வலைப்பதிவில் தேட...

Saturday, November 20, 2010

சுகப்பிரசவம் அல்லது பேறுகாலம்

முத்துராமன் பட்டி ரயில்வே கேட் அருகில்தான் ரிக் ஷா ஸ்டாண்டு. எதிரே மாரியப்பன் டீ கடை. அடுத்ததாக இளைஞர்கள் மன்றம். பெரும்பாலும் குமரி அனந்தன் அவர்களின் பேச்சு முழங்கிக்கொண்டிருக்கும். எல்லாம்டேப் ரெக்கார்டர் மூலமாத்தான். சி டி
 டிவிடி அப்போதெல்லாம் இல்லவே இல்லை. காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பின் (அரசியல் கட்சியின் தலைவராக அவர் அப்போது இருந்தார்)

அடுத்தாற்போல்  நந்தவனத்துடன் கூடிய தெலாக்கிணறு( துலாம்) கிணற்றுக்கு ஊடாக பெரிய இரண்டு பட்டிக்கல் (ஒழுங்காக வடிவமைக்கப்ப்ட்ட பாறாங்கல்தான்). சில பெட்டிக்கடைகள்.சலூன் ஒன்று வாடகை சைக்கிள் கடை ஒன்று  இப்படி..
 ரயில்வே கேட்டின் வடக்காக கேட் கீப்பர் உட்காரும் ஒரு அறை. தெற்காக முனிசிபாலிடி சார்பிலமைக்கப்பட்ட குடி நீர்  பொதுக்குழாய்
கேட் கீப்பர் ரூமுக்கு கிழக்கே மணி நகரம் செல்லும் ரோடு. அதன் எதிரில் சாலையைக்கடந்தால் டி இ எல் சி சர்ச் வளாகம் அதன் மூலையில் பர்மா கடை.

வழக்கமாக இரவு நேர ரிக் ஷா வாடகைக்கு எடுத்து ஓட்ட வேண்டிய நிலைமையில் நான். சொந்த ரிக் ஷா என்னிடம் இல்லை. ஒரு நாள் இரவு மட்டும் வாடகை ரூ 1.50 . காலையில் வண்டி மாத்த வரும் ரிக்சாக்காரருக்கு பர்மாக்கடையிலிருந்து அல்லது மாரியப்பன் கடையிலிருந்து ஒரு டீயுடன் வாடகையும் தரவேண்டும். மாலைய்ல் வண்டி எடுக்க நான் வரும்போது ஒரு டீ உண்டு.

இப்படித்தான் அன்றைக்கு இரவு  நியு முத்து டாக்கீசுகு ஒரு சவாரி மட்டும் போய் விட்டு ஜேப்பில் ஒன்னாரூபாயோடு இருந்த நேரம்.  மணி பதினொன்றைத்தொட்டிருக்கும். சவாரி ஒன்றும் வரவில்லை. நான் ரிக் ஷா மெத்தையில் படுத்துவிட்டேன்.


பனிரென்டரை மணி சுமாருக்கு ஒருவர் சைக்கிளில் வந்து படுத்திருந்த என்னை எழுப்பி
சவாரி வருமா என்றார். 
சரி என்றேன்.
காட்டாஸ்பத்திரி போகணும்
வண்டியை இழுத்து அவர் பின்னாலேயே போனேன். சிவந்திபுரம் சந்து அது. இடையில் ஒரு கல் வேறு வண்டியை லாவகமாக ஒடித்து வீட்டின் முன் நிறுத்தினேன்.
பிரசவ வலியோடு அவரது மனைவி பக்கத்து வீட்டம்மாவின் துணையோடு  கையில் துணிப்பையோடு ஏற்றிக்கொண்டேன்.

