வலைப்பதிவில் தேட...

Tuesday, February 23, 2010

நாடு


'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டு
முடிந்ததும் இந்நாடே '
என்று பாரதி சொல்லுவார்
நமது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்தமைக்காக நாம் நாட்டை கொண்டாடமுடியுமா என்ன?
மனிதனை சமமாகப்பார்க்க முடியாத தேசத்தில்
சகமனிதனை மனிதனாகப்பவித்து பழக முடியாத தேசத்தில்
நாம் பாரத தேசம் என்று நிச்சயம் தோல் நிமிர்த்த முடியாதுதான்
ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற வளாகத்தில் "மனு" வின்
சிலை வைக்கப்பட்டிருக்கிறது
அவன் போதனை இந்திய மக்களின் மனங்களில் ஏற்றப்பட்டிருக்கிறது
ஆகவேதான்
'அவன் மட்டும் என் கைகளில் கிடைத்திருந்தால் அவனைக்கடித்துக்குதறியிருப்பேன் '
என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர்
பிரமிட் அமைப்பில் சாதீய வடிவத்தை நிறுவியவன் அவன்
இந்தியாவில் அவனது தடம் பதியாத மனித மனம் கிடையாது
சீக்கிய மதத்தில் குரு ரவி தாஸ் என்பவருடைய பாடல்கள்
ஏற்றுக்கொண்ட அளவுக்கு மக்கள் அவரது சாதியை ஏற்றுகொள்ள வில்லை
அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதால்
அண்மையில் ஆஸ்திரிய நாட்டு தலைநகர் வியன்னாவில்
அவரைப்பின் பற்றும் சீக்கியர்கல் தாக்கப்பட்டது மனுவினால்தான்
என்பது தெரிய வரும்.
அன்னளைப்பின் பற்றி புத்த மதத்தில் இணைந்தவர்கள் 'நியோ புத்திஷ்டு '
என்றே அறியப்படுகிறார்கள்
வால்மீகி என்பவர் ராமாயணம் எழுதியதாக சொல்லப்படும் இந்த நாட்டில்தான் அவரது பெயரை 'சர் நேம் ' ஆகக்கொண்டவர்கள் மலம் அள்ளிக்கொண்டு  இருக்கிறார்கள்.
கிறித்துவத்தில் பாதியாராக ஆவதற்குண்டான படிப்பை படித்த
ஒரு தலித் (அருள் ராஜ்) தமிழ் நாட்டில் அந்த வேலை செய்ய இடமில்லாமல் ஒரிசா சென்று மதவெறிக்கு இறையாகிப்போனார்
இவ்வளவு ஏன்
நமது நாட்டில் வாழும் இஸ்லாம் சகோதரர்கள் கூட
சாக்கடை அள்ளும் நமது சகோதரனை
ஒரு நாளும் 'மாமா' என்று அழைப்பது கிடையாது
இதுவும் கூட மனுவின் வேலைதான்



Friday, February 19, 2010

சீலக்காரி

'நொண்டி கருப்பசாமிதுணை'
'சீலக்காரி துணை'
'ரிசர்வ் லயன் மாரியம்மன் துணை'
'இருக்கங்குடி மாரியம்மன் துணை'
'மதுரை வீரன் துணை'
என்று நான்கு சக்கர வாகனங்களில் பலவற்றில் அவரவருக்கு உரித்தான குலதெய்வங்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதைப்பார்த்திருக்கிறேன் பலமுறை.

பொதுவாகவே, நமது குலதெய்வங்கள்,நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினரின் மூதாதையர்களோடும் அவர்களது குலத்தொழிலோடும் சம்மந்தப்பட்டு இருப்பதைப்பார்க்க முடியும். இன்றைக்கும் அதனை வழிபடுபவர்கள், அதன் தோற்றம் இருப்பு மற்றும் அதன் பெருமை பேசுவதைக்காணலாம். இப்படிப்பட்ட கிராம தெய்வங்களின் இன்று வரையான நீட்சி நமது வேர்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பொள்ளாச்சி ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கதைகூட இது போன்றதுதான்... ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் நிறைமாத கர்ப்பிணியைப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க, தன்னந்தனியான அந்த தலித் பெண்ணின் போராட்டம் அடர்ந்த அந்த சாணியில் குழந்தை பெற்றுகொண்டு மரணத்தைத்தழுவியதில் முடிகிறது. மாசாணியம்மன் சிலையே உங்களுக்கு அந்தசெய்தியை சொல்லும்.

எங்கள் குலதெய்வம் பற்றிய ஒரு பதிவை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பூட்டன் சுடுகாட்டுக்கு பிணம் எரிக்க செல்லுகிறான் அது ஒரு இரவு நேரம். எரியூட்டிய பிறகு பிணத்துக்கு வேண்டியவர்கள் கலைந்து விட்டார்கள். பிணமும் பாட்டனும் தனியே... இதற்குள் பாட்டனின் பிரிய மகள் அழுது கொண்டே சுடுகாட்டுக்கு வந்துவிடுகிறாள் அவரறியாமல். (பொதுவாக எந்த பெண்களையும் ஆண்கள் சுடுகாட்டுக்குள் அனுமதிப்பதில்லை குறைந்தபட்சம் அன்றைக்கு மட்டும் மறு நாள் பால் ஊற்ற அனுமதிப்பது வேறு..) நரம்புகள் புடைக்க கொழுப்பு உருக தனது இருப்பிடம் மாறி பிணம் கீழே விழ, அந்தப்பக்கம் இருந்த பூட்டனின் மகள் மேல் தீ பற்றிக்கொள்கிறது.. அவளின் அலறல் சத்தமே பூட்டனுக்கு மகளை அடையாளம் காட்டுகிறது. காப்பாற்ற முடியாமல் போன அவளது உயிர் அவலக்குரலுடன் காற்றில் கரைந்து போகிறது. இப்படி பலியானவள்தான் எனது குலதெய்வமான "சீலக்காரி".

Wednesday, February 17, 2010

நடவு


அரிசி எங்கிருந்து கிடைக்கிறது
பால் எப்படி உற்பத்தி ஆகிறது
இது போன்ற கேள்விகளை இன்றைய
குழந்தைகளிடம் கேட்க வேண்டிய
பொது அறிவுக்கேள்விகளாய் மாறிப்போய் இருக்கிறது. இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வநதவர்களின் வாரிசுகள் 'இப்படி' மாறி இருக்கிறார்கள். அம்மா நாற்று நடுவதற்கு அந்த நடவு காலங்களில் சென்று வருவார்கள். 'அத்தைக்கூலி' வேலைக்கும் போவார்கள். ஒட்டுமொத்தமாக வயற்காடு சொந்தக்காரனிடம் 'காண்ட்ராக்ட்' பேசியும் போவார்கள். அம்மா நிறை பிடித்தால் அந்த வேகமே தனிதான். தெருவில் உள்ள பெண்கள் நிறை பிடிக்கும் தோரனைக்கும் அம்மாவின் நேர்த்திக்கும் இணை ஒருக்காலும் ஆகாது. காலையில் எட்டுமணிக்கு சேற்றில் (வயலில்தான்) இறங்கினால் சாயங்காலம் ஆறு மணிவரைக்கும் கூட வேலை இருக்கும் இடையில் மதிய சாப்பாடு இடைவேளை என்ற பெயரில் கொண்டு போன கம்மஞ்சோறு பட்டவத்தல் அல்லது பச்சைமிளகாய் உப்பில் தொட்டுக்கொண்டு என்று பசியை விரட்டி விட நினைப்பார்கள். ஒவ்வொரு நடவுக்காலங்களிலும் அம்மாவுக்கு காலில் சேற்றுப்புண் வந்து விடும். பெரிய தொல்லைப்படுத்தும். முனகிக்கொண்டு படுத்திருப்பார்கள். ஒரு நூறு மிலி மண்ணெணெய் வாங்கி வந்து கால்களில் பூசி விடுவோம். அம்மாவின் கால்களுக்கு அது இதமாக இருந்திருக்குமா தெரியாது. வேறு வைத்தியத்துக்கான வழியும் இல்லை அந்த நேரங்களில். நாளைக்காலையில் நடவுக்கு போகாதீர்கள் என்று படிக்கிற நாங்கள் சொல்லுவதுண்டு. அப்படி நடவுக்கு போகவிட்டால் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்பது அம்மாவின் கேள்வியாக இருந்திருக்கும் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை .
தூங்கி விழித்து காலையில் பார்த்தால் அம்மா அலுமினிய தூக்குசட்டியோடு மீண்டும் நடவுக்கு பொய் இருப்பார்கள்

Tuesday, February 16, 2010

தீண்டாமை

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
என்று பள்ளிப்புத்தகங்களில்
கடைசிப்பக்கங்களில்
பெருமையாக எழுதப்பட்டிருக்கிறது
ஒவ்வொரு பதினெட்டு நிமிடத்திற்கும்
எங்களை தீண்டாமலா இருக்கிறீர்கள்?
உங்களின் வல்லுறவுக்கு இரையாக
எங்கள் சகோதரிகளின் யோனியை;
சிக்கி முக்கி கற்களால் நாங்கள் கண்ட
நெருப்பால் எங்கள் குடிசைகளை;
நீர் நிலைகளில் வாழத்துவங்கிய
எங்களை அதே நீரில் மூழ்கடித்து;
அரிவாளால் ஆயுதங்களால் எங்கள்
உடல் உறுப்புகளை;
கழிகளால் எங்கள் புட்டங்களை;
நாங்கள் செய்த செருப்புகளால்
எங்கள் மார்புகளில்;
இனிஒரு திருத்தம் செய்திடுவோம்
இளம் தளிர்களுக்கு உண்மையை
போதிக்கும் பொருட்டு
பள்ளிப்புத்தகங்களின்
கடைசிப்பக்கத்தை
அழித்துவிடுவோம்

