட்துதான் எதிர்ப்பட்டார் பிரேமச்சந்திரன் நாயர். மண்டபத்தின் உள்ளே நுழையும் போதே என்னைப்பார்த்து விட்டார். "என்ன எப்போ வந்தாச்சி;வீட்டிலே எங்கே விட்டிருக்கே" என்று விசாரித்தார்.
அவர்கள பாணியில் நாமும் மணமகன் அறைக்கு சென்று பரிசுப்போருளைக்கொடுத்துவிடலாம் என்று நானும் எனது மனைவியும் நினைத்திருந்தோம். அதன் படி நாயர் சாரை உடன் அழைத்துக்கொண்டு மணமகன் அறைக்கு உள்ளே நுழைந்தோம் வீடியோ காமிரா சகிதம் மணமகன் அறையே ஒளிவீசியது. ' பிரசன்னம் கொடு' என்று மகனிடம் சொல்லிவிட்டு என்னருகே நின்று கொண்டார் கூடவே எனது மனைவியும்...
ஒரு வெற்றிலை பச்சையான ஒரு கொட்டைபாக்கு இரண்டு ரூபாய் காணிக்கை வைத்து எனது கையில் அந்த டாக்டர் மாப்பிள்ளை கொடுத்ததோடல்லாமல் எனது மற்றும் எனது மனைவியின் கால்களில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வேண்டி நின்றார். நான் சற்றும் இதை எதிர் பார்க்கவில்லை. விழித்தேன்..
கண்களில் கண்ணீர் வராத குறை எனக்கு அந்த விளக்குகள் அதையும் செய்திருக்கும் சிறிது நேரம் ஆகியிருந்தால் . உடனே சுதாரித்துக்கொண்டு கையில் கொண்டு போன சிறிய பரிசை அந்த மாப்பிள்ளை கையில் கொடுத்தேன். வீடியோ போட்டோ முடிந்து வெளியே வந்தேன் மனைவியோடு . ஒரு டாக்டருக்கு படிச்ச பையன் என் காலில் விழுந்தது என் மனதுக்கு நெருடலாக இருந்தது. மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து கொண்டே மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்....
நானும் 1977 மற்றும் 1980 இரண்டு தரம் எம் பி பி எஸ் படிப்புக்காக வேண்டி மனு கொடுத்து அலைந்து திரிந்த எனது வலி என் மனைவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போல தெரிந்தது..
Wednesday, April 7, 2010
சீட்டு
எல் கே ஜி வகுப்பு சீட்டுக்கு
பணத்தோடு அலைந்தார் அப்பா
பஸ்ஸில் சீட்டின்றி
நின்று கொண்டே பயணித்தார் பிறகு
அரசாங்க ஒதுக்கீடு இன்ஜினியரிங்
சீட்டுக்கு இவ்வளவு
மேனஜ்மென்ட் சீட்டுக்கு இவ்வளவு
நிர்ணயித்தார் கல்வியாளர்
எம் எல் எ சீட்டுக்கு பணம் கட்டி
காத்திருந்தார் கட்சிக்காரர்
வாக்காலசீட்டோடு
ஓட்டுக்கு எவ்வளவு தருவார்கள்
என்று காத்திருந்தார் வாக்காளர்
ஒன்றரை லட்சத்துக்கு மேல்
இரயில்வே
வேலை இடத்தை நிரப்பசொல்லி
ஊர்வலம் போனார்கள் இளைஞர்கள்
'சீட்டுபிடித்து' பெரியாளானவன்
புதுக்காரில் வலம் வந்தான்
ஒழுங்காக வேலை செய்யவில்லைஎன்றால்
சீட்டைக்கிழித்து விடுவேன் என்றார் முதலாளி
Tuesday, March 30, 2010
மயான 'அமைதி'
'மயான அமைதி' என்று
சொல்லாடல்களில்
கதைகளில் சிலர்
கதைத்திருக்கிறார்கள்மயானத்திற்கு போகாமல் தான்
எழுதி இருப்பார்கள் அவர்கள்
மயானத்திற்குப்போய் வந்தால்
அப்படி எழுதி இருக்கமாட்டார்கள்
என்று நான் யோசித்ததுண்டு
'வாய்க்கரிசி போடுங்கள்'
'காணிக்கை போடுங்கள்'
'மன்னைத்தள்ளுங்கள்'
'கடைசியா முகத்தை பார்துக்கிங்க '
'என்னடா குழி வெட்டியிருக்கீங்க'
'எங்க ஊருலேல்லாம்
இவனுங்களை வைக்க வேண்டிய இடத்தில
வச்சிருவோம்'
'ஒங்களுக்கெல்லாம் திமிரு ......'
'மொட்டை எடுக்கிறவங்க வாங்க சாமி'
'கொல்லி ஓடைக்கிரவங்க வாங்க'
'சின்னப்பயளுகல்லாம் தள்ளிக்கொங்கடா'
'ஏல போட்டபுள்ளைஹல்லாம் ஏன்டா
சுடுகாட்டுக்கு கூட்டியாரிங்க'
'கடைசி வரைக்கும் ஒன்னையப்பாக்கனுன்னு
கட்டை கெடந்து துடிச்சி போச்சப்பா '
'சொதந்திரம் கொடுக்கணும் வேட்டிய விரிங்கப்பா'
'தேர் வாடகை குழி வெட்டினது தேர் சிங்காரிச்சது
எழவு சொல்ல கூலி ....
'ஒங்களுக்கு ரொம்ப ரேட் எறிபோச்சப்ப '
'ஆனது ஆகிபோச்சி அந்த எடத்தை
கடைசிப்பயளுக்கு எல்லாம் சேர்ந்து
எழுதி குடுத்திருங்கப்பா'
கொல்லி ஓடைச்சவன் திரும்பிப்பார்க்காமல்
போய்க்கிட்டே இருப்பா
ஒரு பிணத்துக்கு மட்டும் இவ்வளவு பேச்சு
அப்புறம் எங்கே மயான அமைதி.
Wednesday, March 3, 2010
பிணம் தூக்கிகள்
"நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைஎல்லாம் தூக்கி செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி"
என்று எம்ஜியார் வாயசைபபில்
(சங்கே முழங்கு என்ற படத்தில் )
வாழும் பொது சாதி
சனத்தோடு வாழுகிறார்கள்
போகும்போது தனியே போகிறார்கள்
அவரவர் வாழ்ந்த அடையாளத்தொடு
இடுகாடு போகிறார்கள்
பொன்னுசாமி செட்டியார் இறந்து போய்விட்டார்.
அவர் வாழ்ந்த காலங்களில் அவரது சாதியில் யாரும்
இறந்து போய்விட்டால் இவர் போய்க்கலந்து கொள்வது இல்லை
எனவே இவரைதூக்கிப்போக அவரது சாதியில் ஒரு நாலுபேர்
இல்லாமல் போனார்கள்
இறந்தவரை 'அடக்கம்' செய்யும் சாதியிலிருந்து ஒரு நாலு பேருக்கு
கூலி கொடுத்து அவரைதூக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆளுக்கு பதினைந்து ரூபாய் என்று பேசி முடிக்கப்பட்டது.
தூக்குவதில் உள்ள சிரமம் என்னவென்றால்
நாலு பேரும் ஓரே மட்டமான ஆளாக இருக்க வேண்டும்
நான் கொஞ்சம உயரமானவன்.
தோல் பாரம் இயல்பாகவே அழுத்தியது
துண்டைபோட்டுக்கொண்டேன்.
குழியை மூன்று முறை சுற்றி தேரை இறக்கி வைத்தோம்