வலைப்பதிவில் தேட...

Monday, May 17, 2010

ரா(நா)மதாரி

தாத்தாவை எல்லோரும் ராமதாரி (நாமதாரி என்பதைத்தான்...) என்று கூப்பிடுவார்கள். அவரது பெயர் அழகரப்பன். தினமும் காலையில் குளித்துவிட்டு நாமம் வ 'Y'  வடிவத்தில்  போட்டுக்கொள்வார்.  இரண்டு பெரிய பட்டைகள் அடியில் மெலிந்து மேலே செல்ல செல்ல சற்று அகலமாகிக்கொண்டே போகும். நடுவில் சிகப்புக்கலரில் ஒரேசீராக ஒரு கோடு. இடது கையில் நாமக்கட்டியைக்குழைத்து வாகான ஐஸ் குச்சி போன்ற ஒரு மெலிந்த குச்சியால் வழித்து கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே நெற்றியில் போட்டுக்கொள்ளுவார். நாமப்பெட்டி ஒன்று வைத்திருப்பார். அதில் இரண்டு குழிகள் இருக்கும் ஒன்றில் நாமக்கட்டியும் மற்றொன்றில் குங்குமம் நிறைந்திருக்கும். குச்சியை வைப்பதற்கு நடுவில் ஒரு சிறிய இடம் அதற்கென்று வகுத்தெடுத்தது போல் இருக்கும் அந்த பெட்டியின் மூடியில் கண்ணாடி பதித்திருக்கும்.

'U' வடிவத்தில் நாமம் போடுவோர்கள் இருக்கிறார்கள். நாட்டுப்புறப்பாடலில் ஒரு வரி வரும். " நாங்க ஒத்தை ராமம் போடக்கூடிய ஒசந்த கொல சாதி"   சிகப்புக்கலரில் குங்குமத்தைக் குழைத்து வெள்ளை 'ஸ்டாண்டு' வைத்து நாமம் போட்டுக்கொள்வார்கள் அல்லது 'ஸ்டாண்டு' இல்லாமலும் இட்டுக்கொள்வார்கள் நானும் எனது தங்கை பகவத் கீதையும் அவர் நாமம் போட்டுக்கொண்டு இருக்கும் காலை வேளையில் போனால் எங்களுக்கும்  நாமம் போட்டு விடுவார். தங்கைக்கு சிகப்பு கலர் மற்றும் சிறிய வெள்ளை நிற ஸ்டாண்டு. எனக்கு முழு ராமம் (நாமம்). பெண்களுக்கு வெள்ளை நிறப்பட்டை இட்டுக்கொள்ள அனுமதி இல்லை போலும்.

நான் மூன்றாவது படித்துக்கொண்டிருக்கு போது  சடையாண்டி எனது பேனாவை எடுத்து வைத்துக்கொண்டான். நான் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தேன் தாத்தாவிடம் சொன்னேன். இரவு 7 மணி இருக்கும். அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கென்று இரவு 8 30 வரையில் "நை ட்ஸ்டடி"  என்ற 'ராப்பாடம்' பள்ளியில் நடக்கும்.' வாடா என்னோடு ' என்று என் கையைப்பிடித்து வேக வேகமாக பள்ளிக்கு அழைத்து சென்றார். தலைமையாசிரியர் இரவுப்பாடத்துக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை மேற்பார்வை இட்டுக்கொண்டு இருந்தார்.பள்ளியின் வாசலிலிருந்து தாத்தா சத்தமிட்டார்.
"யார்யா வாத்தியாரு இந்தப்பையனோடபேனாவை ஒருத்தன் எடுத்துக்கிட்டானாம் அதை வாங்கிக்குடுய்யா முதல்ல நீயெல்லாம் என்னயா வாத்தியார் வேலை பார்க்குறே.."
என்னதான் 'ராமதாரி' யாக இருந்தாலும் அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியாகத்தான்  சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுத்தப்படுகிறார்.
ஆசிரியர் ஆசாரி. தாத்தாவின் பேச்சு சூடு தாங்காமல் ' நீங்க போங்கைய்யா நான் நாளைக்கு காலையில வாங்கிக் கொடுத்திர்ரேன். என்றார்.
அதே போல வாங்கியும் கொடுத்து விட்டார்.

மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டு முடிக்கும் வரை என்னை உண்டு இல்லைன்னு ஒரு கை பார்த்து விட்டார். அடி பின்னி எடுத்து விடுவார்.
நான் மூன்றாம் வகுப்பு முடிக்கு முன் தாத்தா இறந்து போனார்.

டைசி காலம் என்று அவர் கருதியிருக்க வேண்டும் தான்  குடியிருந்த கூரை வீட்டை விற்று விட்டார். எனவே நோய் வாய்ப்பட்ட நிலையில் எங்களது வீட்டுக்கு அம்மா கால் பக்கம் பிடித்துக்கொள்ள, அப்பா தலைப்பக்கம் அணைவாக பிடித்துக்கொண்டு  தூக்கிக்கொண்டு வந்தார்கள். எங்கள் வீடும் சூரிய ஒளி தாராளமாக விழும் கூரை வீடுதான். தாத்தாவின் கணக்குப்படி வீட்டை அடுத்தவனுக்கு விற்றாகி விட்டது அவனது வீட்டில் சாகக்கூடாது. தூக்கி வரும்போது அவர் சொன்ன வார்த்தைகள் : 'ஏண்டா சும்மா தூக்கிட்டு போறீங்க கோவிந்தா |கோவிந்தா| ன்னு சொல்லுங்கடா' என்றார்.

றந்த பிறகு கேட்க முடியாத கோஷத்தை உயிருடன் இருக்கும் போது கேட்க ஆசைப்பட்டிருக்கிறார் என்று இப்போது நினைத்துகொள்கிறேன்.

3 comments:

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு . நன்றி. எழுத்தின் நடை என்னை கவர்ந்துள்ளது. வாழ்த்துக்கள்

அழகிய நாட்கள் said...

அன்புள்ள மதுரை சரவணன்,
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
ஞாபகங்களை வார்த்தைகளாக்குவோம்.
வரும் சந்ததியினருக்கு எழுதி வைப்போம்.
வாழ்த்துக்களுடன்,
திலிப் நாராயணன்.

Unknown said...

பதிவு நல்லா இருக்கு.