Wednesday, February 10, 2010

தலித்துகளுக்கு இடமே இல்லையா


1'திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சமத்துவபுரத்தில் தலித்துகளுக்கு கொடுக்கப்பட்ட மனைகள் அவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் கைக்கு மாறியிருக்கிறது'. தி ஹிந்து நாள் பிப்ரவரி ௧0, ௨0௧0

௨. சந்திரபூர் குல்லூர் கிராமம் அமராவதி தாலுகா மகாராஷ்டிரா மாநிலம், கிஷோர் பன்சொது என்பவரின் இரண்டரை ஏக்கர் நிலம் இந்த நாட்டின் முதல் குடிமகள் பிரதிபா பாட்டில் என்பவரின் கணவர் தேவி சிங் ஷெகாவத் என்பவரால் அபகரிக்கப்பட்டது. அவரது இருநூறு ஏக்கர் நிலத்திற்குள் நுழைய தடையாக இருந்த கிஷோர் என்ற தலித்தின் நிலமும் பிரதிபா பாட்டில் அவர்களின் கணவர் திரு ஷெகாவத்துக்கு வேண்டியிருந்திருக்கிறது.
என்று தணியும் இந்த கோர நிலப்பசி ?

கிஷொரிடம் அந்த நிலத்தை ஒப்படைக்க டர்யாபூர் உத்தரவிட்டபிறகும் கூட அவர் நீட்டி முழக்குகின்றார் நீதிமன்றம் திரும்ப அந்த இடத்தை அளக்கத்தான் சொல்லியிருக்கிறது. அவர் (கிஷொர்) விளம்பரத்திற்காக சொல்லுகிறார் என்று.

பெரியமனிதன் சொன்னால் பேப்பரில் போடுகிறான் சின்ன மனுஷன் சொன்னல் சிறையில் போடுகிறான் என்று கலைவாணர் என். எஸ்.கே சொன்னது எவ்வளவு சரியாகப்படுகிறது இந்த காலங்களில்.

வட்டிக்காரன் முதலாக நாட்டின் முதல் பெண்மணியின் கணவர் வரைக்கும் உண்டான ஆசைக்கு இலக்கு ஆகத்தகுதி பெற்றவன் இந்த நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியாக வாழும் தலித்துகளின் சொத்துக்கள் மட்டும்தானா என்ற கேள்வியை நாம் உரத்து எழுப்பியாக வேண்டிய காலம் என்றைக்கு கனியும் இந்த திருநாட்டில்?

பெரியார் பிறந்த இந்த மண்ணில் தான்
அண்ணாவின் பெயரால் எழுப்பப்படும் மறுமலர்ச்சி சுடுகாடுகள் கூட ஆதி திராவிடருக்கென்று ஒன்றும் (தலித்துகள் தான்)
மற்றவர்க்கென்று ஒன்றும் என்றும் கட்டப்படுகிறது.
இது போன்ற சமூக நீதிக்காவலர்கள் பிறக்காத பாக்கி தேசத்தில் எப்படி சமூக நீதி எதிர்பார்க்கமுடியும்?
"ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பார் இந்தியாவில் இல்லையே"
என்ற பாரதியை நினைவு கொள்வோம் இந்த நாட்களில்
வாழ்க பாரத மணித்திரு நாடு.

Friday, February 5, 2010

பாவத்தின் சம்பளம்



'பாவத்தின் சம்பளம் மரணம் ' என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மரணமடைந்த ஒருவனை சுடுகாட்டில் வைத்து ஈமக்கிரியை செய்யும் ஒருவரைப்பார்த்து என்ன சொல்லுவது ?
பாவத்தில் அல்லது சாதரணமாக (!) மரித்த
ஒருவனுக்கு அவனது உடல் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பவர்களுடைய பாதுகாப்பு கருதி பத்திரமாக பூலோகத்திலிருந்து அனுப்பி வைக்கும் ஒருவரை 'வெட்டியான்' என்று இந்த சமூகம் அழைக்கிறது .

உண்மையில் பார்த்தால் அவர்தான் 'உருப்படியான' வேலை செய்கிறவர் என்று யாருக்கும் புரிவதில்லை. அவர் அந்த வேலையை செய்யவில்லை என்றால் 'எபிடேமிக்' வியாதியால் அநேகர் பாதிக்கப்படுவார்கள் என்கிற விஞ்ஞான பூர்வமான உண்மையை மறுக்கிறார்கள் சாதி என்கிற போர்வையால். எனது முதல் கூலி ஒரு சோவியத் காலண்டர் பையைத்தூக்கியதால் கிடைத்தது என்று' முதல் கூலி ' என்ற எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

 இரண்டாவது என்பது பிறந்தவுடன் இறந்து போன அல்லது இறந்தே பிறந்த ஒரு குழந்தையை சுடுகாட்டில் புதைத்ததற்காக கிடைத்தது.
அன்று ஒரு நாள் கன்று போட்ட பசுமாட்டை ஒட்டிக்கொண்டு கால் நடையாக அப்பா மெட்டுகுண்டு வரை சென்று விட்டார். பிறந்த குழந்தை ஒன்று இறந்து விட்டபடியால் அதைப்புதைக்க குழி வெட்ட சொல்லி உத்தரவு பிறபிக்கப்பட்டது. அப்பாவின் வெளியூர்ப்பயணத்தால் அந்த இடத்தில் நான் குலத்தொழில் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். கடப்பாரையும் மண்வெட்டியுமாக சுடுகாடு போய், ஒன்றரை அடிக்கு முக்கால் அடி என்கிற வீதத்தில் ஒரு குழி தோண்டினேன். ஒரு இரண்டு அடி ஆழம்வரை தோண்டவேண்டி இருந்தது. 

தூளியில் வைத்து 'அம்மன் காப்போடு' (வேறென்ன வேப்பிலைதான்) கொண்டுவரப்பட்டது பச்சிளம் தளிர் போன்ற குழந்தை. குழிக்குள் கிடத்தினார்கள். மண்ணைக்கொத்தி குழியை மூடித்துவங்கினேன். முக்கால்வாசி குழி மூடப்பட்டதும் பக்கத்து வேலிக்கருவேலை மரத்தின் இரண்டு கொப்புகளை மண்வெட்டியால் வெட்டி குழிக்குள் திணித்தேன். ( நாய், நரி ஏதும் குழியைப்பரித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு)
மிச்ச மண்ணையும் இழுத்துப்போட்டு மணல் வீடு கட்டுவதைப்போல் கூம்பு வடிவத்தில் குழி என்ற அடையாளம் தெரிய அமைத்தேன்.


பாவமே செய்யாத அந்தக்குழந்தையின் மரணம் எனக்கு சம்பளமாக ரூபாய் பத்து வழங்கியது.