வண்டியை எகிறி எகிறி மிதிக்கத்துவங்கினேன். முத்துராமன் பட்டி கேட்டிலிருந்து  நியூ முத்து டாக்கீஸ் வரை ஓரே மேடுதான்.  மணி நகரம் அப்புறம் ஒன்னாம் நம்பர் பால் பண்ணை, வாடியான் கேட், புதுத்தெரு தாண்டி, தந்தி மர ரயில்வே கேட், காமராஜ் நகர் போர்டைக்கடந்து வலதுபுறம் திரும்பி  ராமமூர்த்தி ரோட்டில் சென்று, ஆஞ்சனேயா லாட்ஜ் தாண்டி அதே திக்கத்தில் கடைசியில் இருந்த காட்டாஸ்பத்திரி கொண்டு போய் சேர்த்தேன்.  தாதிகள் வந்து பிரசவ வலியுடன் துடித்துக்கொண்டிருட்ந்த அந்த கூலிக்காரரின் மனைவியை அழைத்து உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.

துண்டை எடுத்து வியர்வையை அழுந்தத்துடைத்துக்கொண்டேன்.
சைக்கிளில் பின்னாலேயே  அந்த கூலிக்காரரும் வந்து சேர்ந்தார்.
வாடகை எதுவும் முதலில் பேசவில்லை நான்.
அவரிடம் வாடகை கேட்டேன். அவர் அரக்கப்பரக்க முழித்தார்.
சரிதான் காசு இவரிடம் இல்லை போல என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதிக நேரம் பிடிக்க வில்லை.

சரி என்று வண்டியை எடுத்துகொண்டு திருப்பி போக எத்தனித்தேன். தற்செயலாக ரிக்ஷாவின் உள்ளே  பார்ததேன் ரிக்ஷாவின் தொட்டியில் (ஆட்கள் உட்கார்ந்து கொள்வது மெத்தை கால் வைக்கும் இடம் தொட்டி)
 ஒரே தண்ணீர்க்காடு. பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்தப்பெண்ணுக்கு கன்னிக்குடம் உடைந்து அப்படி ஆகியிருக்கிறது. எனக்கு ஒரே கவலையாகிப்போய் விட்டது.  வண்டிக்காரன் கையில் காலையில் வண்டியை கொடுக்கும்போது வாடை கடை இருக்கக்கூடாது என்றுதான்  எனது கவலை.

மெத்தையைதூக்கிப்பார்த்தேன் பழைய துணி இருந்தது. ஆனால் இந்த ஈரத்துக்கு அது சரிப்பட்டு வராது.

வாடியான் கேட் அருகில் பங்க் பர்மாகடையில் போய் ஒரு பதினைஞ்சு பைசா மஞ்சக்கலர் செல்லம் சோப் வாங்கிக்கொண்டேன்.

வண்டியை நேராக முத்துராமன் பட்டி கேட்டு குழாய்க்கு விட்டேன். அப்போதெல்லாம் எந்த நேரமும் தண்ணீர் வரும்

தண்ணீரைப்பிடித்து ஊத்தி ஊத்தி நன்றாககழுவினேன்
சற்றே வாடை குறைந்தது.
பசி எடுத்தது
மணி மூன்றை நெருங்கிவிட்டது.
பர்மா கடையில் சூடான மொச்சை ரெடியாகிக்கொண்டிருந்தது.

Friday, November 19, 2010

சமையல்காரன்

எழுபதுகளின் மத்தியில் பிள்ளையோ பிள்ளை, பூக்காரி படங்களுக்குப்பிறகு சமையல்காரன் என்ற ஒரு படம் வந்தது மு க முத்து நடித்தவை இம்மூன்று படங்களும். எம்ஜி ஆர் கூட " நீதிக்குத்தலைவணங்கு " என்ற ஒரு படத்தில் சமையல் காரனாக நடித்திருப்பார். "ஆக்கப்பொறுத்த அம்மாவுக்கு ஆறப்பொறுக்கலை" என்ற வரியில் லதாவுக்கு பதில் சொல்லி அவர் பாடியிருப்பார் ( டி எம் எஸ் குரல்தான்)

எண்பதுகளின் துவக்கக்த்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி ஆன பிறகு ரிக் ஷாக்காரனாக கொஞ்ச நாள் பிழைப்பு ஓடியது.
வயித்துப்பாடு என்றுதான் சொல்லவேண்டும்.
என்னுடன் படித்து மூன்றாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திய ராஜேந்திரன் என்னோடு வா சமையல் வேலைக்குப்போவோம் என்றான். என்னதான் அந்த வேலை என்று பார்த்து விடலாம் என்று அவனோடு போனேன்.

