வலைப்பதிவில் தேட...

Tuesday, April 26, 2011

ஆண்டிப்பகடை

இப்படித்தான்  என் நினைவு சொல்லுகிறது  அப்போது சௌடாம்பிகை நடு நிலைப்பள்ளியில் ஏழாவது படித்துக்கொண்டிருக்கும் நேரம். முத்துராமன் பட்டியிலிருந்து சாதி சனங்களோடு குடியிருந்த  வீட்டை வித்து விட்டு  மாத்த நாயக்கன்பட்டி  பாதையில் ஒரு இடத்தை வாங்கி  என் தாத்தா கட்டி  இருந்த எங்கள் வீட்டில் குடியிருந்தோம் (கூரை வேயப்பட்ட  மண் குடிசைதான் வேறென்ன?)

கிட்டத்தட்ட இரு நூறு வீடுகள் (தலக்கட்டுகள்). ஒரே இனக்குழுவைச்சேர்ந்தவர்கள் அந்தப்பகுது முழுதும்  எனது சொந்தங்கள்தான்.
என் தாத்தாவின் வயதொத்தவர் ஆண்டிப்பகடை. தாத்தா நான் மூன்றாவது படிக்கும்போதே இறந்து போனார். ஆனால் ஆண்டிப்பகடை அதற்கப்புறம் நாலைந்து ஆண்டுகள் இருந்தார்.  நல்ல கறுத்த நிறம் . வேட்டியை எப்போதும் தார்ப்பாய்ச்சி கட்டிதான் இருப்பார். அவரது மனைவி பூச்சிக்கிழவி.

அவர் ஒரு குதிரை வைத்திருந்தார். அது மிகவும் ஆரோக்கியமான அரபுக்குதிரையன்று. அவரது குடுமியைப்போலவே மெல்லிதான வால் அந்தக்குதிரைக்கு. எங்களுக்கு அந்தக்குதிரையை வேடிக்கை பார்ப்பதுதான் வேலை. அவர் விரட்டி விரட்டி விடுவார் எங்களை.



அவர் அந்தக் குதிரையை அப்படியே கடிவாளம் சார்ந்து இயங்கும் தோலாலான ஒரு நீண்ட வாரைப்பிடித்து லாவகமாக அழைத்துக்கொண்டு தெற்குப்பக்கமாக கல்பொறுக்கி சாமி யைத்தாண்டினால்   சுடுகாடு. மாத்த நாயக்கன்பட்டி சனங்கள் எல்லம் அந்த வழியாக வரும்போது அந்த மஞ்சனத்தி மரத்தடியில் கிடக்கும் கற்குவியலில் ஒரு கல்லை எடுத்துப்போட்டுவிட்டுப்போவார்கள். அதுதான் எங்களுக்கு கல்பொறுக்கி சாமி.

அந்தக்கோவிலைத்தாண்டி சீமைப்புல் பக்கம் போய் குதிரையை  புல் மேய விட்டு கொண்டு வருவார். கையில் ஒரு சாட்டைக்குச்சி வைத்திருப்பார். நாங்கள் பின்னாடியே ஓடி வந்து கொண்டிருப்போம். விரட்டுவதும் சிதறி ஒடுவதும் பின்னால் தொடருவதும் வாடிக்கையானது  அந்தப்பதின் வயதுகளில். அந்தக்குதிரைக்கு கால் குளம்பில் ஏதோ புண் மாதிரி வந்து அந்த இயல்பு நடை மறந்து போய் அவரும் வேறு வழியின்றி அதை யாருக்கோ கொடுத்து விட்டார். விலைக்கா என்னவென்று தெரியவில்லை.