Wednesday, February 3, 2010

முதல் கூலி



கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள்
கவலை இல்லை இனி உனக்கு
ஒத்துக்கொள் - பாரதி தாசன்.
பொதுவாக அவரவர் அப்பாவின் வேலையை கற்றுகொள்வதற்கான அறிவுரை என்றுதான் இது புரிந்துகொள்ளப்படவேண்டியிருக்கிறது. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் வேறென்ன கற்றுக்கொள்ள முடியும். அப்படித்தப்பித்தவறி படித்துவிட்டாலும் கூட வேலை வாய்ப்பு என்பதிலும் கூட சாதி வந்து கும்மாளமிட்டு விடுகிறது. இல்லையென்றால் திண்டுக்கல் பக்கம் ஒரு எம்.ஏ பட்டதாரி ஒரு சில தனியார் பள்ளிகளில் வேலை பார்த்துவிட்டு ஒன்றும் தோதுப்பட்டு வராமல் தனது குலத்தொழிலான செருப்பு தைக்கும் வேலையை செய்ய மனமுவப்பாரா என்ன?
இந்த செய்திகளின் பின்னணியில் எனது நினைவோட்டத்தைப்பகிர நினைக்கிறேன்.
தீவிர எம்ஜியார் ரசிகனான எனது அப்பாவைப்போல் நானும் எம்ஜியார் ரசிகன் ஆனதில் வியப்பேதுமில்லை. மதுரை வீரன் படத்தின் ரிலீஸ் சமயம் அந்தப்படத்தை ௩௬ முறை பார்த்திருக்கிறார் எனது அப்பா. மதுரை வீரன் திரைப்படத்தில் என் எஸ் கே செருப்புதைக்கும் தொழிலாளியாகவும் அவரது வீர மகனாக எம்ஜியாரும் நடித்திருப்பார்கள்.
குலத்தொழில் முறை வேண்டும் என்று ராஜாஜி சொன்னதை எதிர்த்து குரல் கொடுத்த பச்சைத்தமிழன் வாழ்ந்த நாட்டில் சாதி சார்ந்த தொழில் செய்யவேண்டிய நிலையில்தான் இன்னும் சூத்திர பஞ்சம சாதியினர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நானும் குலத்தொழில் செய்முறைக்காக எனது எட்டாவது அரையாண்டு விடுமுறையில் அப்பாவுடன் சேர்ந்து செருப்பு தைக்கப்போனேன். பஜாரில் உள்ள ஒரு கடை அது. சொல்லவேண்டியதில்லை ; வானமே கூரை. வாகனங்களின் இரைச்சல், சிந்திக்கிடக்கும் ஒன்றிரண்டு வத்தல்கள்,மூட்டை தூக்குபவர்கள், ஒயாத சனங்களின் நடமாட்டம், தும்மலை வரவழைக்கும் தூசி ,வெயில் இன்னும் இன்னும்...
ஒருரூபாய் கூலி கேட்டால் பேரம் பேசுவார்கள் கிழிந்த செருப்போடு வந்தவர்கள்.
கனத்த காக்கி கலர் பையும், இன்னொரு கையில் துணிகளடங்கிய ரெக்ஸின்பேக்குமாக கிழிந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்து வந்தார் அப்பாவை நோக்கி ஒருவர்.
சரி செய்ய கூலியாக ஒரு ரூபாய் கேட்டார் அப்பா .முக்கால் ரூபாய்க்கு வந்தவர் சம்மதிக்க வேலையை முடித்துக்கொடுத்தார் அப்பா.
செருப்பை காலில் மாட்டிக்கொண்டே என்னைப்பார்த்து சிரித்தார் வந்தவர்.
அந்த கனத்த காக்கி கலர் பையோடு தனது பேக்கையும் சேர்த்து செல்ல இயலாது என்று யோசித்தாரோ என்னவோ தெரியவில்லை.
'தம்பீ இந்த பையை பஸ் ஸ்டாண்டு வரைக்கும் தூக்கிக்கிட்டுவர்றியா'
நான் அப்பாவைப்பார்த்தேன்.
போய்ட்டு வா என்றார்.
சுமை எனது தலைக்கு ஏறியது வந்தவரின் உதவியால்.
சுருட்டி சுருட்டி இறுக்கமாக திணித்து வைக்கப்பட்டிருந்த காலண்டர்கள் போல் தெரிந்தது. அதன் பளபளப்பும், புதிய தாளுக்கேயுரிய வாசனையுமாக.
அது சோவியத் யூனியன் காலண்டர்கள் என்று அப்போது தெரியவில்லை.
பின்னாட்களில் லைப்ரரி செல்லும் போது யுனெஸ்கோ கொரியர் என்ற பத்திரிகையைப்பார்த்த பிறகுதான் அந்த காலண்டரின் பளபளப்பு புரிபட்டது.
வந்தவர் முன்னால் நடக்க நான் சுமையோடு அவரின் அடியொற்றி மாரியம்மன் புக் ஸ்டோர்சிலிருந்து கிளம்பி, ரத்தினம் பட்டணம் பொடி கடைதாண்டி, மாரியம்மன் கோவிலில் இருந்து திரும்பி, தேர் முட்டி,பொட்டல் வழியாக வந்து மூளிப்பட்டி அரண்மணை கடந்து, உடுப்பி ஹோட்டல், சென்ட்ரல் சினிமா வழியாக வந்து எம்.எஸ்.பி பஸ் ஸ்டாண்டின் தெற்கு நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம்.
காலண்டர் சுமையை வந்தவரின் உதவியால் இறக்கி வைத்தேன்.
படிக்கிறியா என்றார்.
எட்டாவது என்றேன்
நல்லாப்படி என்று சொல்லிக்கொண்டே தனது பர்சிலிருந்து ஒரு பித்தளை இருபது பைசா நாணயத்தை எனக்கு கொடுத்தார்.
நாணயத்தில் ஒருபுறம் நமது நாட்டின் தேசியப்பூவான தாமரை
மறுபக்கம் என்னைப்பார்த்து சிரித்த வண்ணம் எம்.கே காந்தி.

Tuesday, February 2, 2010

இருங்கு சோ ள ம்

இருங்கு சோளம்
நாலாவது ஐந்தாவது படிக்கும் சமயங்களில் பள்ளி முடிந்ததும் அம்மா எந்த களத்தில் (கம்பு, உளுந்து, பாசிப்பயறு ,சோளம் ,இருங்கு சோளம், கேப்பை என்று விளை பொருள்களின் அடிப்படையிலான களங்கள்)
தவிர விளைகின்ற காடு சார்ந்துதான் அந்தக்களங்கள் அமைந்திருக்கும். எந்த சம்சாரியின் காடு எங்கே என்று தேடிகண்டுபிடிக்குமுன் போதும் போதுமென்று ஆகி விடும். சில நாட்களில் எங்கள் பள்ளியின் அருகில் கூட களம் இருக்கும். அவித்த அமெரிக்க கோதுமைச்சோற்றை சாப்பிட்டுவிட்டு எதுக்களிக்க ஒடிச்சென்று அம்மாவைப்பார்க்கும்போதெல்லாம் வெயில்ல நிக்காத பள்ளிக்கொடத்துக்கு போ என்று வண்டு கட்டிய தலையோடு சொல்லுவார்கள். ஒரு நாள் தலைமை ஆசிரியர் 'கேர்' எடுக்க சென்றதால் பள்ளியில் மதியச்சோறு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். (மதிய உணவுக்கு வேண்டிய அந்த பனைமரத்து எண்ணெய், கோதுமை வாங்கி வருவதுதான் 'கேர்' எடுப்பது என்பது பிறகு தெரிந்து கொண்டேன்). பசியோடு வீட்டுக்குப்போனால் புளிச்ச தண்ணிப்பானையின் அடியில் கையைவிட்டுக்கோதினாலும் பருக்கை சிக்கவில்லை. ஒரு செம்பு நீச்ச தண்ணீயைக்குடித்துவிட்டு மதியம் பள்ளி சென்றேன். நாலரை மணிக்கு பள்ளி விட்டதும் ஒவ்வொரு களமாக அம்மாவைத்தேடினேன். இருட்டும் நேரம் ஆகியும் களம் முடியவில்லை. கொஞ்ச நேரம் அங்கேயே விளையாடிப்பார்த்தும் வேலை முடிவதாக இல்லை. ஒருவழியக ஏழரை மணி சுமாருக்கு களம் முடிந்தது. கூலியை அம்மா பெட்டியிலும் முந்தியிலும் வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தார்கள். வாங்கி வந்த கூலி இருங்கு சோளம் . அவ்வளவு சாமானியத்தில் அதன் தோலை உரித்து எடுத்துவிட முடியாது. ஒரு உடந்த மண் பானையில் சோளத்தைப்போட்டு வறுத்து அந்த சூடு போகுமுன் உரலில் போட்டு இடித்தால் சுத்த வெள்ளையாக வராவிட்டாலும் செங்களிச்ச ஒரு நிறத்தில் சோளம் வெளிப்படும். அதை கஞ்சி காய்ச்சிக்குடிக்க ஆசையாக அம்மா தருவார்கள். கள்ளன் போலிஸ் எல்லாம் விளையாடி ஆகிவிட்டது. ஆனாலும் அம்மா அடுப்பு பத்தவைக்கவில்லை. வேலிக்கருவேலை முள் தான் எரி பொருள். அம்மாவுக்கும் பசிதான் இருந்திருக்கும். அத்தோடுதான் இந்த இருங்கு சோளத்தோடு போராடிக்கொண்டிருந்தார்கள். தங்கை தம்பிகளோடு அம்மா சோளச்சோறு ஆக்கி முடிக்குமுன் நான் தூங்கிப்போனேன்.

Monday, January 25, 2010

ஒரு கடி தம்


கல்கி வார இதழுக்கு ஜுன் 11 2002 எழுதிய ஒரு கடிதம் இது
பிரசுரிக்கப்பட்ட விபரம் தெரியவில்லை.
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
தங்களது கேள்வி பதில் ( கல்கி ஜுன் 09  2002) பகுதியில் அரசுடமையக்கக்ப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பதற்கான காரணங்களாக தாங்கள் சிலவற்றைக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். 1969 ல் வங்கிகள் திவாலாகிப்போனபொது( அப்போது பெரும்பாலான வங்கிகள் த்னியாரிடம் மட்டும்தான் இருந்தது) அரசுடமை ஆக்கப்பட்டது. பல சிறு முதலீட்டாளர்கள் வங்கி மூடலால் (திவாலா) தற்கொலை செய்யும் சூழல் இருந்தது. சிவாஜியின் "முதல் தேதி" படத்தில் இது சம்பந்தமான காட்சி கூட வரும்.
அரசுடமை ஆன பின் அதுவல்ல நிலைமை. 1390  கோடி ரூபாய் நஷ்டத்தில் போன இந்தியன் வங்கி

கூட இந்த ஆண்டு முதல் லாபம் ஈட்டத்தொடங்கியுள்ளது.
மற்றபடி தனியார் வங்கிகளின் நோக்கம் சேவை என்றிராது.
மாறாக 'லாபம்' ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும். அரசுடமையாக்கக்ப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் ௫௮000 ரூபாய். காரணம் பணியாளர்கள் அல்ல; அரசின் சாரதிகள் மட்டுமே.
தவிர , உலகமயமாக்கல் என்பதன் விளைவு லாபம் தரும் தொலைதொடர்பு என்று கூடப்பாராது அனைத்தையும் தனியார் மயமாக்குவதுதான். வேறு வழியில்லை என்று 'டங்கலில்' கையொப்பமிட்டவர்களும் இன்றையவர்களும், கூறிக்கொள்கிறார்கள். விளைவாக ௧௯௫௬ ல் தேசியமயமாக்கப்பட்ட எல் ஐ சி நிறுவனத்துக்கும் கூட தனியாரை ஊக்குவிக்கும் கொள்கை அமல் படுத்தப்படுகிறது. பணியாளர்கள் பொறுப்புகள் கூடும் என்பதற்காக போராடலாம் என்பது சரியனதல்ல என்பதை அறியுங்கள்.
அன்புடன்
திலிப் நாராயணன்.
கோத்ரா 389 001
( குஜராத்)

Thursday, January 21, 2010

செருப்பு



'காலுக்கு செருப்பாய் இருப்பேன் 'என்றான் காதலன்
'செருப்பு பிஞ்சி போய்விடும் 'என்றான் சண்டைகட்ட வந்தவன்
தொழிலாளர்களின்
'காலுக்கு செருப்புமில்லை கால்வயிற்றுக்கூழுக்குமில்லை '
என்று பதறினார் ஜீவா
'செருப்புதான் ஆண்டது ' பாரதத்தை ராமராஜ்யத்தில்
'சுகாதாரத்திற்கு அடிப்படை செருப்பு' என்கிறார்கள் மருத்துவர்கள்
'முண்டஜிர் ஜைடி'க்கு செருப்பு ஆயுதமானது
அதுவே 'புஷ்'ஷிற்கு அவமானமாகிப்போனது
'பாட்டா'வில் செருப்புக்கு சர்வீஸ் செய்கிறான்
பாதங்கள் பார்த்து கண்கள் பூத்து
பாதையில் பசியுடன் உட்கார்ந்திருக்கும்
என்னை மட்டும் ஏன் 'இழிசாதி' என்கிறான்
என்பது இன்னும் 'புரிபடவே' இல்லை

Wednesday, January 20, 2010

நெத்தியில் முளைத்தவர்கள்


பத்து பனிரெண்டு வயது சுமார் இருக்கும் . அம்மா எனது சேட்டைகள் தாங்காமல் அல்லது அவர்கள் சொன்ன வீட்டு வேலைகளை செய்யாமல் 'டிமிக்கி ' கொடுக்கும் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையால் திட்டியிருக்கிறார்கள். அதன் அர்த்தம் அப்பொழுது புரிபடவில்லை. "இவன் நெத்தியில மொளைச்சவனாசசே சொன்ன படி கேட்க மாட்டேங்கிறானே" என்பதுதான் அந்த வசை மொழி. அம்மாவி்ன் சின்ன வயதில் எதிரே பிராமணர் வந்தாரென்றால் 'சூததிரவாள் ஒதுங்கு' என்று குரல் கேட்டு எதிரே போகாமல் ஒளிந்து கொள்வாராம் அம்மா. இதையும் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் அம்மா பள்ளிக்கூட வாசலை மிதியாதவர். எழுத்தறிவு மறுக்கப்பட்டவர். ஆனாலும் கூட இது போன்ற மனு எதிர்ப்பு வாசகத்தை எப்படி உள் வாங்கிக் கொண்டார் என்பது எனது கேள்வியாகி விட்டிருந்தது. இதற்கான பதில் தி க வின் வெளியீடான 'அசல் மனுதர்ம சாஸ்திரம்' வாங்கிப்படிக்கும் வரையும் தெரியாதென்று சொல்ல முடியாது. அதற்கு முன்பாக சில கூட்டங்களில் 'மனு' வைப்பற்றிக்கேட்டபோதுதான் அம்மாவின் வசவுக்கான காரணம் புரிந்தது. இந்து மத தர்மத்தின் அடிப்படையில் பார்த்தால் படைக்கும் கடவுள் ஒருவர் இருக்கிறார் (பிரம்மா) . காப்பதற்கு ஒருவர் (விஷ்ணு) அழிப்பதற்கு ஒருவர் (சிவன்) என்று இருக்கிறார்கள். படைக்கும் கடவுளின் நெற்றியிலிருந்து பிறந்தவன் பிராமணன்; தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்; தொடையிலிருந்து பிறந்தவன் வைஸ்யன்; பாதத்திலிருந்து பிறந்தவன் சூத்திரன்; இதில் அடைபடாத ஒரு வகுப்பினரும் இருக்கிறார்கள். அவர்கள் தான் பஞ்சமர்கள். அவர்கள் மட்டும் ஐந்தில் ஒரு பகுதியினராக அறியப்படும் சண்டாளர்கள். இவர்கள் பிரம்மாவின் உடம்பின் எந்தப்பகுதியிலும் பிறந்ததாக மனு எழுதி வைக்கவில்லை. பெரியாரின் பாணியில் சொல்வதென்றால் இவர்கள் மட்டுமே அவரவர் அப்பா அம்மாவுக்குப் பிறந்திருப்பார்கள் போல இருக்கிறது. நெத்தியில் முளைத்தவர்கள் எனக்கருதப்படும் பிராமணர்கள் எழுதி வைத்த மனுவை சாத்திரங்களை யாரும் கேள்வி கேட்டிருக்கமுடியாது அந்த நாட்களில். அந்த அடிப்படையில் தான் 'இவன் நெத்தியல முளைச்சவன்ல' என்கிற வசை மொழி உருவாகியிருக்கும் என பின்னாட்களில் தெரிந்து கொண்டேன் .

Tuesday, January 19, 2010

விட்டு விடுதலையாகி...

இரவு நேரம் பதினோரு மணி சுமார் இருக்கும். சாவடியின் மையப்பகுதியில் திம்மைய நாயக்கர் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அந்த பாடாவதி தூங்கி வழியும் சாவடியில் அவரைச் சேர்ந்த ஆட்கள் கம்பீரம் தெறிக்க உட்கார்ந்ததும் நின்று கொண்டும் பரபரப்பாக பேசிக்கொண்டும் இருந்தார்கள். அது ஒரு மாநகரமும் இல்லாமல் சிற்றூரும் இல்லாத ஒரு பேரூராட்சிக்கு அடுத்தபடியான ஒரு ஊர். பிராது இதுதான். சுடுகாட்டில் குழி தோண்ட வேண்டிய, பிணம் பொசுக்கவேண்டிய இனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஒரு இளைஞன் நாயக்கமார் சமூகத்தைச் சார்ந்த ஒரு நடுவயதுக்காரரை சுடுகாட்டில் பிணம் புதைக்கிற இடத்தில் வைத்து அடித்து துவைத்து விட்டான். மயான அமைதி என்று சொல்லுவார்கள். மயானத்தில் வைத்து சண்டை போட்டுக்கொண்டால் சரியாக இருக்காது எல்லாம் வீட்டில் வைத்து பேசிக்கொள்ளலாம் என்கிற உயர் சாதிப்பொதுப்புத்தி மட்டுமே என்று சொல்லுவது கூட சரியாக இருக்கும். இல்லையென்றால் மயானத்திலாவது அக்மார்க் அமைதி நிலவுவதாவது. பலசாதிகளில் சண்டை ஆரம்பிக்கும் இடமே சுடுகாடாகத்தான் இருக்கும்.
முக்கியப்புள்ளியாகக் கருதப்பட்ட ஒரு மனிதர் இறந்து விட்டார். பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது இயற்கைதானே. இதைப்புரிந்து கொள்வதில் எவ்வளவு வேறுபாடுகள் மனிதர்கள் மத்தியிலும் மதியிலும். சேவகம் செய்வதற்கென்றே சில சாதிகளும் அவர்களை அதட்டி வேலை வாங்குவதற்கென்றே மேலே பலவகையான சாதிகளும் என்ற அடுக்குமுறை நிலவும் சமுதாயம் நமதென்று நாமறிவொம். அந்த வகையில் ஆறுமுகம் ஒரு தலித் அல்லது அருந்ததிய சகோதரன். நாயக்கமார், தேவமார், செட்டிமார், ஆசாரிமார் போன்ற சமுதாய மக்கள் இடை நிலை சாதியென்றும் அவர்களுக்கு மேலாக பிள்ளைமார் மற்றும் பார்ப்பனர்கள் வருண தருமப்படி மேலே அமர்ந்திருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மேல் சாதியாவும் கீழ் சாதியாகவும் மனிதர்களுக்குள் படி நிலையில் சாதிய அமைப்பை ஏற்றுக்கொண்ட நியதிதான் நமது. பொதுவாக நமக்கு மேலே இருக்கும் சாதியினரைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கீழே ஏதாவது ஓரிரெண்டு சாதியேனும் இருக்கவேண்டும் என நினைக்கிற சமூக அமைப்பு நம்முடையது.
அந்த வகையில் பார்த்தால் நமது ஆறுமுகத்தின் அப்பா ஒரு காணிக்காரர். அதாவது இடை நிலை சாதியர் எவர் வீட்டிலும் எழவு விழுந்தால் அங்கே ஆஜர் ஆக வேண்டியது அவர் பொறுப்பு. அவனுடைய அப்பா ஒரு செருப்புத்தைக்கும் ஒரு சாதாரணப்பட்டவர். அவர் செய்த ஒரே தவறு நாம் தான் படிக்கவில்லையே நமது பிள்ளையாவது நாலெழுத்து படிக்கட்டுமே என்பதுதான். அதில் வந்ததுதான் வினை. ஆறுமுகம் நினைத்தால் சுடுகாட்டுக்குப்போய் அந்த இடைநிலை சாதியினருக்கு சேவை செய்திருக்கவேண்டியதில்லைதான். அப்பாவோ ஒரு காச நோயாளி. அவர் அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவார். ஆகவேதான் ஆறுமுகத்தின் தலையில் விழுந்தது குலத்தொழில் என்கிற கோடாரி.
அம்மாவோ மூத்தவன் ஆறுமுகம் உள்ளிட்ட நாலு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி சம்சாரிமார்களின் காடு மேடு, கழனி களம் அறுவடை வயற்காடு வரப்பு என்று குழந்தைகளின் பராமரிப்பு வேண்டி தீராத உழைப்புக்கு ஆட்பட்டிருந்தாள். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை அவருக்கு ஊர் பார்க்கும் காணிக்காரன் என்ற அற்புத வாய்ப்பு கிடைக்கும். ஆறுமுகம் ஐந்தாவது படிக்கும் போது அவனது அப்பாவுக்கு ஊர் காணிக்காரன் வேலை வாய்த்தது. அப்போதெல்லாம் அப்பா தாட்டியமாக இருந்தார். அவரே மயானத்துக்கு சென்று குழி தோண்டுவார். ஆழக்குழி வெட்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொன்னூறு முட்டை என்பது ஒரு பழமொழியாக தமிழராகிய அனைவரும் அறிந்திக்கிறோம். ஆனால் செத்துப்போன ஒரு சக மனிதனுக்கு ஒரு குழி வெட்டினவன் இதை எழுதியிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
பிணம் அந்தப்பகுதியில் விழுந்து விட்டது என்று தகவல் சொன்ன அடுத்த நிமிடத்தில் அவசரகதியில் அப்பா இறங்கி விடுவார். பங்காளிகளில் நெருக்கமானவர்களை அழைப்பதும் எழவு வீட்டில் இருந்து ஊர்வாரியாகப் பட்டியல் வாங்குவதும் (எழவு சொல்லத்தான்), சுடுகாட்டில் யாருக்கோ கட்டிய தேரை ரிக்ஷா வண்டியில் கொண்டு வருவதும் புதிய தேர் கட்டச்சொன்னால் பச்சை மூங்கிலில் கட்டித்தருவதும் பழைய சேலைகளையும் அவர்கள் வாங்கி வந்த கேந்திப்பூக்கள் உள்ளிட்ட கதம்ப மற்றும் ரோஜாமலர்களால் தேரை சிங்காரிப்பதும் இரண்டாள் உயரமுள்ள பாடைக்கம்புகளை தோ¢ல் கட்டுவதும் மண் சட்டியில் கங்கு போடுவதும் என்று அனைத்து வேலைகளும் அப்பாவுக்கு அத்துப்படி.
சட்டையில்லாத ஒடிசலான உடம்புடன் ஒரு கையில் கங்கு புகையும் கயிறு கட்டப்பட்ட மண்சட்டியும் தோளில் மண் வெட்டியும் தலையில் உருமாக்கட்டுமாக வேகமாக தேருக்கு முன்னால் செல்லும் வேகம் நேரமேலாண்மை சம்பந்தப்பட்டது. செத்தவன் நல்லவனாக இருந்தால் அவனது சாதியிலேயே நன்றி உள்ள நாலு பேர் தேறி சுடுகாடு வரை பிணத்தை தூக்க முன் வருவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அப்பாவே அவரது சாதியில் நான்கு பேரை கூலிக்கு எற்பாடு செய்து பிணத்தை வாடவிடாமல் நேரத்தில் தூக்க வழி வகை செய்து விடுவதிலும் கெட்டிக்காரர். நமது ஆறுமுகமோ அவ்வப்போது சுடுகாட்டுக்கு விடுமுறை நாட்களில் அப்பாவின் வேலைகளை வேடிக்கை பார்த்தும் பார்வையிடுவதுமாகதான் காலம் கழிந்தது. அம்மா அடிக்கடி சொல்லுவாள். எந்த வேலை ஆனால்தான் என்ன கண்ணு பாக்கணும் கையி செய்யணும் என்று. அதை எல்லாம் உள் வாங்கியவனாகத்தான் ஆறுமுகம் இருந்தான். ஆனாலும் அவன் படித்ததற்கான பாணியைக் கடைப்படித்ததால் தான் அந்த நிகழ்வு என்பது மட்டும் உறுதி.
அப்போது அவன் பெரிய பத்து படித்து முடித்து விட்டு விடுமுறையில் வீட்டில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தான். மூத்த பையனான ஆறுமுகத்தை அம்மாவும் அப்பாவும் ஏதாவது வேலைக்குப் போய் என்னமாவது கொண்டு வந்தால் தான் என்ன என்று கேட்டும் இவன் அசைந்து கொடுப்பதாக இல்லை. வினையாய் வந்தது அந்த சின்னப்ப நாயக்கரின் சாவு. சம்சாரிமார் தெருவிலிருந்து ஒரு சாவு செய்தி வந்தது. ஊர் பார்க்கும் காணிக்காரன் யாரப்பா என்ற கேள்வி ஆறுமுகத்தையும் தட்டு மண்வெட்டியைத் தூக்க வைத்தது; தட்ட முடியாமல் சுடுகாடு செல்லவேண்டியிருந்தது.
அந்த ஊரில் ஒரு பழக்கம் இருந்தது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது தான் கணக்கு. ஒரு பங்காளியின் காணிக்காரப்பணி முடிந்து மற்றொரு பங்காளிக்கு மாறும் நேரம் அப்போதுதான் துவங்கும். இவன் (ஆறுமுகம்தான்) பெரிய பத்து முடித்து லீவில் இருப்பதற்கும் அப்படியாக இவனது அப்பாவுக்கு ஊர் காணிக்காரன் வேலை() வருவதற்கும் சரியாக இருந்தது. சுப்பிரமணியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு இவன் சுடுகாட்டுக்குச்சென்று குழி தோண்ட கடப்பாரையும் மண்வெட்டியும் எடுத்து சென்றான்.
அங்கே தான் வந்தது வினை. ஆறுமுகம் அவனுக்கு துணையாக சுப்பிரமணியனை அழைத்துக்கொண்டு மயானத்திற்கு சென்றானல்லவா. குழி வெட்டுவதென்றால் அவ்வளவு எளிதல்ல. புதியாதாகக் குழி வெட்டுவதை விடவும் தோண்டிய குழியை வெட்டுவதென்பது எளிதானது என்பது தொன்று தொட்டு வரும் மரபு. ஏற்கனவே ஆறுமுகம் அவனது சுடுகாட்டுக்குப்போய் வந்த பழக்கத்தில் பார்த்து பழகிய அனுபவம் இது. பாறையையும் மண்ணையும் வெட்டி புதிய குழி வெட்டினால் மூச்சுத்திணறித்தான் போகும். ஆறு மாதத்துக்கு முன்னால் மூடிய குழியை தோண்டும் போது ஒருவித நாற்றம் அடிக்குமே; அம்மாடி குடலைப் புரட்டிபோட்டு விடும் என்பார்களே உண்மையில் இந்த வேலை செய்யாதவர்கள் குத்துமதிப்பாக சொல்லித் திரிவதில் அர்த்தம் இருப்பதாகப்படவில்லை. உயிரின் வாதை அது. சில நேரங்களில் குழியில் கிடக்கும் கை எலும்பு கால் எலும்பு மண்டை ஒடு நைந்த துணி தலைமுடி என்று வெளியே அள்ளிப் போட வேண்டும். குறைந்தது கழுத்து மட்டத்துக்கு குழி இருக்கவேண்டும். அப்போதெல்லாம் பிளாஸ்டிக் பாட்டில்கள் புழக்கத்தில் இல்லை. தண்ணீர் கொண்டுபோக வழியுமில்லை. அது பற்றித் தெரியவும் செய்யாது. தாகமமெடுத்தால் பக்கத்தில் இருக்கும் கௌசிகா நதியின் உப்பு நீரைத்தான் அது எந்த நிலையில் இருந்தாலும் குடிக்கவேண்டும். குழிவெட்டுவதில் ஒரு நுணுக்கம் இருக்கிறது மற்ற எந்த தொழிலையும் போல. செத்துப்போன ஆளின் உயரத்துக்கு அதாவது செத்த பிறகு அவன் இருக்கும் நீளத்துக்கு சற்றும் குழியின் நீளம் இருக்கக்கூடாது.
எவன் கண்டு பிடித்தானோ? அப்படி கொஞ்சம் பெரிய சைஸாக வெட்டி விட்டால் இறந்த சாதியிலிருந்து பிரிதொரு பிணத்தை அந்த சுடுகாடு பலி கேட்குமாம். இது என்ன வகை அறிவியலென்று மனிதன் சந்திரனுக்கு சென்றுவந்த நான்கைந்து ஆண்டுகள் ஆன பிறகான காலத்திலும் கூட தெரியவில்லை. ஆறுமுகமும் அவன் நண்பன் சுப்பிரமணியனும் சேர்ந்து குழி வெட்டி விட்டார்கள். மற்ற வேலைகளை மேளம் உட்பட படுத்த படுக்கையிலிருந்தபடியே அவரது அப்பாவே ஏற்பாடு செய்துவிட்டார்.
சாதாரணமாக பிணம் வந்து சேரும் வரை சுடுகாட்டிலிருந்து வீட்டுக்கு குழி தோண்டும் எவரும் வீட்டுக்கு வருவதில்லை. நமது ஆறுமுகத்துக்கோ அனுபவமில்லை. பொழுது மயங்கும் வேளை ஆகிவிட்டது. செத்துப்போன சின்னப்ப நாயக்கரின் மகள் மதுரைக்குப்பக்கம் இருந்து வருவதற்கு நேரம் ஆனதால் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்குடன் பிணம் சுடுகாடு வந்து சேர்ந்தது. சங்கு ஊதிக்கொண்டே சோலை வந்தார். அவரே மொட்டை போட ஆட்களை அழைத்தார். வேட்டிகளை இடுப்பில் வைத்துக்கொண்டு வந்தார் ராக்கன். அவர்தான் வண்ண மயமாக துணிகளை அவர்களுக்கு வெளுத்துத்தருபவர். வாய்க்கரிசி போடத்சொல்லி ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்தான். அவரவர் கையில் இருந்த 10 பைசா கால்ரூபா என்று போட்டார்கள்.
சற்றும் எதிர்பாராத வகையில் சாராய போதையில் இருந்த இறந்துபோன சின்னப்ப நாயக்கரின் மருமகன் நடையநேரி நரிய நாயக்கர், 'எந்த சக்கிலியப்பயடா குழி வெட்டுனது' என்று கேட்டுவிட்டார். சாதாரணமாக குழியின் நீளமோ அகலமோ கூடவோ குறையாகவோ இருக்கக்கூடாது. பொதுவாக 51/2 அடி உயரமுள்ள ஒரு ஆளுக்கு 5 அடி குழி வெட்டிவிடுவதும், தலைப்பகுதியில் ஒரு 1/2 அடி பாந்தம் பரித்து விடுவதும்தான் வழக்கம். அந்த முறையில் தான் நமது நாயகன் ஆறுமுகமும் அவனது நண்பனும் சிரமேற்கொண்டு செய்திருந்தார்கள் சவக்குழியை. ஆறுமுகத்துக்கு சாதியின் பெயரைக் கேவலமாக சொன்னார் நரிய நாயக்கர் என்கிற ஆத்திரத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். நரிய நாயக்கர் சரிந்தார் குழியின் மேலிருந்த குவிக்கப்பட்ட மண் மேட்டில். நாயக்கர் அடிபட்டதைப் பார்தத் உடனே எளவட்ட நாயக்கமார்கள் பதிலுக்கு ஆறுமுகத்தை அடித்து உதைத்தனர். நடு வயது பெரியவயது நாயக்கர்கள் எல்லாம் கைகலப்பில் இறங்கியவர்களை சத்தம் போட்டு எளவட்டங்களை தடுத்து ஆறுமுகத்தையும் சுப்பிரமணியத்தையும் வேலையை முடிக்கச்சொல்லி ஆணையிட்டனர். குழி மூடப்பட்டது. கோபுரம் போல இருபுறமும் ம்ண்ணைக் குமித்து வைத்தார்கள். மண்வெட்டியைப் புரட்டிப்போட்டு செம்மி வைத்தான் ஆறுமுகம். கொஞ்சம் கரம்பைமண் எடுத்து பிள்ளையார் செய்து வைத்தான் சுப்பிரமணி.
எல்லாம் முடிந்தது. வேட்டியைவிரித்து பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் மருத்துவர் சோலைக்கான 'சுதந்திரம்' வழங்கப்பட்டது. சலவைக்காரர் ராக்கனுக்கும் கூட வழங்கியாகி விட்டது. வாய்க்கரிசிக்காசு உட்பட ஒரு பைசா ஆறுமுகத்துக்குத் தரப்படவில்லை. ஊர்க்கூட்டம் போட்டு இந்தப்பயல்களை ஒரு முடிவு செய்வதாகச் சொல்லி கூலி மறுக்க்கப்பட்டது. சேவகத்தொழில் தர்மம் காப்பாற்றப்பட்டது.
ஆறுமுகத்தின் அப்பாவுக்கு இந்த இழிதொழில் செய்வதில் ஈடுபாடு இல்லை என்பதை தனது மகன் ஆறுமுகத்திடம் பலமுறை சொல்லியிருக்கிறார். தனக்கும் தன்னைச் சார்ந்த சமூகம் மொத்தத்திற்கும் ஏற்பட்ட சமூகத் தளர்வுக்கும் காரணம் இது போன்ற இழிதொழில் செய்வதனால்தான் என்பதை உணர்ந்து வைத்திருந்தார். இந்த நிலைமை தனது சந்ததியினருக்கு தொடரக்கூடாது என்றும் கூட நினைத்திருந்தார். தனது பங்காளிகள் பகுத்தாளிகள் அனைவரிடமும் இதைப்பகிர்ந்து கொண்டிருக்கிறார். முடிந்தால் இந்த தொழிலை விட்டுவிடவேண்டும் என்றும் சொல்லுவார். ஆனாலும் ஒரு சமூகக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு செய்யவேண்டியிருக்கிறதே என்று வருத்தமும்பட்டிருக்கிறார். அந்த உணர்வு குறையாத நிலையிலும் அவர் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் அந்த ஊர்க்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார். மயானத்திலும் இல்லாத அமைதி சாவடியில் நிலவியது.
சாவடியில் அவர்கள்.
கீழே இவர்கள்.
அவர்கள் கேள்விகள் மௌனத்தில் கரைந்தன. மௌனத்தை உடைத்தொரு குரல் ஒலித்தது. அது நமது ஆறுமுகத்தின் அப்பாவின் குரல்தான்.
தீர்க்கமாக ஆனால் தெளிவாக அவர்களின் கேள்விக்கு பதில் கொடுத்தார்.
‘இனிமேல் நாங்கள் உங்கள் பிணம் விழுந்தால் குழி தோண்ட மாட்டோம் எழவு சொல்லிப்போகமாட்டோம் மாடு செத்தால் தூக்க மாட்டோம் மேளம் கொட்ட மாட்டோம். உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்'.
துண்டை உதறித்தோளில் போட்டுகொண்டு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல் நடக்க ஆரம்பித்தார் தமது பகுதி நோக்கி.
ஒரு தளபதியின் ஆணைக்கு இணங்கிய போர் வீரர்கள்போல ஆறுமுகத்தின் சொந்தங்கள் வீறு கொண்டு அவரது அப்பாவைப்பின் தொடர்ந்தனர்.
- திலிப் நாராயணன்
( நன்றி கீற்று இணைய இதழ்)