சமையல் வேலையின் காண்ட்ராக்ட் எடுத்து செய்பவர்தான் கொத்தனார்.
அவர் ஆணையின் படி சொல்லும் வேலைகளை  நாம் செய்ய வேண்டும். மண்டபத்திற்கு சமையல் பாத்திரங்களுடனும், காய்கறி, பலசரக்கு சாமான் களோடும்  (விறகையும் சேர்த்துதான்) மதியம் மூன்று மணிக்குமேல் வாக்கில் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு சேர்ப்பதில் அந்த சமையல்காரன் வேலை துவங்கும்.

இப்போதெல்லாம் மண்டபங்களில் சமையல் கேஸ் இருக்கிறது.
உட்கார்ந்து சாப்பிட பெஞ்ச் ஏற்பாடு இருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு பந்திப்பாய்தான் விரிக்க சுருட்ட கொட்டிய கழிவை விளக்கமாறு வைத்து கூட்டி சுத்தம் செய்ய என்று இருந்தது.

ஒரு நாலு மணியைப்போல பால் வந்தவுடன் பிசுபிசுவென்று திக்கான ஒரு காபி கிடைத்தது. ஒரு சாக்கை எடுத்து பிரித்துக்கொட்டச்சொன்னார் கொத்தனார். அது நிறைய பச்சைப்பட்டாணி. இன்னொரு மூட்டையை பிரிக்கச்சொன்னார். அது நிறைய சின்ன வெங்காயம் ( சென்னை வெங்காயம் என்றுவடக்கே மும்பை, குஜராத்தில் சொல்லுகிறார்கள்; அங்கேயெல்லாம் வெங்காயம் என்றால் நாம் இங்கே சொல்லுகிறோமே "பெல்லாரி" அது மட்டும்தான் கிடைக்கும்)

பச்சைபட்டாணியை உரிக்க ஆரம்பித்தோம் மலைபோல் இருந்தது குறையவில்லை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும் கைகள் ஒய்ந்து போய் விடும் வரை பட்டாணிதான்.மதியச்சாப்பாட்டுக்குதான்

அடுதது சின்ன வெங்காயம் மூக்கையும் வாலையும் வெட்
வெட்டிக்குவிக்கவேண்டும். காலை இட்லிக்கும் மதிய சாப்பாட்டுக்கும் சாம்பாருக்குதான்.

எட்டுமணி சுமாருக்கு இரவுசாப்பாடு ரெடியாகி விட்டது. கல்யாண வீட்டுக்காரர்கள்
அனைவரும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிடும் வரை பந்திப்பாயில் உட்காரவைத்து சாப்பாடு போட வேண்டும்.
கடைசியாக எங்கள் முறை. ஒருவர் அமர இன்னொருவர் பரிமாற என்று
புளிக்கூட்டு, பால்சாதம் ;புளிக்குழம்பு;  இரண்டு கூட்டு (ஒன்று பொரியல் மற்றொன்று கூட்டு).

மறு நாள் காலை டிஃபன்  கலர் கேசரி,வெண் பொங்கல்,இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி , காரசட்னிக்கான வேலைகள் ஆரம்பமானது
இட்லி அவிக்கும் வேலை ஒன்று இருக்கிறது. பெரிய இட்லிசட்டியில் இட்லிஊத்தி வைக்கும் வேலை நமது.  விறகுக்கட்டை அடுப்பில் எரிய அதற்கே உரிய புகை கண்ணை என்ன சேதி என்று கேட்க, தூக்கம் ஒருபக்கம் வர இரவு இரண்டு மணி வரை வேலை.