இதற்குப்பிறகு ஆண்டிப்பகடை இறந்து போனார் ஒரு நாளில். சுடுகாடு மண்பாலத்துக்கு இடது பக்கத்தில் வண்டிப்பாதைக்கு வடக்கில். அதாவது  கருமாதி மடத்தை அடுத்த சாத்தூர் செல்லும் சாலயில் கௌசிகா மகா நதியின் குறுக்கே கட்டப்பட்ட வெள்ளைக்காரன் காலத்துப்பாலம்.  அதற்குப்பக்கத்தில் இரயில் செல்லும் பாலம் இரும்புப்பாலம்.

சொந்தங்கள் சுருத்துகள் ஊரார், உற்றார்  என அனைவரும் வந்த பிறகு விளக்கு வைத்தபிறகு இறுதிப்பயணத்துக்குத்தயாரானார் ஆண்டிப்பகடை. நாங்கள் எல்லாம் ஒரே குதியாட்டம்தான். கொட்டுக்காரர்களுடன் ஊடே புகுந்து. சில  நேரங்களில் அவர்களின் கொட்டுக்குச்சியில் அடியும் விழும்.

முத்துராமன் பட்டி ரயில்வே கேட் தாண்டி ராமசாமி மடத்துக்கு அருகே வரும்போது ஒருவனை விரட்டி ஓடினேன். அவ்வளவுதான். எதிரே வந்த லைட் இல்லாத சைக்கிள்காரன் மேல் மோதி விழுந்தே விட்டேன். வலது முழங்காலில் சரியான அடி. எழுந்திருக்கவே முடியவில்லை.அழுது கொண்டே இருந்தேன்.  கொட்டுக்காரர்களுடனும் சொந்தக்காரர்களுடனும்  பிணம்  என்னைத்தாண்டி கருமாதி மடத்தை  நோக்கி சென்று கொண்டிருந்தது.


Monday, April 25, 2011

சாதல் நன்று

பாரதியாரின் கவிதைகளில் வரும் ஒரு அற்புத வரி இது.
காற்று, நீர், நெருப்பு, மழை  எல்லாவற்றையும் அதன் குணம்
சார்ந்து பாராட்டுகளாகவே சொல்லிவிட்டு
மனித உயிர் பிரியும்
அந்த நிகழ்வை "சாதல் நன்று" என்பார்.

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது வயதானவர்கள் மரணமடைந்துவிட்டால் போதும் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் மட்டுமே அழுவார்கள்.

எழவு கேட்க வரும் சொந்தங்கள் ஒரு முக்காட்டை ப்போட்டுக்கொண்டு அவரவர் அம்மா அப்பா அணணன், தம்பி இறந்த நிகழ்வுகளைக்கண்களில் தேக்கி ஒப்பாரியாக வரும். ஒரு மூச்சு அழுது விட்டு அப்புறம் பழங்கதை பேசிக்கொண்டிருப்பார்கள்.

'காலையில கூட பழைய கஞ்சி குடிச்சிச்' என்பதும் அந்தக்கடைசிப்பய கல்யாணத்தைப்பாக்ககூடகுடுத்துவைக்கல என்பதுமாய் அது விரிந்து கிடக்கும் ஒரு உலகம்.

கொட்டுக்காரர்கள் ஒரு பாட்டம் அடித்து விட்டு சாயா அடிக்க பிணம் விழுந்த வீட்டுக்காரனிடம் பைசா வாங்கிக்கொண்டு  கொட்டை பத்திரமாக வைத்து விட்டு எங்களைப்பார்த்து  " தொட்டுராதிங்க ஒடைஞ்சி போகும்' என்று சொல்லிச்செல்வார்கள்.

ஆனால் அவர்கள் சாயா குடித்து விட்டு அந்தத்தவிலையும் பம்பையையும் அடிக்கிற அடியில் உடையாததா நாங்கள் தொட்டால் உடைந்து விடும் என்று பின்னால் நினைப்பது உண்டு.

அந்த கொட்டுக்காரர்களுடன் சேர்ந்து வியர்க்க விருவிருக்க ஆடிக்கொண்டு தேருக்கு முன்பாக போகும் லாவகமே தனி.

அதில் பேரன் ஒருவனைத்தேரில் ஏற்றி விட்டு அவன் பயப்படுவதைப்பார்க்க வேண்டுமே! தேரைத்தூக்கி வரும் அந்த நாலுபேரும் ஒரே உயரத்தில் இருப்பதில்லை சாதாரணமாக. லம்பி லம்பி போகும் அப்பயடியான தேரில்  நானும் ஒரு நாளில் ஏழு வயதில்  எங்கள் தாத்தா செத்த நாளில் தேரில் ஏறியவன் தான்.

'கோவிந்தா! கோவிந்தா!!'என்று என்னையும் என்னைப்போல தாத்தாவின் தேரில் ஏறிய பேரன்மார்களும் முழக்கமிடசொல்லுவார்கள். தேரில் தொங்கிக்கொண்டிருக்கும் மலர்களையும் பிய்த்து கீழே சாலையெங்கும் போடவும் வேண்டும். பயந்து போய் பாதியில் அழுது இறக்கி விடசொல்லி அப்புறம் தேருக்கு முன்னால் சென்று ஒரே ஆட்டம்தான்.

இன்றைக்கு (25/04/2011)சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் ஒரு 85 வயது நிறைவடைந்த சாமியார் ஒருவரின் மரணத்தை அடுத்து அவரது 38 வது பிறந்த நாளைக்கூட கொண்டாமல்  டிவியில் அழுது கொண்டிருந்தார். சச்சினின் அழுகைக்கு முன்பாகவே நேற்றிலிருந்தே நிறையப்பேர் கண் கலங்கி அழுததை ஐ பி என் , என் டி டி வி ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன.

கொண்டாட வேண்டிய சாவை ஏன் இப்படி அழுது தீர்க்கிறார்கள் என்பது எனக்குப்புரியவில்லை.

தனது 14 வயதில் தேள் கொட்டியதாம் அப்போது ஒரு பொய் சொல்லியிருக்கிறார் நான்தான் ஷீரடியின்  உருவம் என்று  இன்றைக்கு 40ஆயிரம் கோடி ரூபாய் சொத்து புட்டபர்த்தி என்ற கிராமத்தில் மட்டும் இருப்பதாச்சொல்லுகிறார்கள். அவர்களது சீடர்கள்சேர்த்து வைத்த சொத்தையும் சேர்த்தால்  ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி இருக்குமாம் உலகின் 160  நாடுகளில். 715 கிராமங்களுக்கு குடி நீர் வழங்கும் பணி, சென்னைக்கு தெலுங்கு கங்கை திட்டப்பணி என்று அவருடைய சேவாசமிதியினின்றும் செய்திருக்கிறாராம். இதை அரசுகள் செய்ய முடியாதா  என்ன? நமது பணம்தான் இந்த வழியில் போய்க்கொண்டிருக்கிறதே.

அதுதான்  2ஜி ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி 

மனிதன் இறப்பது என்பது இயற்கையானது.
பிறப்பைக்கொண்டாடுவதுபோன்று சாவையும் கொண்டாடும் மன நிலை வரவேண்டும்.

ரத்த சொந்தங்களுக்கு அழுகலாம்.
நெருங்கிய நண்பர்களுக்கு அழுகலாம்.
எப்போதாவது கடவுளுக்கு அழுதிருக்கிறோமா?
மனிதர்களுக்கு அழுகலாம்.
ஆனால் தன்னைக்கடவுளின்
அவதாரமாகக்காட்டிக்கொண்டவர்களிடம்
கண்ணீர் விடலாமா?

முக்தியடைந்தததாக தினமணி எழுதுகிறது.

சித்தி அடைந்து விட்டதாக தினமலர் எழுதுகிறது.

முக்தியும் சித்தியும்  செத்துப்போவதைக்குறிக்கும் வார்த்தைகளன்றி வேறென்ன?

இன்னும் சொல்லப்போனால் மரணத்தை விடவும் பெரியதா என்ன?