Monday, October 12, 2009

ஜெய்ப்பூர் நினைவகள்

Sunday, April 12, 2009

 


118 வயது வரை வாழ்ந்த ஹபிப் மியான் என்பவரின் கடைக்கு கடந்த 2008ஆகஸ்ட் மாதத்தில் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது . அவரது கடை ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் இருக்கிறது. அது ஒரு கடைக்கோடியில் இருக்கும் கடைவீதி நுழைந்தவுடன் அவரது புகைப்படம் வரவேற்கிறது முற்றிலும் ஒட்டகத்தின் தோலினால் ஆன செருப்பு, சூ ,பெல்ட், பர்ஸ் இத்யாதி ,இத்யாதிகள் கடை நிரம்ப இருந்தது. நானும் நண்பர்களும் சூ வாங்க சென்றிருந்தோம் . சூ பெல்ட் என பிடித்த சில பொருட்களை வாங்கினோம். நண்பர் ஒருவருக்கு அவர் வாங்கி வந்த சூ சைஸ் பொருந்தவில்லை என்பது நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்த பிறகுதான் தெரிய வந்தது . அங்கே சரியாக இருந்தது போல் இருந்தது விடுதிக்கு வந்தபிறகு சரியாகப்படவில்லை. அந்த கடைக்குள் நுழைந்ததுமே அவரது புகைப்படம் முகமன் சொல்லுவது போல் வரவேற்கிறது. அங்கிருந்த வேலையாட்களிடம் விசாரித்தேன் ஆம் அவரேதான்.

விஷயம் ஒன்றுமில்லை அவர் அங்கிருந்த மன்னருக்கு செருப்பு தைக்கும் தொழில் செய்பவராக இருந்திருக்கிறார் . 58வயதில் அவரது ஒய்வு என்று கொண்டால் அதற்குப்பிறகு அவர் ஒரு 60 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிரார ஒரு ரூபாய் 26 பைசாவிலிருந்து அவரது பென்ஷன் ரூபாய் 2000௦௦௦மாக வாங்கி வந்த நேரம் அவரது மரணம் சம்பவித்து இருந்ததது அவர் காலமாகிப்போன பத்து பதினைந்து நாடகளில் நாங்கள் அவரது கடைக்கு சென்றிருந்தோம் நண்பருடைய ஷூவை மாற்றவேண்டி திரும்பவும் அந்த கடைக்கு செல்ல வேண்டி இருந்தது ஒரு மாருதி வான் பிடித்து சென்றோம். அந்த வண்டியின் ஓட்டுனர் பெயர் சுக்லா நல்ல மதிய நேர வெயில் கோத்ராவில் பழகிய ஹிந்தி உதவியது . ஒரு முசல்மான் பகுதியை வான் கடந்து கொண்டிருந்தது அப்போது அவர் (சுக்லா)ரன்னிங் கமெண்டரி உதிர்த்தார் . இதுதான் ஜெய்ப்புரின்பாகிஸ்தான் என்றார் . தூரதிருஷ்டமாக நாங்கள் செல்ல வேண்டிய கடை கூட ஒரு முசல்மான் என்பதை சொல்லவேண்டியதில்லை. நான் கேட்டேன் அவர்களும் இந்த நாட்டுக்காரர்கள் தானே என்று . வான் நகர்ந்து மேலும் சென்றது . நகரசுத்தி தொழிலாளர்கள் பகுதி வந்தது . அவர் மீண்டும் கமெண்டரி சொன்னார் இது தான் சேரிப்பகுதி இவர்கள் அசுத்தத்தை சுத்தம் செய்பவர்கள் என்றார் . அவர்களும் மனிதர்கள்தானே ஒரு சிலர் அசுத்தப்படுதுவதால்தானே இவர்கள் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது என்றேன் . அவருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது எனது நண்பர்கள் ஏன் அவரிடம் விவாதம் என்றார்கள். எனக்கொன்றும் இல்லை அவரது பதில் தான் என்ன என்று கேட்போமே என்றேன். இறுதியாக அவரால் பதில் சொல்லமுடியாத ஒரு கட்டத்தில் 'சப் பகவான் கா மேற்பணி ' (எல்லாம் இறைவன் செயல் ) என்று அவர் முடித்துக்கொண்டார். அதாவது சிலர் அசுத்தப்படுத்த பிறவி எடுத்து இருப்பதும் அதை சிலர் சுத்தப்படுத்த லவித்திருப்பதும் அவரவர் பிறப்பின் பயன் என்கிற பாணியில் அவரின் வாதம் இருந்தது. அவர் அப்படிதான் இருப்பார் ஏனென்றால் அவர் சுக்லா (பிறப்பால் பிராமணன்) . அதன் பிறகு அவர் ரன்னிங் கமெண்டரி எதுவும் சொல்லவில்லை. நான் ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன் நமக்கு தெரியாத எதையும் நமக்கு தெரிந்தது போல் இருக்கும் கடவுளிடம் தள்ளிவிடுவது என்பது மட்டும் . நண்பர் சூ சைஸ் மாற்றிக்கொண்டார் அறைக்குத்திரும்பினோம்.

சுக்லாவான அவர் ஏன் வான் ஓட்டுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. நமது நாட்டில் நிலவக்கூடிய சாதிய முறை பிரமிட் போன்ற வடிவமைப்பு கொண்டது . நமக்கு மேலே உள்ளவர்களைப்பற்றி எந்தக்கவலையும் இல்லை ஆனாலும் நமக்கு கீழே ஒரு சில சாதியினராவது இருக்க வேண்டும் என்கிற அக்கறை மட்டும் எப்படி பொது மனித விதி மட்டும் புரியவில்லை.

'ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பார் இந்தியாவில் இல்லையே '- பாரதி

Sunday, October 11, 2009

சண்டாளன்



வடிவேலு என் கிற நடிகர் காமெடி செய்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதியைத்திட்டுவது என்பதை நோக்கமாககொண்டிருக்கிறார். அல்லது கொண்டிருந்தார். நிறையப்படங்களில் அந்த வசனத்தை உச்சரித்து கைதட்டலை வாங்கிக்கொண்டிருக்கிறார் இன்னமும் கூட். நம்மை அறியாமல் நாமும் கூட மனம் விட்டு சிரித்திருப்போம்.

உண்மையில் அது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல வேதனைப்படவேண்டிய அம்சம்  நாம் அனைவரும் எந்த வகையில் பார்த்தாலும்.
ஆனால் சமீபத்தில் சென்சார் போர்டுக்காரர்கள் அந்த வசன உச்சரிப்பை தவிர்த்துவிடுங்கள் என்று கூறியதாக ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அவர் அந்த உச்சரிப்பில் பேசி நடித்தாலும் கூட இவர்கள்  "MUTE" செய்து விடுவார்கள் அவ்வளவுதான்.

தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர்  திரு கருணா நிதி அவர்கள் கூட ஒருமுறை அந்த வார்த்தையை உச்சரித்து வாபஸ் வாங்காமலே இருந்து கொண்டார்.

தங்கத்தமிழ் நாட்டில் 18 சதமான மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுடைய சாதி எண்ணிக்கை ஆக மொத்தம் 76. அதில் 15 ஆவதாக பட்டியலிடப்பட்டிருப்பது "சண்டாளா" என்பது.
தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் சாதியின் பெயரால் திட்டுவது என்பது தடை செய்ய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு வகை வன் கொடுமை.

தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமை ஒழிப்புச்சட்டம் 1989 ன் படி அப்படி சாதியைசொல்லித்திட்டியவர்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்ப்டுவார்கள்.

ஆனால் காமெடியன்  வடிவேலுவோ அல்லது இந்த அவச்சொல்லை உச்சரித்த வேறு எந்த முக்கியப்புள்ளியோ இப்படியான எந்த நடவடிக்கைக்கும் ஆளாக வில்லை.

காரணம் தலித் மக்களிடையே கல்வியறிவு மற்றும் விழிப்புணர்ச்சி இல்லாத நிலைமைதான். எப்படியோ கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தலித் அருந்ததியர் என்ற மிகவும் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கான போராட்டம் இடது சாரிகளால் எடுக்கப்பட்டதினால் சென்சார் போர்டுக்காரர்கள் சுதாரித்துக்கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

தற்சமயம் அந்தத வார்த்தையை உச்சரித்து திட்டுவது தடை செய்யப்பட்டிருப்பது தலித் மக்களையும் அவர்கள் மனிதர்களாகப்பார்க்கத் துவங்கி இருப்பதைக்காட்டுகிறது. வசனம் நம் காதில் விழாத அளவுக்கு அதை MUTE செய்து விடுகிறார்கள்.

அது சரி. இது வரை அவர் சொன்ன அந்த வார்த்தைகள் பல்வேறு திரைப்படங்களில்பதிவுகளாக நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமாக காமெடிக்காட்சிகளில் உலா வந்து கொண்டிருக்கிறதே அதை ஒன்றுமே செய்ய முடியாதா?

Friday, April 17, 2009

அம்பேத்கர் பிறந்த நாள்



நண்பர்களே

நான் ஒரு தலித் என்பது எனக்கு விபரம் தெரியும் வரை நிச்சயமாக தெரியாது. அப்பா ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளி . ஆசை ஆசையாக எனது அம்மாவோடு புணர்ந்து தான் என்னையும் மற்றவரைப்போல் எனது அப்பா என்னை உருவாக்கியிருப்பார் . பெயர் வைத்திருப்பார் பாராட்டியிருப்பார் சீராட்டியிருப்பார் எனது அம்மாவும் கூடவேதான் எப்படி கொஞ்சியிருப்பார்கள் என்னை. என் பெயரோ நாராயணன் போதாதா நான் ஒரு ஹிந்து என்பதற்கும் படி நிலை சமூகத்தின் அங்கம் என்பதற்கும் சாட்சிதான் வேண்டுமோ என்ன. ஹிந்துவாக இருக்க வேண்டும் பிறகு தாழ்ந்த ஒரு தொழிலை செய்ய வேண்டும். அவன் நிச்சயம் தலித்துதான்.

அறிவர் அம்பேத்கர் பிறந்த நாள் கூட்டத்திற்கு போய்இருந்தேன் . என்னை பேச சொல்லி அன்புக்கட்டளை இட்டார்கள் நண்பர்கள். அந்த கூட்டத்திற்கு மொட்டை அடித்த ஒரு நண்பர் வந்திருந்தார். நான் அம்பேத்கர் அவர்களின் கொள்கைப்படி நான் இந்துவாகப்பிரந்தேன் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சபதம் பூண்டு இருபது ஆண்டு காலம் யோசித்து இறுதியில் புத்த மதத்துக்கு மாறினார் ஆகவே நாம் இந்து மதத்தில் இருப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் இன்னும் நாம் மொட்டை அடித்துக்கொண்டு இருக்ககூடாது . கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற கருத்து பதியம்படியாகவும் மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி பிராமணர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் கூட்டணியாக உத்திரப்பிரதேசத்தில் உருவாக்கியிருக்கிறார் . அந்த வழியை பின் பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினேன் .

தலித்துகளை அரசின் பிராமணர்கள் என்று விளித்தது போக தலித் தலைவியான மாயாவதி ஒரு பிராமணரை தனது செயலாளராக வைத்துக்கொண்டு ஏழை பிராமணருக்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று அறிவிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார் ஆனால் நாமோ குறிப்பாக தமிழகத்தில் பல்லன் பறையன் சக்கிலியன் குறவன் புதிரைவண்ணன் என பிரிந்து கிடக்கிறோம் குறைந்த பட்சம் இந்த உட்பிரிவுகளை களைந்து விட்டு ஒற்றுமை காக்க கிளர்ந்தேளுவோம் என்றும் குறிப்பிட்டேன் .

மறு நாள் தொலைபேசியில் ஒரு அன்பர் அழைத்தார் . நீங்கள் பேசியது உங்களுக்கே சரியா என்றார். கடவுளை மறுத்து பேசியது முறையாகுமா என்று வினா தொடுத்தார். பெரியாரும் அம்பேத்கரும் அவரது குருவான ஜோதிராவ் புலேயும் தமிழகத்தின் முதல் போதுவுடமைவாதியுமான சிங்காரவேலரும் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை அண்ணலுடைய பிறந்த நாளில் கூட இன்னும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை நமது சிதறுண்ட மக்கள் (தலித்) நான்கில் ஒரு பகுதி மக்களின் இழி நிலை தீர்க்க இன்னும் எத்தனை காலம் தான் காத்திருக்க வேண்டுமோ


எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
என் மக்களுக்கு ஏன் இன்னும புரிய
வைக்க மாட்டாயோ

என நான் இறைவனை அல்ல அறிவை கேட்டேன்.

Saturday, April 11, 2009

கோத்ரா நாட்கள் 2


கோத்ராவிலிருந்து தகொத் ஒரு முறை சென்று கொண்டிருந்தோம் அலுவலக வாகனத்தில். ஒரு ராஜஸ்தானிய நண்பரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும் . அவர் பெயர் பன்ஸிதர் குப்தா . டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஏராளமான புகைப்படங்களும்
கலவரங்கள் பற்றிய செய்திகளும் வந்துகொண்டிருந்த நேரம் அது. மோடியை கொலைகாரன் (Chief Monster)என்று அந்தப்பத்திரிகை எழுதவும் கூட செய்தது . நண்பருக்கும் எனக்கும் ஒரு விவாதம் வந்தது. நடந்து முடிந்த இந்தக்கொலைகள் கலவரங்கள் பற்றி. நான் ஒரு கட்டத்தில் சொன்னேன் எந்த மதமும் வன்முறைக்கு இடம் தருவதில்லை . எனவே மக்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் மதங்கள் மக்களுக்குள் ஒற்றுமையை விதைக்கவேண்டும் பிரிவினையை அல்ல . அவர் சொன்னார் இல்லை இல்லை இவர்களுக்கு நாம் யார் (இந்துக்கள்...) என்பதைக்காண்பித்தாகவேண்டும் என்றார்.


வழி நெடுக தீ எரிந்து போனதின் எச்சங்கள். 58  பேருக்கு பதிலாக 2000 பேர் என்கிற ரீதியில் உயிர்க்கொலைகள் நடந்து முடிந்துவிட்டது 20000 இருசக்கரவாகனங்கள் 4000 நான்கு சக்கர வாகனங்கள் என சேதாரம் ஆகிப்போனது நிம்மதி இழந்து 2 லட்சம் பேர் அகதிகளாக உள் நாட்டிலேயே என்று நாடே உற்றுப்பார்க்கும் ஒரு சாவதேச முக்கிய நகரமாக ஆகிப்போனது கோத்ரா  நரேந்திர மோ(டி)தி சிரித்த முகத்துடன் டிவியில் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு பனிரெண்டு நாட்கள் நாங்கள் அலுவலகம் செல்ல முடியவில்லை . ஊரடங்கு உத்தரவு ஊரெங்கும். இடையில் ரேடியோவில் மாவட்ட ஆட்சியர்  (நம்ம ஊருக்கார ஜெயந்தி ரவி) குஜராத்தியில் சொல்லும் நேரம் மட்டும் காய் வாங்கிக்கொள்ளலாம்.
கடந்து போய்விட்டது அந்தக்கடுமையான நாட்கள் .
குப்தாவுக்கு ராஜஸ்தான் மாற்றல் வந்தது. நாங்களெல்லோரும் கோத்ரா ரயில் நிலையம் சென்றோம் வழியனுப்ப . எலும்புக்கூடாக s 6 ரயில் பெட்டி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது . ஆளுக்கொரு தேங்காய் வாங்கி வந்து பயணம் செல்பவர்களின் கையில் கொடுப்பது என்பது மரபு அங்கே.
ஜானி என்றொரு அதிகாரி வந்தார். ரயில் கிளம்ப இன்னும் சில மணித்துளிகள். அவர் பங்குக்கு ஒரு தேங்கையை குப்தாவின் கைகளில் கொடுத்தார் . பதிலுக்கு குப்தாஅவரது  கால்களை நமஸ்கரித்தார். வயது மூத்தவரை காலைத்தொட்டு கும்பிடுவது என்பது அங்குள்ள வழக்கம். மரபு . குனிந்து எழுந்தவன் கண்ணில் தாரைதாரையாகக் கண்ணீர்த்துளிகள் .

சின்னப்பிரிவையே தாங்கமட்டாத இவனா அன்றைக்கு வன்முறையாளனாக அன்றைக்கு நாம் யார் என்பதை காண்பித்தாகவேண்டும் என்று சொன்னவன் என்று எனக்கு ஏகப்பட்ட ஆச்சர்யம்

Thursday, April 9, 2009

கோத்ரா நாட்கள் 1



அப்படி ஒன்றும் அழகிய நாட்கள் இல்லைதான் . 2002 பிப் 27 துவங்கியது அந்த கலவரம் கரசேவைத்தொண்டர்கள் ராமசேவைத்தொண்டர்களாக மாறியிருந்தார்கள். ஆனால் கலவரம் மட்டும் அதேபாணிதான்.
அயோத்தியில் ஒரு கட்டிடத்தை இடித்தார்கள்.
இங்கே ஒரு எஸ் 8 என்ற எண்ணுள்ள சபர்மதி எக்ஸ்பிரஸ் வண்டியின் "கோச்"சை எரித்தார்கள்.

58 பேர்கள் எரிந்து கரிக்கட்டை ஆனார்கள். காலை8மணி சுமாருக்கு எனக்கு ஒரு தொ்லைபேசி வந்தது. அப்போதிலிருந்து கோத்ராவைப்பரபரப்பு தொற்றிக்கொண்டது. நடந்த விஷயம் இதுதான். ராமசேவைத்தொண்டர்கள் எனப்பட்டவர்கள் கோத்ராவுக்கு முன் தகோத் ஸ்டேஷனில் "சாயா"விற்ற தாடிக்கார சிறுபான்மையினரை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் தாடி யையும்சேர்த்தேதான். கூடவே "ஜெய் ஷ்ரீராம்" கோஷமிடச்சொல்லி என ஆரம்பித்து அதே வேலை அடுத்த ரயில் நிலயமான கோத்ராவிலும் தொடர S6 என்ற இலக்கப்பெட்டி கொளுத்தப்பட்டது.

அடுத்த சில நாட்களில் நான் விடுமுறைக்கு தமிழகம் வரவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அதையொட்டிய சம்பவம் ஒன்று வைகை எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஒரு முஸ்லிம் குடும்பம் கோழி பிரியாணியும் கையுமாக அனைவரும் ஆசை ஆசையாக பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். பக்கத்திலே ஒரு பிராமணக்குடும்பம். தயிர் சோறுசகிதம் அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.
பிரச்னைஎன்னவென்றால் பொது இடத்திலே இப்படியா நான்வெஜ் சாப்பிடுவாங்க என்றார் தயிர்ச்சோறுக்கு சொந்தக்காரர்.
எனக்கு தாகோத்தில் ராமசேவகர்கள் செய்தது ஞாபகம் வந்து தொலைத்தது. 

தமிழகத்தின் தந்தை பெரியார் வைகையின் வேகத்தைவிடவும் என் நினைவில் வந்தார்.

அழகிய நாட்கள்

அடுத்த நிமிடம் தரவிருக்கும் ஆச்சர்யங்கள் நிறைந்த நமது வாழும் சூழல்
என்னை இந்த பறந்து  கிடக்கும் வையக வலை விரிவில் ஒரு கண்ணியாக இணைத்துக்கொள்ள தூண்டியது. வாய்ப்பு சமமானதாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கல்வி கற்கும் வாய்ப்பு மட்டும் எல்லோருக்கும் கிடைத்திருந்தால் இந்தியாவில் இன்னும் முப்பத்தைந்து விழுக்காடு எழுதப்படிக்க தெரியாதவர் பட்டியலில் இருக்க நேரிடுமா என்ன? 


இரண்டு மூன்று பேர் இந்த உலகை புரட்டிபோடும் சிந்தனையை உருவாக்கி அளித்தவர்கள்  என நினைக்கிறேன். 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' என்ற மாபெரும் தத்துவம் சொன்ன சார்லஸ் டார்வின் தொழிலாளர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை அடிமை விலங்குகளைத்தவிர என்று உரக்கச்சொன்ன கார்ல் மார்க்ஸ்  


தியரி ஆப் ரிலேடிவிட்டி வரைவு செய்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 

எனது அனுபவங்கள் தொடரும் வரும் பதிவுகள் மூலமாக...