ஒரு ஐந்து மணிக்கெல்லாம் இறக்கை கட்டிக்கொண்ட சுறுசுறுப்பில் காலையின் காபியோடு
முகூர்த்த நேரம் முடியும் முன்பாக டிஃபன் பரிமாற வேண்டும்.
இரவில் வந்தவர்களை விட அதிகமான விருந்தினர்கள் வந்திருந்த படியால் நீண்ட பந்தியில் உட்கார்ந்த அனைவருக்கும் ஓரேமூச்சில் குனிந்த தலை நிமிராமல் பரிமாறிக்கொண்டே செல்ல வேண்டும். இடையில் நிமிர்ந்தால் கொத்தனார் கத்துவார். குறுக்கு செத்துப்போகும்.

திருப்பூட்டு( தாலி கட்டுவதுதான்) முடிந்தவுடன் மதிய சாப்பாடு தொடங்கி விடும். சீர்திருத்தக்கல்யாணம்தான் அதிக பட்சம். ஹோமம் வளர்த்து அதில் நெய்யை விட்டு புகை மண்டலததை உருவாக்கும் வேலை இங்கே அறவே இல்லை.

முப்பதுகளில் இவ்வகை சீர்திருத்தக்கல்யாணத்தை விருது நகரில் பெரியார் அவர்கள் முதன் முறையாக நடத்தி  நல்லதொரு துவக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.  அதே போல பிராமணர்கள் சமையல்தான் பிரதானம் என்பதையும் மாற்றி தம்முடைய கட்சியின் (தி.க) மா நாடுகளில் விருது நகர் நாடார்கள் சமையல் நடை பெறும் என்ற அறிவிப்பையும் செய்ததாக அவரது வரலாற்றின் பக்கங்களிலிருந்து  அறிய முடிகிறது.

அதுசரி. நமது சமையல் கலையில் அடுத்த நிகழ்வு என்பது இதுதான். தாலிகட்டி முடிந்தவுடன் அடித்துப்பிடித்துக்கொண்டு பந்தியில் உட்கார வருவார்கள் திருமண விழாவிற்கு வந்தவர்கள்.
திரும்பவும் பந்திப்பாய், பரிமாறுதல், வாளிகள் மாறும்,  சட்டிகள் மாறும் வேலை மட்டும் இருந்துகொண்டே இருக்கும். ஜாம்,ஊறுகாய், உப்பு, பட்டாணி, கத்தரிக்காய் கூட்டு,உருளைக்கிழங்கு கூட்டு, முட்டைக்கோஸ் பொரிகறி, அப்பளம் சாதம் சாம்பார், ரசம், பாயாசம், மோர் என்று வரிசைப்படி பரிமாற பந்திகள் முடியும்.

அனைவரும் சாப்பிட்டு முடிய மணி ஒன்றரை இரண்டு ஆகிவிடும் அதற்கடுத்தபடியாக நமக்கான சாப்பாடு. சில  காய்கறிகள் காலியாகியும் இருக்கும் இருப்பதை வைத்து சிறப்புடன் வயிறு அளவுக்கு ஒரு வெட்டு.

அப்புறம் பாத்திரங்களை கழுவவேண்டும்.திரும்பவும் தள்ளுவண்டி. சாமான் கள் எல்லாம் அருப்புக்கோட்டை ரோடு மண்டபத்திலிருந்து தெப்பம் மேற்கிலிருக்கும் சமையல் கார சங்கத்தில் ஒப்படைத்து விட்டு சில கிளாசுகள் குறைந்தால் அந்தக்கணக்கு வேறு.
அப்படியே வீட்டுக்குப்போய் படுத்தால் பிணம்தான்.

இரவு எட்டு மணி சுமாருக்கு திரும்பவும் கொத்தனாரைத்தேடி சம்பளம் வாங்க தெப்பம் மேற்குப்பகுதிக்கு. அவர் கல்யாண வீட்டுக்காரர்களிடம் சிட்டையை முடித்து பணப்பட்டுவாடா வழங்குவார்.

எனது சம்பளமாக ஒரு 15 ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது.