வலைப்பதிவில் தேட...

Monday, September 30, 2013

பெல்லாரி வந்த பிறகு வாசித்த சில புத்தகங்கள்...

பெல்லாரி வந்து கிட்டத்தட்ட ஓராண்டு முடியப்போகிறது ( அக்டோபர் 11,2013 உடன்) சு சமுத்திரம் எழுதிய வாடாமல்லி படித்து முடித்து அதை ஒரு பதிவாகவும் எழுதியிருக்கிறேன்.

 மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்



தோழர் எஸ் ஏ பெருமாள் எழுதிய காலமென்னும் பெரு நதி படித்து
முடித்தேன்.




ஒரு நூறு கட்டுரைகள் மிகவும் எளிய நடையில் அது மார்க்ஸ் தொடங்கி பகத்சிங், ஹிட்லர்,அம்பேத்கர்,நடப்புகள் புதிய பொருளாதாரக்கொள்கை, பண்பாட்டளவில் தீபாவளி,கார்த்திகை பற்றிய பொருள் முதல்வாதக்கருத்தோட்டத்தில் விளைந்த கட்டுரைகள் இவற்றோடு அவர் இடதுசாரியான விதம் குறித்த நேர்காணல் (புத்தகம் பேசுது இதழில் வெளி வந்தது) மாற்று மருத்துவம் குறித்து 2000 ஆண்டில் வெளி வந்த நேர்காணல் என ஒரு அருமையான தொகுப்பு அது.

ஹோவர்ட் ஃபாஸ்ட்  எழுதிய சவுத் விஷன் பாலாஜி அவர்களின் மக்கள் பதிப்பான   ஸ்பார்டகஸ்



முன்னூறு பக்கங்களுக்கும் மேல் இருக்கும் ஸ்பார்டகஸ் என்னும் அடிமை தன்னை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த ஆதிக்கவாதிகளை அவர்களின் ஆயுதக்கிடங்கிலிருந்தே தனது அடிமை வம்சத்தோழர்களின் உதவியுடன் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடிய கதை. வழி நெடுக அடிமைகளை தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் நெடி நம்மை நிலை குலையச்செய்கிறது. அடிமைகள் யாரும் ஆண்டைகளை எதிர்க்க நினைத்தால் இந்த கதிதான்  ஏற்படும் என்பதை குறிப்பாக இல்லை வெளிப்படையாகச்சொல்லிச்செல்லும் அடிமைகளின் விடுதலைச்சரித்திரம். கி மு வில் ரோமில் நடந்த நிகழ்வு இது...


எஸ். எஃப். ஐ வெளியீட்டில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான பெரியார் கல்விச்சிந்தனைகள்  ஆயிற்று...
சூத்திரர்கள் என்று மனுவில் குறிப்பிட்டு இருப்பது உடல் உழைக்கும் வர்க்கத்தினரைத்தான் அதன் அர்த்தம் வேசியின் மகன் அல்லது தேவடியாள் மகன் என்பதாகும் என்ற வலுவான சிந்தனையையும் கல்வி வேலைவாய்ப்பில் எங்கனம் தாழ்த்தப்பட்டவர்களும் சூத்திரர்களும் ( கன்ஷிராம் மொழியில் சூத்திரர்களை பகுஜன் எனக்கொள்ளலாம்) காலந்தோறும் வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். தமிழ் வாழ்த்து, இறை வணக்கம் கூட்டங்களின் தேவைதானா என்பதை பெரியார் அவரது பாணியில் கன்னத்தில் அறைந்தார்போல் சொல்லியிருக்கிறார். அ. மார்க்ஸ் அவர்கள் தொகுத்திருக்கிறார்கள்.



 இமையம் எழுதிய  பெத்தவன் படித்து முடித்தாயிற்று.
.

இன்றையச்சூழலில் ஒரு தலித் மேல்சாதிப்பெண்ணை காதலித்து திருமணம் செய்தால் என்னாகும் என்பதை வெளிப்படையாக சமகாலத்தில் இளவரசன், மரணம் திவ்யா  நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னால் பெத்தவன் என்ற சிறு கதையை ஒரு நாற்பது பக்கத்தில் பாரதி புத்தகாலயம் திரு இமையம் அவர்களின் அனுமதி பெற்று பரவலாக தமிழ் சமூகத்திற்கு இந்த வகையான பதிவுகள் போய்ச்சேரவேண்டும் என்று செய்திருக்கும் ஒரு மிகச்சிறந்த படைப்பு.


 பாமா எழுதிய   கருக்கு


வெள்ளைக்காரன் வருகைக்குப்பின் மதம் மாறியவர்கள் மீனவர்கள், நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். சில பிள்ளைகளும் ரெட்டிகளும் கூட மதம் மாறியிருக்கிறார்கள் ஐயர் வகுப்பினர் மதம் மாறினார்களா தெரியவில்லை. அப்படி மதம் மாறி, கன்னியாஸ்திரியாக மாற நினைத்து அவர்களது உண்டு உறைவிடப்பள்ளியில் பயின்று, தேறி  கிறித்துவ நிறுவனங்களின் தொல்லை காரணமாக ( தாழ்த்தப்பட்டவர் என்பதால்) அதைத்துறந்து தனது ஊரில் வத்திராயிருப்பு புதுப்பட்டி( விருது நகர் மாவட்டம்) நிகழ்ந்த நினைவுகளை அப்படியே படம் பிடித்திருக்கிறார். அருந்ததியர் வாழும் வரலாறு நூலைத்தொகுத்த ஃபாதர் மாற்குவின் தூண்டுதலின் பேரில் எழுதிய ஒரு படைப்பு. அவர் அவரது சாதி மக்களின் (பறையர்)பார்வையிலிருந்து பள்ளர் சக்கிலியர்களைப் பார்ப்பது இடையில் ஒரு இடத்தில் தென்படுகிறது. பள்ளர்களும் சக்கிலியர்களும் சொகுசாக வாழ்வதாகவும் பறையர்கள் மட்டும் கஷ்டத்தில் இருப்பதாகவும் தோற்றம் அளிக்கும் ஒரு பதிவு அது. உண்மையில்  அட்டவணை சாதியினர் அனைவரும் பாதிப்புக்குள்ளானவர்கள்தாம்...

நடப்பில் படித்துக்கொண்டிக்கும் நூல்கள்:





ராஜ் கௌதமன் தமிழாக்கம் செய்த
விடியல் பதிப்பகத்தின் டார்வினின் உயிரிங்களின் தோற்றம்

எஸ் எஃப் ஐ
வெளியீட்டில் ரவிக்குமார் எழுதிய  அம்பேத்கர் கல்விச்சிந்தனைகள்

 டி செல்வராஜ் எழுதிய மலரும் சருகும்,

பேரா ச மாடசாமி தொகுத்த சொலவடைகளும் சொன்னவர்களும்,  

பேரா அருணனின் கொலைக்களங்களின் வாக்கு மூலம்,

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்

பூமணியின் ஐந்து நாவல்கள் தொகுப் பு(பிறகு, வெக்கை, நைவேத்தியம் உள்ளிட்ட)  பற்றியும் எழுத வேண்டி இருக்கிறது.

 பிரிதொரு பதிவில் சந்திப்போம்.